dhanuja senthilkumar
Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே
அத்தியாயம் – 12
அழகான விடியல் போலும் நாச்சியின் குடும்பத்துக்கு, இருக்காதா பின்னே மான் போல் துள்ளித் திரியும் தனது மருமகளை, அந்த இதமான காலைப் பொழுதில் பார்க்கும் போது, அந்த விடியல் கோடி அழகு தானே!
பால் வண்ணம் கொண்ட பதுமை, அக்குடும்பத்தில் இயல்பாகப் பொருந்திப் போனாள். வழமை போல் பொழுதோடு எழுந்து நாச்சிக்கு உதவிக் கொண்டு இருந்தாள்.
அவள் வேலை செய்யும் நேர்த்தியும் முதிர்ச்சியும் அவரது திருமண முடிவை வலு ஏற்றுவதை, கர்வமாக எண்ணிக் கொண்டார் நாச்சி, கூடவே உமையாளும் நாத்தியும் வந்து விடுவார்கள். என்ன செய்வது எப்படிப் பேசுவது என்ற எண்ணமும் ஓடிக் கொண்டு தான் இருந்தது.
அவரை பொறுத்தவரை இக்குடும்பத்துக்குச் சரியான தேர்வு சிவகாமி தான். தஞ்சம் கொள்ள வந்த பெண்ணைத் தனது மகனுக்குத் தாரமாக மாற்றிய காரணத்தை அவரே அறிவார். பார்த்த உடனே தன்னைக் கவர்ந்த பெண் அல்லவா?
***
வாயிலில் நுழையும் போதே சத்தமாக பேசிக் கொண்டே வந்தார், உமையாளின் தாய் நாகம்மை. அவருடன் உமையாள்.
அவரது குரல் கேட்டு நாச்சி வெளியில் வர, தூங்கிக் கொண்டு இருந்த அம்பலத்தான், அடித்துப் பிடித்து வந்தார்.
“சாமி இந்தக் கூத்தை பார்த்தியளா, நான் என்ன செய்யச் சொல்லுக.”
அம்பலத்தானைப் பார்த்த உடன் இன்னும் சத்தம் போட்டு அழத் தொடங்கிவிட்டார்.
“ஏன் மதனி? எங்க அண்ணாரு இல்லன்னு இப்படி பண்ணிப்புட்டிகளா? அவுக இருந்தா, இம்புட்டுத் தூரம் வந்து இருக்குமா? என் பொண்ணுக்கு என்ன பதில், அதைச் சொல்லுக!”
அம்பலத்தான் பேச வரும் முன், நாச்சி இடையிட்டார்.
“இங்கன பாருக நாகு. இது முழுக்க முழுக்க என் முடிவு. அந்தப் புள்ளைக்கு அடைக்கலம் கொடுக்க, அது அப்பன் வந்து நிண்டாரு. நாந்தேன் அந்தப் புள்ளையக் கட்டி கொடுக்க கேட்டேன். எனக்கு என்னமோ செய்தி மனசுக்கு அம்பலத்தானுக்கு ஏத்த சிவகாமி சுந்தரி அவ தான்!
உங்க பொண்ணுக்கு நானே நல்ல பையனப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்குறேன். கொஞ்சம் அமைதியா இருக.” என்றவர் உமையாளைப் பார்த்து.
“உமை கண்ணு, இங்கன வா!” என்றவர் தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
“நான் சொல்லுறதை செவி கொடுத்து பொறுமையா கேளு சாமி!” என்றவர் சிவகாமி நிலையை விளக்க, அவளுக்கும் புரிந்தது.
உமையாள் மனம் சடுதியில் ஏற்று கொள்ளக் காரணம் இது தான். திருமணம் உறுதி செய்யும் வரை எந்த வித சீண்டல்களும் இருவருக்கும் இருந்ததில்லை படிப்பு, தொழில் என்று அம்பலத்தான் இருக்க, மாமன் என்ற உறவில் மட்டுமே நின்றாள், உமையாள்.
