சகோதரி சரயுவுக்கு,
சொல்லாத காதல் செல்லாது என்பது ஒரு பழக்க சொல்வார்த்தை. ஆனால் சிலசமயம் உண்மை காதல் சொல்லாதது வென்றுவிடுகிறது என்பதுக்கு உதாரணமான உங்களின் மறுபதிவு நாவலான உன் நினைவிலே ஒரு சுகம் பற்றி சில வார்த்தைகள்.
இந்த நாவல் எற்கனவே நான் படித்த நாவல் சகோதரி. ஆனாலும் திரும்ப படிக்க தோன்றவைத்தது இந்த நாவலின் சிறப்பு. இரு குடும்ப உறவை மட்டும் வைத்துக்கொண்டு, நகைச்சுவை உரையாடலுடன் இந்த நாவலை அருமையாக கொண்டு சென்றீர் சகோதரி.
ஒருவரை ஒருவர் விரும்பியது தெரியாமல் இல்லறத்தில் இணைத்து, நோக்கியாவாக இருந்த காதல், டச் போணாக மாறி ஊடலுடன் கூடல் கூடிய ஜோடிகள்.
இந்த நாவலில் மொத்தமே ஓன்பது பேர் தான். அதாவது ஹீரோ – ஹீரோயின் ஆனா சர்வேஷ் – சௌபர்ணிகா, பரந்தாமன் – புனிதா, விஸ்வநாதன் – மோகனா, ஸ்ரீநிதி, கார்த்திகேயன், சில இடங்களில் வரும் ஷ்ரவன். இவர்களை கொண்டு அருமை படைப்பு இந்த நாவல்.
பரந்தாமன் – புனிதா:- பலா பழம் போன்றவர், பெரும்பாலும் எல்லா இல்லங்களிலும் நாம் காணும் சகமனிதர் இந்த அப்பா பரந்தாமன். நம் இல்லத்தில் உள்ள அம்மா புனிதா.
விஸ்வநாதன் – மோகனா:- இவர்களும் நமக்கு மிக வேண்டியவர்கள் போன்றே உள்ளார்கள். அருமை குடும்பம்.
கார்த்திகேயன், ஸ்ரீநிதி, ஷ்ரவன்:- சில இடங்களில் வந்த ஷ்ரவன் தன் கடமையை ஓழுங்காக செய்து ஹீரோ – ஹீரோயினை சேர்த்துவைக்கிறர். நல்ல ஆண்-பெண் நட்புக்கு உதாரணம் ஸ்ரீநிதி, கார்த்திக். நாவல் கலகலப்புக்கும், குடும்ப கலகலப்புக்கும் உதவிய சகோதரம் நிரம்பியவர்கள்
சர்வேஷ்:- . வாழ்க்கையில் திட்டமிடல் அவசியம் என்று வாழ்ந்தவன். தான் விரும்பியவளின் காதல் உணர்வுகளை புரித்துக்கொள்ளமால் சொதப்பி பின் ஈகோவை ஈ ஓட்ட விட்டு காதலை உணர்ந்து, உணரவைத்து சொன்னவன். அவளின் மீதான காதலை அவளுக்கு உணர்த்த அவளின் உணர்வுகளையே வாங்கி தந்தவன் இந்த காதல்கணவன்.
சௌபர்ணிகா:- மனக்குரல் கவுண்டர் நாயகி. வாழ்வில் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டால் தான் நிம்மதி என்று உணர்ந்த நாயகி. நமக்கான வாழ்வை நமக்காக வாழவேண்டும், போலியாக எதிலும் சிக்கி அவஸ்தை படக்கூடாது என்று கொள்கை உடைய நாயகி. ஹீரோவின் மீதான காதலையே கரம் பிடித்து, ஹீரோவை கைபிடித்தவள். எதிராளியின் எண்ணத்தையே கண்ணாடி போல் காட்டும் நாயகி இந்த கதாநாயகி.
இந்த நாவலில் உங்களின் அசர வைக்கும் வேகம், குபீர் சிரிப்பு கிளப்பும் உரையாடல், கருத்தில் கவரும் கருத்து என வருவதே உங்களின் பலம் சகோதரி. ஹீரோயின் மனக்குரல் என ஒவ்வொரு பக்கத்திலும் வரும் மைண்ட் வாய்ஸ் அருமை சகோதரி. உதாரணமாக சில மனகுரல்கள்:-
“சும்மா இருக்கிறவங்களை சுண்டல் விற்க விடணும்”
“டியூப் லைட்டை பார்த்த டூவின்ஸ் பிறக்கும்”
“சிரிப்பு வந்த உடனே சிரிக்கிறவங்களுக்கு எல்லாம் சீக்கிரம் வயசாகிவிடும்”
“முனுமுனுக்கிறவங்களுக்கு முந்திரி அல்வா கிடைக்கும்”
என வரும் மனக்குரல் காமாடி உரையாடல் ஆக இருந்தாலும் சரி, இல்லை கருத்தில் பதியும் வண்ணம் உள்ள சில கருத்துகளான:-
1.எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் நம்மிடம் உண்மையா அன்பு உள்ளவரிடம் பகிர்ந்து கொண்டால் தான் நிம்மதி.
2.கனவிலும் எதிர்பாராத சம்பவம் நடக்கும் போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது.
3.எந்த ஒரு விஷயமும் அவங்க அவங்க பக்கம் ஒரு நியாயம் இருக்கும்.
என்று வந்தாலும், காலத்தையே ஒரு காமாடியா சொல்லும் ஒரு கருத்து
கடிகாரத்தில் பேட்டரி தீர்ந்து போனாலும் காலம் யாருக்கும் நிற்காது என்று எது எழுதினாலும் அதில் உங்கள் ஆளுமை தெரிகிறது சகோதரி