Advertisement

நிலவு – 1(2)

உண்மை தான். வெண்மதியும் ஈஸ்வரியும் பள்ளி கல்லூரி தோழிகள் மற்றுமல்லாது ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் கூட.

வெண்மதியின் இரண்டாம் வயதில் ஈஸ்வரி குடும்பம் குடியிருக்கும் அந்த வீதிக்கு குடிவந்தனர். அவர்கள் வீட்டிற்கு இரு வீடுகள் தள்ளி  ஈஸ்வரியின் வீடு.

அருகருகே வசிப்பதால் பரஸ்பரம் பழக்கமாகி நல்லகுடும்ப நண்பர்களாக இருந்தனர். சிறுவயது முதலே ஈஸ்வரி கலைவாணியின் பெயரை கலவாணி என்றே இயம்ப முதலில் கண்டுகொள்ளாத கலைவாணி அதன்பின் பெரிதாய் அதட்ட தொடங்கினார்.

அதன் பின் எங்கு கண்டாலும் முறைக்கவும் ஈஸ்வரியோ பயத்தில் ஐயோ கலவாணி, கலவாணி என கதறிக்கொண்டு அவளின் தாயிடம் தஞ்சம் புக இரு குடும்பங்களுக்குமிடையே சிறு சிறு பூசல்கள் சங்கடங்கள் என தொடங்கி ஒருகட்டத்தில் ஈஸ்வரி வேண்டுமென்றே கோபத்தில் கலவாணி என அழைத்துவிட பெரும் சண்டையாகிவிட்டது.

ஆனாலும் நடேசனுக்கும் ஈஸ்வரியின் தந்தை சுப்ரமணியத்துக்கும் இடையில் எந்தவித வருத்தமும் இல்லாத நட்பு இருந்தது.

பெண்களின் சண்டை அவர்களுக்குள். அது தங்களை பாதிக்காத வண்ணம் தங்களின் நட்பை தொடர்ந்தனர். அது வெண்மதி, ஈஸ்வரியின் தோழமையை வலுப்படுத்தியது.

அதுதான் இன்றளவும் தொடர்கிறது. கலைவாணிக்கும் ஈஸ்வரியின் தாய் சம்பூரணத்திற்கும் ஈஸ்வரியை முன்னிட்டே சுத்தமாய் ஆகாமல் போனது. ஆனாலும் அவர்களின் கணவன்மார்களுக்காக பார்க்கும் இடத்தில் தலையசைத்துக்கொள்வர்.

ஏனோ மருமகள் மீது மாமியார் கொண்ட பகை போல ஈஸ்வரியை கண்டாலே ஆகாதெனும் கலைவாணியிடம் சுப்ரமணியத்திற்கு அடங்கி அமைதியாக சென்றுவிடுவார் சம்பூரணம்.

ஆனால் கலைவாணியோ ஈஸ்வரியை கண்ணால் காணவிடமாட்டார். சின்னஞ்சிறுபெண்ணை வெறுப்பாய் பார்த்து கரித்துக்கொட்டும் அவரை நடேசன் எத்தனை சொல்லியும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“என்ன ப்ளாஷ்பேக்கா?…” என்ற வெண்மதியை முறைத்துப்பார்த்த ஈஸ்வரி,

“உனக்கு என் நிலைமை கிண்டலா போச்சுல? உன் அம்மாவை ஒரு தடவையாச்சும் எதிர்த்து பேசறேனா இல்லையான்னு பாரு…” வழக்கம் போல சூளுரைத்துக்கொண்ட தோழியை வாஞ்சையுடன் கன்னம் தட்டினாள் வெண்மதி.

“அடடா, பேச்சு ட்ராக் மாறி எங்கையோ போகுது. சொல்லு. ஏன் அவங்க வரலை?…”

ஈஸ்வரியின் கேள்விக்கு மர்மமாய் புன்னகை புரிந்த வெண்மதியை கண்டு அடிவயிறு கலங்கித்தான் போனது ஈஸ்வரிக்கு.

அப்புன்னகையில் எதையோ சாதித்துவிட்ட வெற்றி மட்டுமில்லாமல் அதையும்  தாண்டிய ஒரு உணர்வு அவளின் கண்களில் அக்னி என கொழுந்துவிட்டு எரிந்தது. அது சொல்லிய செய்தி இன்னும் எதுவேண்டுமானாலும் செய்வேன் என்பதை போல.

