Advertisement

நிலவு – 1(1)

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

        முழுமுதற்கடவுள் விநாயகனின் துதி கேட்டபடி வெண்மதி விளக்கேற்ற பூஜையை ஆரம்பித்தார் கலைவாணி. நடேசனின் மனமோ பெரும் உவகையில் ஆழ்ந்தபடி பக்தியில் திளைத்திருந்தது.

பலநாள் கனவு இன்று நனவாகப்போகும் மகிழ்வு அவரின் முகத்தில் அப்பட்டமாய் ஜொலித்தது. எத்தனை போராட்டம் இதற்காக.

“அப்பா கற்பூர ஆரத்தி எடுத்துக்கோங்க…” என தன் முன் நின்ற வெண்மதியை கண்டு புன்னகையோடு கண்களில் ஒத்திக்கொண்டார்.

“நீ போய் தயாராகு மதி. இப்போ அவங்க வந்துருவாங்க…”என்றதும் தாயை மிக அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறு தலையசைப்போடு உள்ளே சென்று மறைந்தாள்.

அவளின் பார்வையின் பொருளை உணரமுடியாமல் அடிவயிற்றில் ஒரு பயப்பந்து சுழல,

“இது சரியா வருமாங்க? எனக்கு கொஞ்சம் யோசனையாவே இருக்கு…”

“பண்ணினதெல்லாம் போதாதா? புதுசா எதுவும் ஆரம்பிக்கிறியா நீ?…”

“ஐயோ இல்லைங்க, அவ பார்த்துட்டு போறது என்னவோ யோசனையா இருக்கு. அதுதான் உங்ககிட்ட…” என்று திணற,

“பேசாத. உன் யோசனைகளை தூக்கி முதல்ல குப்பையில போடு. வந்துட்டா. நீ முதல்ல இப்படி பேசறதை நிறுத்து. எல்லாம் சரியா வரும். நடக்கும்…” என்று அவர் எரிந்துவிழ அதற்கு மேல் பேசினால் வாக்குவாதம் முற்றிவிடும் என்று,

“சரிங்க, இனி நான் எதுவும் பேசலை போதுமா?, என்னவோ சொல்றீங்க? பரவாயில்லை, நல்லவிதமா நடந்தா எனக்கும் சந்தோசம் தான். அதை புரிஞ்சுக்கங்க…” என பெருமூச்சொன்றை வெளியேற்றி நகர்ந்தார்.

கலைவாணியிடம் சத்தம் போட்டுவிட்டாலும் நடேசனுக்குமே கொஞ்சம் உதறல் தான். ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. உள்ளுக்குள் ஒளித்துவைத்தாலும் அவ்வப்போது முகம் காட்டிக்கொடுக்கத்தானே செய்கிறது.

நல்ல மனைவியாக கலைவாணி அதை கண்டுகொள்ள அந்த பதற்றமானது அவருக்கும் தொற்றிக்கொண்டது. ஆனாலும் மீண்டும் அருகில் சென்று பேச என்னவோ பயமாக வேறு இருந்தது.

வெளியில் இவர்கள் மனநிலையை கணித்திருந்த வெண்மதி உள்ளே அமைதியாக தயாராகி இருந்தாள். அதை கண்டு கலைவாணிக்கு இன்னமும் வயிற்றில் புளியை கரைத்தது.

நேரம் நெருங்க நெருங்க வீதிக்கும் வாசலுக்குமாய் அவரின் கால்கள் அலைபாய கண்களோ எதிர்பார்ப்பில் விரிவதும் சுருங்குவதுமாய் இருந்தது.

“என்னங்க, ஒருவேளை சாயங்காலம் வரலாம்னு முடிவு செய்துட்டாங்களோ?…” என நடேசனின் காதை கடிக்கும் பொழுதே வெண்மதி அறையை விட்டு வெளியே வந்தாள்.

“அம்மா, இன்னும் எவ்வளோ நேரம் நான் இப்படி பட்டு புடவையிலேயே நிக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு என்னால முடியலை…” முகம் சுருக்கி இயம்பியவள் சமையலறைக்கு சென்று ப்ரிட்ஜிலிருந்த குளிர்ந்த நீரை பருகி,

“இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்?…” என,

“நீ ரூம்ல இரும்மா. நாங்க சொல்றோம்…” நடேசன் சொல்லவும் அவரை தாண்டி தன்னறைக்குள் சென்று மறைந்தாள்.

