அத்தியாயம்: 23

கட்டிலில் சில கோப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. அம்முவின் கோபத்தை அறிந்து, அவளாக புரிந்தும் கொள்ளும்போது புரிந்துகொள்ளட்டும் என தன் வேலைகளில் மூழ்கி இருக்க, கதவைத் திறக்கும் ஒலியில் நிமிர்ந்தவனின் பார்வை உறைந்தது.

சற்றுமுன் அவன் எடுத்துக்கொண்ட சபதம் எல்லாம் ஆட்டம் காண, ‘வெற்றி வேணாம்டா! வேணாம்டா! தெரிஞ்சா பேய் ஓட்டுவாடா’ எச்சரித்த மனதையும் மீறி கண்கள் அவள் மீது பாய்ந்து நின்று தடுமாற, கையிலிருந்த கோப்பினை விரல்கள் தானாக மூடின.

அரக்கு கரை வைத்த, சந்தனநிறப் பட்டில், அசல் சந்தனமரத்தில் செய்த சிலையென மெல்லிய ஒப்பனைகளோடு கதவைத் திறந்தவளும், அவன் பார்வையைக் கண்டு திகைக்க, ஒரு கணம் அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எனப் புரியாது தடுமாறினாள். 

கொண்டவனின் பார்வையின் வீச்சை நொடிநேரம் தாங்காது தழைந்துகொண்டன அவளது அஞ்சன விழிகள்.

இதை நினைத்துதானே அவளும் பயந்தது. 

‘கண்டிப்பா என்னால முடியாது’ திரும்ப திரும்பத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். எப்படியும் பேசி சமாளித்தாக வேண்டும் என்ற முடிவுடன் நிமிர்ந்தவள், அவன் கையிலிருந்த கோப்பினைக் கண்டதும் சிலையாக உறைந்தாள்.

அவளின் பார்வைத் தடுமாற்றத்தையும், பரிதவிப்பையும் பார்த்திருந்தவன், மேற்கொண்டு சங்கடத்தை தர விரும்பாமல் மீண்டும் கையிலிருந்த கோப்பினில் மூழ்கிவிட்டான்.

சில நிமிடங்களுக்குப் பிறகும் அவள் நின்ற இடத்திலயே நிற்பதை பாராமலே உணர, புருவம் சுருங்க நிமிர்ந்தான்.

உறைந்த சிலையாக கண்கள் தளும்ப நின்றிருந்தவளில் அதிர, “ஏய் மூஞ்செலி நான் ஒன்னுமே பண்ணலையேடி! அப்புறமும் ஏன்? என்றவன் கையிலிருந்த கோப்பை அப்படியே போட்டுவிட்டு எழுந்து கொள்ள, “கிட்ட வராதீங்க” என்றாள் குரல் நடுங்க.

அவளின் குரலிலிருந்த தொனி வலியைக் கொடுக்க ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

இந்த வழக்கு முடியும்வரை தங்களுக்குள் எதும் சரியாகப் போவதில்லை என்று அவனுக்கும் தெரியும். அதுவும் வரவேற்பன்று அவள் நடந்துகொண்டதே வலிக்க அடித்திருக்க, அவளுடன் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாது மெனக்கெட்டு கோப்புகளையும் கூடவே தூக்கி வந்திருந்தான்.

ஒருவிதத்தில் நீ விரும்பாது எதும் நடக்காது என சொல்லாமலே புரியவைக்கும் முயற்சியாகத்தான் அவள் வரும்முன் கோப்புகளில் மூழ்கியதும். 

சின்னதாய்க் கூட அவளுக்கு வருத்தத்தைத் தர விரும்பாது, முதலிரவுக்கான சூழ்நிலையைக் கூட  மாற்றி, வேஸ்டி சட்டையைக் களைந்து சாதாரண ட்ராக் பேண்ட், டீ சர்ட் சகிதம்தான் அமர்ந்திருந்தான்.

அப்படியும் கண்கள் தளும்ப நின்றிருந்தவளில் காரணம் புரியாது விழி உயர்த்த,  உடைந்த குரலில் அவள் கிட்ட வராதீங்க என்றதும் உள்ளுக்குள் வலித்து அது கோபமாக மாறியது.

அதில் முகம் சுருங்க, “இங்க பார்! நானா என்னைக்கும் கிட்ட வரமாட்டேன். நீயா வருவ்…” 

அவன் முடிப்பதற்குள், “ஓ! நானா வரணும் இல்ல!” என்றாள் குரல் உடைய.  

“அதுக்குதான் இந்த ஏற்பாடா வெற்றி?” அவன் கைகளிலிருந்த தாயின் கோப்பினைக் கண்டு கண்கள் தளும்பியது.

கல்யாணத்தைத்தான் மிரட்டி நடத்திக்கொண்டான் என்றால் என் உடம்புமா? இதை அம்முவால் முற்றிலும் தாள முடியவில்லை.

