மல்லிகா மணிவண்ணன் சகோதரி அவர்களுக்கு,
தங்களின் குறுநாவல் சந்தத்தில் பாடாத கவிதை பற்றி உங்களிடம் சில வார்த்தைகள். ஒரு யதார்த்தமான நாவல் சகோதரி. நேர்மை, உண்மை, உழைப்பு இதனை நம் கடைபிடிக்க வேண்டும், பிறகு நம்மை சுற்றி உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டும். நம் திருந்தினாலே போதும், நம்மை சுற்றி உள்ளவர்கள் திருந்தினாலே போதும் ஊரும், உலகமும் திருந்தும் என்ற கருத்தை இம்முறை வல்லிய காதல் கதை மூலம் கூறியிருக்கிறீர் சகோதரி.
ஒரு நாவலில் உணர்வும், உணர்வுபூர்வமான உரையாடலே நாவலை உயிரோட்டமாக்கும். அந்த வகையில் மீண்டும் மல்லி சகோதரின் எழுத்தை பார்த்தது போல் இருந்தது. ஒரே ஒரு குறை சகோதரி. முழுநாவல் ஆகும் தகுதி உள்ள நாவலை ஏன் குறுநாவலாக எழுதீனிர்கள் சகோதரி. சில பாத்திரங்களின் முடிவும், தொடரும் சொல்லபடவில்லை. ரேணுகாவின் தொடர், அவர் கணவனின் முடிவு என்ன என்று. ரேணுகாவை வைத்து மீண்டும் நாவல் எழுதும் யோசனை உள்ளதா சகோதரி.
காவ்யா :- நேர்மை உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை, தலைநிமிர்வு அதிகம். அது மற்றவர் பார்வைக்கு திமீர், தலைக்கணம் என்று விமர்ச்சிக்கப்படும். ஆனால் நேர்மை என்பதே ஒரு தீ. தீயின் வேலை தன்னுடன் சேரும், அல்லது தன் சேரும் அனைத்தையும் தன்னைப்போல் தீயாக மற்றுவதே வேலை. அதுபோல் தன்னுடன் காதலில் சேர நினைக்கும் ஹீரோ கிருஷ்ணகுமாரையும் நேர்மையாக மாற்றியது அருமை. ஆனால் இறுதியில் சொத்துக்கள், தங்களுக்கும் , தங்கள் பிள்ளைகளுக்கும் வேண்டாம் என்று சொல்லுமிடம் யதார்த்ததை மீறியது போல் தெரிந்தது சகோதரி. ஏனெனில் இப்படிபட்ட மனிதர்களை இந்த தலைமுறை பார்த்து இல்லை சகோதரி.
கிருஷ்ணகுமார் :- தன் நெருங்கிய தோழியின் பார்வை மாற்றத்தை உணர்ந்து, தன் அன்பின் தன்மையை வகை படுத்தி புரிந்து கொள்கிறார். தன் காதலி தன் உணர்வை தன்னிடம் உரைக்கவில்லை என்று குமுறும் போது நெஞ்சில் நிறைகிறார். அவளின் உணர்வை புரிந்து, உணர்வுக்கு மதிப்பளித்து, அதேநேரம் தன் கடமையும், தன்னவளின் கடமையும் புரியவைக்கிறார்.
ரத்னா :- கணவனை இழந்த ஒரு தாயின் கண்ணியம், கடமை, பொறுப்பு உணர்ந்து செயல்படும் தாய். தன் பிள்ளைகள் நவீன், பிரவீனுக்கு பொறுப்புகளை புரியவைத்து, உழைப்பின் உயர்வை சிறு வயதினில் உணரவைத்தவர். தன் மகளின் திருமணத்தை குறை வைக்காமல் நிறைவுடன் செய்து மகிழ வைத்தவர்.
