Advertisement

நிலவு – 3 (1)

      எத்தனை முயன்றும் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. ஹேண்ட்பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரை அருந்தியவள் ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன் முகத்தையும் அலம்பிக்கொண்டாள்.

“ஸ்ட்ராங் வெண்மதி. இதுக்கெல்லாம் அசந்துட்டா அடுத்து வரதையெல்லாம் என்னன்னு சமாளிப்ப? சியரப் கேர்ள்…”

தன்னை தானே தைரியம் செய்துகொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய அவளை மறித்ததை போல ஒரு கார் வந்து நின்றது.

“எவன்டா அவன்?…” என பார்க்க, இறங்கியவனை கண்டு உயிர் உறைந்து நின்றாள் வெண்மதி.

யாரின் நினைவுகளில் உருகி கரைந்து தன்னை மெழுகாய் கரைத்துக்கொண்டிருக்கிறாளோ அவனே இன்று இந்த நிமிடம் இந்த நொடி அவளின் கண் முன். அவன் முரளிதரன்.

அவள் உயிரில் விதையென விழுந்த அவன் மீதான காதல் விருச்சமென வளர அதை அப்படியே விட்டுவிடவும் முடியாமல் வெட்டிவிடவும் முடியாமல் இன்றுவரை தவித்து எதுவானாலும் அவன் நினைவு ஒன்றே வாழ்வின் ஆதாரம் என வாழ்ந்திருப்பவள்.

இமைக்கவும் மறந்து அவனின் உருவத்தை அருபமாய் உள்ளத்தில் ஏற்றிகொண்டிருந்தாள். ஆனாலும் அவளின் கள்வன் அதையும் கண்டுகொண்டானே.

எப்பொழுதும் அணிவதை போல பார்மலில் நின்றிருந்தவனின் தோற்றம் இப்பொழுதும் வெண்மதியின் மதியை மயக்கத்தான் செய்தது. ரசித்தது. அதையும் முறைத்துக்கொண்டே ரசித்தாள்.

ஒரு நிமிடம் தான் அவளின் அதிர்வு. தன்னை புன்னகையுடன் அவன் பார்த்திருக்க தன்னை மீட்டுக்கொண்டவள்,

“இவன் ஒருத்தன், சரியான சிரிச்ச வாயன். எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டு. ஆனா பல்லும் தெரியாது, ஒன்னும் தெரியாது…” அவனை அலுப்புடன் சாடினாலும்,

“போதும் வெண்மதி சைட்டடிச்சுது. இன்னும் ரெண்டு வருஷம் தாங்கும் இவன் சிரிச்ச முகமே. கிளம்பு கிளம்பு” என விரட்டினாள் தன்னையே.

அவளுக்குள் கட்டளைகள் பிறப்பித்தவண்ணம் வண்டியை கிளப்பி அவனை தாண்டி செல்ல காரின் மேல் சாய்ந்து நின்றவன் இப்பொழுது அவளின் ஸ்கூட்டியை மறைத்து அதன் மேல் கையை வைத்து குறுக்கே நின்றான்.

இப்பொழுது உண்மையிலேயே நடுக்கம் தான் அவளுக்கு. இப்படி வந்து திடீரென குதிப்பான் என கனவிலுமா கண்டாள்? ஆனாலும் இதோ வந்துவிட்டானே?

“கிளம்பு வெண்மதி, இவன்ட்ட பேசாத…” மனனம் செய்தவள் அவன் முகம் பார்க்காமல் ஸ்கூட்டியை உறும விட வண்டியை ஆஃப் செய்து சாவியை உருவிக்கொண்டான்.

“அப்பறம், சொல்லுங்க வெண்ணிலா, ஹவ் ஆர் யூ?…” எடுத்துக்கொண்ட சாவியை மேலும் கீழும் தூக்கி போட்டபடி இப்பொழுது காரில் சாவகாசமாய் சாய்ந்து நின்றான்.

அதே வசியகுரல். அவனை காதலனாய், உயிராய், மொத்த வாழ்க்கையாய், தனக்கே தனக்கென உள்ள குட்டி உலகமாய் அவனை ஸ்வீகரிக்க செய்த அதே மாயக்குரல்.

