Advertisement
அத்தியாயம் — 22
அடுத்தநாள் காலை.. ஏழு மணிக்கு சூடான காபியை தன் அத்தைக்கு கொடுத்தவள்.. மலர்ந்த முகத்தோடு தானும் டீ குடித்து கொண்டிருக்க..
அங்கு வந்த சமைக்கும் பெண்மணி.. ‘ஆனந்தி பாப்பா வந்திருக்கா..? அதான் வாசல்ல கலர்கோலம் ஜொலிக்குது..” என்றபடி கிச்சனுக்குள் செல்ல.. தானும் சென்றவள்..
‘அக்கா இன்னைக்கு நான் சமைக்கிறேன்..” என்று தன் சமையலை துவக்கினாள்.
ஆனந்தி வேலைசெய்யும் நேர்த்தி பார்த்து.. ‘பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு.. நீ எப்படிம்மா இத்தனை அழகா வேலைசெய்ற..?” என்றார் ஆச்சர்யத்தோடு.
‘எனக்கு சமைக்கிறது ரொம்ப பிடிக்கும்க்கா..” என புன்னகையோடு சொன்னவள்.. சமையல் முடித்து எட்டரை மணிக்கு கிச்சனில் இருந்து வெளியே வந்தாள்.
‘அண்ணி… பசிக்குது..” என்று காயத்ரி வர.. ‘வா..” என அழைத்து அவளுக்கு பரிமாறியவள்.. தன் அத்தைமாமாவையும் சாப்பிட அழைக்க.. மருமகளின் சமையலை ரசித்து ருசித்து.. உண்டவர்கள்..
‘கேரட் அல்வா ரொம்ப நல்லா இருந்ததுமா..” என பாராட்டிக்கொண்டிருக்க.. ‘ம்ம்h.. டீ ” என்ற வெற்றியின் குரல் உள்ளிருந்து கேட்க..
‘நான் எடுத்திட்டு போறேன்த்த..” என்றவள்.. டீயும் அல்வாவும் எடுத்துச்சென்றாள் மலர்ந்த முகத்தோடு.
ஆனந்தி கையில் இருந்த கப்பை பார்த்தவன்.. ‘நான் டீ தான கேட்டேன்..?” என்றான் கடுப்பாக.
‘ஸ்வீட் வேணாம்னா அப்புறம் சாப்டுக்கோங்க..” என்று தன்மையாக சொன்னவள்.. டீயை அவனிடம் நீட்டினாள்.
ஆனந்தியின் சிரித்த முகம் மனதை மயக்க.. ‘ஆள் மயக்கி..” என முனுமுனுத்தவன்.. ‘எதுக்கு இத்தனை நடிப்பு..?” என்றான் உறுத்து பார்த்து.
இத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மைமாறி.. ஆனந்தியின் முகம் கடினத்தோடு லேசாய் சிவக்க.. ‘என்ன பேச்சு இது..? ஆள்மயக்கி.. நடிப்புன்னு..?” என்றாள் வெற்றியின் முகம்பார்த்து.
முறைத்தவன்.. ‘ம்ம்.. எதுன்னாலும் மத்தவங்களுக்காக செய்துட்டு.. எனக்கே செய்தமாதிரி ரியாக்ட் பண்றதுக்கு பேர்.. நடிப்பில்லாம வேற என்ன..?” என்றான் அழுத்தமாக.
‘நான் அப்படி செய்த எதாவது ஒரு விசயத்தை.. பர்டிகுலரா மென்சன் பண்ணுங்க..” என்றாள் அவன் கண்களிலிருந்து பார்வையை விலக்காமல்.
‘ஏன்..? இப்போ இந்த அல்வா எனக்காகவா செய்த..?”
‘வீட்ல இத்தனைபேர் இருக்கோம்.. எல்லார்க்காகவும்தான் செய்தேன்.. உங்களுக்காக மட்டும்தான் செய்தேன்னு நானும் சொல்லலையே..” என்றாள் தெளிவாக.
அவளின் பதிலில் கடுப்பானவன்.. ‘நீ எதைத்தாண்டி எனக்காக செய்திருக்க..? நம்ம கல்யாணத்தில இருந்து.. உன்னை நான் எடுத்துக்கிட்ட வரைக்கும்..” என்றான் ஆற்றமுடியாத கோபத்தில்.
