Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு :
எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம்! இதோ ஒரே வாரம், நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது.
சீதா இரண்டு நாட்கள் முடியவே முடியாது, மற்ற மூன்று பெண் மக்களுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ அப்படி தான் பார்க்க வேண்டும். இவ்வளவு வசதியாய் பார்த்தால் அவர்களுக்குள் வேற்றுமை வரும். அதுமட்டுமில்லாமல் கேசவனின் வாழ்க்கை முறை குறித்தும் கேள்வி எழுப்ப…
சீதாவின் மாமனார் மாமியாரோ “எல்லா பொண்ணுங்களுக்கும் நாங்க தான் மாப்பிள்ளை முடிவு பண்ணினோம். கௌசிக்கும் நாங்க பண்றோம். உனக்கு பொண்ணோட அம்மாவா வந்து நிக்கணும்னா நில்லு, இல்லை வீட்ல இருந்துக்கோ” என்று விட்டனர்.      
மாமனார் மாமியாரை மீறி அவரால் எதுவுமே முடியவில்லை. இன்னும் வாசனும் அவரிடம் பேசவில்லை, ரவியியும் அவரிடம் பேசவில்லை. அதையும் விட சீதாவும் சென்று பேசவில்லை.
ஷர்மிளாவும் ரவியும் வந்த போது ஷர்மிளாவிடம் பேசினார் “எப்படி இருக்கு உடம்பு?” என்று அதுவும் அவளாக பேசின பிறகு.
ஷர்மிளா வித்தியாசம் எதுவும் காண்பிக்கவில்லை, வீடு வந்ததுமே சகஜமாக இரண்டொரு வார்த்தை பேசினாள் கௌசியின் நிச்சயம் குறித்து, “இன்னும் வேலைகள் எதுவும் செய்ய வேண்டுமா?” என்பது போல. அதன் பிறகே இந்த சீதா அவளிடம் பேசினார். ரவி ஷர்மியிடம், நீ பேசு என்றும் சொல்லவில்லை பேசாதே என்று சொல்லவில்லை.        
கௌசி “அப்பா தான் சரின்னு சொல்ல சொல்லிட்டார்” என்று விட்டாள். உண்மையில் வாசன் தான் “சரி” என்று சொல்லவும் சொல்லியிருந்தார் வீட்டினரின் முடிவாய். அதன் பிறகே ரவி சொல்லியிருந்தான்.
நேற்று மாலை நிச்சயம் வெகு சிறப்பாய் முடிந்திருந்தது, இன்னும் இருபது நாட்களில் திருமணம் கும்பகோணத்தில், பின் ரிஷப்ஷன் சென்னையில்.
சீதா முகத்தை தூக்கி வைத்திருக்க, மற்ற பெண்கள் அவரை பிடி பிடி யென்று பிடித்து விட்டனர். “எங்க தங்கைக்கு வசதியான வாழ்க்கை அமைஞ்சா நாங்க பொறாமை படுவோமா இல்லை வேண்டாம்னு சொல்வோமா இல்லை நாங்க எல்லாம் வசதியே இல்லாம இருக்கோமா? நீ செய்யறது சரியில்லைம்மா” என்று.
அதையும் விட அவர் ஏதோ பேசி அண்ணி கோபித்து சென்றது, பின்னர் ஹாஸ்பிடலில் இருந்தது, வாசன் அவருடன் பேசாதது எல்லாம் தெரிந்து “ஏன் இப்படி பண்ற?” என்று இன்னும் திட்ட வைத்திருக்க, அமைதியாய் அடக்கி வாசித்தார்.
சந்தோஷ் எல்லோருடனும் நன்றாய் பழகி விட்டான். முக்கியமாய் அவனின் சகலைகளுடன். அது ரகளையாய் கலை கட்ட, எப்போதும் போல ரவி எல்லோருடனும் பேசினாலும் தள்ளி தான் நின்றான்.
பொதுவிலேயே அவன் அப்படி தான். இப்போது மனதும் சுணங்கி இருக்க இன்னுமே அமைதியாகி விட்டான்.
