Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு :
கௌசி மனது கலவரமாய் உணர்ந்தது போல, எல்லாம் கலவரமாய் தான் நடந்தது.
நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி இடையில் வர, அவனின் கன்னத்திற்கு சென்ற கை இவளின் தலையில் அடித்தது.
வீடே ஸ்தம்பிக்க, ரவி எல்லோரையும் விட ஸ்தம்பித்து விட்டான்.
விஷயம் இது தான், விஷேஷம் முடிந்து வீட்டில் வீட்டினர் மட்டும் இருக்க, அதாவது பாட்டி தாத்தா, அவரின் மக்கள், மக்களின் மக்கள், பேரப் பிள்ளைகள், மாப்பிள்ளைகள் இப்படி, உடன் விசாலியும் கேசவனும் சந்தோஷும் மட்டும்.
விசாலி வீட்டினர் கூட கிளம்பியிருந்தனர். கேசவனின் சில சொற்ப உறவுகள் மட்டும் ரவி அழைத்து, வளைகாப்பிற்கு வந்திருக்க அவர்களும் கிளம்பியிருந்தனர்.
இவர்களும் கிளம்புவதற்காக சொல்ல இருக்க, சரியாய் அந்த நேரம் சந்தோஷ் ரவியிடம் ஏதோ சொல்ல…
“விளையாடாத சந்தோஷ்” என்ற ரவியின் குரல் குரல் ஏகத்திற்கும் சத்தமாய் ஒலிக்க, எல்லோரும் என்னவோ ஏதோ வென்று பதறினர்.
கேசவன் “என்ன சந்தோஷ்?” என, ஷர்மி அவர்களின் அருகில் சென்றாள் “என்னடா அண்ணா?” என்றபடி.
இப்போது சந்தோஷ் அவனின் அப்பாவை பார்த்தவன் “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் பா” என்றான்.
அத்தனை பேரும் அதிர, “டேய் சும்மா விளையாடாத தொலைச்சிடுவேன்” என்று சேரை தள்ளி விட்டு ரவி எழுந்த வேகத்திற்கு ஷர்மி சென்று சந்தோஷின் கையை பிடித்துக் கொண்டவள்.
“இருங்க, இருங்க கேட்போம்” என்று ரவியை சமாதானம் செய்து,
“அண்ணா ஏன் இப்படி பேசற? நீ பேசறது தப்பு, நீ கேட்டதால மட்டும் தான் கல்யாணம் பேசினோம்”  
“எஸ், கௌசி என் லைஃப்ல வந்தா லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சு தான் கேட்டேன். ஆனா இப்போ அப்படி இருக்கும்னு தோணலை அதனால வேண்டாம்” என்றான் ஸ்திரமான குரலில். கேட்டிருந்த கௌசிக்கு கண்களில் நீர் நிறைந்தது.   
சந்தோஷ் ஏற்கனவே திருமணம் வேண்டாம் என்பதில் உச்சபட்ச பதட்டத்தில் இருந்தவன், இப்போது கௌசியை வைத்து பேசவும் கௌசியை தப்பு சொல்கிறான் என நினைத்து…
“சந்தோஷ்” என்று கத்தி அவனை அடிக்க கை வீச, அவனின் கன்னத்திற்கு பட வேண்டிய அடி நொடியில் ஷர்மி இடையில் வர. அவளின் பக்கவாட்டு தலையில் பட்டது.
“ஷர்மி” என்ற மூவரும் கத்தலும் ஒருங்கே கேட்டது கேசவன் சந்தோஷ் ரவி என…
ஷர்மிக்கு அது பலமான அடியே தலை சுத்திப் போக, “என்னடி பண்ற, அறிவில்லையா உனக்கு?” என்று கத்தி, அவளை பற்றி தன் புறம் இழுக்கவும், அடியினால் தலை சுற்ற. அவன் இழுத்ததும் தலை சுற்ற நிலை தடுமாறினாள்.
வேகமாக அவளை அணைத்து பிடித்து நிறுத்தியவன் அவளை சோபாவில் அமர வைத்து “யாராவது ஐஸ் கொண்டு வாங்க” என்று கத்தினான்.
அமைதியாக சோஃபாவில் சாய்ந்து கொண்டாள், எதிலேயோ பலமாய் இடித்துக் கொண்டால் வலிக்குமே அப்படி ஒரு வலி.
