மறுநாள் விடியலில் கண்விழித்த அம்மு, எழுந்தவள் வெற்றியின் காலில் தான் தலைவைத்திருப்பதுக் கண்டு அதிர, “ஷ்ஷப்பா…காலே மரத்துப்போச்சிடி எரும!” என்றவன் காலைப்பிடித்துக் கொண்டு எழுந்தான்.
இது எப்படி? என்றவள் யோசித்துத் தெளியும்முன், “குண்டம்மா உருண்டு பிரண்டு என் காலை உடைச்சிட்டாளே! என்றவன் நொண்டி நொண்டியே அறைக்குச் செல்ல, துருவனை காலைக்கடன் அழைத்துச் சென்று திரும்பிய கார்த்தி சிரித்தான்.
“பொழைச்சிக்குவடா மகனே” என்றவன் தோளைத் தட்ட, “ஷ்..ஷ்” என்று வாயில் விரல் வைத்து மிரட்டி விட்டுச் சென்றான் அவன்.
இரவில் இருவரும் தூங்கியதுமே, ஓசைப்படாமல் கார்த்தி எழுந்து கொள்ள முயற்சிக்க அதில் வெற்றியும் விழித்திருந்தவன், சத்தமின்றி அம்முவை தன் காலுக்கு தலகாணியோடு மாற்றிக்கொண்டவன் கார்த்தி எழுந்து கொள்ள உதவினான்.
அதைக்கண்டும் காணததுபோல் மென்சிரிப்புடன் எழுந்துச் சென்ற கார்த்தி உள்ளே சென்றுவிட்டிருந்தான். இப்போது அம்மு கண்விழித்ததும் அவளே உருண்டு வந்ததுபோல் அவன் ஆடிய நடிப்பைக் கண்டு கேலி செய்ய,
அவன் மருமகளோ அவனைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வையே, நான் உன் காலில்தானே படுத்திருந்தேன் என்று கேள்விக் கேட்க, “அ..து வந்து அம்மு குட்டிம்மா” என்று தடுமாறியவன், மாமா காலும் மரத்துப்போச்சிடா” என்றதோடு வெற்றியைப் போலவே இழுத்து இழுத்து நடக்க, “மாமா…” என்று பல்லைக் கடித்தவள் எழுந்து துரத்த அவள் கைக்குள் சிக்காமல் குழந்தையாய் ஓடினான்.
“அம்முகுட்டி மாமா பாவம். நீ தூக்கத்துல உருளமாட்டன்னு உனக்குத் தெரியாதா? இவன்தான் அந்த கல்ப்பிரிட். பாரு இப்போ நல்லா நடக்கிறான்” என்று இவர்கள் சண்டையை இரசித்தபடி வீட்டுக்குள் சென்ற வெற்றியையும் போட்டுக் குடுத்துவிட்டு தப்பித்து ஓடினான் அவன்.
அதில் அவள் நின்று வெற்றியை முறைக்க, ஓடிச்சென்று குளியலறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டான் அவன்.
அம்முவிடம் சிக்காமல் தப்பித்து ஓடியவன் எதிரே மூவருக்கும் காஃபி பிளாஸ்க்கோடு ஏறிய செழியனின் மீது மோதி நிற்க, “அட எரும! உனக்கென்ன சின்னைப் பிள்ளைன்னு நினைப்பா?” என்று விழ இருந்த ஃப்ளாஸ்க்கை பிடித்து நிறுத்தினான் செழியன்.
மூச்சிறைக்க நின்றவன், “ஏன்டா! இந்தச் சேட்டைப் பிடிச்சதுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சி, இந்த வயசுல என்னை ஓட விட்டுட்டு பொண்டாட்டிக்கு கதை சொல்லனும்னு தாவி தாவி ஓடினவன் தான நீ! நீ பேசாத! என்றான் முறைத்து.
நண்பர்கள் இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து கதைபேசியபடி காப்பி அருந்தி முடிக்க, உள்ளே அடுத்த கலவரம் மூண்டிருந்தது.
குளித்து முடித்து ஈரத்தலையுடன் வெளியில் வந்தவனைக் கண்டும் காணததுபோல் பார்த்திருந்தவள், உடை அலமாறியில் தலையை நுழைத்துக் கொண்டாள். நேற்றே அவளது சில ஆடைகள் திவ்யபாரதியால் மாடி ஏறி இருந்தது.
