Advertisement

Final Part 2

வேணியின் செயலை தவிர்த்து பிரசாத்தின் வேலைகளை உதயா கூறவும் அனைவரும் ஆடிப்போய்விட்டனர். தன் மகளுக்காக்த்தானே இவ்வளவும் செய்திருக்கிறான். இவனை போய் தவறாக எண்ணிவிட்டோமே என சிறு வருத்தமும் எழத்தான் செய்தது.

கோசலை, விஜியை தவிர அனைவருமே ஓரளவு பிரசாத்தை புரிந்துகொண்டு ஏற்க நினைத்தனர். அதிலும் ஏழுமலை தன் மாப்பிள்ளையே சொல்லும் போது மறுத்து பேசுவாரா என்ன? அந்த அளவிற்கு உதயா மீது பிரியம் வைத்திருந்தார்.

ஏழுமலையின் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே வரும் போது எதார்த்தமாக ரவியை பார்ப்பது போல பார்த்து ஆச்சர்யத்தை காட்டி பேசிய உதயா மகிமாவை பற்றியும் விசாரித்துவிட்டு ஏழுமலையிடம் ரவியை தன் நண்பனின் தங்கை கணவன் என அறிமுகபடுத்தவும் அவரும் ஆச்சர்யப்பட்டு போனார்.

உதயா, ரவி மீது சிறு சந்தேகம் கூட எழவில்லை அவருக்கு. அப்படியே ரவி, மகிமாவை உதயா தான் இங்கே அனுப்பியிருந்தால் அதில் தவறேதுமில்லை என நினைக்கும் அளவிற்கு மாறியிருந்தார்.

அங்கிருந்து அனைவரிடமும் சொல்லிகொண்டு கிளம்பி வரும் வழியில், “சரியான தில்லாலங்கடிடா நீ. உன் மாமனார் போல என்னையும் வெள்ளந்தின்னு நினச்சுட்டியா? இப்படி அவரை மயக்கி வச்சிருக்கியே? பாவம் அவர் உன்னை போய் நல்லவன்னு நம்பறாரு பாரு…” என கிண்டலாக பிரசாத் கூற,

“என்னடா பூடகமா பேசற?, அதுவும் தில்லாலங்கடின்னு, உன்னை விடவா?….” என பிரசாத்தை வாரிய உதயா, “எதைப்பத்தி சொல்றீங்க சார்?…” என கேட்கவும் ரவி விஷயத்தை பற்றி என பிரசாத் கூற அசடுவழிந்த உதயா, “பொண்டாட்டியை காப்பாத்தனும்னா இப்படியெல்லாம் செஞ்சுதானே ஆகனும்…” என வீராப்பாக பேச,

“ஆமாமா, பொண்டாட்டிக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிவைக்கிற வரைக்கும் அவளை பாதுகாக்கனும்ல. நல்ல வேலைதாண்டா பார்த்திருக்க…” என சூடாக திருப்பிக்கொடுத்தான் பிரசாத்.

“ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்ற?, விடேன். நீ அவளுக்கு மேல இருப்ப போல…” என்று உதயா சலிப்படைய,

“ஓ… அய்யாவுக்கு உண்மை சுடுதாக்கும்?… நீ அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கனும்னு தேவுடு காத்திட்டு இருந்த இந்த விஷயம் மட்டும் உன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சு பார் மகனே? சலங்கை கட்டாதா குறையா ஆடு ஆடுன்னு ஆடித்தீர்த்திடுவா…” என சொல்லிவிட்டு இடியென சிரித்தான் பிரசாத்.

“தெய்வமே, உன் காலை காட்டு தெய்வமே. அடங்குடா. போதும் இதை இங்கயோட மறந்திட்டு தான் நீ ஊருக்குள்ள நுழையனும். அவக்கிட்ட சண்டைபோட்டு கோவத்துல உளறி வச்சுடாதே. உனக்கு புண்ணியமா போகும்…” என கெஞ்சலும் மிரட்டலுமாக உதயா பேச,

“ம்ம் பார்க்கலாம். அது அவ கைலதான், இல்லை இல்லை வாய்ல தான் இருக்கு. முதல்ல உன் பொண்டாட்டியை எனக்கிட்ட முறைச்சுக்காம, வம்பிளுக்காம, சண்டை போடாம அமைதியா இருக்க சொல்லு. அப்போதான் நான் சொல்லமாட்டேன். இல்லைனா உன் விதிப்படி நடக்கும்…” என்று மிதப்பாக கூறினான்.

“எல்லாம் நேரம். நடக்குற கதையை பேசுடா. அவளாவது உங்ககிட்ட சண்டை போடாம இருக்கிறதாவது. இப்போ நாம லேட்டா போனா அதுக்கும் உன்னைத்தான் திட்டுவா. வாங்கிக்கட்டிக்க ரெடியா இரு…” என நொந்துகொண்டே பதிலளிக்க நந்தினியின் பிம்பம் தோன்றி சிறுமுறுவலை உண்டாக்கியது பிரசாத்தின் இதழ்களில்.

