uyirin ularal - episode 32

Advertisement

B.subhashini

New Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 32

அபி அமைதியாக இருக்க ஒவ்வொரு நொடியும் ரிஷிக்கு யுகமாக தெரிந்தது.

" எனக்கு இன்னும் இரண்டு சந்தேகம் இருக்கு " என்றாள் அபி.

" போச்சுடா, இன்னும் தீரவில்லையா உன் சந்தேகம், கேளு. கேட்டு இன்றோடு முடித்துவிடு " என்றான் ரிஷி.

" இவ்வளவு காதல் என்று சொல்கிறவன் எதற்காக நான் ப்ரியா உன் காதலி என்று சொல்லும் போதெல்லாம் மறுத்து பேசாமல் சும்மா இருந்தாய் ?" என்று கேட்டாள்.

" அது வேறு ஒன்றும் இல்லைடி, என்னை போல நீயும் மனுஷ பிறவி என்று நினைத்துவிட்டேன் அதான் " என்றான்.

" என்ன ?" என்று முறைத்தவளிடம்

" சும்மா முறைக்காதே, எனெக்கெல்லாம் உன் பக்கம் எவனாவது வந்தாலே உள்ளே எரியும். அட்லீஸ்ட் உனக்கு அவளை என் காதலி என்று நினைத்தாலாவது ஒரு பொறாமை வராதா ? என்று பார்த்தேன், ஆனால் நீ நளாயினியையே மிஞ்சி போய் இந்தா இவனை யாருவேண்டும் என்றாலும் எதுவும் செய்துகொள்ளலாம் என்று அர்பணித்துவிட்டாய். ஆனால் நான் உன்னிடம் தான் அப்படி மறுத்து பேசவில்லையே தவிர அந்த ப்ரியா தன் மனதில் இருந்ததை வெளிப்படுத்திய உடனே, அம்மா தாயே அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை என்று ஒதுங்கிபோய்விட்டேன். ஆனாலும் அவள் விடவில்லை. சரி அந்த பிசாசு உன்னிடம் எதையும் காட்டிவிடக்கூடாதே என்று அவளை கண்டும் காணாமல் விட்டுவிட்டேன். அப்புறம் அவளது பெற்றோர் அம்மாவிடம் பேசிய மறுநாளே அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை என்று அவர்களிடம் கூறிவிட்டேன். இதில் என் தப்பு எதுவும் இல்லை " என்றான் தோளை குலுக்கியபடி.

" போய் தொலை, அப்புறம் அன்றைக்கு நீச்சல் குளம் அப்புறம் சண்டை போட்ட நைட் நீ நீ " என்று இழுத்தாள் அபி.

" ஏன் விலகி சென்றாய் என்று கேட்கிறியா ? அன்று மட்டும் இல்லை நம் திருமணம் முடிந்த இரவு அதையும் சேர்த்துக்கொள் " என்றான் புன்னகைத்தபடி.

" அப்படியென்றால் எல்லாம் தெரிந்தேதான் வேண்டும்மென்று செய்தாயா ?" என்று கேட்டாள் அபி கோபத்தில்.

" நான் என்ன செய்தேன், எல்லாம் நீதான் செய்தாய். " என்றான் அவன் குற்றம் சாட்டும் குரலில்.

" நானா ? நான் என்ன செய்தேன் ?" என்றாள் அவள்.

" என்ன செய்தியா ? எத்தனை வருட காதல் என் காதல். அது இன்னும் 17வயது பையன் அளவிலேயே நிற்குமா ? " என்று அவன் தொடங்க

" ஓகே ஓகே விடு, விடு " என்றாள் அபி.
" நான் வேறு யாரையாவது திருமணம் செய்து போயிருந்தால் நீ என்ன செய்திருப்பாய் ?" என்றாள் அபி.

" என்ன செய்திருப்பேன், அப்படியே மீதி காலத்தை உன் நினைவோடு ஓட்டியிருப்பேன் " என்றவனிடம்

" பொய் சொல்லாதே சின்னத்தான் " என்றாள்.

" உண்மைதான், நான் நேரத்திற்க்கு ஒருத்தியை மனதில் நினைக்கிற ரகம் இல்லை. நானே நினைத்தாலும் என்னை எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள் " என்றான் ரிஷி.