அவர்களுக்குள் எல்லாம் சரியாய் நடந்திருக்க தெரிந்திருக்காதோ என்னவோ! எப்போதும் தள்ளி நின்றே அவனை இரசித்திருக்க, தன் வீட்டில் ஒருத்தனாய், இப்படி இயல்பாய், ஈரத்தலையுடன் அவளது அருகில் கற்பனையில் கூட நினைத்ததில்லை அவள்.
வெளியில் வந்தவனும் ஓரப்பார்வையால் அவளை இரசிப்பதை உணர்ந்தவளின் உள்ளம் எகிறித் துடித்தது. அவன் மீதான கோபத்தை வம்படியாய் இழுத்துப் பிடிக்க முயன்றாலும் சற்றுமுன் அவன் செய்த கலாட்டாதான் நினைவில் வந்து தொலைத்தது.
அதில் அவனிடம் சண்டையிடக் காத்திருந்தவள் அதை மறந்து ஏதோ ஒரு புடவையையும் சம்மந்தமே இல்லாத ஜாக்கெட்டையும் உடுத்துவதற்காக கட்டில் மீது எடுத்து வைக்க, அவளையே பார்த்திருந்தவனிடம் மென் முறுவல்.
ஈரத்தலையை உதறியபடி அவளை நெருங்க, பதறி விலகினாள்.
புன்னகையுடன் அவளைத் தாண்டிக்கொண்டு அவள் உடுத்த எடுத்து வைத்திருந்த புடவையைக் கொண்டு தன் ஈரத்தலையைத் துவட்ட அலறினாள் அவள்.
“மம்மீ…! என் புதுப்புடவை” என்று கத்தியவள் அவன் முதுகில் கைகளால் அடிக்க மூடிய புடவைக்குள் குலுங்கிச் சிரித்தான் அவன்.
அவன் சிரித்ததும்தான் அதிகப்படியான அவள் செயல் புரிய திகைத்து முகம் சுருங்க நின்றிருந்தாள். இதுவரை இப்படி அவனிடம் நெருங்கியதில்லை. இதில் ஆத்மார்த்த தம்பதிகள் போல் என்னகாரியம் செய்து விட்டேன். ‘எல்லாம் இவனால’ கொஞ்சம் பதற்றமாய் என்ன சொல்வானோ என நிமிர்ந்தாள்.
அவளின் எண்ணம் புரிந்ததுபோல் துவட்டி முடித்துத் திரும்பியவன், “எனக்கு இந்தப் புடவைப் பிடிக்கல. வேற கட்டு!” என்று அதை அவள் தலைவழியே போட்டுவிட்டு வெளியேற கோபத்தில் புசு புசுவென நின்றிருந்தாள்.
அதுதானே அவனுக்கு வேண்டியதும். எப்போதும் அவளைக் கோபப் படுத்திப் பார்பபதில் அலாதி இன்பம். தலையில் வழிந்த புடவையுடன் நின்றவளைக் காண காண சிரிப்பு பொத்துக்கொண்டு வர, திரும்பி வந்து “இப்போதான் இன்னும் அழகா இருக்க” என்பதற்குள் அந்த புடவையைச் சுருட்டி அவன் மீதே எறிந்தாள்.
சீண்டி சீண்டியே அவளைச் சிந்திக்க விடாமல் தன்னுடன் இயல்பாய் ஒன்ற வைத்தான்.
“அப்புறம் சொல்ல மறந்துட்டேன்! பாத்ரூம்லயே ட்ரஸ் மாத்த ரொம்பக் கஷ்டமா இருக்கு. சோ நாளைலருந்து பழகிக்கோ” என்றதும் அவள் அதிர்ந்து முழிக்க, முறுவலுடன் வெளியேறினான் அவன்.
அப்போதுதான் அவன் காக்கி உடையில் தயாராகி இருந்ததே அவள் உணர்வில் பட்டது. அம்மா வேற கோவிலுக்கு போகணும் சொன்னாங்களே! இவன்கிட்ட எப்படி சொல்றது?
‘நான் மட்டும் லீவு போடணும், இவரு வேலைக்குப் போவாராமா?’ முனகினாள். ‘உனக்குப் பிடிக்கலைன்னா என்ன? அதைத்தான் கட்டுவேன்!’ முகத்தைச் சுழித்தவள் அந்தப் புடவையை கையிலெடுக்க ஈரமாய் இருந்தது. அதில் அவன் உபயோகப்படுத்திய ஷாம்பு வாசனை வேற வர ‘ஐய்ய’ என்று தூர எறிந்தாள்.