இல்லையெனில் முதலிரவு அறையில் அவளது தாயின் கோப்பு எதற்கு? இந்த நேரத்தில் அவளது கண்முன் வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

மனம் கசந்து வழிய, “அன்னைக்கே சொன்னீங்கல்ல! இதை வச்சி முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்குன்னு. பைத்தியக்காரி நான்தான் மறந்துட்டேன்! என்றாள் விரக்தியாக.

வெற்றியின் நிலமையோ பேசவிட்டால்தானே புரிய வைப்பதற்கு என்றிருந்தது. நீயாக வரும் வரை காத்திருப்பதாகத்தான் அவன் சொல்ல வந்தது. 

அதையும்  தவறாக ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு, பைத்தியக்காரியைப் போல் ஏதேதோ பேசி சண்டையிடுபவளைப் புரியாமல் பார்த்தான். அவளை நெருங்கவும் பயமாக இருந்தது.

இவளிடம் சமாதானப் பேச்சோ, அருகில் சென்று புரிய வைப்பதோ ஆகாத காரியம் என்று உணர்ந்தவன், அவளும் வேண்டுமென்றே ஒரு முடிவுடன் வந்திருப்பதாகத்தான் நினைத்தான். 

‘பைத்தியக்காரி! என்னுடன் அழுது சண்டையிட்டால் தானே இன்று ஒன்றும் நடக்காமல் செய்ய முடியும்’

அதில் சீண்டிப்பார்க்கத் தோன்ற, “ஏன் வரமாட்டியா? உன்னை வர வைக்கிறது அவ்வளவு கஷ்டமா என்ன?” என்றான் கண்கள் சிமிட்டி. இன்று அவன் வாயில் சனிபகவான் வாஸ்து பார்த்து குடிபுகுந்திருந்தார் போலும்.

கொதித்துப்போனாள் அவள். ஆவேசமாய் அவனை நெருங்கி,

“ச்சீ! உங்களுக்கு வெட்கமா இல்ல? இப்படி சீப்பா நடந்துக்க..” என்று வெறி பிடித்தாற் போல் அவன்  கையிலிருந்த கோப்புகளை தூக்கி எறிந்தவள் அவன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்தாள்.

“உனக்கு நானேதான வரணும்? இதோ இதுக்குதானே இவ்வளவு நாடகமும்” என்றவள் கோபத்தில் தன் முந்தானையைத் தானே எடுத்துச் சரியவிட அதிர்ச்சியில் உறைந்தான் அவன்.

கோப்புகள் அறை எங்கும் சிதறிக்கிடக்க அவள் நின்றிருந்த கோலம் அவனை நிலைகுலையச் செய்தது. 

அதிலும் கடைசியாக அவள் உதிர்த்த வார்த்தைகள். இதற்கா? அவள் உடம்புக்காகவா? இத்தனை வருட காத்திருப்பு? என்னைக் காதலித்து என்ன புரிந்துகொண்டாள் இவள்? முதல்கட்ட அதிர்ச்சி விலகி ஆற்றாமையும் ஒருவித கோபமும் துளிர்த்தது.

“என்னைப் பத்தி ரொம்பச் சரியா கணிச்சி வச்சிருக்கீங்க மிஸஸ் அம்மு எழிலரசி! ரொம்ப தேங்ஸ்” தன் கோபத்தை அவளது முழுப் பெயரையும் அழுத்திச் சொன்னதில் காட்டியவன், கட்டிலிலிருந்து எழ மெலிதான நடுக்கம் அவளிடம்.

அவன் நெருங்க நெருங்க, கண்கள் நீராய்ப் பொழிய, உடல் இறுக அசையாது நின்றிருந்தாள்.

அருகில் நெருங்கி, “இதை உன்கிட்ட எதிர்பார்க்கலடி” என்றவன், வெற்றுப்பார்வை ஒன்றை வீசிக் கடந்து, சிதறியக் கோப்புகளைச் சேகரித்தான்.

நீர்த்திரையிட்ட விழிகளுக்கிடையே சிதறிக்கிடந்த தாயின் கோப்புகளைக் கண்டவளின் உள்ளமும் மெல்லிய வலி கண்டது. அவளை வசப்படுத்த தாயின் கோப்பினைப் படுக்கை அறைக்கே கொண்டுவருவான் என அவளும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

முற்றும் முழுதாக அவனது காதல் பொய்த்துப் போனதாகக் கருதியவள் ஆத்திரமும் ஆவேசமுமாகக் கோபத்தின் உச்சத்திற்கே சென்றிருந்தாள். அதில் இதுதானே உன் தேவை? எடுத்துக்கொள்! என்று நிர்தாட்சண்யமாய் நின்று விட்டவளின் உடலும் உள்ளமும் மரத்துக் கிடந்தது.