சசிகலா, ராஜேந்திரன் :- புது பணக்காரன் செய்யும் அனைத்து வேலையும் குறைவின்றி செய்தவர்கள். லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம், ஆனால் இன்றைய நாளில் சில இடங்களில் வாங்க மறுப்பதும் குற்றமாகிவிட்டது. இவர்கள் செய்த பாவம் இவர்களின் மகள் ரேணுகாவின் தலையில் விடித்தது என்று நினைக்கும் போது அங்கு ஒரு விளக்கம் தருவீர்கள் சகோதரி அருமை. கெட்டவர்களுக்கு கெட்டது நடக்கலாம் ஆனால் என் தாய்க்கு என் கெட்டது நடத்தது என்று ஹீரோயின் கேட்கும் கேள்வி, காலகாலமாக நல்லவர்கள் கேட்கும் கேள்வி. பதில் தான் யாரிடமும் இல்லை. {ஆனால் அதற்கும் நம் ஆட்கள் பூர்வஜென்மபுண்ணியம் என்று கதை சொல்லி உள்ளார்கள்}
நாவல் முழுவதும் மனதில் இருந்தாலும் மெல்லிய நகைசுவையுடன் கூடிய இடங்கள் மற்றும் சில நச் என்ற இடங்கள் :-
1.நாயகன் சிகெரெட் பிடிக்கும் இடங்கள், அதனை ஹீரோயின் பார்க்கும் இடங்கள் எல்லாம் குறும்பு உரையாடல்கள்.
2.திருமண வயதில் பிள்ளைகள் வைத்து இருக்கும் பெற்றோரை ஈர்த்தாள் என்ற இடத்தில் இன்றைய நிஜங்கள்.
3.லஞ்சம் பற்றி வரும் இடம் அருமை. சமுதாய கோபம், சாமியிடம் கோபம்.
4.ரேணுகாவின் திருமணம் அது தொடர்பான கசப்புகள் என்ற இடம் பகீர் என்கிறது. வெளிநாட்டு மோகத்துக்கு சவுக்கடி.
5.சாமியாரா போகும் ஐடியாவில் இருக்கேன். அதுக்கென பயிற்சிக்கு வந்தேன் என்று கூறுமிடம் நகைசுவை மற்றும் சமுதாய சீண்டல்
6.யாரும் சாப்பிடும் போது சொல்லி காட்டாதீங்க, சாப்பிடும் போது வலிக்கும். யார் சாப்பாட்டையும் யாரும் கொடுக்க முடியாது, அது ஆண்டவன் கொடுப்பது என்ற இடங்கள் வறியவரின் வயிற்று வரிகள்.
7.ரேணுகா, அவள் அம்மாவிடம் நீங்கள் அனுப்புகிறீர்களா அல்லது அவள் வந்து அழைத்து போகவா என கேட்கிறாள் என்று கூறியவுடன் நீ கிளம்பு என்று சொல்வார்கள். குபீர் சிரிப்பு வரும் இடங்கள்
நாவலின் வேகத்தில் உணர்வுகளும், உரையாடல்களும் பதிந்த அளவு கருத்துகள் பதிவு கொஞ்சமே சகோதரி. ஆனாலும் அப்படி பதிந்த கருத்துகளில் ஒரு ஆச்சரியம் உள்ளது சகோதரி. எனக்கு ஓஷோவின் கருத்துகள் மிக பிடிக்கும். நீங்கள் போகும் போக்கில் சொல்லியவை பற்றி சிறு குறிப்புகள்.
1.வாழ்வை அதன் போக்கில் வாழவேண்டும். இது முடிந்து அது என திட்டம் போட்டு வாழாதே.{ ஓஷோவின் கருத்து :- வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே. }
2.என்ன செய்யனும்னு நான் முடிவு பன்றேன், தப்பா பண்ணினா சொல்லுங்கள். {ஓஷோ கருத்து :- நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை. }
3..எப்போதும் பளீச் என்று இருங்கள், பிறர் பார்க்க அல்ல, நம்மை நம் பார்க்க. { ஓஷோ கருத்து :- நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல. நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை. }
என் தேவைகள் என்னை விட உனக்கு தெரியும், நான் சொல்லாமல் நீ செய்வாய் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, காதலில் எடுப்பதை விட கொடுப்பதே சிறந்தது என உணர்ந்தவர்கள் இல்லறத்தில் இணைகிறார்கள். நல்ல எண்ணங்களுக்கு சக்தி அதிகம். நேர்மை, உண்மைக்கு என்று உயர்வு உண்டு. அது நேற்றும் இன்றும் நாளையும் உண்டு என நாவலை முடித்ததுக்கு வாழ்த்துகள் சகோதரி.