அன்னைக்கு பயந்து மீண்டும் எடுத்து வைத்த ஜாக்கெட்டுக்குத் தோதாய் வேறு புடவையைத் தேட அப்போதுதான் தான் சம்மந்தமில்லாமல் எடுத்து வைத்திருந்ததைக் கண்டு தலையிலடித்துக் கொண்டாள். ‘ச்ச எல்லாம் இவனால! குரங்கு சேஷ்டை அத்தனையும் செய்றான்!’ முனங்கிக் கொண்டே வேறு எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
வெளியில் வந்த வெற்றிக்கும் செழியன் கப்பில் காப்பி ஊத்தித் தர, ஊஞ்சலுக்கு எதிர்ப்பக்கம் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து குடித்தவன் இயல்பாய் அவர்களது பேச்சில் கலந்து கொண்டான்.
குளித்து முடித்து வெளிர் ஆகாய நீல நிறத்தில், இலேசான எம்பிராய்டரி வேலைபாடு செய்த புடவையில் வந்து நின்றவளை ஒரு கணம் இரசனையாய் வருடியது அவன் பார்வை. நேற்று எக்குத் தப்பாய் அவள் நின்றிருந்தது வேறு ஞாபத்துக்கு வரவும் குடித்துக் கொண்டிருந்தது புரைக்கேறியது.
வெற்றி பார்வையால் தீண்டிய தருணத்தில் சரியாய் இவளும் நிமிர, “செம்ம” என்றான் சிறு கண்சிமிட்டலுடன்.
விக்கித்துப் போனவள். மாமனையும் தந்தையையும் ஏறிட அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்தனர். திரும்பி கணவனை முறைத்துவிட்டு படி இறங்கவும், “அம்மு காஃபி” என்றான் செழியன்.
“கீழ போய் குடிச்சிக்கிறேன் பா” என்றவள் நடக்க, “எலி ஒரு நிமிஷம்” என்றதும் பேச்சை நிறுத்தி கார்த்தியும், செழியனும் திரும்பிப் பார்த்தனர்.
“என்ன? என் பொண்டாட்டிய எல்லாரும் அம்மு, அம்முக்குட்டின்னு கொஞ்சினா நான் எப்படிக் கூப்பிட? எனக்கு எழிலரசி ஷார்ட்டா எலி” என்றவன் அவளிடம் திரும்பி, “இந்த காஃபி ஆறிடுச்சி. இதை நீ குடிச்சிட்டு எனக்கு சூடா டீ கொண்டு வர்றீயா ப்ளீஸ்…” என்றான். வேண்டுமென்றே தான் குடித்த பாதி கப்பை நீட்டி.
தந்தை முன் ஒன்னும் சொல்ல முடியாதவள் கோபத்தில் பல்லைக் கடிக்க, “மூஞ்செலி ப்ளீஸ் மாமாக்காக…” என்றான் மீண்டும். இதழ்கள் நமட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தது.
“ஏன்டா! இங்க இடியும் மழையும் பலமா இருக்கும் போலயே! வா நாம உள்ள போவோம்” என்ற கார்த்தியை செழியன் புன்னகையை அடக்கிப் பார்க்க, “சிரிச்சா செத்தோம்டா. வா! கீழயே போய்டுவோம்.” என்று எச்சரித்த கார்த்தி, நண்பனையும் அழைத்துக்கொண்டு பாதிப்படிக்கட்டில் நின்ற அம்முவை இடித்துக்கொண்டு கீழிறங்கி விட்டான்.
அதுவரை கோபத்தை அடக்கி நின்றிருந்தவள், “என்ன? அப்பா முன்னாடி ஓவரா பண்றீங்க? என்று புடவையைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு படியேற, சிரித்தபடி பார்த்திருந்தவன், அவள் மேல் படிக்கட்டில் காலை வைத்ததும் ஒரே தாவலில் குதித்து கீழிறங்கி ஓடி விட்டான்.
“என்ன தம்பி ஓடி வர்றீங்க?” முதல் நாளே வீட்டுக்குள் ஓடி வந்தவனை பதறிப்போய் பார்த்தாள் திவ்யபாரதி.