எனவே அவள் தன்னை வெகுவாக தேற்றி கொண்டாள்.
இதனை எல்லாம் அடுக்களைக்குள் வேலை செய்து கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தாள், சிவகாமி.
வீட்டுக்கு வந்தவர்களை இயல்பு போல் ‘வாங்க’ என்று அழைக்க வந்த பெண், அவர் சத்தம் போட்டு அழவும், பயந்து போயி அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.
சிறு பெண் என்றாலும், அவர்கள் பேசுவதை வைத்து, சரியாகக் கணித்து விட்டாள். தன்னைக் கொண்டு தான் ஏதோ என்றளவு புரிந்தது.
‘அம்பலத்தான் தன்னுடையவன். தனது தந்தை சொல்லிவிட்டார். திருமணம் முடிந்த நாளே இனி உன்னுடைய ஆம்படையான் அவர் தான். பார்த்து நடந்துக்கோ’ என்று.
‘தாயிக்கு தன் தந்தை எப்படியோ? அப்படித் தான் தனக்கும் அம்பலத்தான் என்று’ பெண் முடிவு செய்து விட்டது.
அதனால் அம்பலத்தான் தேவைகளை ஒரு நாள் என்றாலும் மனதில் ஆழமாகக் கேட்டு பதிய வைத்துக் கொண்டாள். மருமாளுக்குத் துணையாக மாமியாரும்...
விடியலில் ஆரம்பித்த அழுகை, சூரியன் உச்சிக்கு வந்தும் நின்ற பாடில்லை. நாகம்மைக்கு உமையாளுக்கும் ஏமாற்றம் தான். இருந்தும் அம்பலத்தானை குற்றம் சொல்ல முடியவில்லை. நாச்சி தெளிவாகச் சூழ்நிலையை விளக்கிய பிறகு, சரியென்ற நிலை தான்.
ஒருவழியாகச் சமாதானம் செய்து, அவருக்கு உணவளித்து, பேருந்தை பிடித்து ஏற்றி விட்டுத் தான், அம்பலத்தான் ஓய்ந்தார்.
அவருக்குக் கண்ணைக் கட்டியது.தான் எடுத்த முடிவை உடனே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தனது குடும்பத்தின் பெரிய தலைக்கட்டுகளைப் பார்க்க வேண்டி, அன்றே ஊருக்குக் கிளம்பி விட்டார்.
நாச்சிக்கு சிவகாமியை தவிர வேறு எண்ணமே இல்லை போலும். எப்படி எல்லாம் அவரைச் சிலை வடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே, அவள் பின் திரிந்தார்.
மகன் முதல் முறையாகத் தனக்கு எதிராகச் செயல் படப் போகிறான் என்பதை அறியாமலே சென்றது அவர் பொழுது.
****
அம்பலத்தான் மாலைப் பொழுதில் மாயவரம் வந்து சேர, எதிர் பாராத அவர் வருகையில், அப்புச்சி வியந்து போனார்.பார்வை அவரைத் தாண்டி சென்று மீண்டது.
“என்ன சாமி தகவல் சொல்லாம வந்து நிக்கிறீக? எங்க உங்க பொஞ்சாதி.”
“ப்ச்..” என்று சலித்துக் கொண்டே திண்ணையில் அமர, தனது மனையாளை அழைத்து தண்ணீர் கொண்டு வரச் சொன்னார் பெரியவர்.
“கண்ணு அம்பலம் வந்து இருக்காக. தண்ணி கொண்டுவாக”
“சரிங்க.” என்றவர் தண்ணீர் கொண்டு வந்து அம்பலத்திடம் கொடுத்து விட்டு,“வாங்க, என்ன சாமி கண்ண மூடித் திறந்த நேரத்துல கல்யாணம் மூடுச்சுப் புட்டீக.”
“எல்லாம் அம்மை பண்ண வேலை ஐத்த” என்றவர் அவரது கையில் உள்ள சொம்பை வாங்கி, தாகம் தணித்துக் கொண்டார்.
