Advertisement
அத்தியாயம் முப்பத்தி மூன்று :
அவர்கள் வீடு திரும்பும் போது எட்டு மணியை நெருங்க “பீச் போகலாமா?” என்றான் மருது.
“வேண்டாம், இன்னொரு நாள் போகலாம். எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு” என்று மறுத்து விட்டாள். உண்மையில் என்னவோ உடல் சோர்வாய் உணர சொல்லிவிட்டாள், அவனும் உடனே சரி என்று விட்டான்.
வீடு வந்ததும் “நீ தூங்கு, நான் ஸ்டோர்ஸ் வரை போயிட்டு வர்றேன். நான் பூட்டிக்கறேன், ஃபோன் வேற இல்லை, யாரும் கூப்பிட்டிருந்தாலும் தெரிஞ்சிருக்காது. எதுக்கும் ஃபோன் சரி பண்ணிடு, இப்போதைக்கு எனக்கு அதுல எடுத்து பேச தெரிஞ்சா போதும்” என்று விட்டான்.
“ம்ம்” என்றவள் இருந்த சோர்வில் உடை கூட மாற்றாமல் புடவையிலேயே உறங்கி விட்டாள்.
மருது வந்ததோ அவன் குளித்து உடை மாற்றி வந்து சிறிது நேரம் அவளை பார்த்திருந்ததோ, பின்பு ஒரு பெரு மூச்சை வெளியேற்றி படுத்ததோ எதுவும் தெரியாது. பின்னே நைட் பேன்ட் ஷர்டில் உறங்குபவள் இன்று புடவையில் உறங்கினாள். அவளுக்கு தான் உறங்கும் போது உடை நிற்காதே, அது தாறு மாறாய் கலைந்து கிடக்க, அதனை களையும் எண்ணம் அவனுள் தாறு மாறாய் வர, முயன்று மனதை ஒரு நிலைப் படுத்தி படுத்துக்கொண்டான், ஆனால் உறக்கம் வருவேனா என்றது.
இன்னும் தனி தனி கட்டில் தானே. அணைத்து படுக்க கூட வழியில்லையே. புரண்டு புரண்டு தான் படுத்துக் கொண்டிருந்தான்.
எட்டு மணிக்கே உறங்கி விட்டதனால், இரண்டு மணிக்கு சற்று விழிப்பு வர, தண்ணீர் தாகம் எடுக்க, அன்று தண்ணீரும் அறையில் எடுத்து வரப் படாமல் இருக்க, எழுந்து அமர்ந்தாள்.
சிறு அரவம் தான், ஆனால் மருது கண் திறந்து விட்டான், உறங்கவில்லை கண்மூடி மட்டும் தானே இருந்தான்.
இவளின் புறம் பார்த்தவன் “என்ன ஜெயந்தி” என,
“தண்ணி குடிக்கணும்” என்று கட்டிலில் இருந்து எழுந்து சென்றாள், உறக்க கலக்கம், அவள் கட்டிலில் இடித்துக் கொள்ள போக வேகமாய் எழுந்து பிடித்துக் கொண்டவன், “இரு நான் கொண்டு வர்றேன்” என்று மருது செல்ல, அவனின் கட்டிலில் அப்படியே படுத்துக் கொண்டாள்.
மருது வந்து தண்ணீர் கொடுக்க அதனை வாங்கி பருகியவளுக்கு நன்கு தூக்கம் தெளிந்தது. மருதுவின் படுக்கை என்று தெரிந்தும் அவள் அங்கேயே திரும்ப படுத்துக் கொள்ள, அவள் தூக்கத்தில் செய்ததாய் நினைத்துக் கொண்டு,
“ஜெயந்தி எழுந்து உன் படுக்கையில படு” என்று சொல்ல,
நேராய் படுத்திருந்தவள் கண் திறந்து அவனை பார்க்க, அந்த கண்களில் தூக்கம் இல்லை என்று புரிந்த மருதுவின் மனம் உல்லாச நிலைக்கு மாற, அதற்குள் ஜெயந்தி பேசியிருந்தால், “பரவாயில்லை பக்கத்துல படுங்க, உங்க கற்புக்கு நான் கியாரண்டி. ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா ஒரு சின்ன ஆலோசனை, அதாவது இப்படி இருந்தா மூணு குழந்தையில்லை, ஒரு குழந்தை கூட பிறக்காது” என்று சொல்ல,
“ஓய், என்னடி திமிரா?” என்றான் உல்லாச மனநிலையில்,
“நேத்து தான் கடையில போய் வாங்கிட்டு வந்தேன். பத்து கிலோ இருக்கு, வேணும்னா சொல்லுங்க உங்களுக்கும் தர்றேன்” என்றாள் கடுப்பாக.