" உன்னை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா ?" என்றாள் அபி.
சிரித்த ரிஷி தான் போட்டிருந்த டீஷர்ட்டை கழற்றினான்.

" ஏய் என்ன பண்ணுற " என்று முகத்தை திருப்பிய அபியிடம்
" ரொம்ப கற்பனை செய்யாதே, என் முதுகை பார் " என்று சிரித்தான்.

" அதில் என்னத்தை போய் பார்க்க ?" என்றவளிடம்
" பார் தெரியும் " என்றான்.

அதில் ஒரு பக்கத்தில் பெரிய ஸைசில் டட்டூ வரையப்பட்டிருந்தது.
அதை பார்த்தவள் அதனை தொட்டுப்பார்க்க நினைத்த தன் ஆர்வத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினாள்.

" சின்னத்தான் எவ்வளவு பெருசு ?ஆனால் பார்க்க அழகா இருக்கு " என்றாள்.

" ஒழுங்கா பாருடி என் பொண்டாட்டி " என்றான் அவன்

என்னத்தை ஒழுங்கா பார்க்க வேண்டும் என்று நினைத்தவள் அதை உற்று பார்த்தாள்.
" அட பாவி இதிலுமா ?" என்று வாயை பிளந்தாள்.

" நான் பாரினில் படிக்கும் போது என் பிரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து போட்டுக்கிட்டோம். அவரவர் அவரவருக்கு பிடித்ததை போட்டார்கள் நான் எனக்கு பிடித்த உன் பெயரை இந்த டிசைனில் போட்டேன். இதை நீ பார்த்துவிட கூடாது என்றுதான் ஒதுங்கி ஒதுங்கி போனேன்." என்றான்.

" ஆனால் அத்தான் இதையெல்லாம் நீ என்னிடம் சொல்லாமலேயே என்னிடம் ஒரு கணவனுக்கு உண்டான உரிமையை எடுத்துக்கொள்ள உனக்கு உரிமை இருந்ததுதானே " என்றாள் அபி யோசனையுடன்.

" நான் உன்னிடம் ஒரு கணவனாக நடக்க முயற்சித்திருந்தால் நீ மறுத்திருக்கமாட்டாய். நான் எது செய்தாலும் நீ மறுக்க போவதில்லை, ஆனால் நீ ஒரு குழப்பம் பிடித்தவள். எத்தனை முறை என்னிடம் கேட்டுவிட்டாய் ' எனக்கு வாழ்க்கை தருவதற்காகதானே என்னை திருமணம் செய்துகொண்டாய் ' என்று. அந்த நினைப்புடன் நீ இருக்கும் வரை உன்னை தொட என்னால் முடியாது. யூ க்நோவ் யூ ஆர் மை ஏஞ்சல், உனக்காக உன் காதலுக்காக நான் 12 வருடம் தவம் இருக்கிறேன். உன் ஒற்றை சொல் என் வாழ்க்கையை வசந்தமாக்கும் என்று காத்திருக்கும் என்னிடம் நீ அப்படி பேசினால் என்னால் எப்படி அதை ஏற்றுக்கொள்ளமுடியும்.
நான் உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ அதே அளவு காதலை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். உன்னுடைய அர்த்தமற்ற உளறல்கள் இல்லாமல் " என்றான் ரிஷி.

அபி பதில் எதுவும் கூறாமல் அங்கே தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தவள் " மணியை பார்த்தியா ? 12 ஆகுது. சும்மா உட்கார்ந்து என் வாயை பார்த்துக்கொண்டு இருக்காமல் அந்த தலையணையை எடுத்து போட்டு தூங்கு. எனக்கும் தூக்கம் வருகிறது " என்று அவனுக்கு முதுகை காட்டி படுத்தாள்.

" இது என்ன அநியாயமாக இருக்கு. விடிய விடிய கதை கேட்டுவிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்பது போல, நான் என் 12 வருட காதலை உன் காலில் வைத்துவிட்டு பதில் வேண்டி நிற்கிறேன், ஆனால் உனக்கு தூக்கம் வருகிறது என்கிறாய். அது எப்படிடீ உன் கண்ணில் மட்டும் தூக்கம் எப்போது வேண்டுமென்றாலும் வருகிறது. சண்டாளி பதிலை சொல்லடி " என்றான் கடுப்பாக.