தான் மறுத்ததை மனதில் வைத்து பேசுகிறான் எனப்புரிய.. ‘நீங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறிங்கன்னு சொல்லுங்க.. நான் பண்றேன்..” என்றாள் கோபம் தணிந்து சற்று இலகிய குரலில்.
‘கல்யாணம் ஆகி ஐஞ்சுமாசம் பக்கம் ஆகப்போகுது.. இதுவரைக்கும் ஒரு நாள் எனக்காக லீவ் போட்ருப்பியா…? அத்தைமாமா இங்கையே குடிவந்ததால லீவ் போட முடிவுசெய்திட்டு.. என்னவோ எனக்காகவே ஒருமாசத்துக்கு லீவ் போடறமாதிரி நடிக்கிற.. என் கண்முன்னால நிக்காம முதல்ல இங்கயிருந்து கிளம்பு..” என்றான் கடுப்பாக.
நடிப்பென்ற வார்த்தை வெகுவாய் பாதிக்க.. விருட்டென வெளியேறினாள் ஆனந்தி. அதன்பின் வெற்றியை பார்வையில் கூட தொடரவில்லை. மதிய விருந்துக்கு சமைக்க சென்றவள் சமையல் முடித்து.. தன் தங்கை வரவிற்க்காக காத்திருந்தாள்.
ஒருமணிபோல் அபர்ணாவும் சிவமுகிலனும் வர.. ஆனந்திக்கு மேல் சந்திரவாணன்தான் தன் தங்கைமகளை ஆரவாரமாக வரவேற்று உபசரித்தார்..
ஆனந்தியிடமும் காயத்ரியிடமும்.. சற்றுநேரம் பேசிய அபர்ணா..
‘அத்தான்..” என்றழைத்தபடியே வெற்றியின் அறைநோக்கி போக..
‘வாங்கோ.. வாங்கங்கோ..” என வெளியே வந்தான் வெற்றி. நேரம் கலகலப்பாக சென்றது. மாலை நான்கு மணிபோல் சிவமுகிலன் வெற்றியிடம் கிளம்பறேன் என்று சொல்ல..
சந்திரவாணனிடம்.. ‘மாமா.. மெடிக்கல் லீவ் அப்ளை செய்திருந்தேன்.. இன்டர்னல் வரதால லீவ் கிடைக்கல.. நாளைக்கு காலேஜ்க்கு போகனும்..” என்றாள் சோர்ந்த முகத்தோடு.
ஊருக்கு வந்தாலும் ஆனந்தி ஓரிருநாளில் கிளம்பிவிடுவாள் என முன்பே வெற்றி சொல்லியிருந்ததால்.. மருமகள் ஊருக்கு செல்வது தவறாக தோணவில்லை சந்திரவாணனுக்கு.
‘ஏன்மா காலைலயிருந்தே ரொம்ப சோர்வா இருக்க..? உடம்பேது சரியில்லையா..?”என்றார் சந்திரவாணன்.
வெற்றி பேசியதை நினைத்தவள்.. ‘நல்லாதான் மாமா இருக்கேன்.. லீPவ் கிடைக்கலன்னதும் கொஞ்சம் டென்சனாகிடுச்சி..” என்றாள் கண்கலங்கி.
‘இந்த வேலை உனக்கு ரொம்ப பிடிக்கும்னு வெற்றி சொன்னான்.. என் மச்சினனும் என் பொண்ணு கவர்ன்மென்ட் காலேஜ் ல லக்சரரா இருக்கான்னு ரொம்ப பெருமைபடுறார்.. நீ ஏன்டாம்மா வேலைக்கு போறதுக்கு அழற..?” என்றார் பதட்டமாக.
‘வேலைக்கு போறது எனக்கும் ரொம்ப பிடிக்கும்தான் மாமா.. இப்போதைக்கு லீவ் கிடைக்கலன்னுதான் சங்கடமா இருக்கு..” என பொய்யுரைத்தவள் தன் மாமாவின் முகம்பார்க்க தடுமாறி தலைகுனிய..
‘வெற்றிக்கும் இங்க வேலை ஜாஸ்தி.. உன்னோடவும் ரொம்ப நாள் இருக்க முடியாது.. இப்போ நீ அங்க போனா.. தனியா இருக்கனுமேம்மா..?” என்றார் யோசனையாக.
‘அங்க நம்ம வீட்ல குடியிருக்கறவங்க எல்லாருமே ரொம்ப நல்லமாதிரி.. நான் மேனேஜ் செய்துக்குவேன் மாமா.. “ என்றாள்.