கலைவாணிக்கோ நடப்பது கனவா நிஜமா என்று நம்பமுடியாத பிரம்மையில் வியந்துதான் நின்றார். பின்னே இப்படி அவள் கேட்டு நடேசன் கூறிய பின்னும் கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் கேட்டுக்கொண்டது திகைப்பை உண்டுபண்ணியது.

“என்னங்க இது அதிசயமா இருக்கு? இவ சம்மதிச்சதும் இல்லாம இவ்வளோ பொறுமையா வேற இருக்காளே?…” அதிசயித்துதான் சொன்னார்.

அவரும் காலையிலிருந்து வெண்மதியை கண்டும் காணாமல் பார்வையிட்டுக்கொண்டு தானே இருக்கிறார். இந்த நிமிஷம் வரை ஒரு எரிச்சலோ, கோபமோ எதுவும் இல்லை அவள் முகத்தில்.

ஒருவிதத்தில் அது மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு புறம் பயம் மனதை கவ்வியது. இன்னும் வராத மாப்பிள்ளை வீட்டினரை எண்ணி படபடத்தார்.

“என்னவோ ஞானோதயம் வந்தது மாதிரி இவ ஒத்துக்கிட்ட நேரம் இப்படி செய்றாங்களே?, கொஞ்சமாச்சும் பொறுப்புன்னு இருக்கா? நேரமானா தகவல் சொல்லனும்ன்ற மரியாதை கூட தெரியாதவங்களா இருக்காங்களே?…”

“இப்பவே இவ்வளவு அலட்சியமா இருக்கறவங்க, இவங்க வீட்ல என் பொண்ணு எப்படித்தான் காலம் தள்ள போறாளோ?…” என்னவோ திருமணமே நடந்து முடிந்துவிட்டதாக எண்ணி அவர்களை தாளித்துக்கொண்டிருந்தார்.

மனதில் நினைத்தது வாய் வரை வார்த்தைகளாக வந்துவிடுமோ? அது வெண்மதியின் காதுகளை எட்டிவிடுமோ என அஞ்சி வாய்க்கொரு பெரிய பூட்டை போட்டுக்கொண்டு கவனமாக மனத்திற்குள்ளேயே குமைந்தபடி மற்ற வேலைகளை கவனிப்பது போல பாசாங்கு செய்தார்.

அதுவும் வெண்மதியை கணக்கில் வைத்தே.

எங்கே வெண்ணைய் திரண்டு வரும் நேரம் தாழியை உடைந்த கதையாகிவிட கூடாதே என்பது அவரின் கவலை. மீண்டும் நடேசனின் அருகில் வந்து நிற்க,

 “நான் இன்னொரு முறை அவங்களுக்கு போன் செஞ்சு பார்க்கறேன். இந்த தரகர் வேற போன் அட்டன் செய்யமாட்டேன்றான்…”

மெல்லிய முணுமுணுப்பும் சலிப்பும் தவறாமல் அவர் சொல்ல இவருக்கோ படபடவென அடித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரம் தாண்டியும் யாரும் வருவதை போல தெரியாததால் சோர்ந்து அமர்ந்திருக்க,

“அம்மா…” என வந்து நின்ற வெண்மதியை கண்டு திக்கென்று ஆனது இருவருக்கும்.

எதுவும் கோபமாக பேசி இதற்கு தான் சம்மதிக்கமாட்டேன்னு சொன்னேன். இனி இது போல எந்த ஏற்பாடும் செய்யக்கூடாது என சொல்லிவிடுவாளோ? என பயந்து பார்த்தனர்.

“எ..என்ன? என்ன மதி?…” என்றபடி கலை எழுந்தேவிட்டார். பதட்டம் தெரியாதவாறு கேட்க முயன்றாலும் கண்களில் சுழன்ற கலவரப்பந்து அவருக்கு துரோகம் இழைத்து மகளிடம் காட்டிக்கொடுத்துவிட்டது.

அதை கண்டும் காணாமல் உள்வாங்கிக்கொண்ட வெண்மதியின் மனமோ ஒருவித நிம்மதியில் ஆழ்ந்தாலும் சுருக்கென்ற வலியும் தோன்றாமலில்லை.