ஆம்! ரவியும் ஷர்மியும் அதன் பின்னர் சண்டையிட்டுக்கொள்ளவில்லை. இவள் தனியாய் பழகவேண்டும் என்று முடிந்தவரை அவளின் வேலைகளை அவள் பார்க்க நினைக்க, ரவியும் நெருங்கவில்லை. பேச்சுக்கள் தேவைக்கு, ரவியின் அக்கறை எங்கேயும் குறையவில்லை ஆனால் நெருக்கமில்லை. 
எப்போதும் ஷர்மிக்கு செய்யும் வேலைகள் எல்லாம் அவனே செய்தான், நடை பயிற்சிக்கு இருவரும் செல்வது, அவளின் மாத்திரைகள் எடுத்துக் கொடுத்து இரவில் பால் கொடுப்பது வரை.   
படுக்கையில் பக்கம் பக்கம் தான். ஆனால் நெருங்கவில்லை, அணைப்பு கூட இல்லை. இருவருமே முயற்சிக்கவில்லை. ஒரு ஒட்டியும் ஒட்டாத தன்மை. இருவருமே அதை உடைக்க வில்லை.
ஆனால் சண்டை சச்சரவு வாக்குவாதம் போல எதுவும் இல்லை. ஒருவரின் அருகாமையில் அடுத்தவர் அமைதியாய் இருந்தனர். அதுவே போதும் என்பது போல.
“ரெண்டு வீட்லயும் ஓகே, பொண்ணு பார்க்கறது எல்லாம் வேண்டாம், நேரடியா நிச்சயம்” என்றான் ரவி.
“ஒஹ், நாம என்ன பண்ணனும்?” என்று ஷர்மி கேட்க,
“நாம பண்ண ஒன்னுமில்லை. அங்க இருந்தா வேலை இருக்கும். நாம அன்னைக்கு காலையில தான் போவோம்” என்றவன்,
“அப்புறம் அடுத்த நாள் உனக்கு வளைகாப்பு பண்ணலாம்னு இருக்கேன். தாத்தா பாட்டிகிட்ட சொல்லிட்டேன். உங்க வீட்ல கூப்பிடறோம். ஆனா அவங்க எதுவும் பண்ணலை, நான் தான் பண்றேன். அவங்க பண்ணினா அவங்க கூட்டிட்டு போகணும். அதனால அவங்க பண்ண வேண்டாம். உங்கப்பா கிட்ட நான் பேசிக்கறேன்” என்று விட்டான்.
அன்றைய சண்டையின் நினைவுகளில் “வளைகாப்பு வேண்டாம்” என்று ஷர்மி சொல்ல..
“ஏன் வேண்டாம்? எனக்கு என் மனைவிக்கு வளைக்காப்பு செய்யணும். எந்த குறையும் இருக்கக் கூடாது” என்று விட்டான் ஒரு மறுத்து பேச முடியாத குரலில்.
ஷர்மியும் அதற்கு மேல் பேசவில்லை!
இதோ அதன் பொருட்டு இன்று ஷர்மி மனையில் அமர்ந்திருக்க, எல்லோரும் நலங்கிட்டு கொண்டிருக்க, பேரனின் மனைவியின் வளைக்காப்பு என்று அந்த தள்ளாத வயதிலும் ரவீந்திரனின் பாட்டியே எல்லாம் முன்னின்று செய்தார்.
அவர் ஏவும் வேலைகளை மட்டும் மட்டுமே அவருடைய இரண்டு மருமகளும் செய்து கொண்டிருந்தனர்.
பெண்கள் எல்லோரும் கண்ணாடி வளையிட்டு முடிக்க, ஆண்கள் முறை வரும் போது வந்த கேசவன் நவரத்தினங்களில் வளை போட்டார், கை கொள்ளவில்லை ஷர்மிக்கு.
ஆம்! ஒரே வளையலில் நவரத்தினங்கள் இல்லை, ஒரு ஒரு ரத்தினமும் ஒரு வளவி, வைரத்தில் ஆரம்பித்து முத்து பவளம் மரகதம் என்று அத்தனையும் எப்படியும் அரைகோடி அளவில் பெரும். உறவுகள் அத்தனை பேரும் அசந்து தான் பார்த்தனர்.