இப்போதெல்லாம் பிரசாத்திற்கும் நந்தினிக்குமான சண்டை அவ்வப்போது அரங்கேறிகொண்டுதான் இருந்தது. நந்தினியே அமைதியாக இருந்தாலும் பிரசாத் வேண்டுமென்றே அவளிடம் வார்த்தையாடி வாங்கிக்கட்டுவான். சிலநேரம் இவர்களது சண்டை பெரிதாகி யாராலும் சமாளிக்கமுடியாமல் போகையில் உதயா தான் பஞ்சாயத்து செய்வான்.

எப்போதும் போல இருவரும் நேரத்திற்கு வீட்டுக்கு போய் சேர்ந்தும் யாரும் அறியாமல் உதயாவிடம் பிடிபிடியென பிடித்தாள் நந்தினி.

ஐந்தாமாதம் மருந்து கொடுத்துவிட்டு ஏழாம் மாதம் வளைகாப்பு என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இத்தனை நாட்களில் யாரும் வேணியை போய் பார்க்க வேண்டுமென்று நினைக்கவே இல்லை. உதயா தான் அவ்வப்போது பிரசாத் செல்லும் நேரம் சென்று வருவான். நந்தினியால் வேணியை மன்னிக்கே முடியவில்லை. கௌரியின் இறப்பிற்கு காரணமாகி, அதையும் இத்தனை வருடங்கள் மறைத்து தன் குடும்பத்திற்கு துரோகம் இழைத்த வேணி நம்பிக்கை துரோகியாக தான் தெரிந்தார். அதனால் அவரை பார்க்க மட்டுமல்ல நினைக்க கூட விரும்பவில்லை. அதே நேரம் உதயா போய் பார்ப்பதை தடுக்கவும் எண்ணவில்லை.

ஏழாம் மாதம் வளைகாப்பு ஊரே மெச்சும்படி சிறப்பாக நடைபெற்றது. நந்தினியை அழைத்துக்கொண்டு அன்றே மீனாட்சிபுரம் கிளம்ப முடியாததால், உதயாவும் அதை அனுமதிக்காதபடியால் சாஸ்திரத்திற்காக  விஷ்ணுவின் வீட்டிற்கு அழைத்துசென்று மீண்டும் மறுநாளே உதயாவின் வீட்டிற்கு அழைத்துவரபட்டாள் நந்தினி. அன்றைக்கு அனைவருக்குமே உதயா வீட்டில் மதிய விருந்து தயாராகிக்கொண்டிருக்க ஹாலில் யோசனையாக அமர்ந்திருந்த உதயாவை பார்த்த நந்தினி அவனை நோக்கி மெதுவாக சென்றாள்.

“என்னாச்சுங்க, குழப்பமா இருக்கிறது போல வாடி இருக்கு உங்க முகம்?…” என கவலையோடு கேட்டவளை பார்த்தவன் உண்மையை சொல்லலாமா? வேண்டாமா? என தனக்குள்ளேயே பூவா தலையா போட்டுப்பார்த்துகொண்டிருந்தான்.

அதில் பொறுமையை கைவிட்ட நந்தினி, “இப்போ என்ன விஷயம்னு எனக்கிட்ட சொல்லப்போறீங்களா?… இல்லையா?…” என அதிகாரமாக கேட்க,

“சொல்லிடறேன், சொல்லிடறேன், சொல்லாம இருந்தா என்னை விட்டுடவா போற? கணேஷ் கால் பண்ணியிருந்தான். அருவியூர்ல இன்னும் இரண்டு நாள்ல திருவிழாவாம். போன ரெண்டு வருஷமா கூப்பிடத்தான் செஞ்சான். நான் தான் போகலை. இந்த வருஷமும் நம்மை எல்லோரையும் கூப்பிடறான். அதான்…” என படபடவென மனப்பாடம் செய்ததுபோல ஒப்பித்தான்.

முதலில் முகம் கசங்கியவள் பின் மனதில் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, “ம்ம், போகலாமே. நாம எல்லோருமே போகலாம்…” என அசால்ட்டாக கூறவும் உதயாதான் குழம்பி போனான். “இவ பெருசா ஏதோ ப்ளான் பண்ணிட்டா போல. உஷாருடா உதயா…” என தனக்குள் பேசியவன் நந்தினியிடம், 

“என்ன சொல்ற நீ? அங்க எப்டி போக? ம்ஹூம், வேண்டாம். நான் கணேஷ்க்கிட்ட சொல்லிப்பேன். நீ பேசாம இரு…” என்று அங்கிருந்து நழுவப்பார்க்க,

“இங்க பாரு மாமா, இந்த கதைதானே வேண்டாம்ன்றது. சும்மா இருந்தவளை ஆசை காமிச்சு ஏமாத்திட்டு நீ தப்பிக்கலாம்னு நினைக்காத? அதுவும் நான் வாயும் வயிறுமா இருக்கும் போது. இந்த மாதிரி நேரத்தில நான் ஆசைப்பட்டதை நீ நிறைவேத்தி தான் ஆகனும். இஇல்லைனா?…” என கட்டளையிடும் தோரணையில் மேடிட்ட வயிற்றை உதயாவின் முன்பு ஏற்றம் இறக்கமாக காட்டி பேசிய அவள் அழகில் தான் பேச வேண்டியதை மறந்து லயித்துவிட்டான்.