அவரது பதட்டம் அசதியை பார்த்த அப்புச்சி, மனைவிக்குக் கண் காட்ட, அவரு ஒரு விசிறியை எடுத்து வந்து வீசினார்,
“விடுக ஐத்த.” என்றவரை கண்டு கொள்ள வில்லை, பெரியவர்கள்.
“என்ன சாமி செய்தி?”
“அப்புச்சி, உங்க அக்கா காரவுக வஞ்சம் தீர்த்துப் புட்டாக. சின்னப் புள்ளைய கட்டி வச்சு.என் நெஞ்சு அளவுக்குக் குட்டியா இருக்கு அந்தப் புள்ள.! நாகு ஐத்த வேற ஒரே அழுகை. அவுங்கள சரிக்கட்டி ஊருக்கு அனுப்பி வைக்கக் கொள்ள, நான் பட்ட பாடு, முடியல அப்புச்சி. நான் என்னத்த செய்ய?” என்று புலம்பியவரை பார்க்க பாவமாகத் தான் இருந்தது.
பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பின்பு, பெரியவர் அம்பலத்தான் மனதை கணிக்க முயன்றார்.
“சரி சாமி, நீங்க என்ன முடிவு சொல்லுறீக? உங்களுக்கு நான் இருக்கேன். நான் நாச்சி கிட்டே பேசிக்கிடுறேன்.
அந்தப் புள்ள ஐயர் வூட்டு பொண்ணு. நல்ல படிக்கும் போல. சக்தி கூடத் தான் படுச்சுது, நம்பக் கோவில் சேவகர் சுந்தர் பட்டர் பொண்ணு. அந்தச் சேவலை மைனர் எதோ வம்பு பண்ணி பயம் காட்டிட்டான். மானத்துக்குப் பயந்து அம்மையப் பார்க்க வந்து இருக்கார்.”
அம்பலத்தான் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இடையிட்டார், அப்புச்சி.
“அவுக வூட்டு ஆளுக யாரும் கண்டுக்கிடலையா?”
“இருக்காக, பெருசா ஆள் பலம் இல்ல. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் போல”
“சரிய்யா, போனது போகட்டும் நீங்க என்ன சொல்லுறீக?”
“நான் அந்தப் புள்ளைய படிக்கச் வைக்கலாமுன்னு இருக்கேன். சக்தி கூடத்தேன் படிக்குது அதுகூடவே பள்ளிக்கூடத்துக்கு போகட்டும். அதுவும் இல்லாம நல்லாப் பிடிக்குமாம். கணக்கு நல்லாப் போடுமாம். அதேன்..!”
“சரி, அதுக்குப் பிறவு”
“டீச்சருக்கு படிக்க வச்சு வேலைய வாங்கிக் கொடுத்திடலாம் அப்புச்சி. அது படிச்சு முடிக்கட்டும்.”
“சரி சாமி, அதுக்கும் பிறவு என்ன செய்தி?”
சிறு அமைதிக்குப் பின்,“நான் உமையாளை கட்டிக்கிடுறேன். அந்தப் புள்ளைக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சுடலாம்.” என்றதும் பெரியவர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“என்னய்யா இது?” சாத்தியமான ஒன்று இது
“வேற வழி இல்லை அப்புச்சி. சின்னப் பிள்ளையா இருக்கு. மனசு ஒப்பள..”
“எம் பொஞ்சாதிய நான் கண்ணாலம் பண்ண போது அதுக்கு ஒன்பது வயசு. உங்க அம்மைக்குக் கண்ணாலம் பண்ணும் போது பதிமூணு. அப்புடி பார்த்தா, உங்க பொஞ்சாதி வயசு கூடத்தேன்!”
“இல்ல அப்புச்சி, அது சின்னப் புள்ள. எப்படி சொல்ல?” என்று தடுமாறியவர்,
“என்னால யோசிக்க முடியல. புரிஞ்சுக்கிடுக!”