நனவுலகில் இருந்து கனவுலகிற்கு அவளை நழுவச்செய்யும் பேச்சு, வாரி சுருட்டிக்கொள்ளும் பார்வை என மொத்தமாய் அவளை நிலைகுலையச்செய்தான்.

“டேஞ்சர் ஃபெல்லோ…” அவளின் உதடுகள் முணுமுணுத்தது அவனை முறைத்து பார்த்து.

“கேட்டதுக்கு பதிலே சொல்லாம இப்படியே என்னை வச்ச கண் வாங்காம பார்த்தா என்ன அர்த்தம்?…” அவள் முகத்தின் முன் கையை ஆட்டி கேட்க,

“ப்ச், கால் மீ வெண்மதி…” சலிப்பாய் வேறுபுறம் பார்த்து சொல்ல,

“ஏனோ எனக்கு அப்படி கூப்பிடவே வரலை. சட்டுன்னு இந்த நேம் தான் ஞாபகம் வருது. உங்க நேம் கூட இதே மீனிங் தானே? என்ன ப்ராப்ளம்? அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…”

அன்றைக்கு சொன்ன அதே விளக்கம். கொஞ்சமும் தன் சுட்டிக்காட்டலை ஒத்துக்கொள்ளாத ,அதன் பின் அதை மாற்றிக்கொள்ளாத அவனின் தன்மை.

சரித்திரம் திரும்புகிறதோ? என்பதை போல இடையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கனவாய் கரைந்து அவனை பார்த்த நாளில் சென்று கடிகாரமும் காலமும் நின்றுவிடாதா? அனைத்தும் மாறிவிடாதா? என்ற ஏக்கம் நெஞ்சை துளைத்தது.

வெறித்த பார்வையோடு அவனை பார்த்து நின்றாள் வெண்மதி.

ஆனாலும் ஒரு நொடி வந்துபோன ஏக்கமும் அதனால் உண்டான சலனமும் முரளியின் கண்களுக்குள் தப்பாமல் ஓடி சென்று ஒட்டிக்கொண்டது. புன்னகையோடு அதை தனக்குள் மறைத்துக்கொண்டான்.

“இப்ப எதுக்காக வந்திருக்கீங்க?…” முகத்திலடித்ததை போல பேச,

“எதுக்கு இத்தனை கோவம்? நான் ஒன்னும் உங்களை அவாய்ட் செய்யலை. யோசிச்சு பாருங்க. நீங்கதான் என்னை வேண்டாம்னு சொன்னீங்க. என்னமோ உங்களை நம்பவச்சு ஏமாத்திட்டத போல பேசறீங்க…”

அவனின் குற்றம் சாட்டலில் தனக்கு தானே பூசிக்கொண்ட சாயம் வெளுத்துவிடுமோ என உள்ளுக்குள் பயந்தாள்.

“அப்படி ஏமாத்தியிருந்தா கூட கோவத்துல உன்னை வெறுத்திருப்பேன். உன் நியாபகமே இருந்திருக்காது. ஆனா நானே உன்னை வலிக்க வலிக்க விலக்கி வச்சு உன் நினைப்பிலிருந்து விலகமுடியாம தத்தளிச்சுட்டிருக்கேன். இப்ப வந்து நியாயம் கேட்கிறான் பார்” கடுப்பாக நினைத்துக்கொண்டாள்.

“டீசன்டா மியூச்சுவலா பிரிஞ்சாச்சு. ஜஸ்ட் ஒரு ப்ரெண்டா பேசலாமே…” திடுக்கிட்டு அவனை பார்க்க,

“உடனே திரும்ப முறைக்காதீங்க. மியூச்சுவல்னா நீங்க ஏன் எக்ஸ்ட்ரீம் திங்கிங் போறீங்க? நீங்க சொன்னதை கேட்டு நானும் உங்களை விட்டு பிரச்சனை பண்ணாம விலகினேன்ல அதை சொன்னேன். ஹப்பா ஒரு செண்டன்ஸ் முடிக்க முடியலை. அதுக்குள்ளே ஏகப்பட்ட ரியாக்ஷன்ஸ்…”

அலுத்துக்கொண்டவனை எரிச்சலுடன் பார்த்தாள் வெண்மதி. அவளின் எரிச்சலை கண்டுகொள்ளாமல் அவன் பேசினான்.