‘வெற்றி.. ஆனந்தியை கூட்டிட்டுபோய் விட்டுட்டு வா..” என்றார்.
‘இல்லமாமா.. அவருக்கு எதுக்கு அலைச்சல்.. சிவாவும் அபர்ணாவும் இன்னைக்கு ஊருக்கு போறாங்க.. நான் அவங்களோடவே போய்க்கிறேன்..” என்றாள் அவசரமாக.
‘என் மருமகளைப் பார்த்தியாடா..? உனக்கு இங்க இருக்கிற வேலையை புரிஞ்சிகிட்டு.. உன்னை தொந்தரவு செய்யகூடாதுன்னு நினைக்குது..” என பெருமையோடு சொன்னவர்..
‘சரிம்மா.. அப்படியே செய்.. பத்திரமா இரு.. வெற்றியும் அப்பப்ப வந்து பார்த்துக்குவான்.. முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் டிரான்ஸ்ஃபர்க்கு ஏற்பாடு செய்யனும்..” என்றார் கவலையோடு.
‘அண்ணி நானும் உங்ககூட வரவா..?”என்றாள் காயத்ரி.
‘வேணாம் காயு.. நான் காலேஜ் போனதுக்கப்புறம் நீ தனியா இருக்கமாதிரி வரும்.. எனக்கு அங்க பழகிடுச்சி.. உனக்கு அங்க தனியா இருக்க சரிவராது..” என்று தன்மையாகவே மறுத்தவள்.. உடைமாற்றவேண்டி வெற்றியின் அறைக்குள் சென்றாள்.
சிவமுகிலன் சின்னமாற்றம் என்றாலும் கண்டுபிடித்துவிடுவான்.. என தன் முகத்தை இயல்பாக வைத்திருக்க அரும்பாடுபட்டவன்.. சிவாவும் அபர்ணாவும் விடைபெற்று வெளியில் செல்ல.. என்ன முயன்றும் முடியாமல் ஆனந்தியையே வெறித்துப் பார்த்திருந்தான் வெற்றிமாறன்.
கிளம்பும்போதும் வெற்றியிடம் எதுவும் சொல்லாமல்.. தன் அத்தைமாமாவிடமும் காயத்ரியிடமும் தலையசைத்து கிளம்பினாள்.
ஊருக்கு போகிறேன் என்று தனது தாய்தந்தையரிடம் ஆனந்தி சொல்ல.. ‘ஏன்மா ஒரு வாரத்துக்கு லீவ் போட்டிருக்கேன்னு சொன்ன..?” என்று நீலகண்டன் கேட்க..
இவர்களிடமும்.. தன் மாமனாரிடத்தில் சொன்னதையே சொல்ல..
‘சரிம்மா.. உங்கம்மாவை அவங்க அண்ணன் வீட்ல விட்டுட்டு நானும் உன்கூட வரேன்..” என்றார் நீலகண்டன்.
‘அப்பா.. இத்தனை வருசத்துக்கப்புறம் இப்போதான் என் பாட்டிவீட்டுக்கு வந்திருக்கிங்க.. அதோட எத் தனை பேர் இருந்தாலும்.. அம்மா உங்களை விட்டுட்டு இருக்கமாட்டாங்க.. எனக்கொன்னும் பிரச்சனையில்ல நான் பார்த்துக்குவேன்ப்பா.. நீங்க அம்மாவோட இருங்க..” என திடமாய் மறுக்க..
‘தம்பி.. ஆனந்தியை பார்த்துக்கோங்க..” என சிவாவிடம் சொல்ல..
‘அங்கிள் ஆனந்தியை நான் பார்த்துப்பேன்.. ஆனாலும் கல்யாணம் ஆனதிலிருந்து இவங்க இரண்டுபேரும் அதிகம் தனிச்சிருக்கமாதிரியே ஆகுது.. அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு..” என வருந்தினான்.
தானும் வருத்தமடைந்தவர்.. ‘யுனிவர்சிட்டில நமக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட டிரான்ஸ்ஃபர்க்கு பேசியிருக்கேன்.. அவரும் ட்ரை பண்றேன்னு சொல்லியிருக்கார்.. கூடிய சீக்கிரம் கிடைச்சிடும்..” என்றார் நீலகண்டன்.