" நீ எங்கே நிற்கிறாய், உட்கார்ந்துதானே இருக்கிறாய் " என்றாள் அபி நேரம் காலம் தெரியாமல் கேலி பேசிக்கொண்டு.

" நான் நின்றால் என்ன ? நடு ரோட்டில் படுத்தாலும் என்ன ? நீ எதுவும் கூற போவது இல்லை." என்றான் ரிஷி சிறு கோபத்தில்.

" படுத்தாதே நந்து, புது மனைவி என்றுகூட பாராமல் வேலைதான் முக்கியம் என்று ஐந்து நாள் தனியாக விட்டுவிட்டு ஆந்திரா போய்விட்டாய். நான் தூங்கி ஐந்து நாள் ஆகிறது. முதல் இரண்டுநாள் உன்னை நினைத்து தூக்கம் வரவில்லை, அப்புறம் அந்த ப்ரியா செய்த வேளையில் தூக்கம் வரவில்லை. பொறுத்ததுதான் பொறுத்தாய் இன்னும் ஒருநாள் பொறுக்கமாட்டியா ? என்றாள் அபி.

" போய் தொலை பிசாசே " என்றவன் ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு எழுந்தான்.

" எங்க போற, எங்கேயாவது போகணும் என்று நினைத்தாலே கொன்னுருவேன் மகனே. பேசாமல் பெட்டில் தூங்கு " என்றாள் அபி.

" ஆமாம் இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. பக்கத்தில் படுக்க வேண்டும், கொஞ்ச வேண்டும், கழுத்தை கட்டிக்கொண்டு தொங்க விட வேண்டும் ஆனால் அம்மா மட்டும் எஸ், ஆர் நோ என்று சொல்ல நேரம் காலம் பார்ப்பார்கள்" என்றான்.

" அப்படின்னா நோ போ, முடிந்ததால் எஸ் சொல்ல வைக்க முயற்சி செய் " என்றாள் அபி

" என்ன நோவா, சரிதான் ஏற்கனவே என் வயது 30 ஆகப்போகிறது, இதில் நீ நோ சொல்லு....விளங்கிடும். உன்னை எஸ் சொல்ல வைப்பதற்குள் எனக்கு பிறக்கும் குழந்தை என்னை அப்பா என்று அழைப்பதற்கு பதில் தாத்தா என்று அழைக்கப்போகிறது " என்றான் ரிஷி.

" உன்னோட எனக்கு ரொம்ப தொல்லையாய் இருக்கிறது. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் நான் என்னத்தை கண்டேன். உன் அண்ணிகள் ஆடிய ஆட்டத்தில் நான் சாகாமல் இருந்ததே பெரிது. இதில் காதல் எல்லாம் எங்கே இருந்துவரும் எனக்கு.
இன்னும் முழுதாக எனக்கு தெளிவு வரவில்லை. உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், இன்பாக்ட் நீ என்னை விட்டு போனதுதான் எனக்கு பைத்தியம் பிடிக்க காரணமே. ஆனால் அது லவ்வா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. உனக்காகத்தான் நான் எவனையும் கட்டிக்க சம்மதித்தேன், ஆனால் காரணமே இல்லாமல் எனக்கு எவனையும் பிடிக்கவில்லை. அது லவ்வா ? ஐ டோன்ட் க்நோவ். ஸோ மேக் மீ டு பீல்." என்றாள் அபி.

அவளை குறுகுறுவென்று பார்த்தவன்
" ஐ லவ் யூ பேபி " என்றான்.

அவனின் ஐ லவ் யூ வில் அபி சற்று ஆடித்தான் போனாள். ஆனால் ஐ டூ லவ் யூ என்று சொல்ல தோணவில்லை.
" வா தூங்கலாம் " என்றவன் படுத்துக்கொண்டான். அபிக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. சண்டை என்றால் ஒதுங்கிபடுக்கலாம், இல்லை என்றால் அவனை அணைத்துகொண்டு படுக்கலாம். ஆனால் இப்போது இரண்டுகெட்டான் நிலையில் இருக்கிறேனே.
ஐந்துநாள் பிரிவு, பிரிந்து படுக்கவும் மனமில்லை,. காதல் என்று நிற்கும் இவனை அணைத்துக்கொண்டு படுக்கவும் உள்ளே ஏதோ நெருடுகிறது. கடவுளே " என்று குழம்பி போனாள் அபி.