பக்கத்தில் யாரும் செல்லவில்லை, ரவியின் கோபத்தில் பதட்டதில் தள்ளி நின்றனர்.
சந்தோஷும் ஷர்மியிடம் “அவர் என்னை அடிச்சா நான் வாங்கிக்கறேன். உன்னை யாரு நடுவுல வர சொன்னா, கீழ விழுந்திருந்தா” என்று கோபமாய் பேசினான்.
ரவியின் பெரிய தங்கை விரைவாய் ஐஸ் எடுத்து வர, அதனை வாங்கி சோஃபாவில் அவளின் பின் போய் நின்ற ரவி, நின்று கொண்டே வைக்க ஆரம்பித்தான்.
கேசவன் தளர்ந்து அமர்ந்து விட்டார்..
சில நிமிட அமைதி.. அங்கே இருந்து குட்டி ஒன்று அவளின் அன்னையிடம் “மா என்ன ஆச்சு?” என்று கேட்க.. அந்த சின்ன குரல் அந்த பெரிய ஹால் எங்கும் கேட்டது.
“ஏம்பா இப்படி சொல்ற?” என்று ரவியின் தாத்தா சந்தோஷிடம் கேட்க,
கௌசி இன்னும் அதிர்விலேயே நின்றிருந்தாள். இவன் தான் திருமணதிற்கு கேட்டான் என்பதே அவளுக்கு புதிய செய்தி, அப்படி கேட்டவன், இப்போது வேண்டாம் என்று சொல்கிறான் என்பதுவும் ஒரு செய்தி.
சந்தோஷ் அமைதியாக இருக்க,
கேசவன் பேசினார் இப்போது, “சந்தோஷ் இது விளையாட்டில்லை. அப்படி எல்லாம் கல்யாணத்தை நிறுத்த முடியாது” என்றார் உறுதியான குரலில்.
சந்தோஷ் பேச ஆரம்பிக்கும் முன்னமே…
“அப்படி என்ன வேண்டாம்னு சொல்றவனுக்கு என் பொண்ணை குடுக்கணும்னு, ஒன்னும் குடுக்க வேண்டாம். இவங்க பணம் காசு இருந்தா இவங்க வரைக்கும். என் பொண்ணு சொக்க தங்கம். உங்க குடும்பத்துல குடுக்கணும்னு அவசியமேயில்லை. நான் வேண்டாம்னு சொன்னேன் என் பேச்சை யாரு கேட்டா?” என்று சீதா படபடவென்று பேசினார்.
சந்தோஷின் பார்வை ஷர்மியை தொட்டு ரவியில் நிலைத்தது.
சந்தோஷின் பார்வை ரவிக்கு புரியவில்லை. ஆனால் ஷர்மிக்கு நன்கு புரிய “அண்ணா டேய்” என்றவள், “உனக்கு அறிவே கிடையாது, இவங்களுக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்றியா?” என்று சீதாவை குற்றம் சாட்ட..
“ஆம்” என்பது போல அசையாமல் நின்றான்.
வீடே இப்போது சீதாவை பார்க்க, அவ்வளவு தான் அவர் பொங்கி விட்டார் “இதென்ன புது கதை” என்று ஆவேசமாய் கிளம்ப…
“சந்தோஷ் தெளிவா பேசு, கௌசியை நீ வேண்டாம்னு சொல்ற, அதை மட்டும் சொல்லு” என்று ரவி வார்த்தைகளை கடித்து துப்ப…
“நான் அவங்களை வேண்டாம்னு சொல்லலை. அவங்களோட கல்யாணம் தான் வேண்டாம்னு சொல்றேன்” என்றான்.
வீடே வேடிக்கை பார்க்க, அவனோட மிங்.கிள் ஆகியிருந்த சகலை கும்பல் அவனை இப்போது முறைத்து பார்த்து நின்றது.  
“சந்தோஷ்” என்று கேசவன் ஒரு அதட்டலிட, ரவியின் கை எதற்கும் ஐஸ் வைப்பதை நிறுத்தவில்லை. அங்கு வீக்கம் வருகிறதா என்று வேறு பார்வை ஆராய்ந்து கொண்டிருந்தது. வெளியில் காண்பித்து கொள்ளாவிட்டாலும் மனது முழுக்க ஒரு பதைப்பு அவளை அடித்து விட்டோம் என்று. தெரியாமல் தான் என்றாலும் ஒரு வேளை தடுமாறி கீழே விழுந்திருந்தால் நினைக்க கூட பயம் கொடுத்தது.   