“என்ன?” என்று மருது புரியாமல் கேட்க,
“ம்ம், நீங்க சொன்ன திமிர்” என்றாள் அலட்சியமாக.
அப்படி ஒரு சிரிப்பு மருதுவிற்கு, அவன் சிரித்துக் கொண்டிருந்தான். இப்படியெல்லாம் அவன் சிரித்ததாக அவனுக்கு ஞாபகமேயில்லை. ஆனால் அப்போது வந்தது, ஏன் எதற்கென்று தெரியாமல் வந்தது.
“நீங்க தேறாத கேஸ்” என்று சலித்துக் கொண்டே அவள் எழ,
“எங்கடி போற?” என்று அவளின் இடுப்பை அணைத்து அப்படியே படுக்கையில் சரிந்தான்.
“விடுங்க, என்னை விடுங்க” என்று அவள் திமிற,
“அதெல்லாம் விட முடியாது, அப்போ இருந்து தாறுமாறா உன் டிரஸ் கலைஞ்சிருக்கு, இப்போ எனக்கு அதை களைச்சே ஆகணும்” என்று சரசமாய் பேச,
“தோடா டைலாக் செமையா இருக்கு” என்றாள் நக்கலாக.
“பின்னே, எழுத படிக்க தான் தெரியாது, பேச நல்லா வரும், ஆனா பேச ஆள் தான் இதுவரை இல்லை, இனி உன்னை விடறதா இல்லை” என்றான் கெத்தாக.
“விடுங்க, விடுங்க, திட்டிடப் போறேன்” என அவள் மீண்டும் திமிற,
அவளை அசைய விடாமல் மேலும் இறுக்கியவன், “திட்டேன், கேட்கறேன்” என்றான் அதற்கும்.
“மூடிட்டு போடான்னு சொல்லிடுவேன், எனக்கு தெரிஞ்ச பெரிய கெட்ட வார்த்தை அது”
இன்னும் சத்தமாய் சிரித்துக் கொண்டே, “மூடிட்டு போடான்னாலும், போடா மூடிட்டுனாலும் ஒன்னு தான், ஆனா நீ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, வேணும்னா மரியாதையா வாய் மூடி பேசவும்னு சொல்லேன்” என்றான் இலகுவான பாவனையில்.
“செமையா பேசறீங்க நீங்க” என்றாள் திமிறலை கைவிட்டு.
அதுவே போதுமானதாக இருக்க, அவளை ஒரு திருப்பு திருப்பி மேலே போட்டு கொண்டவன், “பேச்சை விடு, வேற என்னெல்லாம் என்கிட்டே செமையா இருக்கு சொல்லு” என,
“அதெல்லாம் சொல்ல முடியாது” என்று முறுக்கினாள்.
“இல்லை சொல்லி தான் ஆகணும்” என்றான் பிடிவாதமான குரலில்.
“என்ன சொல்ல? எல்லோர் முன்னமும் கொஞ்சமும் தயக்கம் இல்லாம கால் பிடிக்கறீங்க, வீட்டுக்கு வந்தா யாரோ மாதிரி தள்ளி நிக்கறீங்க, பயந்து கத்தினா கட்டி பிடிக்காம தோள் பிடிக்கறீங்க” என அவன் செய்த குற்றங்களை அடுக்க,
“பின்னே தள்ளி நிக்காம என்ன பண்ணுவேனாம்?” என்ற மருதுவின் குரல் ஏகத்திற்கும் இளகி இருந்தது.
ஜெயந்தி என்ன என்பது போல பார்க்க “அடிச்சு விரட்டி இருக்கேன், அது எதுவுமே இல்லாம நீ வீட்டுக்கு வரவும் அப்படியே உன்னை எடுத்துக்குவேனா தப்பில்லையா?” என்றான் நெகிழ்ந்த குரலில்.
“அட போடா, நீயும் உன் ரூல்ஸ்சும். பேசாம என்னை விட்டுட்டு போய் தூங்குங்க, என் பெட்ல என் தலையணையை பிடிச்சிகிட்டு” என்று மீண்டும் திமிர ஆரம்பித்தாள்.