அவனது ரசனையான பார்வையை கண்டவள் தனக்குள் சிரித்துக்கொண்டு, “மாமா ப்ளாட்டா. ஹைய்யா அப்போ நாம அந்த ஊருக்கு போகப்போறோம்…” என கைகளை ஆட்டி குதூகலிக்க அதில் தானும் மகிழ்ந்தவன்,

“ம்ம் சரி. நாம போய்ட்டு வரலாம்…” என ஆமோதித்தான்.

“நாம மட்டுமா? ம்ஹூம் எல்லோருமே போகனும். எல்லோரும் தான் போறோம்…” தீர்மானமான குரலில் விழிகள் பளபளக்க பேசியவளை விநோதமாக பார்த்தவன் தான் என்ன சொன்னாலும் இனி தன் மனைவி கேட்கபோவதில்லை என உணர்ந்து,

“இங்க பாருடா. மாமாக்கு நாம அருவியூருக்கு போறது தெரிஞ்சா பிரச்சனை ஆகிடுமே? கொஞ்சம் யோசி…”

“தெரிஞ்சா தானே. தெரியாம கூட்டிட்டு போய்டலாம். அங்க போனதும் ஒண்ணும் செய்யமுடியாதே?…” என்று மிக மிக சாதாரணமாக கூற,

“அடிப்பாவி!!! தெரியாம எப்படி கூட்டிட்டு போக முடியும். அவங்க என்ன சின்ன குழந்தையா?. என்ன நினைச்சிட்டு இருக்க நீ?..” என உதயா எகிறினான்.

“எப்படின்னு என் கிட்ட கேட்டா? அப்பறம் நீ எதுக்கு இருக்க?… நீதான் திட்டம் போட்டு காய் நகர்த்தறதுல கெட்டிக்காரன் ஆச்சே? அதனால நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நாம எல்லோருமே போகனும். எல்லோரும்னா எல்லோரும் தான். உன் பாசமலரை தண்ணீர் டேங்கை தூக்கிட்டு அங்க வரசொல்லி நல்லா தண்ணி ஊத்தி செடியை வளர்த்துக்கோங்க. இது உன் பாடு. புரிஞ்சதா?…” என ஆணையிட்டு விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அதன் பின்னால் என்ன செய்வது என யோசிக்க யோசிக்க எதுவுமே பிடிபடாமல் உதயாவின் பாடுதான் திண்டாட்டமாக போய்விட்டது.

வெகுநேரம் கழித்து ஒருவழியாக மூளையில் பளிச்சிட்ட யோசனையை செயல்படுத்தலாமென நினைத்து அனைவரையும் கூட்டி பேச ஆரம்பிக்க முதல் பாலிலேயே நாச்சியால் அவுட்டாக்கப்பட்டு உதயாவின் திட்டத்திற்கு தடை சொல்லப்பட்டது.

நந்தினியின் முறைப்பை பார்த்து அஞ்சியவன், “இங்க பாரு கிழவி, எனக்கு நம்ம நந்துவோட குலதெய்வம் கோவிலை பார்க்கனும்னு தோணுது. இதுல என்ன தப்பு?…” என நாச்சியிடம் மல்லுக்கு நின்றான்.

அவனின் எகிறியதில், “நிறைமாசமா இருக்கிற பொண்ணை கூட்டிட்டு அலைக்கழிக்க பார்க்காத ராசா. இப்போ கோவிலுக்கு போனாலும் தேங்காய் உடைச்சு சாமி கும்பிடக்கூடாது. குழந்தை பிறக்கட்டும். அப்புறமா போய்க்கலாம்…” என தன்மையாக எடுத்துக்கூற அதை உதயா கேட்காமல் பிடிவாதம் பிடித்து கடைசியாக ஏழுமலையிடம் முறையிட அவருக்கு மருமகன் வாக்கே வேதவாக்கு ஆனது.

நேசமணி, கோசலை உட்பட ஏழுமலை குடும்பம், மூர்த்தி குடும்பம், விஷ்ணு குடும்பம், தனம் குடும்பம், சுதர்சனம் உட்பட ஒரு படையையே திரட்டிக்கொண்டு தன் மனைவியின் உத்தரவின் படி அனைவருமே அருவியூரின் திருவிழா அன்றைக்கு நந்தினியின் குலதெய்வம் கோவிலுக்கு சொகுசு பேருந்தை அமர்த்தி ஒன்றாக சென்றனர்.

