PAPPU PAPPU
Well-Known Member
வண்ணம் 4 :
அன்று மதிய உணவு இடைவேளையின் போது ரெஸ்ட் ரூம் செல்வதாக சூர்யாவிடம் சொல்லிவிட்டு மற்ற நால்வரும் சென்றனர்.அவர்களின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தான் அப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவன் ஒருவன்.
எதேர்ச்சையாக அவர்களை பார்த்தவன், சினேக சிரிப்புடன் அவர்களின் அருகில் வர ஆரம்பித்தான். தங்களை பார்த்துதான் அந்த மாணவன் வருகிறான் என்பதை தெரிந்து கொண்ட மது “அவன் என்கிட்டதான் பேச வரான்” என்று சொல்ல அபியும், பூஜாவும் அவளை முறைத்து கொண்டே “இல்லை, இல்லை என்கிட்டதான் பேச வரான்” என்று ஒரே நேரத்தில் சொன்னார்கள்.இப்படி மூவரும் மாத்தி மாத்தி சண்டைபோட்டு கொண்டு இருக்கும் போது, இவர்கள் சண்டையை பார்த்த ப்ரீத்தியோ “சமோசாக்கு சண்டை போட்டாலும் பரவால்ல இவன்கிட்ட பேசறத்துக்கு போய் சண்டை போட்டுட்டு இருக்கீங்களே” என்று சொல்ல மூவரும் ஒரு சேர அவளை முறைத்தனர். அவர்களின் பார்வையில் கப்பென்று வாயை மூடி கொண்டு ' சமோசா அருமை தெரியாதவளுங்க ' என்று மனதுக்குள் கவுண்டர் அடித்து கொண்டாள்.
பின் ஒருவழியாக மூவரும் தங்களுக்குள் பேசி சமாதானமாகி ஒன்றாக “ஹாய்” சொல்லி பேச ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து கொண்டனர்.
இங்கு கேன்டீன் அருகில் தாங்கள் எப்போதும் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து தோழிகளுக்காக காத்திருந்த சூர்யாவிற்கு பசி அதிகமாக பொறுமை இழந்தவள், “ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாங்க இன்னும் ஆளையே காணாம், இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்காங்கனு கடுப்பாகி அவர்களை திட்டி கொண்டே கிரௌன்ட்டிற்கு வந்துவிட்டாள்.
தோழிகளை தேடி வந்தவளின் கண்களை சுழல விட அவள் கண்கள் கண்ட காட்சியில் அதிர்ந்தாள்.உடனே வேகமாக அவர்களை நோக்கி ஓடியவளின் மனதில் இத்தனை நாளா, பசங்களை கலாய்க்கிறது, பாக்கறதுனு மட்டும் இருந்தாங்க இன்னைக்கு பேசவே போய்ட்டாங்க இதுங்கள என்னதான் பண்றதோ தெரியலையே என்ற புலம்பலுடன் அவர்களை நெருங்கினாள்.
அந்த பையன் இவர்கள் அருகில் வந்த அதே நேரம் சூர்யாவும் அங்கு ஆஜரானாள். அவளை பார்த்த மூவரும் “ஹய்யயோ”….. என்று மனதில் நினைத்து கொண்டு இருக்க அவர்களின் அருகில் வந்தவனின் கண்களோ அதிகமாக மின்னியது. அவனை கணக்கில் எடுத்து கொள்ளாத சூர்யா தோழிகளை முறைத்து கொண்டு நிற்க மற்றவர்களோ “இவ பாத்துட்டாளா இனி அட்வைஸ்பண்ணியே சாகடிப்பாளே” என்று நினைத்து கொண்டு இருந்தனர்.
அருகில் வந்த பையனோ சூர்யா தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்து கடுப்பாகி, அவனும் அவளை தவிர்த்து மற்றவர்களை பார்த்து நட்ப்பிற்கான அழைப்பாக“ஹாய் ” என்றான்.அவர்கள் மூவரும் பதில் கூறும் முன் சூர்யா முந்தி கொண்டு ப்ரீத்தியை பார்த்து “இன்னைக்கு ரக்சாபந்தன்ல ‘அண்ணாக்கு’ ராக்கி கட்டணும்னு சொன்னாங்களே அது இந்த அண்ணாதானே” என்று ‘அண்ணாவில்’ அழுத்தம் கொடுத்து ‘ஆமாம்னு’ சொல் என்ற கட்டளை குரலுடன் கேட்டாள்.அவளும் பேந்த பேந்த விழித்து கொண்டு ‘ஆமாம் ஆமாம்’ என்னும் விதமாக தலையை ஆட்டினாள். ப்ரீத்தியின் பதிலில் மற்ற மூவரையும் நக்கலாக பார்த்து சிரித்து கொண்டே தன் பிலோபாம் பாக்கெட்டில் இருந்து ராக்கி கயிறை வெளியில் எடுத்தாள்.