“ஆமாத்த எலிதான்! இப்போ வரும் பாருங்க அழகா புடவையில” என்றதும் அம்மு உள்ளே நுழைந்தாள். மகளைத்தான் எலி என்றதா? திரும்பி கணவனையும் கார்த்தியையும் பார்த்தவள் அவர்களும் சிரித்துக் கொண்டிருக்கவும் லேசான முறுவலுடன் சமையலறையில் புகுந்து கொண்டாள். நேற்று இரவு நடந்ததைச் செழியன் சொன்னபோது தாயாய் இலேசான பயம் இருந்தது. அதைத் தன் குறும்புத் தனத்தால் ஒன்றும் இல்லாமல் செய்திருந்தான்.
செழியனுடனும், கார்த்தியுடனும் வெற்றி அமர்ந்து கொள்ள, மூவரையும் முறைத்துவிட்டு, “அம்மா காஃபி” என்று சமையலறையில் நுழைந்து கொண்டாள் எழிலரசி.
மகளுக்கு ஏற்ற விதத்தில் காப்பியை ஆற்றி கையில் தந்த திவ்யபாரதி, “என்னடி தம்பி ட்யூட்டிக்கு கிளம்பி இருக்காமாதிரி இருக்கு. கோவிலுக்கு போகணும்னு சொன்னீயா?” என்றார் கேள்வியுடன்.
“எனக்கென்னமா தெரியும்? நீயே போய் கேளு” என்ற மகளை முறைத்துவிட்டு வெளியேற, என்ன சொல்கிறான் என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், அவளும் நூல் பிடித்து பின்னாடியே வந்து நின்றாள்.
“தம்பி! இன்னைக்கும் ட்யூட்டி போகணுமா?” என்ற திவ்யபாரதியை வெற்றி வாயைத்திறக்கும்முன் முறைத்தான் செழியன்.
செழியனுக்கு வேலை விசயத்தில் குறுக்கீடு செய்தால் மட்டும் கோபம் வந்துவிடும். சென்டிமெண்ட் எல்லாம் பின்னால்தான். அதில்தான் திவ்யபாரதி தயங்கியது.
நிமிர்ந்து வெற்றியைப் பார்த்தாள் அம்மு எழிலரசி.
அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். நேற்றே திவ்யபாரதி அவனிடமும் சொல்லி இருந்தார்தான். மனைவி அவனுடன் வருவாளா? அம்முவுக்கு வீண் சங்கடத்தை தர விரும்பாதவன் காலையிலயே கிளம்பி நின்றான்.
ஆனால் அவள் வெற்றியைப் பார்த்தப் பார்வையில் வேறு செய்தி இருந்தது.
எது எப்படி நடந்திருந்தாலும், எல்லா பெண்களையும் போல் முதல் முதல் கணவனுடன் கோவிலுக்குச் சென்றுவிட வேண்டும் என்றிருந்தது. அதனால்தான் தாய் சொன்னபோதுகூட மறுக்கவில்லை அவள்.
அவர்கள் இருவரும் கணவனும் மனைவியும் என்பது காலத்துக்கும் மாறப்போவதில்லை. அப்படி இருக்க கடவுளின் சந்நிதானத்தில் தொடங்கட்டுமே என்றிருந்தாள்.
தந்தை சொன்னதும், முகம் லேசாக வாடினாலும், காண்பிக்காது மீண்டும் காப்பியில் கவனம் வைப்பதுபோல் திரும்பிக் கொண்டாள்.
செழியன் ஏதோ மறுத்துச் சொல்லவர, “அதுக்கென்னத்த எனக்கு டைம் இருக்கு. எல்லாருமா சேர்ந்தே போகலாம்” என்று எழிலரசியைப் பார்த்தபடியே வெற்றி சொன்னதும் லேசாக முகம் மலர்ந்தாள் அவள்.
அவன் அகமும் மலர்ந்தது. என்னதான் உற்சாகமாய் காட்டிக்கொண்டாலும் அவனுக்கும் இந்த திருமணம் இப்படியொரு சூழ்நிலையில் நடந்திருக்க வேண்டாமோ என்று தோன்றிக் கொண்டேதான் இருந்தது.
அவள் அவனுடன் வர விரும்பியதிலேயே சின்ன நம்பிக்கை வந்திருந்தது. நிச்சயம் போக போகப் புரிந்துகொள்வாள். அதில் உற்சாகமாகவே திரும்பி, “ஆமா எங்கத்த? இன்னொரு ஆள அட்ரஸே காணோம்?” என்றான் உள் அறையைப் பார்த்து.