அங்கே போய் வெறுமனே சாமியை மட்டும் தரிசித்துவிட்டு சற்று நேரம் அமர்ந்துவிட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்.கோவிலில் இருந்து கிளம்பும் முன் ட்ரைவரிடம் தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு திரும்ப,

“பிரபா நீ யோசிச்சுதான் செய்யறியா?… அவ தான் சின்னபொண்ணு. ஏதோ புரியாம சொல்றா. நீயும் அவ சொல்றதுக்கெல்லாம் ஆடுற?. இப்போவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நந்தினியை சமாளிச்சுக்கலாம். இப்படியே நம்ம ஊருக்கு வண்டியை திருப்பசொல்லு…” என விஷ்ணு கடிந்துகொள்ள அவனின் தோளில் கைபோட்ட பிரசாத்,

“டேய், நீ எதுக்குடா டென்ஷன் ஆகுற?… அவ ஒண்ணும் விளையாட்டுத்தனமா இந்த முடிவை எடுக்கலை. நல்லா யோசிச்சு தான் இவ்வளோ தூரம் எல்லோரையும் கொண்டு வந்திருக்கா. அங்க போனா விஷயம் என்னன்னு தெரிஞ்சிடுமே. இப்போ வரைக்கும் நிச்சயமா அவ மனசுல ஒரு அலைகழிப்பு ஓடிட்டு இருக்கத்தான் செய்யும். அங்க போவோம். நாம எல்லோருமே இருக்கோமே?. பார்த்துக்கலாம்…” என உதயாவிற்கும், விஷ்ணுவிற்கும் தைரியமூட்டினான்.

இவர்கள் மூவரும் பேசி கொண்டிருந்ததை ஒரு முறைப்போடு பார்த்தவள் உதயாவை நோக்கி கண்டனப்பார்வை ஒன்றை விடுத்தாள். அதில் சுதாரித்தவன்,

“டேய், அவ டென்ஷன் ஆகுறா. அங்க போய் பேசலாம் வாங்க…” என மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு நந்தினியை நோக்கி முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டிக்கொண்டே உதயா செல்ல இவனை பார்த்து தலையில் அடித்துகொண்டு,

“இவன் வேணும்னா இவன் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கட்டும். நம்மை எதுக்குடா கூட்டு சேர்க்கிறான்?…” என முணுமுணுத்துகொண்டே விஷ்ணுவும் பிரசாத்தும் பின் தொடர்ந்தனர்.

நந்தினியின் அருகில் அமர்ந்த உதயா, “அது ஒண்ணுமில்லை நந்து, சும்மா பிரசாத் சொன்னதை பத்தி பேசிட்டு இருந்தோம்…” என சமாளிக்க எண்ணி துணைக்கு பிரசாத்தை இழுக்க அதுவே நந்தினியிடம் வம்பிழுக்க வாய்ப்பாக போயிற்று பிரசாத்திற்கு.

தன்னை கேள்வியாக பார்த்தவளிடம், “நாம பேசின விஷயத்தை பத்தி நந்தினிக்கிட்டையும் சொல்லிடலாம் பிரபா. அப்போதானே அவளும் அவ சைட்ல இருந்து ஏதாவது ஹெல்ப் பண்ணுவா. அதனால என்னனு நீயே சொல்லு…” என உதயாவை மாட்டிவிட்டுவிட்டு விஷ்ணுவோடு ஹைபை அடித்துகொண்டான் பிரசாத்.

உதயாவிற்கு இப்போது விழிபிதுங்கியது. என்னவென்று சொல்லுவான்? பரிதாபமாக நந்தினியை பார்த்துவிட்டு பிரசாத்தை முறைத்தவன் தன்னை பார்த்து சத்தமாக சிரித்துகொண்டிருந்த விஷ்ணுவை பார்த்துக்கொண்டே,

“அதை நான் எப்படி சொல்ல? விஷ்ணுக்கிட்ட கேட்டுக்கோ. அவன்தான் முழுசா கேட்டான். நான் உன்னையே பார்த்துட்டே இருந்ததால சரியா கவனிக்கலை நந்துக்குட்டி…” என அழகாக விஷ்ணுவை மாட்டிவிட்டு தான் தப்பித்துக்கொண்டான். இவர்களின் விளையாட்டை பெரியவர்கள் அனைவருமே சுவாரசியமாக பார்த்தனர்.

“என்ன விஷயம்ங்க? எனக்கும் சொல்லுங்க. மாத்தி மாத்தி சஸ்பென்ஸ் வைக்காதீங்க…” என தனக்கே தெரியாத விஷயத்தை கொஞ்சலாக கேட்டு சொல்ல சொன்ன கௌரியை கொலைவெறியோடு பார்க்க கௌரியோ வெட்கத்தோடு தலை கவிழ்ந்தாள்.

“படுபாவி, நான் ரொமான்ஸா லுக் விடும்போதேல்லாம் வெட்டிவச்ச வெங்காயத்தை பார்க்கிறது போல பயந்து ஓடிடறது. இப்போ கோவமா பார்க்கறேன். இதுக்கு போய் இப்படி வெட்கப்படறாளே? விஷ்ணு, இப்படி பச்சை பிள்ளையா அப்பாவியா இருக்கியே? நீ இன்னும் வளரனும்டா…” என வானத்தை பார்த்து வராத கண்ணீரை துடைத்துகொண்டவனை பார்த்த கெளரி,

“என்னங்க கண்ணுல தூசி விழுந்திருச்சா?…” என கேட்கவும் அவளை முறைத்துக்கொண்டே, “சவுரீஈஈஈஈஈஈ…” என்று பல்லைக்கடித்தான்.