சூர்யா ராக்கி கயிறை வெளியில் எடுப்பதை பார்த்த மற்ற மூவரும் கண்கள் வெளியே தெறித்து விடும் அளவு அதிர்ச்சியாகி விழித்தனர். மனதிலோ “ஹய்யோ நம்ம சைட் மட்டும்தான் அடிச்சுட்டு இருந்தோம் இவ அதுக்கும் அண்ணான்னு சொல்லி ஆப்பு வச்சுடுவா போலையே” என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.
சூர்யாவின் பேச்சை கேட்ட அந்த மாணவனோ கடுப்பாகி “ராக்கி கட்டினாலும் இல்லை என்றாலும் அவர்கள் எனக்கு தங்கைதான்” என்றவன் ஒரு முழு நிமிடம் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்து “அவங்க எனக்கு ராக்கி கட்டட்டும் உனக்கு நான் தாலி கட்டவா” என்று சொல்ல அவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நின்றனர் என்றால், சூர்யாவோ முதலில் அதிர்ந்தவள் பின் அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
சூர்யா அழுவதை பார்த்தவன் “அப்போதுதான் தன் வார்த்தைகள் வரம்பு மீறியதை உணர்ந்து தவிப்புடன் நின்றான். அவன் கூறியதை கேட்ட மற்றவர்கள் சூர்யா அழுகையில்தான் தங்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு தன்னிலை அடைந்தனர்.
அபி அவள் அழுவதை பார்த்து “அவன் தங்கச்சின்னு சொன்னதுக்கு நம்மதான் அழணும் இவ எதுக்கு அழறா” என்று கேட்க மற்ற இருவரும் ஒரு சேற “அதானே” என்றார்கள்.
அவள் தொடர்ந்து அழுவதை பார்த்த மது அபியிடம் “ஏன்டி இவ எதுக்கு இப்புடி அழுதுட்டு இருக்கா?“அழுகையை எப்போது நிப்பாட்டுவாள்? எனக்கு வேற பசிக்குது போய் முதல்ல சாப்பிடனும்” என்று அப்பாவியாக சொல்ல அவளை முறைத்தாள் அபி.
அவளின் முறைப்பை பார்த்த மது “ஏன்டி என்னை இவ்வளவு பாசமா பாக்குற” என்று புரியாமல் கேட்க அபியோ “இங்க இவ அழுதுட்டு இருக்கா உனக்கு பசிக்கிறதா” என்று பல்லை கடித்து முணுமுணுத்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தார் அவர்களது விளையாட்டு ஆசிரியர்.
‘ஹய்யயோ’ “மிஸ் வர்றாங்க நம்ம இருக்கற பக்கம்தான் வர்றாங்க ஏய்…… சூர்யா எந்திரிடி என்றவள் அந்த மாணவனை பார்த்து " நீங்க போங்க "சீக்கிரம் என்று அவசரப்படுத்த அவனோ சூர்யா அழுவதையே தயக்கத்தோடு பார்த்து கொண்டு நின்றானே ஒழிய அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
' ஹய்யோ மிஸ் வர்றங்களே இவன் வேற நகரமாட்டிக்கிறானே ' என்று மனதில் தோன்றிய படபடப்புடன். " சூர்யா முதல்ல எந்திரிச்சு கண்ணை துடைத்து சாதாரணமாக இரு இல்லை கூண்டோடு மாட்டிக்கொள்வோம் "என்றாள் உதறலுடன்.
அபியின் பேச்சில் ஒருவாரு தன்னை சமாளித்த சூர்யா கண்களை நன்றாக துடைத்து கொண்டு பூஜாவின் அருகில் போய் நிற்பதற்கும் ஆசிரியர் அவர்களிடம் வருவதற்கும் சரியாக இருந்தது.
ஆசிரியர் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து சாப்பிட போகாமல் " இங்கே என்ன செய்றீங்கள் " என்று பொதுவாக கேட்டார்.