“டி.. என்ன உன் வீட்டுக்காரர் இத்தனை செய்யறார்” என்று விசாலியின் அம்மா காதை கடிக்க…
“அவர் பொண்ணு அவர் செய்யறார் உனக்கென்னம்மா? நீ வாயை மூடிட்டு பேசாம இரு. யார் காதுலயாவது விழப் போகுது?”
“ஏன்? ஒரு ரெண்டு உன் கைல குடுத்து போட சொன்னா என்ன? எல்லாம் அவரே போடணுமா?” என்று அப்போதும் விசாலியின் அம்மா பேச..
“மா, பேசாம இருங்க. ஏற்கனவே இப்படி ஏதோ பேச போய் தான் மாப்பிள்ளை எங்களை வளைக்காப்பு செய்ய வேண்டாம் அவரே செய்யறேன்னு சொல்லிட்டார். இப்போ நீ எதுவும் பேசி வைக்காதே. யார் காதுலையும் விழுந்து பிரச்சனை ஆச்சு உன்னை தொலைச்சிடுவேன்” என்று மிரட்டி கொண்டிருந்தார்.
“சரி, இன்னைக்கு விடு, நேத்து பொண்ணுக்கு நகை போட்டப்போ உன்னை போட சொல்லியிருக்கலாம் தானே. அதையும் ஷர்மிளா தான் போட்டா”
“அதனால என்ன? அவங்கப்பா அவகிட்ட குடுத்து போட சொன்னார் போட்டா. ஏன் வேற எல்லாத்துக்கும் நானும் அவரும் தானே முன்ன நின்னோம். அதெல்லாம் உனக்கு கண்ணு தெரியலையா? அவ அம்மா இருந்தா என்ன பண்ணியிருப்பாங்க? பொண்ணு கைல குடுத்து தானே போட சொல்லியிருப்பாங்க. அவங்கப்பாவும் அது தானே செஞ்சார். மா, இனி ஒரு வார்த்தை ஏறுக்குமாறா பேசினாலும் இனி எங்க வீட்டு விஷேஷதுக்கு நான் உங்களை கூப்பிட வேண்டாம்னு சொல்லிடுவேன். ஏற்கனவே உன்னால ரெண்டு மூணு முறை அசிங்கப்பட்டுட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்னா இனி கூப்பிடவே மாட்டேன் உங்களை!” என்று கடுமையான குரலில் சொல்லி தனியாய் சென்று நின்று கொண்டார்.
“இவ நல்லதுக்கு சொன்னா இவ ஏன் இவ்வளவு கோபிக்கணும்?” என்று விசாலியின் அம்மா மனம் சுணங்கிய போதும் அதன் பிறகு அமைதியாகிவிட்டார்.                             
“எதற்கு இத்தனை” என்று ரவியே வியந்து தான் பார்த்திருந்தான். அவர் பூட்டிய பிறகு யார் வளை போடவும் கையில் இடமில்லை. அதனால் பின்னர் வந்தவர்கள் எல்லாம் ஆசீர்வாதம் மட்டுமே செய்ய, ரவி வந்தவன் அவளுக்கு சந்தனம் பூசி மஞ்சள் குங்குமம் மட்டும் வைத்து விட,
“என்ன மாமா ஷர்மிக்கு கிஃப்ட் எதுவும் இல்லையா?” என்று சந்தோஷ் வம்பு பேசினான்.
“உங்கப்பா எனக்கு கேப் கொடுக்கவேயில்லையே, நான் எங்கே வளை பூட்ட இப்போ” என்று விட்டான்.
உண்மையில் அவன் எதுவும் வாங்கவில்லை, பாட்டி சொல்லியிருந்தார் “விருந்து மட்டும் சிறப்பா செய்வோம், வேற எதுவும் வேண்டாம் கண்ணுபடும்!” என்று.
அதற்கே ரவி வருகிறவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஷர்மியிடம் கேட்க, அவள் தன் இஷ்டத்தை சொல்லியிருக்க, அதை செய்திருந்தான். ஆம்! எழுவகை ஸ்வீட், காரம் நீட்டாய் பேக் செய்து, அதனுடன் மஞ்சள் குங்குமம் வளையல் எல்லாம் ஒரு ஜூட் ஹேன்ட் பேகில் போட்டு கொடுக்க இருந்தனர்.        