இவர்களின் அலம்பலில் சிரித்த பிரசாத், “விடுடா, விடுடா. கல்யாண வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்…” என அவனை சமாதானம் செய்துவிட்டு நந்தினியை பார்த்தவன்,

“ஏய் ரேடியோ, உனக்கு இப்போ விஷயம் என்னனு தெரியனும். அதானே நானே சொல்றேன். எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்துவைக்கிறதை பத்திதான் பேசினேன். அதுவும் முக்கியமா பொண்ணு உன்னை போல இல்லாம எங்கம்மா தனம், லக்ஷ்மிம்மா போல சாந்தமா இருக்கனும்னு சொன்னேன்…” என்றவன் உதயா, விஷ்ணுவை பார்த்து கண்ணடித்துவிட்டு,

“இவங்க ரெண்டுபேர்க்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சது ஏனா அனுபவப்பட்டவங்க பார்த்தாதானே நல்ல பொண்ணா அமையும். இவங்க படற கஷ்டம் எனக்கு வரவேண்டாம்னு பார்த்து பார்த்து செலெக்ட் பண்ணுவாங்கல்ல…” என நந்தினியை வம்பிழுக்க அதில் வெகுண்டவள் உதயாவை முறைத்துக்கொண்டே,

“உனக்கெல்லாம் என்னை போல பொண்ணு கசக்குதா? பார்த்துக்கிட்டே இரு. நிச்சயமா என்னை விட நூறுமடங்கு அதிகமா வாயடிக்கிறவ  தான் உனக்கு பொண்டாட்டியா கிடைப்பா. அவ கிட்ட ஒவ்வொரு நாளும் நீ எவ்வளோ பாடுபடப்போற பாரு. இது நிச்சயமா நடந்தே தீரும்…” என அவனுக்கு சாபம் குடுக்க அதை மகிழ்ச்சியோடு ஏற்றான்.

பிரசாத் விரும்பியதும் அதுவே. நந்தினி சொன்னால் நிச்சயம் நடக்கும் என நினைத்தான். அவளிடம் முன்பு சாபத்தை பெற்றவன் இப்போது அவள் வாயாலேயே வரத்தையும் பெற்றுவிட்டான்.

நந்தினியின் மீது தோன்றியது ஈர்ப்பாக இருந்தால் காலப்போக்கில் மறைந்துவிடும். அவனுக்கே தெரியும் இது காதலாக நிச்சயம் இருக்கமுடியாது. இருந்திருந்தால் உதயாவிடம் சேர்க்கவேண்டும் என எண்ணியிருக்கமாட்டான். அவர்களை பார்த்து பொறாமை கொள்ளாமல் அவர்களின் அன்னியோனியத்தில் சந்தோஷம் கொண்டான்.

பிரசாத்திற்கு அவளை பிடித்திருந்தது. தன் துணைவியாக வந்திருந்தால் நன்றாக இருக்குமென்று மட்டுமே எண்ணினான். அந்த நினைப்பு அவனுக்கு பெரும் வலியை தராமல் மெல்லிய ஏமாற்றத்தை மட்டுமே தந்திருந்தது. அதையும் நந்தினி போன்ற ஒரு குணாதிசயம் கொண்ட பெண்ணை மணப்பதால் நிச்சயம் அந்த ஏமாற்றம் மறைந்துவிடும் என நம்பினான்.

பிரசாத் தன் தனி உலகத்தில் சுற்றிகொண்டிருக்க அனைவரும் கிளம்பி பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். இவனும் சேர்ந்து கிளம்ப இம்முறை உதயா ஏழுமலையின் அருகில் அமர்ந்துகொண்டு அவரை திசைதிருப்பும் விதமாக பேச்சுகொடுத்துகொண்டே வந்தான். அவரும் போகும் பாதையையும், வழியையும் காணாமல் உதயாவின் பேச்சிலேயே மூழ்கிவிட்டார்.

விஜி செல்லும் வழியை சுட்டிக்காட்டியதில் கவனித்த நேசமணியும், கோசலையும் திடுக்கிட்டு பதற உதயாவை காட்டி அவர்களை விஷ்ணுவும் பிரசாத்தும் அடக்கிவிட்டனர்.

“ஏழுமலைக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ? இப்போதானே இறங்கி வந்திருக்கிறார்…” என எண்ணி சந்திராவிற்கும், பூரணிக்கும் பயத்தில் வியர்த்து ஊற்றியது.

அருவியூருக்குள் நுழையும் தருவாயில் தான் ஏழுமலை ஜன்னலின் வழியாக கவனிக்க அந்த இடம் முதலில் கண்களில் விழுந்தாலும் கருத்தில் தாமதமாக தான் பதிய அவர் மனம் திடுக்கிட்டது.

