Advertisement

அத்தியாயம் முப்பத்தி இரண்டு:
ஆகிற்று, குழந்தையை உறுதி செய்து ஒரு வாரம் ஆகிற்று. வீட்டினர் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. ஏன் சந்தோஷிற்கு கூட தெரியாது. மனதிற்குள் ஷர்மிக்கு அதுவே ஒரு உதைப்பு. வீட்டினர் எல்லோரும் அவளிடம் அன்பாய் பேசி பழகுகின்றனர். அவர்களிடம் மறைப்பது தப்பு போல ஒரு எண்ணம்.  
சந்தோஷ் ஷர்மியை பார்க்க வந்தவன், “ஏன் பேபி டல்லா தெரியற? ரொம்ப படுத்தறாளா?” என்றபடி விஸ்வாத்திகாவை கையில் ஏந்த, ஒரு பத்து நிமிடம் கையில் இருந்தவள் அம்மாவை நோக்கி தாவினாள்.
“என்னவோடா அண்ணா, என் மகளை ஒரு ரெண்டு மணி நேரம் என்னை தேடாம யாராலாயாவது வெச்சிருக்க முடியுது?” என்று குறைபட்டாள்.      ஷர்மிக்கு எப்படியடா விஸ்வாத்திகாவை வைத்துக் கொண்டு இன்னொரு குழந்தையை பெற்றெடுக்க போகிறோம் என்று கவலையாக இருந்தது.
வீடு முழுவதும் ஆட்கள் இருக்க, அரை மணி நேரம் மிஞ்சி போனால் ஒரு மணி நேரம் அவ்வளவு தான் உடனே அன்னையை தேடுவாள்.      
“விடு பேபி பெருசானா பழகிடுவா” என்று அவன் சமாதானம் சொல்ல, “அண்ணி ஜூஸ்” என்றபடி கௌசி மாடி ஏறி வந்தாள்.
“ஒரு குரல் கொடுத்தா நான் வந்திருப்பேனே” என்றாள் ஷர்மி. பின்னே வீட்டுக்கு வந்த பெண்ணை அவள் கவனிக்க வேண்டும். ஆனால் ஷர்மியை கவனிக்க என்றே கௌசல்யா வருவாள்.
“இது ஒரு வேலையா? நீங்க எவ்ளோ பிசி எங்க பட்டுக் குட்டி கூட” என்று விஸ்வாத்திகாவை தூக்க பத்தே நிமிடம் அம்மாவிடம் தாவியது.
ஷர்மி அசந்து தெரிய, “நீங்க படுங்க, நானும் இவரும் குட்டியை தூக்கிட்டு ஊர் சுத்திட்டு வர்றோம். அப்போவாவது உங்களை தேடாம இருக்காளா பார்க்கலாம்” என்றவளிடம், 
“அழுவா?” என்று ஷர்மி சொல்ல,
“பார்க்கலாம் நாங்களா இவளான்னு” என்று குழந்தையை வேடிக்கை காண்பித்து தயார் செய்து கிளம்பினர்.
கிடைத்த நேரத்தில் ஷர்மி உறங்கி விட, மாலை ஆறு மணியை நெருங்க, கீழே இருந்து சீதா குரல் கொடுத்தார் “ஷர்மி விளக்கேத்துற நேரம் தூங்க கூடாது. எழுந்து முகம் கழுவி கீழ வா” என்று.
கேசவனும் விசாலியும் மகளையும் பேத்தியையும் பார்க்க வந்தனர். வீட்டினர் பேசிக் கொண்டிருக்க, கீழே இறங்கி வந்த ஷர்மியிடம் “எங்க பாப்பா?” என்று அவர் கேட்க,
“கௌசியும் சந்தோஷும் வெளில தூக்கிட்டு போயிருக்காங்க பா” என்றவள், “சசி ம்மா அப்பாக்கும் சித்திக்கும் காஃபி கொண்டு வாங்க” என்றாள்.
ஆம்! மற்றவர்களிடம் பேசும் போது சித்தி என்று சொல்ல பழகியிருந்தாள். அதுவே கேசவனுக்கும் விசாலிக்கும் போதுமானதாக இருந்தது.
கௌசியும் சந்தோஷும் விஸ்வாத்திகாவுடன் வந்தவர்கள் “அண்ணி, உங்க பொண்ணு அழவே இல்லை” என்று சந்தோஷமாய் சொல்ல, அவள் சொன்ன நேரம் கௌசியின் கைகளில் இருந்து ஷர்மியிடம் தாவினாள்.
