அம்முவும், திவ்யபாரதியும் கடையைவிட்டு இறங்கி வந்தபோது செழியன் வெற்றியை காய்ந்து கொண்டிருந்தான்.
‘நல்லா வாங்கட்டும். இவன் மட்டும் நடுவுல போகாம, என்னையே சைட் அடிச்சிட்டு இருந்திருந்தா அந்த விருமாண்டி சந்தானம் என்கிட்ட நெருங்கி இருப்பானா? இதுல ஐய்யாவுக்கு கோவம் வேற…’ மனதுக்குள் தானும் வெற்றியை வறுத்தெடுத்தாள்.
“பீ சீரியஸ் மேன்!” என்று எச்சரித்த செழியன் மகளைக் கண்டதும், “இரண்டுபேரும் ஆட்டோ புடிச்சி போய்டுங்க. கவனம்!” என்றவன் தன்னுடைய அரசாங்க வாகனத்தில் ஏறிக்கொண்டான்.
அதன்பின் வெற்றியிடம் இதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை அவள். தந்தை சொல்லி இருப்பார் என்று விட்டுவிட்டாள்.
பெற்ற தாயே கலாய்த்து தள்ளும்போது அவனைக் கேட்கவா வேண்டும். அவனுமே அதைப்பற்றி அவளிடம் எதும் கேட்டுக்கொள்ளவில்லை.
அன்று கோபத்தில் சென்றவன்தான் அதோடு வழக்கு விசயமாகக் கூட இவளை அழைக்கவில்லை. அவசியம் ஏற்பட்டபோது கூட உதவியாளரிடம் கோப்புகளை தந்துவிட்டுச் சென்றிருந்தான்.
திருமணநாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுக்குத்தான் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. எப்போது எங்கே எந்த ரூபத்தில் அந்த மோடுமுட்டி வந்து நிற்பான் என்றே தெரியாதே என படபடத்துக் கொண்டிருந்தவள் அநாவசியமாக வெளியில் செல்வதையும் குறைத்துக் கொண்டாள்.
உண்மையில் பயந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். தந்தை அருகில் இருக்கவே அவ்வளவு தைரியமாக வந்து சென்றவனுக்கு வெற்றி எம்மாத்திரம். அதில் அன்று வெற்றி தந்தை நம்பிக்கை வார்த்தைகள் எல்லாம் காற்றோடு கலந்திருந்தது.
அவளைமீறி ஒன்றும் நடந்துவிடாதுதான். அப்படி அவள் மாமன் அவளை வளர்க்கவும் இல்லை. ஆனால் வெற்றியின் காதலியாக உள்ளுக்குள் துவண்டு கொண்டிருந்தாள்.
ஒருவேளை அவன் கடத்திச்செல்லும் நிலை வந்தால் மீண்டும் வெற்றியை கண்களால் கூட காணமுடியுமா என்ற நினைப்பே அவளை சிறுகச் சிறுகப் பலமிழக்கச் செய்திருந்தது.
இதற்கிடையில் வெற்றிக்கு தெரியாமல், இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு ஷ்யாம் சுந்தரைக் காண அவனது தாத்தா ஊரான திருவண்ணாமலை வரை சென்று வந்தாள்.
எப்படியும் அவனுக்குத் தகவல் சென்றிருக்கும் என்று தெரியும். அழைத்துத் திட்டுவான் என்றுதான் எதிர்பார்த்தாள். ஆனால் மாறாகக் கண்டனம் தந்தையிடமிருந்து வந்தது.
“அதுதான் வெற்றி பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கான்ல? தேவை இல்லாம அவன் கேஸ்ல நீ தலையிடாத அம்மு!” என்றவனை விளங்காத பார்வைப் பார்த்தாள்.
எப்போது இது அவன் வழக்கானது? முற்றிலுமாக அந்த வழக்கிலிருந்து தன்னைத் தள்ளி வைத்துவிட்டானா? உண்மையில் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தது. முற்றிலும் அவளை அந்தப்பக்கம் யோசிக்ககூட விடவில்லை அவன்.
செழியனுக்குமே மகளின் முகம்காணச் சங்கடமாக இருந்தது. ஒரு வழக்கில் அரசியல் நுழையும்போது இது சகஜம். ஆனால் மகளுக்கு இது புதிது. போகப்போக புரிந்துகொள்வாள் எனக் கடந்துவிட்டான்.
அம்முவிற்கு தலை வலித்தது. இந்த பிரச்சனைகள் போதாதென்று இவன் வேறு நடுவில் பூத்தூவி காதல் பண்றான் என கடுப்பாக நினைத்தாள்.