அவளை நிமிர்ந்தும் பாராது, ஒவ்வொரு தாள்களாகச் சேகரித்து கோப்புகளை அடுக்கி வைத்தவனின் உள்ளமும் சொல்லவொன்னா உணர்வுடன் கலங்கியது. ஒரே நொடியில் அவன் காதலை மண்ணோடு மண்ணாக அல்லவா புதைத்துவிட்டாள்.

கோப்பை மேஜை மீது வைத்தவன் திரும்ப, அப்போதும் அதேக்கோலத்தில் அசையாது நின்றிருந்தவளில் கண்மண் தெரியாத ஆத்திரத்துடன் நெருங்கினான்.

“இதோட அட்வான்டேஜ நான் எடுத்துக்கிட்டா அதோட விளைவு என்னன்னு தெரியுமா? விழிகள் சிவக்க கேட்டவனை, அதேக் கோவத்துடன் விருட்டென ஏறிட்டாள்.

“விளைவு என்னன்னு தெரியாமப் போக நான் ஒன்னும் பச்சைக் குழந்தை இல்ல. மிஸ்டர் வெற்றி?

ஏன் இது தெரியாமலா என்னோட பேரம் பேசினீங்க?

பத்து நிமிஷத்துக்காக பத்து வருஷமா பின் தொடர்ந்தவராச்சே! நான்தான் புரிஞ்சிக்காமப் போய்ட்டேன்!” வீராப்பாய் பேசியவள் கடைசி வார்த்தையில் உடைந்து அழுதாள். 

“நீ என்னைக்கி டி என்னை சரியா புரிஞ்சி இருக்க?” உக்கிரமாய் உறுத்தான் அவனும்.

“எதுக்கு சார் தேவை இல்லாத பேச்சி? உங்களுக்குத் தேவை நான்தானே?” என்றாள் வெறுப்புடன்.

“ஓ!” என்றவன் ஒற்றை வார்த்தையுடன் நிறுத்தினான்.

தலையைக்கோதி தன்னை அடக்க பெரும்பாடு பட்டவன்‌ ஒரு வேகத்துடன் திரும்பினான்.

“உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லையே?” என்றவனின் குரலின் தொனி இப்போது மாறி இருந்தது.

“இல்ல” வெறுமையாச் சொன்னவள் தன் நிலையை மாற்றிக்கொள்ள வில்லை.

“அப்போ விளைவுகளைச் சந்திக்கத் தயாராகிட்ட! என்றான் அதேத் தொனி மாறாமல்.

“இன்னையோட இதுக்கு ஒரு முடிவு கட்டத் தயாராகிட்டேன்” என்றாள் தாயின் கோப்பினை நினைத்து.

அவள் மௌனமாய் எங்கோ வெறித்தபடி அசையாது நிற்க, “ரைட்! அப்போ விளைவு என்னான்னு காட்டிடலாம்” என்றவன் அவளை மேலும் நெருங்க, அதுவரை இல்லாது தேகம் நடுங்கினாள் அவள்.

இவ்வளவு நேரமும் பார்வையைத் தன் மீது திருப்பாதவனில் அதுவரை தைரியமாக நின்று பகடி பேசியவளின் தேகம் அவன் நெருங்கவும் வெடவெடத்தது. 

அன்றுபோல் இன்றும் சட்டென்று மேலுதட்டின் மேல் வியர்வை முத்துக்கள் அரும்ப எச்சில் கூட்டி விழுங்கினாள். அவளது குரல் வளை ஏறி இறங்கியது. அதுவரை அவள் முகத்தைத் தாண்டிப் பார்த்திராதவனில் அந்தக் காட்சி கண்ணில் பட மெல்லிய முறுவல் அவனிடம்.

இவ்ளோ பயம் வச்சிட்டு எந்த நம்பிக்கையில் இப்படி நிற்கிறாளாம் இந்த ஜான்சி ராணி? இவள் நினைத்தால் என்னை எதிர்க்க முடியாதா? அப்படியா வளர்த்தார் இவள் மாமா. 

‘இது என்மேல வச்ச நம்பிக்கை இல்லையாமா? என் மீதான காதல் இல்லையாமா?’ கோபம் முற்றிலும் நீங்கி இருக்க எழுந்த புன்னகையை உதட்டுக்குள் மறைத்தான்.

“இவ்ளோ சீண்டிப்பார்த்த உன்னைச் சும்மாவிட்டா நான் வெற்றி இல்லையே! வாடி என் எழிலரசி” சிரிப்பினோடே, சரிந்து கிடந்த அவளது முந்தானையை அவன் கையிலெடுக்கவும், வியர்வைச் சுரப்பிகள் தாறுமாறாய் சுரக்க கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்.