ஆசிரியரின் கேள்வியில் அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு " கோரசாக ஒன்னுமில்ல மிஸ் " என்று சொல்ல அந்த மாணவனுக்கோ மனம் படபடத்து போனது. விளையாட்டாகப் பேசப்போய் வார்த்தையில் ஏற்பட்ட திடீர் அதிர்வுகளால் உறைந்து நின்றிருந்தான்.
அவர்களின் திருட்டு முழியையும் சூர்யாவின் அழுது சிவந்த முகத்தையும் பார்த்தவருக்கு சந்தேகம் ஏற்பட அங்கு திரு திருவென்று விழித்து கொண்டு நின்றிருந்த ப்ரீத்தியை பார்த்தவர் மிரட்டும் தொனியில் " இங்கு என்ன நடந்தது சொல்லு " என்று அழுத்தமாகக் கேட்டார்.
ஆசிரியர் கேட்ட தொனியிலேயே பயந்துபோன ப்ரீத்தி தன் தோழிகளை திரும்பிப்பார்க்க அவர்கள் விழிகளை உருட்டி வேண்டாம் என்பது போல் சைகை செய்ய அது பயத்தில் இருந்த அவளுக்கு புரியாமல் போனது ப்ரீத்தியிடம் இருந்து பதில் வராமல் போக மீண்டும் ஒரு முறை அழுத்தமாக தன் குரலை உயர்த்தி " அங்கு என்ன பார்வை " என்று மிரட்டினார்.
' ஐயோ உளற போறாளே ' என்று அனைவரும் மனதில் அலறினர். பின் ஒருவழியாக மது மட்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " இல்ல மிஸ் " என்று சொல்ல வர அவளை கைநீட்டி தடுத்து ப்ரீத்தியை பார்த்து " நீ சொல்லு " என்றார். ' நம்மளை விட்டு தொலைய மாட்டேங்கிதே இந்த மிஸ்ஸு ' என்று மனதிற்குள் பயந்தவள் அனைத்தையும் உளறிக் கொட்ட கோவமான ஆசிரியர் அவர்கள் அனைவரையும் பிரின்ஸிபள் அறைக்கு வாங்க என்று அழைத்து சென்றார்.
ஆசிரியர் முன்னாள் செல்ல பின்னால் வந்த ஐவரில் பூஜா ப்ரீத்தியை பார்த்து " ஏன்டி உண்மைய சொன்ன " என்று முறைத்துக் கொண்டே கேட்க, அவளோ "ஒரு புலோல உண்மை வந்துருச்சுடி "என்றாள் பாவமாக.
அபியோ " உன் புலோவுல இடி விழ இப்போ பாரு எல்லோரும் மாட்ட போறோம் " என்றாள். அபியின் பேச்சை கேட்ட பூஜா " ஆமாம் டி அம்மா, அப்பாவ வீட்ல இருந்து கூட்டி வர சொல்ல போறாங்க. என்னோட அப்பாவைக்கூட சமாளிச்சுடுவேன் எங்க வீட்ல இருக்கே ஒரு கிழவி அதை நெனச்சாலே எனக்கு பக்கு பக்குங்குது " என்று சொல்ல மதுவோ " உங்க வீட்டுலையாச்சும் கிழவி தாண்டி என் வீட்டுல இருக்கே உடன்பிறப்புன்னு உறுப்புடாம போனது எப்போட சாக்கு என்ன மாட்டி விடலாம் நினைக்கும் இனி இதையே வருஷ பூரா சொல்லி காமிப்பானே " மாற்றி மாற்றி பேசிக்கொண்டே பிரின்சிபல் அறைக்கு வந்தனர். அவர்களை வெளியில் நிற்க சொல்லிவிட்டு ஆசிரியர் மட்டும் முதலில் உள்ளே சென்றார்.
பிரின்ஸிபல் அறைக்குள் சென்ற ஆசிரியர் அனைத்தையும் அவரிடம் கூறி இவர்கள் பெற்றோர்களை அழைத்து பேசலாம் என்று கூறினார்.உள்ளே வந்த 6 பேரையும் கூர்மையாக பார்த்த பிரின்சிபல் " என்ன உங்கள் பெற்றோரை வர சொல்லலாமா " என்று கேட்க அனைவரின் முகமும் பயத்தில் வெளுத்தது ஒருவனை தவிர, அதை கவனித்த பிரின்சிபல் அந்த மாணவனை அழுத்தமாக பார்க்க ஒரு நொடி தலை குனிந்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக அவர்கள் அனைவருக்கும் முன் வந்து நின்று " சார் தவறு முழுவதும் என்னுடையதுதான் அவர்கள் மேல் தப்பு இல்லை எந்த பனிஷ்மென்டாக இருந்தாலும் எனக்கு கொடுங்கள் " என்று அவர் கண்ணை பார்த்து கூறினான்.