“சசிம்மா பாப்பாக்கு பால்” என்று ஷர்மி குரல் கொடுத்துக் கொண்டே “தாத்தாக்கிட்ட போங்க” என்று கேசவனிடம் கொடுக்க, சென்ற குழந்தை ஐந்தே நிமிடத்தில் மீண்டும் அம்மாவிடம் தாவினாள்.
பின்பு எல்லோருடனும் பேசிக் கொண்டு இருந்து அவர்கள் கிளம்ப முற்பட, சீதா உணவு உண்ணாமல் செல்ல விடவில்லை. ரவியும் வந்து விட உண்டு பேசி அவர்கள் கிளம்ப பத்து மணி போல ஆகிவிட்டது.
செல்லும்போது கூட “பேபி, நீ ரொம்ப டயர்டா தெரியற, உடம்பை பார்த்துக்கோ. மாமாவை சீக்கிரம் வந்து பட்டு குட்டியை பார்த்துக்க சொல்லு” என்றான்.
“ம்ம் சரி சந்தோஷ்” என்று ஷர்மி சொல்ல, சீதா வியப்பாய் பார்த்தார், எப்படி தங்கையின் மாற்றங்களை கண்டு கொள்கிறான் என்று. இன்னும் ஒரு மாதம் சென்றதும் எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
எல்லாம் முடித்து உறங்க வர, விஸ்வாத்திகாவை தோளில் போட்டு தட்டி கொடுக்க ஆரம்பித்தான் ரவி.
அவனுடைய முகமும் சமீப காலமாய் ஏதோ இறுக்கமாய் இருப்பது போலவே தோன்ற, “என்னங்க? என்னவோ போல இருக்கீங்க?” என்றாள் ஷர்மி.
“ஒன்னுமில்லையே” என்று அவன் சொல்ல,
“இல்லை, ஏதோ உங்க கிட்ட மிஸ்ஸிங். எனக்கு சொல்ல தெரியலை. பட் யு ஆர் நாட் ஓகே” என்றாள். 
மகள் உறங்கியிருக்க, அவளை படுக்கையில் விட்டவன், “ஒன்னுமில்லை” என்று ஸ்திரமாய் சொல்லி படுக்க, குழந்தைக்கும் அவனுக்கும் இடையில் படுத்துக் கொண்டவள், அவனின் முகம் பார்க்க அதில் ஒரு கவலை தெரிந்ததோ.
“என்னங்க?” என்றாள் திரும்பவும்.   
“என்ன என்னங்க?” என்றவன், அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன் “எனக்கு தூக்கம் வருது” என்றான்.
“சரி தூங்குங்க” 
“தூக்கம் வருது, ஆனா தூங்க முடியலை” என்றவன், “என்னை தூங்க வை” என்றான்.
“இதேதடா வம்பு” என்று ஷர்மி ரவியை பார்க்க, “எஸ், என்னை தூங்க வை” என்றான்.
“பகல்ல உங்க பொண்ணு படுத்தறா, என்னை விட்டு கொஞ்சமும் நகராம. ராத்திரி நீங்க படுத்தறீங்க” என்று சலித்துக் கொண்டவள், “எப்படின்னு அதையும் நீங்களே சொல்லுங்க” என்றாள்.
“என்னை பிடிச்சிக்கோ?” என்றவன் சற்று கீழிறங்கி அவளின் நெஞ்சில் முகம் புதைத்து கொள்ள, ஆதூரமாய் அணைத்துக் கொண்டாள். வேறு எதுவும் கேட்கவில்லை. எப்போதுமே அவன் மனைவியை அதிகம் நாடும் நேரங்களில் இப்படி ஒரு அணைப்பில் தான் உறங்குவான்.   
ரவியின் உடல் மொழியிலேயே மனதிற்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. அவளுக்கு தெரிந்து ரவி, இப்படி இருந்து பார்த்ததே இல்லை. பார்த்த நாளில் ஒன்றுமில்லாமல் இருந்த போதும் அந்த கண்களில் ஏகத்திற்கும் திமிர் தான் இருக்கும். பணிவு என்ற ஒன்று இருக்கவே இருக்காது.
“நீ வேலை செய்ய வந்தவன், எப்படி இப்படி இருக்கலாம்” இப்படி தான் அவர்களுக்குள் முட்டல்.