‘ஆனந்தீ..” என உள்ளிருந்து சந்திரா அழைக்க.. அறைக்குள் வந்த ஆனந்தியிடம்.. ‘வெற்றிக்கும் உனக்கும் என்ன பிரச்சனை..?” என்றார் தீர்க்கமான பார்வையோடு.
‘அதெல்லாம் ஒன்னுமில்லமா..” என ஆனந்தி அவசரமாக மறுக்க..
‘காலைல வெற்றி இங்க இருக்கும்போதே எனக்கு தெரிஞ்சிடுச்சி.. உண்மையை சொல்லு..” என மிரட்ட..
‘அவரோட டைம்ஸ்பென்ட் பண்ணலன்னு கொஞ்சம் கோபமா இருக்கார்மா.. எனக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சதும் அவர் சரியாய்டுவார்..” என்றாள்.
‘அதுக்குத்தான் கல்யாணத்துக்கு லீவ் போடும்போதே ஒரு மாசத்துக்காவது போடுன்னேன்.. கேட்டியா..?” என்றார் கோபமாக.
‘அவர் இப்படி வருத்தப்படுவார்ன்னு எனக்கெப்படி தெரியும்..?” என தானும் வெடித்தாள் கண்கலங்கி.
மகளின் கோபத்தில்.. ஆனந்தியும் வெற்றியை பிரிய மனமில்லாமல் வேறுவழியின்றிதான் செல்கிறாள் எனத்தோன்ற.. ‘சரிவிடு.. நீ சொன்னமாதிரி டிரான்ஸ்ஃபர் கிடைச்சதும் வெற்றி கோபம் போய்டும்..” என சமாதானம் செய்து..
‘இதுக்குத்தான் டிரான்ஸ்ஃபர் கிடைக்கிறவரைக்கும் நாங்களும் அங்கையே இருக்கோம்னு சொன்னேன்.. நீயும் உங்கப்பாவும் என்பேச்சை வச்சிக்கிட்டிங்களா..? உன்னை அங்க தனியா விட்டுட்டு நான் எப்படி இங்க நிம்மதியா இருக்கிறது..” என ஆதங்கப்பட..
‘ஒருமாசத்துக்கு லீவ் போட்டுட்டு.. நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம்னு நினைச்சிதான்மா இங்க வரலாம்னு சொன்னேன்.. லீவ் கிடைக்கல.. நான் என்ன செய்யட்டும்..?” என வருந்தியவள்..
‘நம்ம வீட்ல எனக்கு ஒருபயமும் இல்லமா.. நீங்க பயப்படாதிங்க.. டைம் கிடைக்கும்போது அவர் அங்க வருவார்.. அவருக்கு வர டைம் இல்லன்னாலும் வீக் என்ட்ல நான் இங்க வந்திடறேன்..” என அன்னைக்கு தைரியம் சொல்லி சிவமுகிலனோடு கிளம்பினாள்.
ஆனந்தி கோயமுத்தூர் வந்து ஒருவாரம் முடிந்திருக்க.. வெற்றிமேல் கோபமிருந்தாலும்.. கணவனின் முகத்தை பார்க்கும் ஆசைவர.. காலேஜிலிருந்து வந்தவள்.. நாளை சனிக்கிழமை.. காலேஜ் லீவ்தான்.. ஊருக்கு போலாமா என யோசித்திருந்தாள்.
இங்கு வந்ததிலிருந்து தினமும் காலை சமைக்கும்போது.. தன் அத்தைமாமாவோடு பேசிக்கொண்டேதான் சமைப்பாள்.. மதிய இடைவெளியின்போது அபர்ணாவிடம் பேசுவாள்.. மாலை நேரத்தில் காயத்ரியிடம் பேசி மறைமுகமாக வெற்றியின் நலன் அறிந்துகொள்வாள். இரவுநேரத்தில்தான் தனது தாய்தந்தையரிடம் பேசுவாள்.
காயத்ரிக்கு அழைத்தவள்.. இன்று நேரடியாக வெற்றியை விசாரிக்கவும்.. ‘அண்ணி.. உங்களுக்கும் அண்ணனுக்கும் சண்டையா..?” என்றாள்.
‘ஏய்.. அப்டியெல்லாம் இல்ல காயு.. தினமும் நைட்ல அவர்கூட பேசிட்டுதான் தூங்குவேன்.. பகல்டைம்ல அவர் பிசியா இருப்பார்ன்னுதான் கூப்பிடறதில்ல..” என்றாள்.
Advertisement