" என்ன குழப்பமாக இருக்கிறதா ? அப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும். மூளை இல்லாத மண்டையை வைத்துக்கொண்டு ரொம்ப யோசிக்காதே. சின்னத்தான் என்று நினைத்துக்கொள் எல்லாம் சரியாகிவிடும் " என்றான் அனுபஸ்தன்.
சிரித்த அபி அவனை அணைத்துக்கொண்டாள், தன்னை விட்டுச்சென்று இத்தனை கலகத்துக்கும் வழிவகுத்ததுக்காக நாலு போட்டவாறு.
*********
விடியல் தன் வேலையை சரியாக செய்ய தூக்கத்தில் பக்கத்தில் படுத்திருந்த அபியை தேடினான் ரிஷி.

அவளை அங்கே காணாமல் " அம்மு, அம்மு" என்றான் கண்ணை திறக்காமல்.. பதில் இல்லை.

" எங்கே போனாள்" என்று எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு கிளம்பி ஜாகிங் போக கீழே சென்றான். அங்கே அபி கிச்சனில் நிற்பது தெரிந்தது.
அங்கே வந்தவன் அவளை அழைத்தான்.

" அம்மு நான் ஜாகிங் போறேன், என்னுடன் வாயேன். படுக்கையை விட்டேழுந்தால் பக்கத்தில் மனைவியை காணவில்லை. உன்னை யார் இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது ?" என்றான் ரிஷி.

" சின்னத்தான் நான் உனக்காகத்தான் காலையில் எழுந்து சமைத்துக்கொண்டிருக்கிறேன், இப்போது உன்னுடன் வரமுடியாது, நாளைக்கு இருவரும் போகலாம் " என்றாள்.

" அப்படின்னா என்னுடன் வரமாட்ட, சரி போ. ஆனால் எனக்காக சமைக்கிறேன் என்ற பெயரில் இப்படி என்னை காலையிலேயே தனியே விட்டுட்டு ஓடி வந்த அப்புறம் நான் நைட் எங்கேயாவது போய் விடுவேன் " என்று எச்சரித்தவன் அபி சிரிப்பதை பார்த்து சுற்றும் முற்றும் பார்த்தான்.

பார்த்தவரையில் யாரும் கண்ணில் படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்த அபியை அவள் எதிர்பாராத நேரம் இழுத்து அவள் இதழில் அழுத்தகமாக முத்தமிட்டான். அபி இரண்டு அடி போட ஏதோ அவள் தடவிகொடுத்தது போல சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.

யாரும் இல்லை என்று ரிஷி முத்தமிட்டு செல்ல அதை ஒரு ஜோடி கண் குரோதத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தது. ப்ரியா காலையில் இருந்து அபியுடன் பேச நேரம் தேடிக்கொண்டிருந்தாள். அவளோ தனியே சிக்காமல் இருக்க, தூரத்தில் இருந்து சமையல் அறையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கும் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் நடுவில் ஏதோ ஆர்குமென்ட் நடந்துகொண்டிருக்கிறது என்று நினைத்த ப்ரியா ரிஷியின் செயலை பார்த்து எரிந்து கரிந்துகொண்டிருந்தாள்.

அபியை விடக்கூடாது. அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தவளுக்கு ஏகப்பட்ட இடையூறு.
******
ரிஷி அபியிடம் தன் சேட்டையை காட்டிக்கொண்டிருக்க போன் நான் இருக்கிறேன் என்றது சத்தமிட்டு.

போனில் பேசியவன் சலிப்போடு அதை வைத்தான். " அம்மு சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டாராம் அதுபோல இருக்கு என் வாழ்க்கை. காலையில் என்னவென்றால் நீ சமைக்கிறேன் என்று கிளம்பிவிடுகிறாய். சரி கொஞ்ச நேரமாவது உன்னுடன் இருக்கலாமே என்று நினைத்தால் அது பொறுக்காமல் இரண்டு அண்ணன் குடும்பமும் வந்திருக்கிறதாம் " என்றான்.

" சின்னத்தான் ரொம்ப உருகாதே, நீ கூறின இரண்டுக்கும் நடுவில் ஒரு வேலை பார்த்தியே அதை விட்டுட்ட, உனக்கு ஏக கொழுப்பு. நடு வீட்டில் வைத்து அப்படி என்ன உனக்கு ரொமான்ஸ். யாரும் பார்த்தால் முக்கியமாக உன் அண்ணி பார்த்தால் என்ன நடக்கும்." என்றாள் அபி.

" அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன, உனக்கு நான் முத்தமிட்ட போது என்ன நடந்தது அதை சொல் " என்றான்.

" ஆங் ஆடும் மாடும் நடந்தது. ஒழுங்கா கீழே போய் உன் அண்ணன்களுக்கு பாசமான தம்பியாக நடந்துக்கொள் " என்று அவன் கன்னத்தில் ஒரு இடி இடித்தாள்.
" அவர்கள் தம்பியை தேடி வரவில்லை, பினான்ஸ் அட்வைஸரை தேடி வந்திருக்கிறார்கள், சின்னண்ணன் வருவார் என்று நான் ஏற்கனவே எதிர்பார்த்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை. எனக்கு நேரம் சரியில்லை. சரி போ இனி உனக்கு என்னிடம் பேச கூட நேரமிருக்குமோ என்னமோ ? " என்றான்.

" சலித்துக்கொள்ளாதே நந்து செல்லம், உன் குட்டிகுசும்பை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஆபீசுக்கு கிளம்பு" என்றாள் அபி அவன் கன்னத்தை பிடித்து ஆட்டியபடி.

" ம் போறேன் வேற வழி ? " என்றவன்
" ஐ லவ் யூ பேபி " என்றான் தன் கன்னத்தில் இருந்த அவள் கையை பிடித்துக்கொண்டு.

அவள் பதிலுக்கு சிரிக்க " எப்பதான் பதில் சொல்லுவ வானரமே, எதுக்கெடுத்தாலும் நல்லா சிரிக்க படிச்சிருக்க, எப்பவும் பதிலுக்கு காத்தியிருப்பேன் என்று நினைக்காதே, சாது மிரண்டால் காடு தாங்காது " என்றவன் கீழே சென்றான்.

அங்கே ரிஷியின் இரண்டாவது அண்ணன் கண்ணனும், அவனின் மனைவி வித்யாவும் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். மூத்த அண்ணி மற்றும் பானுவின் பார்வையில் என்ன நடக்க போகுது என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது.

" நான் எத்தனையோ முறை இவனை தடுத்தேன், இருக்கிற தொழிலே போதும், தேவையில்லாமல் பார்ட்னர் ஷிப் அது எது என்று புது தொழிலில் இறங்கி மாட்டிக்கொள்ளாதே என்று. கேட்டால்தானே. இப்போ பார் பார்ட்னர் ஷிப், புதிய தொழில் என்று கையை சுட்டுக்கொண்டு வந்து நிற்கிறான். இவனுடைய பார்னரிடம் இப்போது எதுவுமே கேட்க முடியாமல் அவர் ஹார்ட் அட்டாக்கில் ஹாஸ்பிடலில் உள்ளார்." என்றான் கார்த்திகேயன்.

" இப்போதைக்கு இவருக்கு கொடுத்து உதவும் நிலையில் நாங்கள் இருவரும் இல்லை" என்றனர் அம்பிகாவும், பானுவும்.
அவர்கள் கூறியதை கேட்டு வித்யா வேதனையாக புன்னகை செய்தாள்.

" இனி கடைசி வாய்ப்பாக ரிஷியிடம் உதவி கேட்கலாம் என்று வந்துள்ளார். இந்த வீட்டு வாரிசில் அவருக்குத்தான் ஜாக்பாட் அடித்திருக்கிறது, ஒன்றுக்கு மூன்று பங்காக " என்றாள் அம்பிகா குத்தலாக.

அனைத்தையும் கேட்டுக்கொண்டு கற்பகம்மாள் அமைதியாக இருந்தார்.
" இல்லம்மா அண்ணி சொல்லுவது போல நான் ரிஷியிடம் பணஉதவி கேட்டு வரவில்லை. நான் இங்கு தொழில் ரீதியாக பேச அம்முவை பார்க்கவந்தேன். அண்ணனையும் அழைத்தேன், உடனே இவர்களும் எங்களுடன் கிளம்பி வந்துவிட்டனர் " என்றான் கண்ணன்.

