“ட்ரஸ் மாத்திட்டு வாடி! சாப்பிடலாம்” தன்னவன் நினைவுகளுடன் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தவளை சாப்பிட அழைத்தாள் தாய் திவ்யபாரதி.

திரும்பியும் பாராமல், “எனக்குப் பசி இல்லமா” என்று அறையில் நுழைந்து கொண்டாள்.

மகளின் முகம் எதையோ இழந்ததுபோல் கலையற்றுக் கிடந்ததில் கேள்வியுன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவனை ஏறிட்டாள்.

மனைவிக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “நீ சாப்பிடு” என்றான் செழியன்.

“என்னப்பா எதும் பிரச்சனையா?” கேள்வியுடன் அவனருகில் அமர்ந்தாள்.

“முதல் டெத் கேஸ் டா! கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருப்பா. விடு பார்த்துக்கலாம்” என்று மனைவியை சமாதானப் படுத்தியவனுக்கும் அரசல் புரசலாக செய்தி வந்திருந்தது.

வெற்றி நடந்து கொண்ட முறைக்கு காரணம் தெரியாவிட்டாலும், தன்  அனுபவத்தில் இப்படி எத்தனையோ அரசியல் அழுத்தத்தை சந்தித்தவன்தானே செழியனும். வெற்றி எப்படியும் சமாளிப்பான் என்ற நம்பிக்கை இருந்ததில் அதைப் பெரிதாக எடுக்கவில்லை அவன்.

தந்தைக்கு இருந்த நம்பிக்கை மகளுக்கு இல்லையே! அதுதான் இங்கே பிரச்சனையாயிற்று.

அந்நேரத்தில் தலைக்கு குளித்துவிட்டு வந்த மகளை திவ்யபாரதி கேள்வியாகப் பார்க்க, “கொஞ்சம் அலைச்சல்மா!” என்றவள், “நான் இன்னைக்கு மாமாவோட மொட்டை மாடில படுத்துக்கிறேன்” என்று கிளம்பினாள்.

துக்கமோ, மகிழ்ச்சியோ அவளுக்கு மாமன் மடி வேண்டும்.

“எங்கம்மா மிருத்யூ! ரூம்ல காணோம்” அறையில் தங்கையைக் காணாததில் திரும்பித் தாயிடம் கேட்டாள்.

“சாயங்காலம் நல்ல மழைல நனைஞ்சிட்டு வந்திருக்கா. ஜூரம் ஜாஸ்தியா இருக்குன்னு, உன் மாமாதான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய்ட்டு வந்தாங்க. அவளும் அங்கதான் இருக்கா” என்ற திவ்யபாரதி சாப்பிட்டப் பாத்திரங்களை ஒதுங்க வைக்க, “சரி நான் பார்த்துக்கிறேன்” என்றவள் மாடி ஏற, படி இறங்கி வந்தாள் மிருத்யூ.

உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு வந்த தங்கையைக் கண்டவள், “என்னடி ரொம்ப முடியலையா? என்று, அவள் கழுத்தடியில் தொட்டுப் பார்க்க, தேகம் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு.

“மழை வந்தா நின்னு வரமாட்டியா?” தங்கையைக் கடிந்தவள், 

சரி வா. நான் உன்கூடவே படுத்துக்கிறேன்” என்று தங்கையைப் பிடித்துக்கொண்டு இறங்கப் பார்க்க, “நான் அம்மாகூட படுத்துக்கிறேன்கா” மெல்லிய குரலில் சொன்னவள், இறங்கி விட்டாள்.

‘சரியான அம்மா கோண்டு! எல்லாத்துக்கும் அம்மா முந்தானையைப் பிடிக்கணும்’ தங்கையின் செயலில் மெல்லியப் புன்னகையுடன் மாடி ஏற, மொட்டை மாடியில் பாய் விரித்துத் தலைக்கு இருக் கைகளையும் கொடுத்து விச்ராந்தையாய் படுத்திருந்தான் கார்த்தி. 

இரண்டு படுக்கை அறையுடன் வீடு இருந்தாலும், கார்த்தி விரும்புவது என்னவோ நிலவைப் பார்த்த இந்த கட்டாந்தரை படுக்கையைத் தான்.

“வாலு போச்சி கத்தி வந்ததுன்னு, சின்னது போனதும், பெருசு வருதே, என்ன விசயம்? என்றான், மருமகளை அறிந்தவனாய்.