“இது சரியில்லை மதி. நீ பன்றது ரொம்ப தப்பு. இப்போ உனக்கு சரியா இருக்கிறது, நாள் ஆக ஆக தவறா போய்டும். கோவில்ல வச்சு அச்சானியமா பேசக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனாலும் சொல்றேன். உன் அப்பாம்மா காலத்துக்கு பின்னால உனக்குன்னு ஒரு உறவு வேணும். குடும்பம் வேணும்…”

“கடைசிவரை யாராலும் தனியா வாழ முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில நமக்கே நமக்குன்னு அன்பா, பாசமா பார்த்துக்கறதுக்கு, நமக்கு ஆறுதல் சொல்றதுக்குன்னு யாராச்சும் வேணும். நம்மோட கஷ்டகாலத்துல தோள் சாய்ஞ்சு இளைப்பாற ஒரு இணை கண்டிப்பா வேணும்…”

“யாரை பழிவாங்க உன்னையே நீ அழிச்சுக்கற? இல்லை யாருக்காக நீ இப்படி செய்யற? நீ நினைக்கலாம் அவங்களுக்கு நீ குடுக்கற தண்டனைன்னு. ஆனா உண்மை என்னன்னா உன் வாழ்க்கைக்கு நீயே வச்சுக்கற நெருப்பு இது…”

தாளமாட்டாமல் வழக்கம் போல வெண்மதிக்கு அறிவுரையை அள்ளிவிட அதையெல்லாம் ஒரு பெருட்டாக எடுத்தாள் இல்லை. வெண்மதியின் காதில் பேச்சுக்கள் மொத்தமும் விழுந்தது அவ்வளவே.

“நான் பேசிட்டே இருக்கேன், நீ என்னன்னா கல்லுமாதிரி உட்கார்ந்திட்டிருக்க?…” ஈஸ்வரியின் பேச்சு தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதை போல வெகுசாதாரணமாக பார்த்தாள் வெண்மதி.

“மதி நீ இன்னும் அவரை நினைச்சிட்டு இருக்கியோ?…” தயங்கித்தான் கேட்டாள் ஈஸ்வரி. ஆனாலும் வெண்மதியிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை.

பல மாதங்களாக மனதினுள் குடைந்துகொண்டிருந்த கேள்வி தான். ஆனால் கேட்க அஞ்சியே வாயை திறக்காமல் இருந்தாள்.

இன்றோ தன் தோழி செய்துவைத்திருக்கும் காரியத்தை பார்க்க பார்க்க தாங்கமாட்டாமல் மேலும் உள்ளுக்குள் அடக்கமுடியாமல் என்னவாகினும் பரவாயில்லை என்னும் முடிவில்தான் கேட்டது.

ஆனால் வெண்மதியின் முகமது துடைத்துவைத்த கண்ணாடியை போன்று எந்தவித சலனமும் இன்றி பளிச்சென இருந்தது. ஈஸ்வரிக்கோ எதையோ தேடி தோற்ற உணர்வு மட்டுமே மிஞ்சியது.

“நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா? சில்க் சேரி, இந்த ஜ்வெல்ஸ் எல்லாம் ரொம்ப இரிட்டேட்டா இருக்கு. கொஞ்சம் ப்ரீயா இருக்கனும் எனக்கு…”

வெண்மதி எழுந்துகொள்ள தோழியை கண்டு இயலாமையோடு தானும் எழுந்தவள் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

“அப்பாட்ட சொல்லிட்டு போவோம் மதி…” என சொல்லி அம்மனின் சந்நிதிக்குள் நுழைய அவர் தீபாராதனையை முடித்து வெளியே வந்தார்.