“இவன் பிரச்சனை பண்ணலையாமே? இவனை விலக்கி வைக்க நான்ல தலையால தண்ணி குடிக்க வேண்டியதானது” அந்நாளின் ஞாபகம் அவளை வெதும்பத்தான் செய்தது.

“இதை சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?…” அங்கிருந்து கிளம்பிவிடும் வேகம் அவளுள்.

“வேற என்னன்னு எதிர்பார்த்தீங்க?…” குறும்பாய் புன்னகைத்து கேட்க,

“ஒன்னும் நினைக்கலை. என்னோட கீயை குடுங்க. நான் வீட்டுக்கு போகனும். இப்பவே லேட் ஆகிடுச்சு. இருட்டிடும்…” பிடிவாதமாய் கேட்க,

“அந்தளவுக்கு உங்களை சேப் இல்லாத இடத்துல நான் நிறுத்தி வைக்கலை. பேசிட்டு அப்படியே ரோட்ல விட்டுட்டு போகவும் மாட்டேன்…”

அமர்த்தலாய் பேசியவனை பளார் பளார் என அறைந்தால் என்னவெனும் வேகம் வெறியாய் பிறந்தது வெண்மதிக்கு.

“குத்திக்காட்டி சாகடிக்கிறானே?” நொந்துகொண்டாள். ஆனால் அடுத்து சொன்னது அவளை உண்மையில் சாகடிக்கத்தான் செய்தது.

“இன்விடேஷன் குடுக்கலாம்னு தான் உங்களை நிறுத்தினேன்…” என்ற முரளியை சரேலென ஏறிட்டாள்.

கோபம், ஆத்திரம், ஏமாற்றம், கலக்கம், துக்கம், இயலாமை என ஒட்டுமொத்த உணர்வுகளும் ஒரே நேரத்தில் அவளிடம் பாய்ந்து தாக்க மொத்தமாய் சரிந்து சாய்ந்தாள்.

“இன்விடேஷன்…”

வெண்மதியின் உதடுகள் மெல்லிய குரலில் சப்தம் எழுப்ப அவளின் உணர்வுகளை சிந்தாமல் சிதறாமல் அவதானித்து தனக்குள் சேர்த்தான் முரளி.

அவனின் மனதுக்குள் பேரலை ஒன்று எழும்பி அவளின் உணர்வு போராட்டத்தை முடித்துவைக்க நினைக்க அந்த ஆர்ப்பரிப்பு எதுவும் முகத்தில் வந்துவிடாமல் கவனமாக தன்னுடைய உணர்வுகளை மறைத்து வைத்தான்.

“நோ முரளி. கொஞ்சமும் கருணை காட்டாத. மேடம் இந்த ஒரு வருஷமா தவிக்கவிட்டதுக்கு கொஞ்சமாச்சும் அனுபவிக்கட்டும். மூச்…” நிதானமாக நின்றான்.

“எஸ் இன்விடேஷன் தான்.  நீங்க இன்விடேஷன் குடுப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா நான் தான் முதல்ல குடுக்கனும்னு இருக்கு…” பூடகமாக பேசியவனில் தன்னை மீட்டவள்,

“சோ வாட்? யார் முதல்ல குடுத்தா இப்போ என்ன? நோ ப்ராப்ளம்…”மிக தெளிவாய் வெண்மதி பேச,

“இவ இருக்காளே?” பல்லை கடித்தான் இதழ்களுக்குள்.

“வழியில பார்த்ததுக்கெல்லாம் குடுக்கனும்னு இல்லை. இருந்தாலும் வந்துட்டீங்க. குடுங்க. கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு வந்திடுவேன்னு ஹோப் குடுக்க முடியாது. எனக்கு அப்போ என்ன சுட்சுவேஷன் அப்டின்னு பார்க்கனும். யோசிக்கனும்…” அவளின் பதிலில் இதழ் விரிய சிரித்தவன்,

“ஆஹாங், அப்டியா சொல்றீங்க? ஓகே பார்க்கலாம்….” நக்கலாய் சொல்ல வெண்மதிக்கு தான் கோபம் எல்லை மீற தருணம் பார்த்தது.