“சரி சாமி. அந்தப் புள்ள வூட்டுல கூடப் பேசிக்கலாமுன்னு வைங்க. உங்க அம்மை இதுக்கு ஒத்துக்கிடனுமே!”
“அம்மைக்குச் சொல்ல வேண்டாம். அந்தப் புள்ள பள்ளி கூடம் முடிக்கட்டும். பிறவு டீச்சருக்கு படிக்கட்டும், பேசிக்கிடலாம்.
அதுக்கு ஒரு வேலையை வாங்கிக் கொடுத்த அடுத்த நாளே, எனக்கும் உமையாளுக்கும் உறுதி பண்ணிக் கொடுங்க, அப்புச்சி.” என்றவரிடம் பேசவே முடியவில்லை பெரியவரால்.
‘அம்பலத்தான் பேச்சிலும் நியாயம் உண்டு. படித்தவன் வேறு. பகுத்தறிவு கொண்டு பிரித்துப் பார்க்கிறான். அவனது குரலுக்கும் செவி சாய்த்தே ஆக வேண்டும்’ என்ற நிலை அவருக்கு.
நாச்சி பற்றியும் அறிந்தவர் ஆயிற்றே.
“சரி சாமி பண்ணிக்கிடலாம். நீங்க கவலைப் படாம போயிட்டுவாக! இன்னும் காலம் இருக்கு.” என்றதை மனதுக்குள் சொல்லிக் கொண்டார், பெரியவர்.
அவரது பேச்சில் முகம் தெளிந்த அம்பலத்தான், இரு கரம் கூப்பி “வரேன் அப்புச்சி, வரேன்.”
“பார்த்துச் சூதானமா போக.” என்று வழி அனுப்பியவர், யோசனையாகப் போகும் அம்பலத்தானை பார்த்துக் கொண்டு இருந்தார்.
இதே நேரம், அங்கே தலை முதல் கால் பெரு விரல் வரை சிவகாமியை அளந்து விட்டார், நாச்சி.
தனது மகள்களைப் பார்த்துக் கொள்ளும் விதம்,அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, அவர்களுடன் இயல்பாகப் பழகும் விதம்,எதிலும் நேர்த்தியான மென்மை என்று அவரை வியக்க வைத்தாள்.
துடிப்பான ஆளுமையான பெண்கள் மீது நாச்சிக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. அவரே அப்படியான ஓர் ஆளுமையான பெண்மணி தான்!
கணவன் போன சமயம் மட்டுமே தளர்ந்து நின்றவர், பிள்ளைகளைப் பார்த்ததும் தனி ஆளாக பொறுப்பைக் கையில் ஏற்று நின்று, அதன் படி அம்பலத்தானையும் உருவாக்கினார்.அந்தக் காலத்தில் பெரிய படிப்பு படித்த பெண்மணி அவர், என்பது கூடுதல் பலம்.
சிவகாமியின் அறிவை வீண் செய்ய விரும்பாதவர், அதன் படி சிவகாமிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்துக் கொண்டார்.
தன் மகளான மீனம்மாள்,அன்பு,சங்கரி,சரசு படிப்பில் சறுக்கி நிற்க,
சக்தி,உலகுடன் சிவகாமியை படிக்க வைக்க எண்ணினார், நாச்சி. அதன்படி செயல் பட தனது மகனுக்காகக் காத்திருந்தார்.
இத்துடன் தனது கடந்த காலத்தை நிறுத்தி பொன்மொழி முகம் பார்க்க, அவள் படு தீவிர முகப் பாவனையுடன் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளது கையை வலிக்கக் கிள்ளி வைக்க, துள்ளிக் குதித்தவள்..
“ஏன்டி கிள்ளுன..?”
“நான் பேசுவதைக் கேட்காம, தூங்கிட்டு இருக்கியா கண்ணைத் துறந்துட்டே!”
“ப்ச் கேட்டுட்டு தான்டி இருக்கேன். ஒரு சந்தேகம்…”
பொன்மொழியை மார்க்கமாகப் பார்த்துக் கொண்டே,“என்ன?” என்றாள் சிவகாமி.