“அது எதுக்கு எனக்கு நீ இருக்கும் போது” என்று அவனின் அணைப்பு மீண்டும் இறுகியது.
“ஒன்னும் வேண்டாம் போங்க போங்க” என்று மீண்டும் தள்ளி விட ஆரம்பிக்க,
“பொண்ணுங்க வேண்டாம்னா வேணும்னு அர்த்தமாம்” என்றான் அவன்.
“அது எவனோ கிறுக்கன் சொன்னது, பொண்ணுங்க எப்படின்னு வரையறுக்க எவனாலயும் முடியாது” என்று கோபமாய் பேச,
“பொண்ணுங்க ஆராய்ச்சி எதுக்கு எனக்கு? நீ மட்டும் போதும் எனக்கு!” என்று மருது எதுகை மோனையோடு பேச,
பதில் பேச வந்தவளின் அதரங்கள் மருதுவினால் பூட்டப்பட, அங்கே சிறு யுத்த களம் தான்.
கலைந்த ஆடையை களைந்து, களைப்பை ஓரம் கட்டி, களிப்பை மட்டுமே முன்னிறுத்தி, மருது அவளுள் செய்த ஜாலங்கள் அனேகம்.
இருந்தாலும் அவளை தள்ளி வைத்த கோபம் ஜெயந்திக்கு அடங்கவேயில்லை, வாய் மூடி பேசவும் போன்ற மரியாதையான வார்த்தைகள் அவள் பேசியது அனேகம்.
இரவு முடிந்து விடியல் வந்த போதும் ஜெயந்தியின் பேச்சுக்கள் ஓயவில்லை, மருதுவும் அவளை விடவில்லை.
கடைசியாய் ஜெயந்தி கேட்ட வார்த்தையில் மட்டுமே விட்டான், விட்டு விட்டாலும் அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரிக்க ஆரம்பிக்க, “எதுக்கு சிரிக்கறீங்க, சிரிக்காதீங்க” என்று மீண்டும் ஒரு அடி தடி ஆரம்பமாகியது.
பின்னே அவள் கேட்டது, “ரெண்டு வருஷத்தை எல்லாம் ஒரே நாள்ல காம்பன்சேட் பண்றீங்களா” என்று,
அவன் சிரிக்கவும், “ஒரே நைட்ல எல்லாம் குழந்தை பிறக்காது” என்றும் சொல்ல,
“சரி நாளைக்கு நைட் திரும்ப டெஸ்ட் பண்ணலாம்” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல,
“ஏன் இன்னைக்கு நைட் என்ன பாவம் பண்ணிச்சு” என்று சண்டை போட்டுக் கொண்டே சொல்ல,
மீண்டும் மருதுவிடம் ஒரு அடக்க முடியாத சிரிப்பு!
சிரிக்கும் மருதுவை தான் ஆசையாய் பார்த்திருந்தாள் ஜெயந்தி, பின்பு தான் சொன்னதை உணர “அச்சோ” என்று அவளின் தலையில் அவளே தட்டிக் கொண்டாள்.
அவளின் கையை பிடித்துக் கொண்டவன் “என்னவோ கொஞ்ச நாளா எனக்கு என்னோட வாழ்க்கையே பிடிக்காம போயிடுச்சு, தனியாவே வாழ்ந்து தனியாவே சாகவும் போறேனோன்னு ஒரு சொல்ல முடியாது பயம். நான் என்ன பண்ணியிருந்தாலும் என்னோட திரும்ப வந்துட்ட” மிகவும் நெகிழ்ந்து சொல்ல,
“சும்மா சும்மா இதை சொல்லக் கூடாது, அவ்வளவு சீக்கிரம் எல்லாம் என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது பெல் பாட்டம் முதலாளி” என்று கிண்டல் செய்து சூழலை இலகுவாக்க முற்பட்டாள்.
அப்போதும் அவனின் முகம் மாறவில்லை.
“திரும்பவும் நான் இந்த மாதிரி எல்லாம் ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கு, அப்போவும் என்னை விட்டு போக மாட்ட தானே”
“திரும்பவும் எதுவும் செய்ய மாட்டீங்க எனக்கு நம்பிக்கையிருக்கு, செஞ்சாலும் நான் போக மாட்டேன் சரியா, இந்த பேச்சை விடுங்க!” என்று அவள் சீரியஸ் மோடிற்கு மாறினாள்.