“என்ன மதி? குடிக்க ஏதாவது வேணுமா?…” கலைவாணி கேட்க,

“ம்ம், என்ன? இல்லைம்மா. நான் கோவிலுக்கு போய்ட்டுவரலாம்னு இருக்கேன். பக்கத்துல தானே. அவங்க வந்தா எனக்கொரு போன் செய்ங்க. உடனே வந்திடறேன்…”

வெண்மதி சொல்லியதும் யோசனையாக நடேசனும், கலைவாணியும் பார்த்துக்கொண்டனர். கலைவாணி மறுப்பதற்குள்,

“நீ போய்ட்டுவாம்மா. நாங்க போன் செய்யறோம்…” என நடேசன் சொல்லியதும் தாயிடம் தலையசைத்துவிட்டு வெளியேறிவிட்டாள் வெண்மதி.

நடேசன் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார். காலையில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து ஒருவித இயலாமை மனநிலையில் குமைந்துகொண்டிருந்தார்.

கையில் இருந்த மொபைலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவரை கண்டு,

“நீங்க எதுக்காக அனுப்பிவச்சீங்க? திடீர்னு வந்துட்டாங்கன்னா என்ன பன்றது? ஏற்கனவே அரும்பாடுபட்டு அவளை சம்மதிக்க வச்சிருக்கோம். இடம் எப்பேர்ப்பட்ட இடம் தெரியுமா?…” கோபத்தில் கலைவாணி பொரிய,

“கொஞ்சம் வாயை மூடுறியா? உன் பேச்சை கேட்டுத்தான் என் பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சு. நானும் புத்தியில்லாம நடந்ததால எத்தனை கஷ்டங்கள். அதுக்கான குற்ற உணர்வு என்னை சாகடிச்சுட்டு இருக்குது…”

நடேசனின் ஆக்ரோஷத்தில் முகம் வெளிற ஒதுங்கி நின்றாலும் கலைவாணிக்கும் கண்ணீர் கரைபுரண்டது.

“இப்படியெல்லாம் ஆகும்னு நான் நினைக்கலைங்க. எல்லோருக்கும் நல்லது எதுவோ அதை தான் நான் நினைச்சேன். நான் செஞ்சது எந்த இடத்துல தவறா போச்சுன்னு எனக்கு தெரியலையே…” என அவர் அழ ஆரம்பிக்க,

“ப்ச், உடனே அழுது சமாளிக்கிறதை நீ நிறுத்து கலை. என்னால இதையெல்லாம் கண்கொண்டு பார்க்கமுடியலை. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என் பொண்ணு இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. உன் பேச்சை கேட்டு நானும் ஆடினேன்ல. அதுக்கு உன்னோட சேர்ந்து நானும் அனுபவிச்சு தான் ஆகனும்…”

“நீ நினைச்சதுக்கான தண்டனை இதுதாண்டான்னு ஒவ்வொரு நாளும் அவ என்னை சொல்லி சொல்லி காயப்படுத்துறது மாதிரியே இருக்கு. அவ என்னை பார்த்து உணர்ச்சியே இல்லாம சிரிக்கிறப்போ எல்லாம் என் நெஞ்சை கூறுபோட்டு அறுக்குது…”

இதயத்தை நீவிவிட்டுக்கொண்டே நடேசன் பேச பேச அவரருகே வந்து நின்ற கலைவாணி,

“வேண்டாங்க. இப்படி உங்க மனசுக்குள்ளயே போட்டு அழுத்தாதீங்க. அவ தான் இப்ப கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளே? நீங்க கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்…” என நம்பிக்கையூட்ட,

“இல்லை கலை. மாப்பிள்ளை வீட்ல வரலை. அவங்களுக்கு விருப்பமில்லையாம். இப்பதான் தரகர் மெசேஜ் அனுப்பினான். அவனுக்கு அவசரமா வேற வேலை வந்துடுச்சாம். அதான் போன் எடுக்கலையாம். அதனாலதான் மதி கிளம்பறப்போ நான் தடுக்கலை…” என சொல்லி முடிக்க,

“என்ன சொல்றீங்க? ஐயோ கடவுளே? இது என்ன சோதனை? என் பொண்ணுக்கு எப்பதான் விடிவுகாலம் வரும்?…” என சரிந்தமர்ந்து தலையிலடித்துக்கொண்டு அழ அவரின் தலையை ஆதரவாக கோதிவிட தவித்த கையை இறுக்கியபடி மனைவியை வெறித்தபடி அமர்ந்திருந்தார் நடேசன்.

நடக்கும் செயல்கள் நல்லவையோ? கெட்டவையோ? எதுவும் தானாக நடப்பதில்லை. நாம் செய்யும் காரியங்களின் விளைவு வினைப்பயன் தான் பின்னாளில் விதியென திரும்பும் என்பதை நித்தம் நித்தம் அனுபவித்துக்கொண்டிருந்தனர் அந்த தம்பதிகள்.

