"ஆமா இவள பெத்து ஊர் மேய விட்டுட்டான் இவ அப்பன்" முணுமுணுத்தான் லஹிரு.
"ம்ம் எழுது கண்டி மொல்லிகொட வளவ்வயை சேர்ந்த லஹிரு துஷார வீரசிங்க என்ற நபரிடம் இரண்டு லட்சத்தி இருபதாயிரம் ரூபா பணம் இரண்டு வீத வட்டிக்கு பெற்றுக்கொண்டேன்"
"என்னது ரெண்டு வீத வட்டிக்கா?" எழுதியதை நிறுத்திய சாரு ஏறிட
"பின்ன உனக்கு சும்மா காசு கொடுக்க நீ என்ன என் அத்த மகளா? மாமன் மகளா? எழுது எழுது" அதட்டினான் லஹிரு.
"பகல்கொள்ள" முறைத்தவாறே எழுதினாள் சாரு.
"லஹிரு என்ன சொல்லுறானோ எல்லாம் செய்வேன். எழுது என்ன முறைக்குற?"
"என்ன எல்லாம் செய்வேன்? செருப்பு பிஞ்சிடும் பாத்துக்க. என்ன என்னனு நினைச்ச?" இருக்கையை தள்ளியவள் அவனை அடிக்க கையோங்க லஹிரு அவள் கையை பிடித்து தடுத்தான்.
"என்னம்மா பிரச்சனை" சுமித் கத்த
"போலீஸ் ஸ்டேஷன்ல இருந்துகிட்டே தப்பா பேசுறான். உங்க நண்பன் என்று கண்டுக்காம இருக்கீங்களா?" அவன் கையை இழுத்து கடித்து வைத்தாள் இவள்.
கையை உதறியவன் "யக்ஷணி வலிக்குதுடி" அவளை முயன்றமட்டும் முறைத்தவன் "நான் என்ன தப்பா பேசிட்டேன்" புரியாது கேட்டான் இவன்.
"இவன் இப்படித்தான்மா எதையும் விலாவாரியா சொல்ல மாட்டான் அரைகுறையா சொல்லி அடிவாங்குவான். என்னடா..." என்றவாறு சுமித் இவர்களை நெருங்கி இருந்தான்.
"நான் சொல்லுற வேலையெல்லாம் இவ செய்யணும்"
"என்ன வேல?" சாரு முறைத்தவாறு கேட்டாள் என்றால், சுமித் புரியாது கேட்டான்.
என்ன சொல்வது என்று ஒரு நொடி முழித்தான் லஹிரு.
"என்னடா?" என்று நண்பனை உலுக்கினான் சுமித்.