“என்னம்மா கிளம்பிட்டீங்களா?…”

“ஆமாம்ப்பா. மதி வீட்டுக்கு போகனும்னு சொல்றா. நீங்க எப்போ வருவீங்க?…”

“நீ ஆத்துக்கு போ. நான் செத்த நாழி கழிச்சு நடை சாத்திட்டு வரேன்…” சுப்பிரமணி சொல்லிவிட,

“வரேன் மாமா…” வெண்மதியும் அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

“உனக்கு சுட்டுப்போட்டாலும் உங்க பாஷை ஏண்டி வரலை?…” என கேட்டவாறே நடக்க,

“உனக்கென்ன அதுல குறை வந்துச்சாம்?…” இன்னமும் ஈஸ்வரியால் கோபத்தை காட்டாமல் பேச இயலவில்லை.

“கொஞ்சமும் தப்பு செஞ்சிட்டோமேன்ற பீலிங் இல்லாம எப்படி பேசறா இவ? என உள்ளுக்குள் தாளித்தாள்.

வாசலில் இருந்த பூக்கடையில் சின்னு அமர்ந்திருக்க தன் செருப்பை மாட்டியபடி,

“போய்ட்டு வரேன்டா. அம்மாட்ட சொல்லிடு…” என்னும் பொழுதே அவளின் மொபைல் சிணுங்கியது.

எடுத்து பார்த்தவளின் முகம் யோசனையில் சுருங்க ஈஸ்வரி புரியாமல் பார்த்து பின்,

“ஏன் போனையே உத்து உத்து பார்த்திட்டிருக்க? எடுத்து பேசு…” எனவும்,

“ஹ்ம்…” என்றபடி அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ வெண்மதி, நான் ஹரிஹரன்…”

“…..”

“வெண்மதி லைன்ல இருக்கீங்களா?…”

“ஹ்ம் சொல்லுங்க இருக்கேன்…”

குரலை தழைத்துக்கொண்டு பேச பேசுவது யாரென தெரிந்துகொள்ள ஈஸ்வரிக்கு குறுகுறுப்பு வந்தது. யாராக இருக்கும்? என யோசனையில் மூழ்க,

“ஓகே நாளைக்கு மீட் பண்ணலாம். சேம் காபி ஷாப் தான். பை…” என மொபைலை வைத்துவிட்டு திரும்ப ஈஸ்வரி வானத்தை பார்த்தபடி சிந்தனையில் இருந்தாள்.

“ஈஸு? என்னாச்சு உனக்கு? போலாமா வீட்டுக்கு…” என்றதும் தலையை ஆட்டி ஈஸ்வரி அவளோடு நடக்க அவளின் வீடு வரும் வரை ஏதேதோ பேசிய வெண்மதி ஈஸ்வரியின் வீட்டின்முன் நின்றவள்,

“இன்னும் எத்தனை நாள் லீவ் ல இருக்க?…”

“ஈவ்னிங் அவர் வரார். நாளைக்கு என்னை அழைச்சிட்டு போக. அடுத்து சாட்டர்டே, சண்டே. அதனால மண்டே வருவேன்…”

“ஓகே உடம்பை பார்த்துக்கோ. நாளைக்கு உன் ஹஸ்பன்ட் வந்திருக்கறப்போ என்னால வரமுடியாது. உன் கலவாணி அனுப்பவே மாட்டாங்க. நீயும் அவரோட வால் பிடிச்சாப்ல கிளம்பிடுவ. மண்டே ஆபீஸ்ல தான் பார்க்கமுடியும்…”

வெண்மதி சொல்லசொல்ல அவளையே பார்த்திருந்த ஈஸ்வரியின் மனதில் அமிழ்ந்த கோபம் சுறுசுறுவென பொங்கியது.

“இவளும் வாழாம, வாழ வைக்க நினைக்கிறவங்களையும் கஷ்டபடுத்தி என்னத்தைத்தான் சாதிக்க போறாளோ?…” என வெண்மதியிடமே அவளை திட்ட கண்ணடித்தாள் தோழி.

“போடி…” என்று முறைத்த ஈஸ்வரி மனதிற்குள்,

“பிடிவாதக்காரி, இந்த வறட்டு பிடிவாதம் மட்டும் இல்லைனா இந்நேரம் இவளும் குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா இருந்திருப்பா” நினைக்கையில் கண்கள் கலங்கியது.