“மாமா கொஞ்சநேரம் தலை கோதுங்க ப்ளீஸ்!” சாதூர்யமாய் மாமனின் கேள்வியைத் தவிர்த்தவள், நீட்டிப் படுத்திருந்த அவன் காலில் தலைகாணியைப் போட்டு அதில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

சின்னவயதில் காலில் தலைகாணியைப் போட்டு ஆட்டி ஆட்டித் தூங்கவைத்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

கார்த்திக்கும் அதற்குமேல் தோண்டித் துருவ மனமில்லை. சொல்வதாயிருந்தால் இந்நேரம் கடகடவென ஒப்பித்திருப்பாளே! அவள் முகம் வேறு உணர்ச்சியற்று வெளுத்துக் கிடக்க, ஈரத் தலையைக் கோதிவிட்டபடி, அவளது சிறுவயதுக் கதைகளைப் பேசினான்.

அதில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பி இருந்தவளுக்கு மெல்லியப் புன்னகையும் எட்டிப் பார்த்தது. 

“இன்னைக்கு காலைல மாலில்(Mall), லதா டீச்சரப் பார்த்தும் ஏன் பார்க்காதமாதிரி வந்துட்டீங்க மாமா?” என்றாள் கேலியுடன்.

“எந்த லதா? அம்முக்குட்டி” என்று தெரியாததுபோல் வினவியவனின் வயிற்றில் முஷ்டியை மடக்கிக் குத்தினாள். 

இருவரும்தானே காலையில் வெளியில் சென்றபோது மலைக்கிராமத்துப் பள்ளியின் ஆசிரியைத் தற்செயலாகக் கண்டிருந்தனர்.

“ஸ்கூல்ல உங்க பின்னாடியே குட்டிப் போட்டப் பூனையாட்டம் சுத்துமே அந்த லதா டீச்சர்” என்று செல்லக் கோபத்துடன் மாமனை முறைத்தாள்.

“மால்ல நீங்கதான் இன்னைக்கு பார்க்கலையேத் தவிர லதா டீச்சர் செம்மயா லுக்கு விட்டாங்க தெரியுமா?’ என்றவளின் புன்னகை விரிய, “அப்பவே உங்க மேல செம்ம லவ்ஸ் போல” என்றாள் கேலியாக. 

“கல்யாணம் ஆகி வேற வீட்டுக்குப் போய்ட்ட பொண்ணை இப்படில்லாம் பேசக்கூடாது குட்டிம்மா” கண்டித்தான்.

“படிக்கும்போது இதைத்தான் கணக்கெடுத்துட்டு இருந்தியா நீ” கேலி செய்த மருமகளின் தலையில் வலிக்காமல் கொட்டவும் செய்தான்.

“நானும் உங்க பின்னாடிதானே தானே சுத்துவேன். தெரியாம இருக்குமா?”என்றவள், திடிரென,

“நீங்க ஏன் மாமா கல்யாணமே பண்ணிக்கல?” என்றாள் மாமனின் முகத்தை எட்டிப் பார்த்து. 

“நீங்க ஒரு கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் உங்க பையனையே நான் கட்டி இருப்பேன்ல?” தன் மாமன் ஒற்றையாய் நின்றுபோனதில் உள்ளூர பலநாட்கள் வருத்தப் பட்டிருக்கிறாள். அது கேள்வியாய் இன்று வெளிவந்தது. கூடவே சேர்ந்து வெற்றியின் மீதிருந்த ஆதங்கமும் வெளிப்பட்டது.

தன் மாமனுக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அவளது பார்வை வேறோருவனிடம் நிலைத்திருக்காதே! இப்படி மனைதைப் பறிகொடுத்துவிட்டு அல்லாடி இருக்கமாட்டாளே!

“தோணல குட்டிமா” என்ற கார்த்தியின் பார்வை அந்த நிலவை வெறித்தது. அங்குதான் நிலவில் அவனின் அம்மு ஓய்வெடுப்பதாக ஒரு பிம்பம். அதனாலயே இந்த மொட்டைமாடியும் கட்டாந்தரைப் படுக்கையும் அவனுக்கு இனிமையாயிற்று.

மெல்லிய பெருமூச்சுடன், “அதான் அந்த அம்முக்கு பதிலா இந்த அம்மு, குட்டி தேவதையா என் வாழ்க்கைக்குள்ள வந்துட்டாளே!” என்றவனின் விரல்கள் அவனது குட்டி தேவதையின் தலைய வருடிக் கொடுத்தது. 