“இல்ல அண்ணனுக்கு உமையாளை ரொம்பப் புடிக்குமோ? அப்புறம் எப்படி இந்தச் சீட்டுக் குருவி பாப்பாவை சுத்தி வராரு? ஒரே குழப்பமா இருக்கே! என்னடி பண்ண?”
பொன்மொழி சிரிப்பை மறைத்துக் கொண்டு கேட்க, முடிந்த மட்டும் முறைத்த சிவகாமி..
“மீதி கதையைக் கேளு. நோக்கே புரியும்.”
“அப்போ இரு. நான் எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு, இங்க படுக்க வரேன். அண்ணன் இல்ல தானே! ஆச்சி பெற சொன்னா அம்மா விட்டுருவாங்க. இருடி மாமி வரேன்.” என்றவள் சிவகாமியின் பதிலை எதிர் பார்க்காமல் ஒட…
“அடி பாவி என் கதையைக் கேட்க, நோக்கு என்ன அப்படி ஒரு ஆர்வம்?”
சிவகாமி குரல் கொடுக்கப் படியில் இறங்கியவாறே பதில் சொன்னாள், பொன்மொழி.
“இது கதை இல்லை கணக்கு டீச்சர்,‘அம்பலவாணன் சிவகாமி சுந்தரி காவியம்’ அதான்!”
“அடி கொழுப்பே! நில்லுடி!” என்று தோழியை நோக்கி ஓட,
சிரித்துக் கொண்டே ஓடினாள் பொன்மொழி.
அவளுக்கு இன்றே அறிந்து கொள்ளும் ஆவல். அது என்னவோ அவள் மனதில் இருவரையும் வைத்து ஓடியது ஓர் நிழல் காவியம். இது போல் பார்த்து அறிந்திடாது பெண்ணுக்கு ஆச்சிரியம் கலந்த ஆவல்.
1967 இல் கலப்புத் திருமணம் என்பது அத்தகைய சாத்தியமற்ற ஒன்று அல்லவா.அதிலும் மாமியார் துணையுடன் அதிர்ந்து தான் போனாள், பொன்மொழி.
தனது தந்தையும் ஓர் ஆசிரியர் தான். முற்போக்குச் சிந்தனையாளர். அதனால் தான் தன்னைப் படிக்கச் வைத்து வேலை வாங்கிக் கொடுத்து, சுயம் கற்றுக் கொண்ட பிறகே திருமணம் என்று சொல்லிவிட்டார்.
இத்தனையும் அவர் செய்தார் என்றாலும், கலப்பு மணத்துக்கு அவர் ஒப்புக்கொள்வாரா என்று கேட்டால், அதற்குப் பதில் இல்லை தான்.
ஆனால் இங்கு பாரம்பரியம் மிக்க குடும்பம், கட்டுப்பாடு மிகுந்த மக்களுக்கிடையே இக்கல்யாணம் என்பது விந்தை தான்.
அதை விட ஒரு பெண்ணைச் சுயமாகச் செதுக்க எத்தகைய மனம் வேண்டும்...!
நினைக்க நினைக்க இருப்பு கொள்ளவில்லை. போன வேகத்தில் விடயத்தைப் பெற்றவர்களிடம் கடத்தி அவர்களிடம் அனுமதி பெற்று, அதே வேகத்தில் ஓடி வந்து விட்டாள், கதை கேட்க.
நாச்சியிடம் சொல்லி கொண்டு இருவரும் மச்சியில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டனர்.
இரவு உணவு கூடச் சரியாக எடுக்க முடியவில்லை போலும், அரிவைகளுக்கு. இவர்களை எண்ணிச் சிரித்துக் கொண்டார் நாச்சி.
அவருக்கும் பழையவை கனவாக, கண் மூடிக் கொண்டார். காலம் கனிந்து வர முன் எத்தனை இடர்பாடுகள்.