Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று :
ஷர்மிளா உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பியவன், பின் என்ன நினைத்தானோ எழுந்து அவளின் அருகில் வந்து, “உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே, நான் ஃபாக்டரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்றான்.
பதில் சொல்லவில்லை ஆனால் சரி என்பது போல ஷர்மி தலையசைக்க, ரூமின் வெளியே வந்தான், ஆளுக்கு ஒரு பக்கம் போய்விட கேசவனும் சந்தோஷும் அங்கே அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இப்படி பேச்சுக்கள் சண்டை சச்சரவுகள் எதுவும் அவர்களுக்கு பழக்கமே இல்லை. “என்னடா இது?” என்று சலிப்பாய் இருந்தது கேசவனுக்கு.
இவர்களை பார்த்தவன் திரும்பி சென்று ஷர்மியிடம் “மாமாவும், சந்தோஷும் மட்டும் ஹால்ல தனியா உட்கார்ந்து இருக்காங்க” என்று சொல்ல,
“நான் பார்த்துக்கறேன்” என்றபடி ஷர்மியும் வெளியே வந்தாள்.
“நான் ஃபாக்டரி வரை போயிட்டு வந்துடறேன்” என்று பொதுவாய் சொல்லிவிட்டு ரவி சென்று விட்டான்.
ஷர்மி அமைதியாய் கேசவனின் அருகில் அமர்ந்தவள், “சாரி ப்பா, எனக்கு யாரையும் பேசணும்னு இல்லை, ஆனா என்னவோ எல்லோரும் என்னை நிறைய பேச வைக்கறாங்க. எனக்கு இந்த மாதிரி பிடிக்கவேயில்லை!” என்று சொல்ல,
அவர்களுக்கும் அதே மன நிலை தானே. “நான் விசாலி கிட்ட சொல்றேன்” என்று அவர் சொல்ல,
“அவங்க மட்டுமில்லை, இங்க ரவியோட அம்மா கூட அப்படி தான். அதுலையும் கோபம் வந்துட்டா ரவி இன்னும் பேசறார்” என்றவள், மெதுவாக “பா, எனக்கு ஒரு வீடு வேணும்” என்றாள்.
“வீடா எதுக்கு?” என்றார் கேசவன் அதிர்ச்சியாக.
“ஜஸ்ட் எனக்குன்னு ஒரு வீடு வேணும், இது ரவியோட வீடு, அது உங்க வீடு, எனக்கு வீடு வேண்டும்” என்றாள் பிடிவாதமான குரலில்.
சந்தோஷ் என்ன பேச்சு இது என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
வேகமாக ரவிக்கு அழைத்தான். ரவி காரில் சென்று கொண்டிருந்தவன், இவன் எதற்கு அழைக்கிறான் என்று எடுக்க, அவன் எடுத்ததை உணர்ந்த சந்தோஷ், ஸ்பீக்கரில் போட்டு “என்ன பேபி பேசற நீ, நீ பேசறது மாமாக்கு தெரியுமா?” என்றான் சத்தமாக.
“என்ன சந்தோஷ்?” என்று பேச, வந்த ரவி அப்படியே அமைதியாகி விட்டான்.
“எங்கப்பா கிட்ட நான் கேட்கறது அவருக்கு எதுக்கு தெரியணும்?” என்றாள்.
“பேபி நீ கேட்கறது எல்லாம் தெரியணும்னு அவசியமில்லை. ஆனா இது சின்ன விஷயமில்லை. இது ரவி வீடு, அது உங்க வீடு, எனக்கு வீடு வேணும்னு நீ கேட்கறது….” என்று விஷயத்தை போட்டுடைக்க,
ரவியின் கைகளில் சில நொடி கார் தடுமாறி பின் சீரானது.  
“நான் விளையாட்டுக்கு கேட்கலை, நிஜம்மா தான் கேட்கறேன். என் பேர்ல கொஞ்சம் இடம் எல்லாம் இருக்குன்னு எனக்கு தெரியும். அது எனக்கு வேண்டாம். என் கிட்ட இருக்குற நகை கூட எடுத்துக்கோங்க எனக்கு வீடு வேண்டும்” என்றாள் மீண்டும்.
ரவீந்திரனுக்கு வந்த கோபத்திற்கும் ஆற்றாமைக்கும் எங்காவது கொண்டு சென்று காரை மோதும் ஆத்திரம் அதி வேகமாக கிளம்பியது.