அவனின் முகத்தில் அலட்சியம் கோபம் எல்லாம் தண்ணீர் பட்ட பாடு. இதில் கவலை என்ற ஒன்று பார்த்ததே இல்லை தான். இப்போது அவளுக்கு அப்படி தான் தோன்றியது.
என்ன விஷயமாயிருக்கும் என்று அவளுக்கு அனுமானிக்க முடியவில்லை. எப்போதும் ரவியின் கவனிப்பு அவளுக்கு அதீதம் தான். அதையும் மீறி அவளை அதிகம் தேடினான். அதாவது ஷர்மி தன்னை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
அந்த நேரத்தில் அவனை மேலும் பேசி உறக்கம் கெடுக்க முயலவில்லை. நாளை பேசிவிட வேண்டும் என்று முடிவாய் இருந்தாள்.
அதிகாலையில் விஸ்வாத்திகா விழித்து சிணுங்க, ஷர்மிக்கு அப்படி ஒரு உறக்கம் கண்ணே திறக்க முடியவில்லை, “என்னங்க குழந்தை அழறா, பால் குடிக்க வைங்க” என்று ரவியை எழுப்ப, உடனே எழுந்து கொண்டவன், மகளை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.
தாத்தாவும் அப்பாவும் எழுந்து இருந்தனர், வீட்டின் பெண்கள் யாரும் எழவில்லை இன்னும். மகளை கைகளில் வைத்துக் கொண்டே அவன் பாலை காய்ச்ச போக,
“சொல்லுடா நான் செய்யறேன்” என்று வாசன் வர, அவன் அப்பாவிற்கு சொல்ல அவர் செய்ய, மகள் அவனின் தோளில் முகம் புதைத்து பாதி உறக்கத்தில் இருந்தாள், இன்னும் நன்றாக விழிக்கவில்லை.
அவன் சிப்பரில் ஊற்றி குடிக்க வைக்க, குடித்தவள் திரும்பவும் அப்பா மேலேயே உறங்க ஆரம்பித்தாள்.
அப்பாவும் தாத்தாவும் இருப்பதால் சில விஷயங்களை அவன் பேச, “நீ என்னானாலும் செஞ்சுக்கோ, எங்களுக்கு எதுவும் இல்லை” என்று தாத்தா சொல்ல,
“அப்படி கிடையாதுப்பா” என்ற வாசன் அதில் இருந்த சிக்கலை சொல்ல, அவனுமே யோசனையில் ஆழ்ந்தான்.
சீதா அப்போது தான் எழுந்து வந்தவர் இந்த பேச்சை கேட்டிருந்தார். மகனிடம் எதுவும் பேசவில்லை ஆனால் அவன் அலுவலகம் கிளம்பி சென்றதும் கிடைத்த தனிமையில் ஷர்மியிடம், “இப்போ எதுக்கு கும்பகோணம் வீட்டை விக்கலாம்னு சொல்றான்” என்றார்.
“என்ன வீட்டை விக்கறதா? என்கிட்டே ஒன்னும் சொல்லலையே” என்று சொல்ல,
“ம்ம், காலையில மாமா கிட்ட பேசினான். அவர் ஓகே சொல்லிட்டார்.  ஆனா உன் மாமனார் தான் பிள்ளைங்க ஏழு பேருக்கும் சரி பங்கு இருக்குன்னு சொல்லிட்டார்”
“யாரு ஏழு பேர்?” என்று அவள் புரியாமல் கேட்க,
“நாலு பொண்ணுங்க அவன், கூட நீயும் மாப்பிள்ளையும், மாமானாரோட தம்பி பொண்ணு தானே உங்கம்மா. அது பூர்வீக சொத்து” என்று விட,
“ம்ம்” என்று கேட்டுக் கொண்டவள் வேறு எதுவும் பேசவில்லை. அவளின் அம்மா வழி சொந்தமாக ரவியின் வீடு அவளின் மனதில் பதியவில்லை. ரவியை கொண்டே அவளுக்கு உறவு.
“இவர்கள் என் நெருங்கிய சொந்தங்கள்” என்று மனதில் பதிந்து கொண்டாள்.     
இதை மட்டும் கேட்டால் “அந்த வீடு எவ்வளவுக்கு போகும்” என்று, “ஒரு எழுபது அல்லது என்பது லட்சம் போகும்” என்றார் சீதா.