மெல்ல செருமியபடி இரண்டு பால் டம்ளர்களுடன் மாடி ஏறி வந்தான் செழியன்.

தந்தையைப் பார்த்ததும் மகள் எழுந்துகொள்ள, அவளிடம் ஒரு கோப்பையை நீட்டினான்.

“ப்ச்! எனக்குப் பசி இல்லன்னு சொன்னேனப்பா” என்றவள் மறுக்க, அவன் முறைப்பில் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

“நம்ம வேலையில இதெல்லாம் கடந்துதான் வரணும் அம்மு. உனக்குத் தெரியாததில்ல. இதுபோல நித்தமும் பார்க்கணும். பொணத்துகூட உட்கார்ந்துதான் சாப்பிடணுங்கிற நிலை வந்தாலும் அதுக்கு தயாராவே இருக்கணும்” தந்தையாய் மகளைத் தேற்ற, உள்ளூர தலையிலடித்துக் கொண்டான் கார்த்தி.

கஷ்டப்பட்டு அவள் மனநிலையை மாற்றி வைத்திருக்க, மீண்டும் கொலை கொள்ளை என்று அதையே நினைவுப் படுத்துபவனை என்ன செய்வது? விழியால்  நண்பனை எரித்தான்.

“துரைக்கு வேற தனியா சொல்லணுமோ? வந்து பாலைக் குடிடா!” என்றான் செழியன் அக்கறையாய்.

“எங்களுக்கு குடிக்கத் தெரியும்!” என்று முறைத்தக் கார்த்தி, “நீ போய், உன் பொண்டாட்டிக்கு கதை சொல்லித் தூங்க வைக்கிற வேலையைப் பாரு! என்றதும் சத்தமிட்டுச் சிரித்தாள் அம்மு. 

இப்போதும் திவ்யபாரதிக்கு கணவனிடம் கதை கேட்டபடி தூங்கினாள்தான் தூக்கம் வரும். தந்தை, தாயின் அந்த அந்நியோன்யத்தில் மெய் சிலிர்த்திருக்கிறாள். 

தந்தையைப் போல் ஒரு கணவன் கிடைத்திருக்காவிட்டால் இன்றுவரை தாய் ஒரு சமூகப் போராளியாய், இந்த உலகின் முன் குற்றவாளியாய் பார்க்கப்பட்டிருக்கக் கூடும்.

இன்னமும் அவளின் ஈரத்தலையை உலர்த்தியபடி பாலை அருந்திய மாமனின் கனிவான முகம் கண்டவளுக்கு தாயும், மாமனும் சேர்ந்து நடத்திய புனிதப் போர் நினைவிலாடியது.

இந்த இரு தீவிரவாதிகளை அன்பால் கட்டிப்போட்டு, கனிவாய் மாற்றி வைத்திருக்கும் தந்தையை நினைத்து எப்போதும் போல் இப்போதும் பிரம்மித்துப் போனாள்.

‘நாளைக்கு இவங்க இரண்டுபேர் சம்மந்தப்பட்ட கேஸ தேடி எடுத்துப் படிக்கணும்’ மனதினுள் நினைத்துக் கொண்டாள். 

என்னதான் தந்தை சொல்லி முழுசுமாய் அறிந்திருந்தாலும், ஒரு போலீஸ்காரனாய் தந்தை அதை எப்படி சாதித்திருப்பார், என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடியது.

மனநிலை இலகுவாகிட, “மாமா, நான் கீழ போறேன்” என்றவள் தந்தையுடனே ஓடிவிட, மொட்டைமாடியும், முழுநிலவும் கார்த்தியின் துணையாகியது.

 

டியர்ஸ்! இந்த வாரத்திலிருந்து சனி ஞாயிறு தவிர்த்து தினமும் யூடி தர முயற்சி செய்கிறேன். முயற்சிதான் சரியா.. ஒருநாள் வேலை பளுவினால் தவறி விட்டாலும் கோவித்துக் கொள்ளக் கூடாது டீலா?

சரி! கதை பிடிச்சிருக்கா? கதையின் போக்கு விறுவிறுப்பா இருக்கா கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க. அப்பதான் சரியான பாதையில் கொண்டு போறேனான்னு எனக்கும் புரிந்து கொள்ள முடியும்.

வழக்கம் போல் உங்கள் அன்பை எதிர்பார்த்து…