“என்னோட அருமை எங்கம்மாக்கும் தெரியலை. இவளுக்கும் தெரியலை. நான் இல்லாம போனா தான் தெரியும்” என்று அப்படி துவேஷம் கிளம்பியது. முயன்று மனதை நிலைப்படுத்தினான்.   
“எதுக்கு பேபி திரும்ப சண்டை போட்டு மாமாவை விட்டு போகவா?” என்றான் சந்தோஷ்.
“சே, சே, எனக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ? சண்டை போடறனோ, போடலையோ? அவரை விட்டெல்லாம் போக மாட்டேன். என்னால அவரை விட்டெல்லாம் இப்போதைக்கு இருக்க முடியாது. எதிர்காலம் எனக்கு என்ன வெச்சிருக்குன்னு எனக்கு தெரியலை” என்றாள் ஆதங்கமான குரலில்.
“அன்னைக்கு சண்டை போட்டு நான் தான் வீட்டை விட்டு வெளில வந்தேன். அதுக்கு கோபப்பட்டு போடின்னு சொல்லிட்டாங்க. இனி இங்க வராதன்னு சொல்லிட்டாங்க. ரெண்டு நாள் இருக்கலாம் ஒரு வாரம் இருக்கலாம் அதுக்கு மேல உங்க வீட்ல நான் எப்படி இருப்பேன்?”
“அதுக்காக அவர் கிட்ட கெஞ்சிட்டு நிற்க முடியாது இல்லையா நான் வீட்டுக்கு வர்றேன்னு?”       
“உங்களுக்கு தெரியாதது இல்லை, எனக்கு கோபம் வந்தா என்ன பேசுவேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஏதாவது கோபத்துல பேசி, ரவிக்கு கோபம் வந்து என்னை வீட்டை விட்டு போன்னு சொல்லிட்டா எனக்கு போக வீடு வேண்டும்” என்று சொல்ல,
கேசவனுக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. அப்படியே கல்லாய் சமைந்து விட்டார்.
ஒரு ஓரத்தில் காரை நிறுத்தி விட்டான் ரவி. “என்ன நம்பிக்கை என் மீது, நான் போடி! என்று சொன்னாலும் என் கணவன் என்னை விட மாட்டான் என்று தோன்ற வேண்டாமா?” என்று தோன்ற, “ப்ச், இவ்வளவு தானடா நீ வாழ்ந்த வாழ்க்கை” என்று தோன்ற மனதே விட்டுப் போயிற்று.  
“என்ன பேபி நீ இப்படி பேசற?” என்று சந்தோஷ் வருத்தமாய் சொல்ல,
“இல்லடா அண்ணா ரொம்ப யோசிச்சேன், இப்போவே பார், அவங்க வருத்தப்படணும்னு பேசலை, ஆனா எனக்கும் அவங்களுக்கும் சரி வரவே வராது. நான் என்ன பண்ணட்டும்? அப்போ அப்பாக்கு கஷ்டம்!” என்று விசாலியை சொன்னவள்,
“நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகலாம், நானே பொண்ணு பார்த்து வெச்சாக் கூட அவங்க என்னை எப்படி நடத்துவாங்கன்னு தெரியாது இல்லையா?”
“எனக்கும் நிறைய கோபம் வரும், ரவிக்கும் வரும்! ரவிக்கு பிடிச்ச மாதிரி பேசி சண்டை போடாம, அதெல்லாம் எந்த அளவு எனக்கு சாத்தியம் தெரியலை. அதுல அவங்கம்மாவால எனக்கும் ரவிக்கும் பார்க்கும் போதெல்லாம் பிரச்சனையாகி, என்னை விட்டுட்டுப் போயிடறாங்க. அப்போ எனக்கு வீடு வேணும். இல்லைன்னா, எங்கே போவேன் எங்கே போவேன்னு அதுவே ரொம்ப கவலை குடுக்குது” என்று நீளமாய் பேசினாள்.
அலைபேசியை கட் செய்து விடுவோமா என்று நினைத்த சந்தோஷ், பின் ரவி முழுதாக கேட்கட்டும் என்று அப்படியே விட்டான்.