முகம் இறுக உதயாவிடம் மறுத்து கூற முயல அவனது கைகள் கொடுத்த அழுத்தத்தில் அப்படியே கண்மூடி சாய்ந்து அமர்ந்துவிட்டார். “தன் மகளுக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ? என்னவெல்லாம் வேதனை கொள்வாளோ?…” என தவித்தபடி இருக்க, அவர் உடலில் தெரிந்த மாற்றத்திலேயே இப்போது ஏழுமலையின் நெஞ்சம் என்ன பாடுபடும் என உதயா உணர்ந்தான்.

கோவிலை நெருங்கி பஸ்ஸை ஓரமாக நிழலை பார்த்து நிறுத்தவும் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள். பிரசாத், உதயா, நந்தினி, விஷ்ணு, ஏழுமலை குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு இங்கே நடந்த சம்பவம் தெரியாததால் புது இடத்தை பார்க்கும் உற்சாகத்தோடே இருந்தனர். அதிலும் நாச்சியை கேட்கவே வேண்டாம்.

பழைய கூலிங்கிளாஸ் ஒன்றை போட்டுக்கொண்டு தட்டுத்தடுமாறி விஜியின் கையை பிடித்துக்கொண்டே தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அங்கிருந்தவர்களிடம் தப்பு தப்பாக பேசி அலப்பரையை கூட்ட ஆரம்பித்தார்.

கணேஷ், சிவா இருவரும் தங்களை நெருங்கி வருவதை பார்த்த விஷ்ணு, “இந்தால உன் லவ்வர் வந்துட்டான். உன்னை இத்தனை வருஷமா பார்க்காதது போல என்னமா ஏக்கத்தோட பார்க்கிறான் பாரேன். கட்டுன பொண்டாட்டி தோத்தா…” என சிவாவை கலாய்க்க சிவா வெட்கத்தில் நெளிந்தான்.

இருவரையும் அறிமுகப்படுத்திய உதயா அனைவரையும் கோவிலை நோக்கி அழைத்துச்சென்றான். ஏழுமலை தன் முகமாற்றத்தை சம்பந்தி வீட்டாரிடம் காட்டாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டார்.

ஆனால் நந்தினியோ முகத்தில் மிளிர்ந்த கர்வத்தோடு உதயாவின் கரத்தோடு தன் கரத்தை கோர்த்தவள் அவனோடு ஜோடியாக தலைநிமிர்ந்து முன்னால் சென்றாள். அதை பார்த்த ஏழுமலை இத்தனை நாள் இல்லாத ஒரு ஜொலிப்பு தன் மகளின் முகத்தில் மின்னுவதை பார்த்து தன் தயக்கங்களை தகர்த்தெறிந்தார்.

நந்தினி தான் இங்கே வர முழுக்காரணமாக இருக்கும் என்று அவருக்கு புரிந்தது. அவளது இந்த பிம்பத்தை பார்க்கத்தானே ஆசைப்பட்டார். அனைவரையும் அழைத்துக்கொண்டு தானும் மூர்த்தியோடு பேசியபடி சென்றார்.

கணேஷிடம் பிரசாத்தின் மாற்றத்தை பற்றி முன்பே போனில் சொல்லியிருந்ததால் பிரசாத்திடம் கணேஷ் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தான். சிவா பிரசாத் பக்கம் திரும்பக்கூட இல்லை.

முன்பே ஊர்த்தலைவரிடம் கணேஷ் சொல்லியிருந்ததால் கோவில் வாசலிலேயே அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உதயாவின் பெற்றோரும், நாச்சியும் பழைய விஷயங்களை கிளற விரும்பாமல் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

“ராசா, என்னமோ தெரியுது, ஆனா தெளிவா தெரியலையே?…” என அண்ணாந்து பார்த்துக்கொண்டே கண்ணாடியை கழட்டாமல் உதயா என நினைத்துக்கொண்டு பிரசாத்திடம் கேட்க,

“கிழவி, யார் பக்கத்துல நிக்கிறாங்கன்னு கூட கண்ணுக்கு தெரியலை உனக்கு. இந்த அலம்பல் தேவையா? முதல்ல இந்த கண்ணாடியை கழட்டித்தொலை. பார்க்க பயங்கரமா இருக்க…” என கிண்டலடிக்க,

“உனக்கு பொறாமைடா பேராண்டி. பாட்டி இப்போவும் பியூட்டியா இருக்கேன்னு…” என அவனின் பேச்சை ப்பூவென ஊதித்தள்ளிவிட்டு அசால்ட்டாக விஜியோடு ஜோடியாக நடந்தார். அவரின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து சிரித்துக்கொண்டே அனைவரும் அம்மன்  சிலையின் அருகே சென்றனர். அந்த ஊர்மக்கள் பிரசாத்தை மறந்துவிட்டனரோ என்னவோ அவனை கண்டுகொள்ளவே இல்லை. நந்தினி, உதயாவை கூட ஒன்றிரண்டு பேருக்கு தான் அடையாளம் தெரிந்தது. ஆனால் பிரசாத் பழைய ஞாபகங்களால் மனதை அழுத்தும் பாரத்தோடு இருந்தான்.