" என்ன அபியை பார்க்க வந்திர்களா? இங்கே என்ன நீச்சல் போட்டி நடக்கிறதா இல்லை உங்களில் யார் சிறந்த பைத்தியம் என்று ஏதாவது போட்டி நடக்கிறதா ? அவளால் என்ன செய்துவிடமுடியும் ? " என்றாள் அம்பிகா.

ரிஷி அம்பிகாவின் பேச்சுக்கு பதில் சொல்லாமல் ஒரு தீர்க்க பார்வை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

" அண்ணி ப்ளீஸ் உங்களால் உதவ முடியாது என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், உங்களில் கருத்தை இங்கே யாரும் கேட்கவில்லை. அப்புறம் அவளும் உங்களை போல இந்த குடும்பத்தின் மருமகள், மன்னித்துவிடுங்கள் உங்களை போல இல்லை. உங்களை விட அனைத்து உரிமையும் உள்ள இந்த வீட்டு மருமகள். அவளை அவள் வீட்டினர் முன்பாக இந்த மாதிரி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை " என்றான் கண்ணன்.

" அப்புறம் அவள் உங்களை போல கணவன் சம்பாதிக்கும் காசில் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, சம்பாதிக்கும் கணவனை ஆட்டிப்படைக்கும் ரகம் இல்லை." என்றான் கார்த்திகேயன் பொதுவாக.

அப்போது அபி கீழே இறங்கி வந்துகொண்டிருந்தாள். இத்தனை நேரம் அவளால் தாங்கள் கேட்ட பேச்சு என்ன ? மஹாராணி அனைவரையும் காத்திருக்கவைத்துவிட்டு ஆடி அசைந்து வருவதை பார், என்று எண்ணிய பானு
" உனக்கு கொஞ்சமாவது நெஞ்சில் பயமோ, யார்மேலயாவது மரியாதை இருக்கிறதா ? இத்தனை பேர் உன்னை பார்க்க இங்கே காத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் ஆடி அசைந்து வருகிறாயே " என்றாள் பானு கடினமாக.

ரிஷி கோபத்தை அடக்க சிரம பட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.
" நீங்கள் அழைத்தவுடன் ஓடி வருவதற்கு நான் வேலைவெட்டி இல்லாதவளோ, இல்லை உங்கள் வீட்டு வேலைக்காரியா இல்லை. எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. கணவர் இருக்கிறார். அவருக்கு தேவையான எல்லாவற்றையும் கவனித்துவிட்டுதான் நான் மற்றதை பற்றி நினைக்க முடியும். கண்ணன் அத்தான் நீங்கள் என்னிடம் பேச வேண்டும் என்றால் என் ஆபீஸ்க்கு வந்திருக்கலாமே? இவர்களை வைத்துக்கொண்டு, இவர்கள் பேசும் லூசுத்தனமான பேச்சை கேட்டுக்கொண்டு நாம் எந்த பிரச்னையை தீர்க்க. அத்தை எல்லோரும் சாப்டாச்சா ? " என்று கேட்டாள் கற்பகம்மாளை பார்த்து. அவள் கூறிய பதிலில் நெற்றிக்கண்ணை திறந்தவர்களை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்.

" ஆச்சும்மா நீங்கள் இருவரும் தான் சாப்பிட வேண்டும் " என்றார் அவர்.
" கண்ணன் அத்தான் நீங்க கிளம்பி உங்க ஆபீசுக்கு போங்க, நான் பின்னாடியே வந்துவிடுகிறேன் " என்றாள் கண்ணனை பார்த்து
.
அவன் "சரிம்மா " என்றான் பதிலுக்கு. அம்பிகாவும், பானுவும் எதுவும் செய்ய முடியாமல் வித்யாவை முறைத்தனர்.

ப்ரியாவோ அபியை தனியே பிடிக்கமுடியாமல் திடீரெண்டு முளைத்த இந்த பிரச்சனையையும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களையும் தாளித்துக்கொண்டிருந்தாள்.
ஆண்கள் அனைவரும் கிளம்பி போக, அபி அங்கே நின்ற அந்த வீட்டின் மற்ற மருமகள்களை பற்றி கவலைப்படாமல், இத்தனை நேரம் அங்கு நடந்த அனைத்தையும் ஒரு பார்வையாளராக இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரிஷியை பார்த்து
" சின்னத்தான் சாப்பிடலாம் வாங்க " என்று உணவை தட்டில் பரிமாறினாள்.
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top