கேசவன் எதுவும் அவர்களிடம் சொல்லியிருக்கவில்லை. எப்படியும் ஏதாவது மகளுக்கு செய்வார் என்று தெரியும். ஆனால் இதனை எதிர்பார்க்கவில்லை.  
நேற்று நிச்சயதிற்கே கௌசிக்கு போட்ட நகைகள் எப்படியும் ஒரு இருபத்தி ஐந்து பவுனாவது இருக்கும்.. இவர்கள் பெண்களுக்கு போட்டதே ஐம்பது பவுன் தான்.. கௌசிக்கும் அது தான் செய்ய இருந்தனர். எதுவும் அதிகம் எல்லாம் கிடையாது எல்லா பெண்களுக்கும் என்னவோ அது மட்டும் தான் என்று தாத்தா முறையாய் கேசவனிடம் சொல்லியும் இருந்தார்.
“எங்களுக்கு பணமோ நகையோ ஒரு பொருட்டல்ல” என்று கேசவனும் சொல்லியிருந்தார்.   
ஒரு வகையில் இன்னும் மணப்பெண்ணுக்கு செய்ய நினைத்தவர், அவர்களுக்கு அதிகமாய் தோன்றினால் என்ன செய்வது என்று தான் குறைவாய் செய்தார். ஆனால் மகளுக்கு அப்படி அல்லவே! திருமணதிற்கே ஏகத்திற்கும் நகை தான். இதில் வளைகாப்பிற்கு இப்படி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
நலங்கு எல்லாம் முடிந்து உணவு உண்ணும் நேரம் வர, விழி பிதுங்கி நின்றாள் ஷர்மி, இலையில் அமர வைக்கப்பட்டதும் கண்கள் கணவனை மட்டுமே தேடியது.
ஏழு வகை சாதம்! ஏழு வகை பொறியல்! ஏழு வகை இனிப்பு! இது இல்லாமல் விருந்திற்கு சாதம், சாம்பார், புளிகுழம்பு, கூட்டு என்று அது வேறு தனியாக. அவளின் இலையில் எழுவகைகள் மட்டுமே!       
கொஞ்சம் கொஞ்சம் தான் வைத்தனர். ஆனாலும் அவ்வளவு உண்ண மாட்டாள். அதை வீண் செய்யக் கூடாது என்றும் சொல்லப் பட்டிருக்க, பயந்து போனவளின் கண்கள் கணவனை தான் தேடின…
ரவி வேறு ஏதோ வேலையாய் இருக்க, கௌசியின் அக்கா தான் பரிமாறிக் கொண்டிருக்க, பக்கத்தில் பாட்டி பக்குவம் சொல்லிக் கொண்டிருந்தார்.
சீதா அந்த பக்கம் வேறு வேலையாக வந்தவர் இவர்களை கவனிக்க, ஷர்மிளா இலையை பார்ப்பதும் சுற்றும் முற்றும் பார்ப்பதுமாய் இருக்க, அவள் கணவனை தேடுவதை உணர்ந்தவர், அங்கே விளையாடிக் கொண்டிருந்த அவரின் பேத்தியை அழைத்து “மாமாவை அத்தை தேடறாங்கன்னு சொல்லு போ” என்று அனுப்பி விட்டார்.
அவளும் போய் “அத்தை, உங்களை தேடறாங்கன்னு சீதா பாட்டி சொல்லி விட்டாங்க” என்றாள் கனகச்சிதமாய்.
என்னவோ ஏதோ வென்று வேகமாய் ரவி வந்தவன் “என்ன?” என்று அவளின் முன் நிற்க…
“இதெல்லாம் மிச்சம் வைக்காம சாப்பிடணுமாம். எனக்கு கொஞ்சம் கூட பசியில்லை” என்றவள், ஒற்றை விரல் ஆட்டி அவனை பக்கம் அழைக்க அவன் அவளிடம் குனியவும், “வாமிட் வர்ற மாதிரி இருக்கு” என்றாள் பரிதாபமாய்.

Advertisement