ஈஸ்வரியின் எண்ணம் புரிந்ததை போல அவள் தோள் அணைத்து கன்னம் பிடித்தவள்,

“இப்பவும் நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன். அதை இன்னும் டபுள் ஆக்கறதை போல இப்போ உன் வயித்துல குட்டி ஈஸ் ஒன்னு வந்திருக்கிறதை தெரிஞ்சு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதை விட என்ன வேணும் என் மக்கு ஈஸ்க்கு?…” அவளின் கண்களை தாண்டிய கண்ணீரை துடைத்த வெண்மதி,

“இன்னைக்கு மாமிக்கிட்ட எனக்கு பெரிய மண்டகப்படி வாங்கிக்குடுக்கனும்னு ப்ளான் போல? உதை வாங்குவ பார்த்துக்கோ. போய் முதல்ல முகத்தை கழுவிட்டு ப்ரெஷ் ஜூஸ் குடி…” என உண்மையாகவே மிரட்டி,

“அப்பத்தான் ஈவ்னிங் உன் ஹஸ்பன்ட் வரப்ப ப்ரெஷா இருப்ப. இப்படி அழுது வடிஞ்ச முகமா இருந்தா அங்க ரொமான்ஸ்க்கு வேலை இருக்காதும்மா…”

கண்ணடித்து வெண்மதி சொல்லியதும் கன்னங்கள் சிவக்க அவளின் தோளில் அடித்தவள்,

“உன் வாய் இருக்கே? வாய்லையே வாய்க்கால வெட்டிடுவ. போடி…” என்றதும்,

“ஈஸ்வரி, ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம உள்ளே வா…” சம்பூரணம் உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

“ஆஹ், ம்மா. இதோ…”என்றுவிட்டு வெண்மதியிடம் திரும்பி,

“நாளைக்கு நீயும் லீவ் போடேன். நான் வேணும்னா அவரை நாளைக்கு வர சொல்றேன். நாம எங்கயாச்சும் வெளில போகலாம்…”

“வேற வேலை இல்லை. போவியா. ஏற்கனவே  நம்ம ஹெட் ஈட்டிங் மை ஹெட். ஆளை விடும்மா…” என சிரித்தபடி தன் வீடுநோக்கி சென்ற வெண்மதியின் விழிகள் ஈஸ்வரியின் பாசத்தில் கசிந்திருந்தது.

“நீ இன்னும் அவரை நினைச்சிட்டு இருக்கியா?” என்ற ஈஸ்வரியின் கேள்வி வீடு நுழையும் வரை அவளின் காதுகளில் எதிரொலிக்க இதயம் அதிர உள்ளே நுழைந்தாள்.

வெண்மதியிடம் என்ன பதில் சொல்வது என தயங்கி அடுக்களைக்குள் நின்றுகொண்டார் கலைவாணி. ஆனாலும் அவரின் பார்வை வட்டத்திற்குள் வெண்மதி.

வரவேற்பறையை தாண்டிக்கொண்டு தன்னறைக்குள் நுழையவிருக்க,

“வெண்ணிலா ஸாரி வெண்மதி…”

உயிர் வரை பற்றி எரியும் குரல். குரல்வளையை பிடித்து நெரிக்கும் குரல். நெஞ்சை கசக்கி பிழியும்குரல். தூக்கத்தை காவு கேட்கும் குரல். பிரிவின் துயர் தொண்டையடைக்க ஓவென கதறச்சொல்லி தூண்டும் குரல்.

ஆம். இப்படியாக தான் அவனின் குரலை தரம் பிரித்து வைத்திருக்கிறாள் வெண்மதி.

இதே குரல் தான் அவளின் வாழ்நாளை இனிக்க வைக்கிறது. இதே குரல் தான் அவளை நித்தமும் உண்டு உறங்க வைக்கிறது. உறக்கத்தில் தாலாட்டுகிறது. இதயத்தை மயிலிறகென வருடவும் செய்கிறது.

அவனின் குரல்வழியே தன் பெயரை கேட்ட பொழுதுகளின் ஞாபகத்தில் தான் ஒவ்வொரு நாளையும் இயல்பாக கடக்கமுடிகிறது.

இவளின் அன்றாட உணர்வு போராட்டங்கள் அவனுக்கும் இருக்குமா?

ஆனால் அவன் போராட்டம் நிறைவுற்றிருந்தது. நிறுத்தியிருந்தான். புதிதாய் தொடங்க இருந்தான்.

Advertisement