“சரி” என்பதாய் தலையசைத்தாலும், அவன் ஒரு உணர்ச்சிவயப்பட்ட சூழலிலேயே இருப்பது புரிய, அதற்கு மேல் என்ன செய்வது, என்ன பேசுவது என்று ஜெயந்திக்கு தெரியவில்லை.
ஒன்றும் பேசாமல் மருதுவை கீழே தள்ளி, அவன் மேல் ஏறி படுத்துக் கொள்ள, அவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை, ஜெயந்தியை அணைத்து பிடித்துக் கொண்டான்.
அமைதியாக அணைப்பில் இருந்தவர்களை, மெதுவாக உறக்கம் ஆட்கொள்ள, விடாமல் பெல் அழுத்தும் சத்தத்தில் மருது விழித்தான், அப்போதும் ஜெயந்தி விழிக்கவில்லை, சமையல் செய்யும் அம்மா தான் வந்திருப்பார் என்று புரிந்து எழாமலேயே செக்யுரிடிக்கு இன்டர்காமில் அழைத்து “அவங்களை நாளைக்கு வர சொல்லுங்க” என்று சொல்லி விட்ட உறக்கத்தை தொடந்தான்.
இப்படியாக ஜெயந்தி எழும்போது மதியமாகியிருக்க, திரும்பி மருதுவை பார்த்தால் அவனும் விழித்து தான் இருந்தான். ஆனால் எழவில்லை. அவளோடான நிமிடங்களை இழக்க மனமேயில்லை.
விழித்ததிலிருந்து “யாருமேயில்லை உனக்கு, இவள் மட்டுமே, இவளில்லாமல் வாழ்க்கையுமில்லை உனக்கு, கோபம் வந்தால் சண்டையிடு, ஆனால் போ என்ற வார்த்தை ஏன் வருகின்றது, வரக் கூடாது, உண்மையில் அவள் விட்டு போய்விட்டால் என்ன செய்வாய், யாருமில்லாத போது தனியாய் இருந்து கொண்டாய், இனி முடியுமா உன்னால், முடியாது, நிச்சயம் முடியாது” என்று தான் அத்தனை நேரமும் உறங்கும் அவளை பார்த்தபடி எண்ணிக் கொண்டிருந்தான்.
“என்ன இன்னைக்கு ஸ்டோர்ஸ் போகலையா? இன்னும் உங்க மொபைல் நான் சரி பண்ணலை. அங்க எதுவும்னா நமக்கு தெரியாது, கிளம்புங்க முதல்ல” என்று அவனை கிளப்பினாள்.
மனமேயில்லாமல் தான் எழுந்து சென்றான்.
வாழ்க்கை வரமாவதும் சாபமாவதும் நம்மை மீறி நடக்கும் விடயங்கள் என்றாலும், சில சமயம் நாமாயும் அதை தேடிக் கொள்வது உண்டு.
மருது அப்படித்தான், அவனின் வாழ்க்கையை வரமாயும் அவனே மாற்றினான், பின்பு சாபமாயும் அவனே தான் மாற்றினான்.
அவன் குளித்து வருவதற்குள் அவர்களுக்கு பாலும், முட்டையும், பிரட் சாண்ட்விட்சும் மட்டும் விரைவாய் செய்து விட்டாள், பின்னே அப்படி ஒரு பசி. குளிக்கவெல்லாம் இல்லை, உடை மட்டும் மாற்றி வந்து நின்று கொண்டாள்.
மருது குளித்து சாமி கும்பிட பூஜை அறை செல்வதை பார்த்ததும் குரல் கொடுத்தாள், “விளக்கேத்திடுங்க, நான் தலைக்கு குளிச்சிட்டு வர நேரமாகும்” என்று. பேச்சுக்கள் இயல்பாய் வந்தது.
அவன் கடவுளை வணங்கி வெளியே செல்லும் உடை அணிந்து உணவு மேஜை வர, அங்கே பார்த்து உணவு மேஜை மேல் சமைத்ததை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஜெயந்தியை தான்.
ஒரு லாங் ஸ்கர்ட், குட்டி டாப்ஸ், தலை முடியை தூக்கி போனி டெயில் போட்டு, முகத்தை கழுவியிருந்தால், ஆனால் ஈரத்தை துடைக்கவில்லை. ஆங்காங்கு ஈரத் துளிகள், நெற்றியில் பொட்டில்லை, ஒரு அயர்வான தோற்றம், அவளை அந்த நொடி பேரழகியாய் தான் மருதாச்சலமூர்தியின் கண்களுக்கு காண்பித்தது.