“அவளுக்குப் படிக்கணுமாம். வருவாளா தெரியலயே தம்பி” என்றதும், “அதெப்படி இந்த மாமா கூப்பிட்டு வராம இருப்பா?” என்றவன், “அம்முக் குட்டி” என்று குரல் கொடுத்தான்.
அதில் அவன் மனைவி அதிர்ச்சியாய் திரும்ப, “நீ இல்ல. என் அம்முக்குட்டி அவதான்” என்றதும் அவன் குரல்கேட்டு வந்து நின்றாள் மிருத்யூ ஸ்ரீ.
அதில் அவள் தந்தையையையும் தாயையையும் ஒருமுறை ஏறிட்டவள், “கிளம்பி வரேன் மாமா” என்று அமைதியாகச் சென்றுவிட குடும்பமே அதிசயமாகப் பார்த்து வைத்தது.
படிப்பு என்று வந்துவிட்டால் யார் வந்து தடுத்தாலும் இருந்த இடத்தைவிட்டு அசையமாட்டாள் சின்னமகள். இன்று அவள் வருவேன் என்றதே அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது. அதுவும் செழியன் வேலை வேலை என்று ஓட குடும்பமாய் வெளியிடம் செல்வதே அரிதிலும் அரிது.
குடும்பத்தில் ஒருவரை விடாமல் சேர்த்தணைத்துச் செல்லும் அவன் குணத்தின் முன்பு அவர்களுக்குள் இருந்த பிணக்குகள் பின்னால் தள்ளப்பட்டது.
வீட்டிற்கு மாப்பிள்ளை என்று வருபவன் காமிக்கும் அனத்தலை எத்தனைக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். அவன் பதவிக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட குவாட்டர்ஸ் உண்டு. இருந்தும் அவன் இங்கு வந்து நிற்பது அவர்களின் மகளுக்காக அல்லவா.
அதிலும், அன்று திருமண மண்டபத்தில் வெற்றி சொன்னதை எல்லாம் கார்த்தி செழியனிடம் சொல்லி இருக்க அது திவ்யபாரதிக்கும் தெரியும்.
கார்த்தி அவர்களுக்கு முக்கியமானவன். குடும்பத்தில் ஒருவன் என்பதையும் தாண்டி குழந்தை மனம் கொண்டவன். வருபவனும் அவனை அதேப்போல் பார்க்க வேண்டுமே? பிரித்துப் பார்த்து விட்டால்…!
அந்த கவலையே இல்லாமல் செய்தவனைப் பிடிக்காமல் இருக்குமா? அதுவும் கார்த்தியை பெத்த தகப்பனுக்கு நிகராய் பார்ப்பது எல்லாம் வேறு விதம்.
உண்மையில் பெரியவர்கள் அனைவரும் நெகிழ்ந்துதான் இருந்தனர்.
அதில் சிறிது நேரத்திலேயே அனைவரும் கிளம்பி விட்டனர். கார்த்தி கார் ஓட்ட, அவன் அருகில் செழியன் அமர்ந்திருந்தான். பின்னால் திவ்யபாரதி, மிருத்யூ ஸ்ரீ, அம்மு, அவள் அருகில் வெற்றி அமர்ந்து கொள்ள, மாமியார் அருகில் இருந்ததில் எந்த சேஷ்டையும் இன்றி அமைதியாய் இருந்தான் வெற்றி. தன்னவளின் அருகாமையே அவனுக்குப் போதுமாய் இருந்தது. அதில் அவளைக் கஷ்டப்படுத்த மனமின்றி சற்று விலகியே அமர்ந்து கொண்டவன் மிருத்யூவிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
அவன் தொல்லை இல்லாததே அம்முவுக்கும் நிம்மதியாய் இருக்க, அழகான தரிசனம் முடிந்ததும், “விபூதி வச்சி விடுறீ” என்று அனைவரின் முன்பும் அம்முவிடம் அவன் நெற்றியை நீட்ட, ஒன்றும் சொல்ல முடியாது அவள் வைத்துவிடவும் கண்சிமிட்டினான் கள்ளன்.
பார்த்திருந்த அனைவரின் மனதும் நிறைந்து போனது. அன்று காலை உணவையும் வெளியிலயே முடித்துக்கொண்டு திரும்பினர்.