—————————————————————–

“செம கூட்டம். இன்னைக்கு என்ன விசேஷம் கோவில்ல?…” என கேட்டபடி சுட சுட பொங்கலயும், புளியோதரையையும் இரு கையிலும் ஏந்தியபடி வந்தமர்ந்த வெண்மதியை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி.

“இப்ப எதுக்கு முறைக்கிற?…” என சொல்லியபடி வாயில் புளியோதரையை திணிக்க,

“ஏன்னு உனக்கு தெரியாதாமா? நானும் எவ்வளோ நேரமா உன்னட்ட கேட்டுட்டே இருப்பேனாம்?…” ஒவ்வொரு வார்த்தையிலும் மிளகாய் நெடி தெறித்தது.

அவளின் கோபத்தை கண்டுகொள்ளாத வெண்மதி, “ஹப்பா என்ன காரம்? என்ன டேஸ்ட்?…” சில்லாகித்து சாப்பிட,

“மதி அக்கா, இந்தா பானகம். அம்மா குடுத்துட்டு வர சொல்லுச்சு…” இரண்டு தம்ளர்கள் நிறைய பானகத்தை வைக்க,

“தேங்க்ஸ்டா சின்னு…” என அவனின் கன்னம் கிள்ளி கொஞ்சி,

“பிரசாதம் வாங்கறப்போ இதை குடுக்கவே இல்லையே?…” அதிமுக்கிய சந்தேகமென கேட்க,

“அது தீந்து போய் ரொம்ப நேரமாவுது. அம்மா தான் பூசாரி சாமியாண்ட நீ வருவன்னு சொல்லி எடுத்தாந்துச்சு…” என்ற அந்த பத்து வயது சிறுவன்,

“அம்மா மார்க்கெட்டுக்கு கிளம்புது பூ எடுக்க. நான் கடைய பார்த்துக்கனும். அப்பால வரேன்க்கா…” சின்னு என்னும் சின்னச்சாமி கிளம்பிவிட அந்த தம்ளர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டாள் வெண்மதி.

“நீயும் எடுத்து குடியேண்டி. குருக்கள் பொண்ணு நீ. உனக்கு தோணுச்சா எனக்கு எடுத்து வைக்கனும்னு…”

“கடுப்பை கிளப்பாதே மதி. மாப்பிள்ளை வந்திருந்தாரே? ஓகே ஆகிடுச்சா? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க? வந்தவங்க கிளம்பிட்டாங்களா? நீ ஏன் அதுக்குள்ளே கோவிலுக்கு வந்த? அதை எதையும் சொல்லாம நீ பாட்டுக்கு பொங்கலும், புளியோதரையுமா மொக்கிட்டு இருக்க…” ஈஸ்வரி கொஞ்சமும் பொறுமையில்லாமல் கடுகென வெடிக்க,

“மாப்பிள்ளை வந்தாதான போறதுக்கு…” அசால்ட்டாய் சொல்லியபடி மிச்சம் மீதியையும் உண்டு முடித்தவள் எழுந்து சென்று கை கழுவி வரும் வரை அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் ஈஸ்வரி.

அவள் தலையில் இரண்டு குட்டு வைத்து மீண்டும் வந்தமர தலையை தடவியவண்ணம்,

“மதி, என்ன சொல்ற? கலவாணி சும்மாவா விட்டுச்சு உன்னை…” வெண்மதியின் முறைப்பில் நாக்கை கடித்தவள்,

“ஸாரி, ஸாரி மதி. எனக்கு ஏன்தான் இப்படி வருதுன்னே தெரியலை. உங்கம்மாவை சட்டுன்னு இப்படி கூப்பிட்டுடறேன்…” முகத்தை பாவமாக வைத்து கெஞ்சும் தோழியை மேலும் முறைக்க முடியாமல் சிரித்தவள்,

“இத மட்டும் அம்மா கேட்ருக்கனும். உன்னை தெருக்குள்ள அங்குட்டுமிங்குட்டும் நடக்க விட்ருக்காது. உன் காது ஜவ்வு கிழிஞ்சு போற அளவுக்கு துவைச்சு காயவச்சிடும். பார்த்துக்கோ…” என எச்சரிக்க ஈஸ்வரியின் முகம் பேயறைந்ததை போல ஆனது.

Advertisement