ஜெயந்தியிடம் முதலில் மருதுவை கவர்ந்தது அவளது வதனம் அல்லவே, அவனின் லகான் கட்டிய குதிரை அல்லவா, யாரையும் கவனியாத அவளின் பாங்கு தானே!
நின்று பார்த்துக் கொண்டிருந்த அவனின் நினைவுகளை கலைத்தது அவளின் குரல், “எனக்கு தெரியும் இது உங்களுக்கு வயிறு நிறையாதுன்னு இப்போ சாப்பிட்டு கிளம்புங்க, நான் சமைச்சிட்டு கூப்பிடறேன்” என்றாள்.
அதனை காதில் வாங்கியபடி பூஜை அறை சென்றவன் கையில் சிறிதாய் குங்குமத்தை எடுத்து அவளின் அருகில் வர, “நான் அழுக்கு” என்று பின் நகர்ந்தாள்.
விடாமல் அவளின் முகத்தை பிடித்து நெற்றியில் குங்குமம் வைத்தான். ஜெயந்தியின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு.
ஒரு புன்னகையோடே மருது அமைதியாய் அமர்ந்து உண்ண, அவளும் அருகமர்ந்து உண்ட வேகத்திலேயே அவளின் பசி தெரிய, “எதுவும் வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா?” என்றவனிடம்,
“வேண்டாம் நான் சமைக்கிறேன்” என்று அவள் சொல்ல,
“என்னை கொடுமை பண்றதுன்னு ஒரு முடிவோட இருக்க” என்று சன்ன சிரிப்போடு சொல்ல,
“ஆமாம், ஆமாம்” என்று விளையாட்டு போல சொன்னவள், உடனேயே “நான் நல்லாவே சமைக்கலையா?” என்று சீரியஸ் மோடிற்கு மாறினாள்.
“சே, சே, சும்மா சொன்னேன். சூப்பர்ன்னு சொல்ல மாட்டேன். ஆனா மோசமில்லை” என்று உண்மையாய் மருது சொல்ல,
“அச்சச்சோ, சமைக்க கத்துக்கணும்” என்று அவள் இன்னும் சீரியசாய் சொல்ல,
“எப்படி இருந்தாலும் நான் சாப்பிடுவேன், எனக்கு பிரச்சனையில்லை” என்று அவன் சொல்ல,
“தோடா, நீங்க சாப்பிடுவீங்க, நான் எப்படி சாப்பிடுவேன், எனக்கு ருசியில்லைன்னா, சாப்பாடு குறைவா இறங்கும், இல்லை சாப்பிட முடியாது” என்று அப்படி ஒரு கவலையான குரலில் அவள் சொல்ல,
மருது மீண்டும் பெரும் குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தான்.
“ஹல்லோ முதலாளி என்ன சிரிப்பு?” என்று ஜெயந்தி கோபிக்க,
“நேரமாச்சு நான் கிளம்பறேன்” என்று மருது வேகமாய் வெளியேறினான்.
“அச்சோ இருங்க, உங்க ஃபோன் கத்துக் கொடுக்கறேன்” என்று அவள் காற்றோடு தான் பேசிக் கொண்டிருந்தாள்.
என்னவோ அந்த நொடி வாழ்க்கை இருவருக்கும் வெகு நிறைவாய் தோன்றியது.
உள்ளிருந்த ஜெயந்தியின் முகத்திலும் புன்னகை, வெளியில் சென்ற மருதுவின் முகத்திலும் புன்னகை.
ஆனால் இன்னும் அவனின் ரகசியங்கள் அவனோடே தான்!
முகத்தில் புன்னைகை இருந்தாலும் அதனை யோசித்துக் கொண்டே தான் நடந்தான்.
ஜெயந்தியிடம் சொல்லும் அளவிற்கு நம்பிக்கை வரவில்லையா இல்லை சொன்னால் எப்படி எடுப்பாளோ என்ற பயமா, ஏதோ ஒன்று சொல் என்று மனம் சொன்னாலும், அறிவு தேவையில்லை சொல்லாதே என்று தடுத்தது.
மனமா அறிவா என்று ஒருபுறம் ஒரு போராட்டம் நடந்து கொண்டே இருந்தது.
Advertisement