“அவ்வளவு சிறிய தொகைக்கு கூட தடுமாற்றமா?” என்று தோன்றியது. அவளுக்கு தெரியும் அவனின் தொழிலில் ஆண்டு வருமானம் சில கோடிகளை அசால்டாய் தொடும் என்று.   
“என்கிட்டே நீங்க சொன்னது அவருக்கு தெரிய வேண்டாம் அத்தை” என்று சொல்ல,
“நீ வேற எனக்கு தெரியும்னே அவனுக்கு தெரியாது, அவங்க பேசினதை நான் கேட்டேன், உன்கிட்ட சொல்லிட்டேன்” என்று முடித்து விட்டார்.          
இந்த ஒன்பது மாதங்களாக மகனுடன் இருப்பதால் அவனின் வாழ்க்கை முறை தெரிந்தது. கடுமையான உழைப்பாளி என்று சொல்வதை விட மிக மிக கடுமையான உழைப்பாளி.
வீட்டில் இருக்கும் நேரமே இரவு நேரம் மட்டும் தான். மதியம் உணவு கூட வீட்டில் ஞாயிறு மட்டுமே. இப்போது அப்பாவும் சித்தப்பாவும் இருக்க, உணவு வீட்டில் இருந்து செல்கிறது.  
ஷர்மிளாவுமே அவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டுமே அவனை தேடுவாள். அவனின் வேலை நேரத்தில் சற்றும் தொந்தரவு கொடுக்க மாட்டாள்.
அவருக்கு இதுவே ஆச்சர்யம் தான்.
அவரின் பெண் பிள்ளைகள் எல்லாம் கணவனோடு வெளியே செல்வதை எல்லாம் மிகவும் விரும்புவார்கள். ஏன் கௌசியும் சந்தோஷும் திருமணம் முடிந்த பிறகு நான்கைந்து முறை வெளியில் சுற்றுலா சென்று வந்து விட்டனர்.
அவருக்கு தெரிந்து குழந்தைக்கு தடுப்பூசி போட தான் இருவரும் சேர்ந்து சென்று வருவது.
ரவி தான் வேலை வேலை என்று மெனக்கெடுகிறான், முன்பானால் கும்பகோணம் ஒரு இரண்டு நாட்கள் வருவர். இப்போது அதுவும் இல்லை.  இந்த வாழ்க்கை முறையில் எந்த மனசுணக்கமும் ஷர்மிக்கு இருப்பதாய் தெரியவில்லை. கணவனை அவ்வளவு அனுசரித்து நடந்து கொள்கிறாள் என்று புரிந்தது.
என்னவோ மகன் பணத்திற்கு வேண்டி ஷர்மியை திருமணம் செய்தான் என்ற எண்ணம் எல்லாம் இப்போது அவர்களின் வாழ்க்கை முறையை பார்த்து அவருக்கு ஞாபகத்திலேயே வரவில்லை.
கை குழந்தை இல்லாவிட்டால் அவரே சொல்லியிருப்பார் எங்கேயாவது அவளை அழைச்சிட்டு போயேண்டா என்று.
அதனால் கேட்டதை மருமகளிடம் ஒளிபரப்பி விட்டு அமைதியாகிவிட்டார்.
யாருக்கு மட்டும் என்ன தெரியும், ரவியின் தேடல் முழுவதும் ஷர்மியிடம் மட்டும் என்று.
ஷர்மிக்கு விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து முழுக்க முழுக்க யோசனை. அவளுக்கு நிச்சயமே, தொழிலில் எதுவும் சறுக்கல் இருக்க வாய்ப்பே இல்லை.
இந்த வீடு தான் பணத்தை முடக்கி இருக்கும் என்று. பல கோடிகள் என்று தெரிந்தது தானே.
ஆனால் மனம் வெகுவாக சுணங்கிக் கொண்டது “வீடு விற்கும் வரை யோசித்து இருக்கிறான் என்னிடம் ஒரு வார்த்தை கூட பகிர்ந்து கொள்ளவில்லை. அப்போது நான் யார் இவனுக்கு படுக்கையை மட்டும் பகிரவா என்று தோன்ற, மனதில் தோன்றியதை அப்படியே மறைக்காமல் ரவீந்திரனிடம் கேட்டாள்.
அங்கே ஒரு போர் மேகம் தான் சூழ்ந்து நின்றது!
                              
                     
                             

Advertisement