அந்த மாணவனின் கண்ணை கூர்ந்து பார்த்தவரின் அனுபவ அறிவு சொன்னது அவனது தவறை அவன் உணர்ந்துவிட்டான் என்று.சரி அவனிடம் தனியாக பேசி கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தவர் தன்னையே திகிலான பார்வை பார்த்து கொண்டு இருந்த ஐவரையும் பார்த்து வகுப்பிற்கு போக சொல்ல அவர்களும் ஜஸ்ட் மிஸ் நல்லவேளை காப்பாத்திட்டான். தப்பிச்சோம்டா சாமி என்று ஆளாளுக்கு ஒன்றை மனதுக்குள் நினைத்தவர்கள் விட்டால் போதும் என்று தங்களது வகுப்பிற்கு ஓடி இருந்தனர்.
அவர்கள் மேல் தப்பிருக்கிறதா இல்லையா என்று அவர்களுக்கே தெரியாத போது இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்ற மனநிலைதான் இருந்தது எட்டாம் வகுப்பு படிக்கும் அவர்களுக்கு. அன்றைய பொழுது திகிலாகவே செல்ல அடுத்த நாள் பள்ளி சென்றவர்களுக்கு இடியாக வந்தது அந்த செய்தி.
எப்போதும் குறும்போடும் குதூகலத்தோடும் பள்ளிக்கு செல்பவர்கள் அன்று ஏனோ அமைதியாக சென்றவர்கள் தாங்கள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்திருக்க அவர்களை நோக்கி கோபமாக வந்தாள் யமுனா. அவளை யாரும் கவனிக்காமல் இருக்க அவர்கள் எதிரில் வந்து நின்றவள் சரமாரியாக திட்ட ஆரம்பித்தாள்.
“இப்போது உங்களுக்கு சந்தோஷமா?” என்று கேட்க . நால்வரும் இவள் எதற்கு இப்படி பேசுகிறாள் என்று புரியாமல் விழித்து கொண்டு இருந்தனர். யமுனா அவர்களின் புரியாத நிலை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல். “இப்படி அவனை டிசி வாங்கிட்டு போக வச்சிட்டீங்களே” என்று சொல்ல அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது இவள் கத்துவது நேற்று நடந்த நிகழ்விற்காக என்று.
“என்ன அந்த பையன் டிசி வாங்கிட்டு போய்விட்டானா” என்று அனைவரும் அதிர்ந்து கேட்க. “சும்மா நடிக்காதிங்க அவன நீங்க எல்லோரும்தானே மிஸ்கிட்ட சொல்லி பிரின்சிபல் ரூம்க்கு அழைச்சுட்டு போனீங்க.அப்புறம் எப்புடி உங்களுக்கு தெரியாமல் இருக்கும்” என்று மேலும் மேலும் எகிறி கொண்டுவர, அவளின் கத்தலை பார்த்து கடுப்பான பூஜா “இங்க பாரு தேவை இல்லாம பேசாத அவங்க பண்ணுனது தப்பு அதனால நாங்க மிஸ்கிட்ட சொன்னோம்” என்று சொன்னாள்.
" அவன் பண்ணுனது தப்புதான் அதற்காக மிஸ்ட்ட சொல்லி மாட்டி வைப்பிங்களா உங்களாலதான் அவன் போனான் " என்று மீண்டும் சொன்னதையே திரும்ப சொல்ல அவளின் பேச்சை கை நீட்டி தடுத்த அபி " சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்காதா அவங்க பண்ண தப்புக்கு மிஸ்க்கிட்ட சொன்னோம் அவளோதான் அவங்க டிசி வாங்கிட்டு போவாங்கனு நாங்களும் எதிர்ப்பார்க்கவில்லை " என்று சொல்லும்போதே சூர்யா கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்து இருந்தது.