ஷர்மி பேசிக் கொண்டே அவளின் வயிற்றில் கை வைக்க, “என்ன பண்ணுது பேபி?” என்று பதறினான் சந்தோஷ்.
“அண்ணா டேய், ஒன்னுமில்லை, பசிக்குது!” என்று ஷர்மி சொல்லவும்,
“என்ன கொண்டு வரட்டும்?” என்று சந்தோஷ் எழ,
“கௌசி கூப்பிடு அண்ணா, ஏதாவது எனக்கு சாப்பிட குடுப்பா?” என்று அவள் சொன்ன விதம் நெஞ்சை அசைத்தது.
“மாமா” என்று வாசனை கூப்பிட, வாசன் வர, “ஷர்மிக்கு பசிக்குதாம்” என்று சொல்ல, “கௌசி” என்று அவர் அழைத்துச் சொல்ல, கௌசி வேகமாய் சமையலறை விரைந்தாள்.
தங்கையின் அருகில் சந்தோஷ் அமரவும்…
“எனக்கு எதுவுமே தெரியலை, பயமா இருக்கு, அம்மா இருந்தா சமைக்க எல்லாம் கத்து குடுத்தது இருப்பாங்களோ, இப்போ யாராவது சமைக்கறது தான் சாப்பிடறேன். ரவி இருக்காங்க பார்த்துக்குவாங்கன்னு தான் இருந்தேன். இப்போ போ சொல்லிட்டா? எனக்கு சமைக்க தெரியாது, எதுவும் தெரியாது?”
“அப்போ என் பேபியை நான் எப்படி பார்த்துக்குவேன். எனக்கு பயமா இருக்கு” என்று சொல்ல, சொல்லும் போது கண்களில் கண்ணீர் அவளையும் மீறி சிறு கேவல்,
“முட்டாள் பேபி, மாமா அப்படி எல்லாம் விட மாட்டாங்க! அப்படி விட்டாலும் நாங்க இருக்கோம் பேபி, நாங்க பார்த்துக்குவோம், உன்னை நாங்க தனியா எல்லாம் விடவே மாட்டோம்” என்று சொல்லும் போது கௌசி வர அவள் பார்த்தது அழும் அண்ணியை தான்.
“அண்ணி எதுக்கு அழறீங்க?” என்று பதறியவள், “நான் தான் நீங்க வர வேண்டாம் சொன்னேன் தானே, உங்களை யார் வர சொன்னா, இப்போல்லாம் நீங்க அழக் கூடாது, சாப்பிடுங்க” என்று மாலையில் ஷர்மி உண்பதற்காக தயார் செய்து வைத்திருந்த பாசி பயிரை கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு கொடுத்தாள். அவள் உண்ண ஆரம்பித்ததும், மற்றவர்களுக்கும் சிறு கிண்ணத்தில் எடுத்து வந்து கொடுத்தவள், ஷர்மிக்கு மாதுளை பழச்சாறு கொண்டு வந்தவள், “உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும் மாமா ஜூஸ் இல்லை காபியா?” என்றாள்.
“ஒன்னும் வேண்டாம் மா, இப்போ தானே குடிச்சோம்” என்றார்.
“நேரமாயிடுச்சு, இன்னொரு முறை குடிக்கலாம்” என்று சொல்லி மீண்டும் கொண்டு வரப் போக,
“பாரு கௌசி, உன்னை எப்படி பார்த்துக்கறா, இப்போ இந்த டைம் எதுவும் யோசிக்காதே. குழந்தை பிறந்த பிறகு உன்னோட பேபிக்காக என்னோட பேபி எல்லாம் பழகிக்குவா சரியா?” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல சொன்னவன்,
“இவ்ளோ நீ யோசிக்காதே, ரவி உன்னை விட மாட்டாங்க. அப்படியே அந்த மாதிரி ஏதாவது ஆனாலும் நீ தனியா இருக்குற சூழ்நிலை வரவே வராது. நாங்க இருப்போம்! நம்ம கிட்ட வேலை செய்ய ஆளுங்க இருப்பாங்க. மெதுவா நீ எல்லாம் கத்துக்கலாம். உனக்கா விருப்பப்பட்டு கத்துக்கோ, கட்டாயத்துல கத்துக்காதே. அதுக்கான அவசியம் உனக்கு என்னைக்கும் வராது!” என்றான் சமாதானமாய்.

Advertisement