இந்த கலாட்டாவில் ஷர்மிக்கு ஒரு அதீத சோர்வு, உடன் வலி, விட்டிருந்தால் சந்தோஷை அவள் அடித்திருப்பாள், “இதென்ன சிறுபிள்ளைதனமான பேச்சு” என்பது போல.       
“நான் சொல்றது ரொம்ப சில்லியா தெரியலாம் பட் ஐ மீன் இட்” என்றான் சந்தோஷ்.  
“கௌசி என் லைஃப்ல வந்தா என் லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சேன். அது தான் மாமாகிட்ட பொண்ணு கேட்டேன். ஆனா எனக்கு அவங்கம்மாவை பிடிக்கலை. எப்பவும் ஏதாவது பேசறாங்க சண்டை செஞ்சு விடறாங்க”
“எனக்கு தெரியும் இது ஒரு காரணம் இல்லைன்னு. ஆனா எனக்கு இது பெரிய காரணம். அம்மான்றவங்க ரொம்ப ஸ்பெஷல் இல்லையா.. நாளைக்கு கல்யாணம் பண்ணின பிறகு நீ உங்கம்மாவோட பேசக் கூடாது அவங்க இங்க வரக் கூடாதுன்னு சொன்னா அது சரி கிடையாதே”
“ஆனா அவங்க வந்தா என்னோட வாழ்க்கையில நிம்மதி இருக்காதுன்னு நினைக்கிறேன். எப்போ இவங்க வந்தாலும் ஷர்மிக்கும் மாமாக்கும் நடுவுல பிரச்சனை தான். எவ்ளோ நல்லா ஃபங்க்ஷன் நடக்குது. ஆனா என்னவோ மாமா ஷர்மி ரிச்ன்றதுனால தான் அவளை கவனிக்கற மாதிரி பேசறாங்க. அவங்க சொந்த பையனை கீழ இறக்கி பேசறாங்கன்னு சென்ஸ் கூட இல்லை”  
“அதை மனசுல ஃபீல் பண்ணினா அவங்களே வெச்சிக்கலாம். எல்லோர் கிட்டயும் சொல்றாங்க. அதை எல்லோரும் பேசறாங்க, அஃப்கோர்ஸ் தப்பா பேசலை. இவங்க ஏன் இப்படி பேசறாங்கன்னு தான் பேசறாங்க. ஆனா நான் வந்த உடனே எனக்கு தெரிஞ்சிடுமோன்னு தயங்கி பேசறாங்க”
“நேத்து இருந்து இவங்க எல்லோரும் என் கிட்ட நல்லா சகஜமா பேசினாங்க. ஆனா இன்னைக்கு இவங்கனால தள்ளி நிறுத்தறாங்க”
“எனக்கு அதையெல்லாம் விட, அவங்க பையனை அவங்களுக்கு தெரியவேயில்லை, சும்மா பணம் பணம் பேசறாங்க, உங்களுக்கெல்லாம் தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியாது”
“எங்களோட பணம் அவருக்கு தேவைன்ற நிலைமையில அவர் இல்லவே இல்லை. இப்போ இந்த நிமிஷம் அவர் கிட்ட எல்லாம் வாங்கிட்டு அவர்கிட்ட ஒத்தை பைசா இல்லாம விட்டா கூட சில வருஷத்துல ஒரு பிசினெஸ் சாம்ராஜ்யமே உருவாக்குவார்”
“இந்த மாதிரி ஒரு பிசினெஸ் லைஃப்ல தண்ணி பொண்ணுங்க எல்லாம் சாதாரணம். ஆனா ஒரு பழக்கம் கூட கிடையாது. அப்படி இருக்குற அவர் பையனை பத்தியே அவங்கம்மா பேசறாங்க”
“நாளைக்கு எங்க வீட்ல பொண்ணு குடுத்துட்டு என்னை எங்கப்பாவை எல்லாம் விமர்சிக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.. இந்த டென்ஷன் எல்லாம் எனக்கு வேண்டாம்.. இதுக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம் சிங்கள் லாவே இருந்துடுவேன்” என்று சொல்ல..

Advertisement