“ஓகே அதை விடுங்க, என்னாச்சு உங்க லவ் மேட்டர்? எப்பவோ வீட்ல பேசி சம்மதம் வாங்கறதா சொன்னீங்க? இன்னும் உங்க லவ்வர் பாய் அவர் கடமையை முடிக்கலையா?…” என்ன முயன்றும் சிறு கேலி அவனின் முகத்தில் வந்துவிட்டது.

தன்னுடைய விஷயம் பற்றி பேசியதை கேட்டு முதலில் படபடத்தவள் அடுத்த கேள்வியில் தொனித்த கேலியில் சுறுசுறுவென கோபம் பொங்க,

“என் விஷயம் உங்களுக்கு தேவை இல்லாதது. இன்விடேஷன் குடுத்துட்டு கிளம்புங்க. என் சாவியையும் குடுத்துட்டு…” பட்டுக்கத்தரித்தார் போல அவள் பேச,

“அதெப்படி விடமுடியும்? இதை சொல்லித்தானே என்னை வேண்டாம்னு சொன்னீங்க, நான் கேட்காம இருக்கமுடியுமா? அதுக்கான உரிமை எனக்கு உண்டு…” விட்டேனா பார் என்று நிற்க, வெண்மதிக்கு கண்களை கட்டிக்கொண்டு வந்தது.

“உங்க மேரேஜ் எங்க வச்சு? பொண்ணு இங்க சென்னை தானா? இல்லை வெளியூரா?…” அவள் பேச்சை மாற்றுவது புரிய இன்னும் அவளை சீண்டிபார்க்க தோன்றியது முரளிக்கு.

“ஹ்ம்ம் சென்னை தான். ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம விஷயம் கூட சொல்லிருக்கேன் அவங்கட்ட. எங்களுக்கு பிறக்கபோற குழந்தைக்கு கூட உங்க பேரைத்தான் வைக்கனும்னு அவங்க ஆசைப்படறாங்க. எனக்குமே ஆசை தான்…”

கோபத்தில் கொதிப்பாள், சண்டையிடுவாள் என எதிர்பார்த்திருந்தவனுக்கு அவளின் விழிகளில் பரவிய வலியில் இவனின் இதயம் நின்று துடித்தது. அது கனவோ என்பதை போல இயல்பானவள்,

“தாராளமா வச்சுக்கோங்க, ஊருக்குள்ள வெண்மதின்னு எனக்கு மட்டும் தான் பேர் இருக்கா? போவீங்களா?…”

அவனுக்கு சளைக்காமல் பதிலளித்தாலும் அவன் கூறியது உள்ளுக்குள் அடக்கப்பட்ட உணர்வுகளை பந்தாடிக்கொண்டிருந்தது.

என்றோ இப்படி ஒரு நாள் வந்தே தீரும் என்று எதிர்பார்த்தது தானே. அது இன்றாகிவிட்டது. ஓடி ஒழிய முடியாது தானே. உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது தனக்கு தானே விதித்துக்கொண்டது என நினைத்து இறுகி நின்றாள்.

“ஹ்ம்ம் ஸ்மார்ட்…”

“அது ஊருக்கே தெரிஞ்ச விஷயம் தான். நீங்க சர்டிபிகேட் குடுக்க வேண்டாம். என் கீயை குடுங்க நான் கிளம்பனும்…” கை நீட்டி அவள் கேட்க பின்னே நகர்ந்தவன் காரில் இருந்து ஒரு கவரை எடுத்தான்.

“கவர் ரொம்ப பெருசா இருக்கே? ஒருவேளை புக்லெட் மாதிரி போட்ருப்பானோ?…”

நினைத்துக்கொண்டாலும் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டால் அதிலிருந்து மீண்டும் பேச்சை வளர்ப்பான் என்று தன் வாயை அடக்கிக்கொண்டாள்.

Advertisement