நந்தினியின் கண்கள் கூட்டத்தில் துழாவ அவளின் நீண்ட நேர தேடலுக்கு பலன் கிட்டியது. அவள் தேடியவரை பார்த்தவள் நொடியில் உதயாவை இழுத்துக்கொண்டு அவரை நோக்கி சென்றாள்.

அங்கே பிரகாரத்தில் ஒரு ஓரத்தில் சேரில் தொய்வாக அமர்ந்திருந்தவரை பார்த்து, “தாத்தா, என்னை தெரியுதா?…” என அவரை பார்த்து கேட்க, அவரோ இருவரையும் புரியாமல் பார்த்தார்.

அவரை அடையாளம் கண்டுகொண்ட உதயா சுதாரித்துகொண்டு நந்தினி எதுவும் பேசும் முன் இங்கிருந்து அவளை நகர்த்த நினைத்து, “என்ன நந்து இது? வா போகலாம். இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தியா?…” என கடிந்துகொள்ள,

“நீங்க பேசாம இருங்க…” என அவரை அடக்கிவிட்டு அந்த பெரியவரிடம் திரும்பி, “ஏன் தாத்தா?… என்னை இன்னுமா அடையாளம் தெரியலை?…” என கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்க அவருக்கு எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று மட்டும் தான் தோன்றியது. அதை அவளிடத்தில் கூற நந்தினி கொதித்துவிட்டாள்.

“அவ்வளோ சீக்கிரம் என்னை மறந்திட்டீங்களா? ஆனா நான் உங்களை மறக்கலை. இந்த ஊரையும் மறக்கலை. என்னை கண்ணீர் விட வச்சு அவமானப்படுத்தி வேதனையோட வழியனுப்பி வச்ச இந்த ஊரை எப்படி மறப்பேன்? ஆனா நீங்க மறந்துட்டீங்களே. என்னோட விஷயத்துல உங்களோட தவறான கணிப்பால நீங்க இந்த ஊர்த்தலைவர் பதவியை இழந்ததை மறந்துட்டீங்களே?…” என எள்ளலாக பேசியதும் தான் அவருக்கு யாரென புரிந்தது.

இருவரையும் ஜோடியாக பார்த்தவர் அடையாளம் கண்டுகொண்டு, “அம்மாடி, தாயி!! நீயா ஆத்தா. உன்னை இன்னொருக்க பார்க்கமாட்டோமான்னு தவிச்சிட்டே இருந்தேன் ஆத்தா. நீயே என்னை தேடி வந்துட்ட. என்னை மன்னிச்சிடும்மா. உனக்கு பண்ணின பாவத்துக்கு நிறைய பட்டுட்டேன். மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடும்மா…” என கைக்கூப்பி கேட்டவரை பார்த்தவளின் மனம் இரங்கவே இல்லை.

கற்சிலைபோல அவரையே வெறித்துக்கொண்டு நின்றிருந்தவளை பிடித்து உலுக்கிய உதயா, “நந்து, இவரை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு? மன்னிச்சிட்டேன்னு சொல்லிட்டு வா. போகலாம்…”

“நான் எதுக்காக மன்னிக்கணும்? உப்பை தின்னவங்க தண்ணியை குடிக்கிறாங்க…” என சாராதணமாக கூற,

“மன்னிப்பை குடுக்கிறவங்களை பெரியமனுஷங்களாகவும், கடவுளுக்கு சமமாகவும் சொல்லுவாங்க. அப்படி நினைச்சுக்கோயேன்…” என உதயா சமாதானப்படுத்த முயல,

“இவரை மன்னிச்சு எனக்கு கடவுள் ஸ்தானம் வேணும்னு நான் கேட்டேனா? அவசியமே இல்லை. நான் சாதாரண மனுஷியாவே இருந்துக்கறேன். அதைத்தான் விரும்பறேன். இவர் செஞ்ச பாவத்துக்கு இப்போ அனுபவிக்கிறார். இதைப்போல எத்தனை பண்ணினாரோ? எனக்கு தெரியாது. ஆனா இதுக்காகவாவது தண்டனை கிடச்சதே?…”

“தப்பு செய்தவங்க எல்லோரையும் மன்னிச்சு விடறதாலதான் திரும்பவும் அதையே செய்யறாங்க. மன்னிக்கனும்னா அந்த கடவுளே மன்னிக்கட்டும், அவர் மன்னிச்சிருந்தா இவர் இப்போ நல்லா இருந்திருந்தா என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாரே? செஞ்ச தப்பை நினச்சு வருந்தியிருக்க மாட்டாரே…”

“இதுவே இந்த கவலையே, இந்த குற்ற உணர்வே இவரை அடுத்த முறை அவசரப்பட்டு எதையும் செய்துவிடாமல் தவறு நடக்கும் முன்னால யோசிக்க வைக்கும். இந்த வருத்தம் உறுத்திட்டே இருந்து இனி செய்யபோகும் செயல்களுக்கு ஆயிரம் முறை சரியா தவறான்னு தீர ஆராய்ந்து பார்க்க சொல்லும். இப்போ நான் வந்த வேலை முடிஞ்சது. சாமி கும்பிட்டுட்டு கிளம்பலாம்…” என சொல்லிய அந்த நந்தினியை உதயாவிற்கு பார்க்க பிரமிப்பாக இருந்தது. அவளை பார்த்து பெருமை கொள்ளாமலும் இருக்கமுடியவில்லை.