நாளை திருமணம். இடையில் வெற்றியும் சரி, அம்முவும் சரி எதற்காகவும் பேசிக்கொள்ளவே இல்லை.
முதல்நாள் வரவேற்பு நடந்துகொண்டிருந்தது.
நிச்சயதார்தத்தின் போது வெற்றியின் சார்பாக கார்த்தியும் அம்முவின் சார்பாக செழியனும் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொண்டனர்.
மண்டபமே நிறைந்து வழிந்தது. மண்டபத்திலிருந்த பாதிபேரின் முடிவெட்டும், அவர்களது தோரணையுமே அனைவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லாமல் சொல்லியது.
ஆனாலும் தேவதையென அலங்கரிக்கப்பட்ட மணமகளின் உள்ளம் மட்டும் தடதடத்துக் கொண்டிருந்தது. அவனுக்கு உருவமா முக்கியம்? எந்த உடையில் எப்படி வருவானோ? யாரைப் பணயக் கைதியாய் வைத்து தன்னைத் தூக்கிச் செல்வானோ என நடுங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனால் இது எதையும் முகத்தில் காண்பிக்காமல் வருவோரிடம் சிரித்துப் பேசியபடி கம்பீரமாக கோர்ட் சூட்டில் தன்னருகே நின்றவனைக் காணமுடியாது அம்முதான் திணறினாள்.
திடீரென, “ஹேய் பேபி டால்” என்று சந்தோஷமாகக் கூவியவனை எழிலரசி திரும்பிப் பார்க்க, முகம் மலர்ந்து வாயெல்லாம் பல்லாக நின்றிருந்தான் வெற்றி.
இவனுக்கு இப்படில்லாம் கூட கொஞ்சத் தெரியுமா? வியந்தப் பார்வையுடன்,
‘யாரந்த பேபிடால்?’ அவளும் அவன் பார்வையை ஒட்டித் திரும்பினாள்.
ஒரு இளம்வயது கணவனும் மனைவியும் முகம் கொள்ளா சந்தோஷத்துடன் மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதிலும் அந்தக்குட்டிப் பெண்ணின் முகத்திலிருந்த துள்ளல் அவளையும் இதழோரம் பூக்கச் செய்தது.
அருகில் நெருங்கியதும், இரண்டு கைகளையும் விரித்து “பேபி டால்” என்று கூவியவன், பக்கத்துக்கு ஒருவராக யதுநந்தனையும், யாழினியையும் அனைத்துக் கொண்டான்.
(காதல் கம்பார்ட்மெண்ட் கதை படிச்சவங்களுக்கு அந்தக் கதையின் நாயகன், நாயகியான இவங்க இரண்டுபேரையும் தெரிஞ்சிருக்கும்)
“வெல்கம் டூ சம்சார சாகரம்” என்ற யதுநந்தன் தோளோடு நண்பனை அனைத்து விடுவித்தான். அம்முவிடமும் திரும்பி, “வாழ்த்துகள் சிஸ்டர்” என்றதும் அவளும் மெலிதாகப் புன்னகைத்தாள்.
“இது என்னோட பேபிடால்…” என்ற வெற்றியை இடைமறித்த நந்தன்,
“பெயர் யாழினி! இவனோட உடன்பிறவா தங்கச்சி! நான் இவனோட மாப்பிள்ளை யது நந்தன்” என்று வெற்றி ஆரம்பித்த அறிமுகப்படலத்தை குறுக்கே புகுந்து முடித்து வைத்தான் யதுநந்தன்.
“டேய்…இன்னுமாடா?” என்ற வெற்றி சத்தமிட்டுச் சிரித்ததை அதிசயத்திலும் அதிசயமாகப் பார்த்திருந்தாள் அவனது அல்லி மலர்.
அதில், “என்னடி கோர்த்து விடறியா? மோசமானவன்டி அவன்” என்று அதிர்ந்த கணவனைக் கொஞ்சமும் கண்டுக் கொள்ளாத யாழினி,, “படி படின்னு ஒரே டார்ச்சர். ஒரு இரண்டுமாசம் உள்ள வைக்கறீங்களா, நான் நிம்மதியா தூங்கிக்கிறேன்” என்றதும் அம்மு எழிலரசியே சிரித்து விட்டிருந்தாள்.
அருகில் நின்றதிலிருந்து இப்போதுதான் மனம்விட்டு சிரிக்கிறாள். வாய் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தாலும் பார்வை ராணிபிங்க் நிற லெஹங்காவில் இளவரசியாக அருகில் நின்றிருந்தளை இரசித்தது. அவன் பார்வையைக் கண்டதும் திரும்பிக்கொண்டாள் அவள்.