படபடத்து, குப்பென பாய்ந்த இரத்த ஓட்டத்தில் முகமெல்லாம் சிவந்து அவள் நின்றிருந்த கோலம் இன்னும் சிரிப்பை வரவழைத்தது.

முந்தானையை கையில் சுற்றிக் கொண்டே “செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே…” வேண்டுமென்றே ராகமிழுத்துப் பாட, படக்கென விழி திறந்தாள்.

“உன் ப… சாரி! உன் கருத்த கூந்தலின் காட்டுக்குள் காணாமல் நான் போனேனே” ஹஸ்க்கி வாய்ஸில் பாடியவன்,

“பார்த்தியா மாமன் முன்னாடி இப்படி ஏடாகூடாமா நின்னினா பாட்டும் ஏடாகூடாமா வருது!” என்றதும், 

அதிர்ந்து “வெற்றி” என்றவள், உடல் கூசிப்போக தன் முந்தானையைத் தேடினாள்.

அது அவன் வசம் இருந்ததில் அவள் இழுக்க,

“ஏன் இப்போ மட்டும் என்ன? புதுசா கூச்சம்?” என்றவனை அச்சம் மேலிட நிமிர்ந்து பார்த்தாள்.

இதற்காகத்தானே வேண்டுமென்றே அவன்‌ மாற்றிப் பாடியதும். என்னை எவ்ளோ கேவலமா நினைச்சுட்ட? இதோட விளைவு என்னான்னு நான் காட்ட வேண்டாம்?

அவளைக் கண்டுகொள்ளாமல் கண் சிமிட்டினான் அவன்.

முந்தானையைத் தன்னை நோக்கிச் சுருட்டியபடியே, “நகம் கடிக்கும் பெண்ணே நடக்காத ஆசை…நல்லநேரம் பார்த்தால் நடக்காது பூசை! தொடட்டுமா தொல்லை நீக்க…” என்ற நொடி அவளை இழுத்து தன்னருகில் மிக நெருக்கமாக கொண்டு வந்திருக்க, அடுத்தநொடி அவளின் விரல்கள் அவன் கன்னத்தை நோக்கிப் பாய்ந்தது.

எதிர்பார்த்தது போல் மென்முறுவலுடன் விலகியவன் காற்றில் அலைபாய்ந்த அவளது கரத்தை மடக்கிப் பிடித்திருக்க, அதுவரை இருந்த இலகுத் தன்மையைத் தொலைத்திருந்தான்.

முகம் கோவத்தில் சிவக்க “என்ன சொன்ன பத்து நிமிஷத்துக்காக பத்து வருஷமா காத்துக்கிடந்தேனா?” என்றவன் அப்படியே திருப்பி அவளைச் சுவற்றோடு சாய்க்க, அதிர்ந்து விழித்தாள் அவள்.

விழிகள் இரத்தமெனச் சிவந்திருக்க, “ஆமாடி பத்து நிமிஷம்தான். அந்த பத்து நிமிஷத்துக்காகத்தான் எல்லாம் போதுமா!” ஆத்திரத்தோடு கத்தியவனின் முகம் நொடியில் மாறியது.

“நான் என்ன முற்றும் துறந்த முனிவனா? உன் காதல் மட்டும் போதும்னு வாழ!” என்றவனது புருவம் கேலியாய் வளைந்தது. 

நொடிக்கு நொடி மாறும் அவன் முகத்தையே திகைத்த விழிகளுடன் கண்டிருந்தவளின் மிக அருகில் நெருங்கியவன்,

“இதுவும்தான் வேணும். திகட்ட திகட்ட வேணும்! திகட்டவே திகட்டாம என் வாழ்நாள் முழுமைக்கும் வேணும்!” என்றான் அவள் காதோடு. 

“ஆனா…” என்று நிறுத்தி அவள் விழிகளை நேருக்கு நேராய் ஊடுருவ,

கோபத்தில் செய்த முட்டாள் தனத்தில் உடல்கூச திமிறிக்கொண்டு கலங்கி நின்றிருந்தாள் அவள். 

கத்தவும் முடியாது. மாமன்வேறு வெளியில் மொட்டைமாடியில்தான் படுத்திருப்பான்.

இதுவரைக் கண்டிராத வெற்றியின் முக பாவனையில், விக்கித்து நின்றவளின் தலை தானாகக் கவிழ, ரௌத்திரத்துடன் ஒற்றைக்கையால் அவளது நாடிப்பற்றி நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், அவள் பார்க்க பாரக்கவே, அவளது மேலாடையற்ற மேனியை முதல்முறையாகப் பார்வையால் தீண்ட, அவள் செய்தது முட்டாள்தனத்தின் உட்சம் என்று புரிந்தவளின் விழிகள் உடைப்பெடுத்தது.

“வெற்றி ப்ளீஸ்…” என்றாள் இயலாமையுடன்.