“ஆத்தா, நீ சொல்றது புரியுதும்மா. இப்போலாம் ரொம்ப யோசிச்சுதான் எதையுமே செய்யறேன். இனியும் அப்படித்தான் செய்வேன். ஆனா…” என பேசியவரிடம்,

“நாங்க கிளம்பறோம் தாத்தா. முடிஞ்சா எனக்கு குழந்தை பிறக்கவும் இன்னொரு முறை வரமுடியுமான்னு பார்க்கறேன். அப்போவும் என் மனநிலை இப்படியே இருக்குமா, இல்லை மாறியிருக்குமான்னு தெரியலை. பார்க்கலாம்…” என சொல்லிவிட்டு உதயாவை அழைத்துக்கொண்டு தன் குடும்பத்தினரோடு கலந்துகொண்டாள்.

உச்சிக்கால் பூஜை ஆரம்பிக்க சண்டமேளம் முழங்க அனைவரும் அம்மனின் திருவுருவை தரிசித்து கொண்டிருக்க கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன் சாமி கும்பிட்டு கொண்டிருந்த நந்தினியை தன் புறம் திருப்பி நிறுத்தி தன் பாக்கெட்டில் வைத்திருந்த செயினை எடுத்தான்.

மேளச்சத்தம் காதை கிழிக்க இதே ஊரில், இந்த அம்மனின் திருவிழா அன்று முதல் முதலில் நந்தியின் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தை சூட்டிய அதே நேரத்தில் இன்று தன் விழிகளில் நிரம்பி வழியும் அளப்பறியா காதலோடு அவளின் கழுத்தில் அணிவித்தான். அதில் கோர்க்கபட்டிருந்த குட்டி டாலரில் இருவரது பெயரும் அழகான வேலைபாடால் பொறிக்கப்பட்டு இருந்தது.

விழிகளில் ஆச்சர்யத்தை தேக்கியபடி உதயாவை காதலோடு பார்த்த நந்தினிக்கு சந்தோஷம் அலைமோதியது. தங்கள் மீது விழுந்த பூமாரியில் தன்னை மீட்டவள் சுற்றிலும் பார்க்க விஜி, பிரசாத், விஷ்ணு இவர்களின் ஏற்பாட்டில் தன் குடும்பத்தினரும் அந்த ஊர்ஜனங்களும் பூக்களை தூவி இருவரையும் ஆசிர்வதித்தனர்.

தன் பிள்ளைகளின் திருமணத்தை நிறைவோடு காணமுடியாத பெற்றோர்கள் இந்த அற்புதமான நிகழ்வை கண்களின் வழியாக இதயத்திற்குள் இதமாக நிரப்பிக்கொண்டனர்.

“இப்போ உன் மனசுல இருந்த கொஞ்ச நஞ்ச சஞ்சலமும் காணாம போயிடுச்சா நந்து?…” என்றவனை விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு நந்தினியின் தலையில் மெல்ல முட்டி அவள் முகத்தை கையிலேந்தியவன், “கோவமாகட்டும், சந்தோஷமாகட்டும் எல்லாத்திலையுமே உன்னோட மின்னும் நட்சத்திர விழிகளில் தான் என் வாழ்க்கையின் வானவில்லை பார்க்கிறேன் நந்துக்குட்டி. நம்மோட குழந்தையும் உன்னை போலவே இருக்கனும்னு ஆசைப்படறேன்…” என நெற்றியில் இதழ் பதித்தவன்,

“பொண்டாட்டி, மாமா பெர்ஃபாமென்ஸ் எப்படி?…” என கண்ணடித்து கேட்க, “சூப்பர் மாமா…” என்று சொல்லி வெட்கத்தில் அவனிடமே சரணடைந்தாள் நந்தினி.

நிறைமாத நிலாவான நட்சத்திர விழியவளை தன் காதலால் வசப்படுத்தியவன் தங்களின் வாழ்நாள் முழுவதும் வானவில்லின் வர்ணங்களால் ஜொலிக்க செய்து அவளுடன் சேர்ந்து என்றென்றும் இதே காதல் குறையாமல் நிரம்பி பெருக்க இருவரும் வாழ்வாங்கு வாழ்வார்கள் என வாழ்த்தி விடைபெறுவோம்.

நட்சத்திரம் ஜொலித்தது

Advertisement