“என்னடா அகத்தியன் வரலையா?” நந்தன்தான் வெற்றியை நினைவுலகுக்கு இழுத்து வந்தான்.
“வழக்கம்போல செயின் மட்டும்தான் வந்துச்சி!” என்ற வெற்றி கழுத்திலிருந்த செயினை ஆட்டிக் காண்பிக்க, “கிளம்பு மச்சான் ஹனிமூனுக்கு யூ எஸ்க்கு. நானும் வரேன்! அவன் மண்டையைப் பேத்திட்டு வருவோம்!” என்ற கணவனைக் கையில் கிள்ளிவைத்தாள் யாழினி.
உங்களுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளரவே இல்ல.” என்று திட்டவும் அனைவருமே சத்தமாக சிரிக்க மீண்டும் அம்முவின் பார்வை வெற்றியிடம் சென்று திரும்பியது.
இவன் இவ்வளவு சிரிப்பானா? முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். யார் இவர்கள்? அதும் அவள் பார்க்கும்போது அந்த பார்பிடாலின் தலையைப் பிடித்து ஆட்டியபடி அவ்வளவு மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தான். இலேசான பொறாமையும் எட்டிப்பார்க்க, ஓரப்பார்வையால் அவர்களை கவனித்தபடி நின்றிருந்தாள்.
அவனது மற்றொரு நண்பன் முகுந்தனின் மனைவி இரண்டாம்முறை பிரசவித்திருக்கவே அவனும் வரவில்லை.
“சாப்பிட்டுப் போடா!” என்ற வெற்றியைத் தொடர்ந்து, “அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்! ஒழுங்கா சிஸ்டரைக் கூட்டிட்டு விருந்துக்கு வா!” என்று மிரட்டலாய் விருந்துக்கு அழைத்த நந்தன், யாழினியின் கைப்பிடித்து அழைத்துச்செல்ல, அவளும் இருவரையும் அழைத்துவிட்டு பார்வையால் விடைபெற்றாள்.
அவர்கள் வந்து சென்ற நேரத்தில் பதற்றம் மறைந்து தன்னையும் மீறி இயல்பாகி இருந்தாள் எழிலரசி. அதில் “யாரந்த பேபிடால்?” வெற்றியின் முகத்தை ஏறிடாமலே கேட்டாள்.
முதல்முறை அவன் வேறோருப் பெண்ணிடம் சிரித்துப் பேசியதைக் கண்டவளால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதுவும் அந்தப்பெண்ணிடம் அவன் காட்டும் அன்பு அலாதீயானது. அதில் யார் அந்தப் பெண் என்று தெரிந்தே ஆக வேண்டும்போல் இருக்க கேட்டுவிட்டிருந்தாள்.
யாருக்கோ கைக்கொடுத்து சிரித்தபடி புகைப்படத்துக்கு போஸ்கொடுத்தவன், “கேட்கல” என்றான் மெல்ல அவள் பக்கம் சரிந்து.
அவன் இதழோரம் ஒளிந்திருந்த புன்னகை வேண்டுமென்றே திரும்பக் கேட்கிறான் என்று காட்டிக்கொடுத்தது.
“நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்” முறைத்தபடி திரும்பிக்கொள்ள மெல்ல அவள் பக்கமாய் சரிந்து, “லஞ்சம் குடு சொல்றேன்” என்றான் கண்கள் சிமிட்டி.
அவளின் ‘யாரந்த பேபிடால்’ என்ற கேள்வி அவனுக்குள்ளிருந்த வெகுநாள் காதலனை தட்டி எழுப்பி இருந்தது. அதில் இருந்தது எனக்குத் தெரியாமல் யாரிவள்? உன் அன்பிற்கு பாத்திரமானவள்! என்ற மறைமுக கேள்வி அல்லவா!
அதில் குதுகலித்தவன் அவளை சீண்டிப்பார்க்க ஆவல் கொண்டான்.
“கல்யாண மேடையிலும் லஞ்சமா?” என்று கோபத்தில் நிமிர்ந்தவள் அவனின் பார்வை கண்டு திகைத்தாள்.
“லஞ்சமேதான்” என்றவனின் பார்வை அவளின் செவ்விதழில் நிலைத்திருந்தது.
சட்டென்று பதற்றம் குடிகொள்ள தடுமாறினாள்.
எத்தனையோ முறை, வேலை விசயமாக அருகருகே நின்றிருக்கிறார்கள். இதுவரை இப்படியெல்லாம் அவன் பார்த்ததில்லையே!
அதற்குள் அவளின் இதழ்களின் மேல் முத்து முத்தாய் வியர்த்து விட்டிருந்தது.
அவள் நாடிபற்றி நிமிர்த்தி, “சும்மாதானடி பார்த்தேன்” என்றவன் மென்சிரிப்புடன் கையிலிருந்த கைக்குட்டையால் அவள் மேலுதட்டின் மேல் படிந்திருந்த வியர்வையை ஒற்றி எடுக்க, விதிர் விதிர்த்துப் போனாள் எழிலரசி.
அவன் விலகிய பிறகும், கைக்குட்டையிலிருந்த அவனது வாசம் அவளை மூச்சு முட்டச் செய்தது. அதை ஏற்கவும் முடியாது தவிர்க்கவும் இயலாது தவித்தவள், தூரத்திலிருந்த அன்னையை விழியால் அழைத்தாள்.
அதற்குள் அவளது விரல்கள் பற்றியிருந்த இடத்தில் கழுத்திலிருந்த மாலையின் பூக்கள் உதிரத் தொடங்கின.
அன்னை அருகில் வந்ததும், “ம்மா, எனக்கு ரெஸ்ட்ரூம் போகணும்” என்றவள் பதிலைக் கூட எதிர்பாராது விறுவிறுவென மணமகள் அறைநோக்கி நடந்துவிட்டாள்.
அவள் திரும்பி வந்தபோது முகத்தை நன்றாக அடித்துக் கழுவி இருக்கிறாள் என்று தெரிந்தது. அழகு கலை வல்லுநர் போட்டிருந்த ஒப்பனை எல்லாம் கலைத்து லேசாக முகத்தை ஒற்றி எடுத்து வந்திருந்தாள். விநோதமாகப் பார்த்தாலும் அடுத்தடுத்து வந்த உறவினர்களை வரவேற்பதில் கவனமானான் வெற்றி.
ஆனால் அதன்பிறகு அவனிருந்த பக்கம் அவள் திரும்பவே இல்லை என்பதும் அவனது கவனத்தில் பதியாமலில்லை.
ஒருவழியாக வரவேற்பு முடிந்து இரவுமகள் வந்திருந்தாள். அவளை வரவேற்கவெனவே நிலவும் தன் முழுமுகம் மறைத்து காத்திருக்க, அந்த பிறைமதியை விழிகளால் வருடியபடி மண்டபத்தின் மொட்டைமாடியில் நின்றிருந்தான் கார்த்தி.
‘நாளை இந்நேரமெல்லாம் நானும் உன்னைப்போல் தனியாகி விடுவேன்’ நட்சத்திரங்களின்றி வெறுமையான வானத்தில் ஒற்றையாய் ஜொலித்த அவனது மாமன் மகளிடம் மனதை லயிக்க விட்டிருந்தான்.
மனது நிறைந்து கிடந்தது. இன்று கண்குளிர அவன் வளர்த்த செல்லக்கிளியை ஜோடியாய் கண்டுவிட்டான். இருந்தும் ஊசிமுனையாய் மெல்லிய வலி இதயத்தில் ஊடுருவியது. இதுநாள்வரை அவளே உலகம் என்று வாழ்ந்து விட்டான்.
எங்கு சென்றாலும் பத்து நாட்களுக்குமேல் அவளைக் காணாது அவனால் இருக்க முடியாது. அதற்காகவே ஓடி வருவான். ஆனால் இனி யாருக்காக ஓடி வர? வந்தாலும் அவன் நினைத்த நேரத்தில் அவளைப் பார்க்க முடியுமா? முன்பு போல் ‘மாமா’ என ஓடிவந்து மடிசாய்வாளா?
பெற்றத் தாய்க்கும் மேல் அன்பு செலுத்தியவனுக்கு வலித்தது. தன்னிடமிருந்து உயிரை உருவி எடுப்பதுபோல் இருந்த உணர்வில் கலங்கி நின்றான்.
“என்ன கார்த்திப்பா தனிமையில் இனிமையா?” கேட்டபடி அங்கு வந்து நின்றான் வெற்றி.
அவனுக்குமே இன்று தான் தொட்டதும் சுருங்கிய, அம்முவின் பாராமுகம் வருத்தத்தைத் தர மொட்டைமாடியைத் தஞ்சமடைந்திருந்தான்.
உண்மையில் மனவலிக்கு அருமருந்துதான் அந்த அம்புலி போலும்.
“ம்ம்… இனி தனிமையை பழகிக்கணும்ல” நிலவைப் பார்த்து வெறித்துச் சொன்னவனில் ஒருகணம் அசைவற்று நின்றுவிட்டிருந்தான் இளவல்.