" அவங்க பண்ணுனது தப்புதான் அதுக்காக மிஸ்கிட்ட சொல்லுவீங்களா. யாரு தப்பு பண்ணினாலும் சொல்லுவீங்களா எங்க தைரியம் இருந்தா என்னை சொல்லுங்க பார்ப்போம் " என்று நக்கலாக கூற. அவளை கிண்டலாக பார்த்த ப்ரீத்தி "உன்னை கம்பளைண்ட் பண்ணுவதற்கான தைரியம் எங்களுக்கு இருக்கு இங்கயே நிற்க உனக்கு தைரியம் இருக்கா ஏன்னா உனக்கு பின்னாடி மிஸ் வர்றாங்க " என்று சொல்ல அதிர்ந்த யமுனா பின்னாடி திரும்பி பார்க்க அவர்களது பிஇடி ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்து பயந்த யமுனா " உங்களை அப்புறம் கவனித்து கொள்கிறேன் " என்றவள் அடுத்த நிமிடம் சிட்டாக பறந்து இருந்தாள்.
“ஹேய் ரொம்ப தைரியமானவதானே நீ எங்க ஓடுற நில்லுடி. எங்களுக்கு தைரியம் இருக்கானு கேட்டுட்டு நீ எங்க ஓடுற” என்று ப்ரீத்தி கத்தியது காற்றோடு கலந்து போனது. “ விடுடி அவ ஒரு டம்மி பீஸ் அவகிட்ட போய் பேசிக்கிட்டு” என்று பூஜா சொல்ல, ப்ரீத்தியோ “அவகிட்ட பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மண்ட் வீக்” என்று சொல்லி இருவரும் “ஹைபை” அடித்து கொண்டனர்.
அபி யோசனையோடு இருக்க அப்போதுதான் தன் தந்தையுடன் காரில் இருந்து இறங்கி வந்தாள் மது.தோழிகள் அனைவரும் பள்ளி வாயிலிலேயே நிற்பதை பார்த்து அவர்களிடம் வந்தவள் “ஹேய் இங்க என்ன…. ..பன்……..என்று கேட்க வந்தவள் சூர்யாவின் முகம் வாடி கண்ணீர் வருவதை பார்த்து வேகமாக அவளிடம் சென்று “என்ன ஆச்சுடி எதுக்கு இப்போ அழற” என்று கேட்க அப்போதுதான் அனைவருமே அவளை கவனித்தனர்.
தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்த பூஜா , ப்ரீத்தி இருவரும் அவளிடம் வந்தவர்கள் அவளை சமாதானபடுத்த முயற்சிக்க அவர்களின் எந்த பேச்சும் அவளிடம் எடுபடவில்லை.மது பொறுமை இழந்து மற்றவர்களிடம் “என்ன நடந்தது” என்று கேட்க அவர்கள் தாங்கள் பள்ளியின் உள்ளே வந்ததில் இருந்து யமுனா பேசி சென்றது வரை சொல்ல அவளுக்கும் கோபம்தான் வந்தது. “இவ எதுக்குடி அடிக்கடி நம்ம வழிலேயே வரா” என்று யோசனையோடு கேட்க, அபியும் அதையே யோசித்து கொண்டு இருந்தவள் மது கேட்கவும் “அதுதான் எனக்கும் யோசனையா இருக்கு. அன்னைக்கும் தேவையில்லாம நம்மை மிஸ்கிட்ட போட்டு கொடுத்து முட்டி போட வச்சா, இன்னைக்கும் வந்து திட்றா எதனாலையே இருக்கும்” என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
சூர்யா அழுது கொண்டு இருப்பது அபிக்கு கோபத்தை உருவாக்க “கொஞ்சம் அழாம இருக்கியா, நேத்து மாதிரி எதுவும் பிரச்சனையை இழுத்து வைக்காதே, அங்க பாரு மிஸ் வார்றாங்க” என்று சொல்ல கண்களை அழுத்தி துடைத்து கொண்ட சூர்யா எதுவும் சொல்லாமல் அவர்கள் எப்போதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்துவிட்டாள். அவள் பின்னோடு வந்த அவளது தோழிகளும் “ச்ச. . தேவை இல்லாம யார் மேலோ இருக்கும் கோபத்தில் இவளை திட்டிடமே என்ற குற்ற உணர்ச்சி எழ சாரிடி டென்ஷன்ல….. என்று அபி மேலும் ஏதோ சொல்வதற்குள் அவள் பேச்சை தடுத்த சூர்யா “அதை விடுடி நான்தான் அந்த பையன் இங்கிருந்து போக காரணமா” என்று கேட்க அவளை அதிர்ச்சியாக பார்த்தனர் தோழிகள்.
வண்ணம் தொடரும்....
Last edited: