Prasath Krishna's Adheera(final)

Advertisement

Prashadi

Member
அத்தியாயம் 9 (இறுதி)



அறையில் இருள் மறைந்து ஒளி தோன்றிய போது மூவரும் வரதன் முன்னே நின்றனர். இவர்களைச் சுற்றி பரந்த வெளி இருந்தது. பிளவுப்பட்ட பாறைகள் ஆங்காங்கே இருந்தன. மூவரும் தாம் நிற்கும் இடத்தைச் சுற்றி பார்வையிட்டனர். குழப்பத்துடன் இவர்கள் வரதனைப் பார்க்க அவனோ ஏளனமாக புன்னகைத்து விட்டு தன் வலக்கரத்தை முன்னே நீட்டியவாறு தம் நால்வரையும் சுற்ற தீச்சுவாலை இவர்கள் நால்வரையும் சுற்றி இருந்தது.

வரதன் தீராவைப் பார்த்து " நீ உன் அம்மாவையும் அப்பாவையும் விட்டு பிரிஞ்சிருந்து ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப. நீ ஒன்னும் கவலை படாத இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க கிட்டயை கூட்டிட்டு போய் விடுறேன். துணைக்கு இந்த முட்டாள்களையும் கூட்டிட்டு போ." என சொல்லி பலமாகச் சிரித்தான்.

தீரா அவனின் கூற்றிற்கு செவிசாய்க்காது முகத்தை அலட்சியமாக திருப்பிக் கொண்டாள்.

இதைக் கவனித்த வரதன் கோபத்தில் அவளது நாடியை அழுத்திப் பிடித்து
"இப்ப நீ என்னோட பிடியில இருந்தும் பயமே இல்லாம இருக்க" என
அவளோ அவனையே பார்த்து இருந்தாள். அவள் கண்களைப் பார்க்கும் போது மருதனைப் பார்த்த ஞாபகம் வருகையில் கோபம் தலைக்கேற அவளை அறைந்தான்.

இதைப் பார்த்த ரக்ஷிக்கும் அகரனுக்கும் கோபம் வர
அகரன்" என் அக்கா மேலயே கைவைக்கிற. எனக்கு வரும் கோவத்துக்கு உன்ன இங்கயே கொல்லனும் போல இருக்குது."

வரதன்"ஏய்!!!"

தீரா" நீ விடு அகரன். அவனே ஒரு கோழை. அதனால தான் நம்ம கையை கட்டிப் போட்டுட்டு வீர வசனம் பேசிட்டு இருக்கான்"

வரதன் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு " என்ன சொன்ன?"

ரக்ஷி" சாருக்கு காது கேக்கல போல தீரா. அவருக்கு கேக்குற மாதிரி சத்தமா சொல்லு."

வரதன் " என்ன தைரியம் உனக்கு? "

தீரா " அவங்கள மிரட்டுனது போதும் உனக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தா என் கூட மோதி என்னோட சக்திய எடுத்துக்க. அதைவிட்டுட்டு எங்க கைய கட்டிட்டு பேசிக்கிட்டு இருக்க?"

வரதன் " என்னோடயே மோத போறியா?"

ரக்ஷி"ஏன் உங்களுக்கு தெரியாதா" என
தீராவும் அகரனும் சிரித்தனர்.

அவனோ கோபத்தில் " உன்ன மோத எனக்கென்ன பயம். நான் தயார்" என
அவர்களது கைகளில் இருந்த கட்டுக்களை தன் விரல்களை கொண்டு சொடுக்கிட, கட்டுக்கள் தன்னால் அவிழ்ந்தன.

"நாங்களும் தயார்" என தீராவும் அகரனும் தம் வலக்கரங்களில் சிவப்பு நிற சுவாலையை ஏந்தி தயாராகினர்.

அவனும் தன் வலக்கையில் செந்நிற சுவாலை ஏந்தி தயாரானான்.

மூவரும் ஒரே நேரத்தில் தாக்குதலை நடத்தினர். அதில் தீராவின் பக்கம் வெற்றி கிடைத்தது. அந்த கோபத்தில் மீண்டும் பலமாக தாக்கினான். அந்த தாக்குதலின் சத்தத்தில் ஊர் மக்கள் கூடியிருந்தனர். இரு பக்கத்தாரும் பலமாக மோதிக்கொண்டிருந்தனர்.
அவர்களின் தாக்குதல் சத்தங்கள் காதை அடைக்குமளவுக்கு இருந்தன.

இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரக்ஷி" பேய்க்கும் பேய்க்கும் சண்ட இத ஊரே வேடிக்கைப் பாக்குது" என்றாள்.
சண்டையில் கவனம் செலுத்தியிருந்தவர்களால் இவள் சொன்னதை கவனிக்க முடியவில்லை.

தன் எதிரி தனக்கு சமமானவள் என்பதை உணர்ந்தவன், தன் இருகைகளிலும் கறுமை நிற சுவாலையை உருவாக்கி அவர்களை தாக்கினான். அவனது கண்கள் சிவப்பு நிறத்தில் பளபளத்தன.

இம்முறை அவனது தாக்குதல் மிகவும் பலமானதாக இருந்தது. அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தீராவும் அகரனும் தடுமாறினர். தீராவிற்கு அன்று அந்த தொட்டியில் பார்த்தவை நினைவில் வர அகரனை தள்ளிவிட்டு தனியாக தாக்குதலுக்கு ஈடுகொடுத்தாள். அந்த தாக்குதலின் பாதிப்பில் இடி முழக்கங்கள் ஏற்பட்டன. அந்த சத்தத்தின் வீரியத்தில் மக்கள் தம் காதுகளை இறுக மூடினர்.
அகரன் தீராவிற்கு உதவ முன்வர,
தீரா அவனைத் தடுத்தாள்.

தீராவிற்கு தன் பலத்தை காட்ட வேண்டும் என்று தாம் தொடர்ந்த தாக்குதலின் ஊடே கூரிய அம்புகளை பாய்ச்சினான். அவை சரியாக அவளது வயிற்றைக் கிழித்து வெளியே வந்தன. தீராவின் வாயில் இருந்தும் இரத்தம் வழிந்தது. அவளது நிலைமையை பார்க்க முடியாமல் ரக்ஷியும் அகரனும் அவளை நெருங்க அவளோ பலவீனமடைந்த தன்
கையைக்கொண்டு அவர்களைத் தடுத்தாள். உடல் பலமிழந்தாலும் உள்ளத்தில் குடியிருந்த மன வலிமையைக் கொண்டு மீண்டும் போரிட தயாரானாள்.

ரக்ஷி,"தீரா! "என கண்ணீரோடு அழைத்தவளால் மேலும் பேச முடியவில்லை. தீரா அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு தைரியமாக வரதனை எதிர்கொண்டாள்.



தீராவின் பலம் அவளது மன வலிமை என்பதை அறிந்துகொண்டவன் அதனை உடைக்க ஒரு சூழ்ச்சி மேற்கொண்டான். தன் ஒரு கையால் இவளுடன் மோதிக்கொண்டு மறுகையால் தீராவின் இரு உயிர்களையும் தாக்க முற்பட்டான். அதைக் கவனித்த தீரா அவர்களைக் காக்க தன் எதிர்த்தாக்குதலைக் கைவிட்டு தன் உறவுகளின் அருகே சென்று ஒரு அரணை உருவாக்க முயன்றாள். அதற்கு சிறிது கால தாமதம் ஏற்பட்டதால் அவனின் தாக்குதலுக்கு ரக்ஷி உள்ளாகி கீழே விழுந்தவள் உயிருக்குப் போராடினாள். தீராவும் அகரனும் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து "ரக்ஷி!!"என்று அலறியவாறு அவளருகே சென்றனர். தீரா அவளை மடியில் தாங்கி அவளது வலக்கையை பற்றிக் கொண்டாள். அவளை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

வரதன் இதனை ஏளனமாக பார்த்துக் கொண்டே தீராவை "மடிந்துவிடு!" என்ற சாபத்தோடு அவளை தாக்கினான். இதனைத் தடுப்பதற்கு அகரன் தன் கையை எடுக்க அது அந்தரத்திலேயே நின்றது. வரதனின் சக்தியால் அகரனின் கைகள் அவனுக்கு கட்டுப்பட்டன.

அகரன் "தயவு செஞ்சு அவங்கள விட்டுடு." என கையைக் கூப்பி கெஞ்சும் போதே தீரா மூர்ச்சையாகினாள். ரக்ஷி தன் ஊசலாடிய உயிரோடு நடப்பவற்றை பார்த்திருந்தாள். அகரன் தன் இயலாமையை எண்ணி அழ மட்டும் தான் முடிந்தது.

வரதன் தீராவின் உடலை தன்னருகே கொண்டு வந்து அவள் மேல் தன் வலக்கரத்தை வைத்து அவளது சக்தியை தனதாக்கிக் கொண்டே எழுந்தான்.

"நாம தோத்துட்டோமா அக்கா" என கதறியவாறு அழுதுகொண்டிருந்தான்.

வரதன் வெற்றிக் களிப்பில் சிரித்துக் கொண்டு நடப்பவற்றை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.மக்களும் தம் இயலாமையை நினைத்து கண்ணீர் வடித்தனர். ஏனெனில் அவர்களது கைகளும் அந்தப் பாதகன் இட்ட விலங்கிற்கு கட்டுப்பட்டு இருந்தனர். ரக்ஷிதாவின் கண்களும் மௌனக் கண்ணீர் வடித்தன.

வரதன் அகரனை மாயையில் இருந்து விடுபட வைத்தான். விடுபட்டவன் ஓடிவந்து தீராவின் தீராவின் இடக்கையை பற்றி இருந்தான். அவனது விழி நீரும் தீராவின் உடலை நனைக்க அவளின் கழுத்தில் இருந்த பதக்கம் மின்னியது.


சிறிது நேரத்தில் மெல்ல கண்விழித்த தீரா முதலில் கண்டது அகரனைத் தான். ரக்ஷிதாவின் உடலும் தேறிக்கொண்டிருந்தது.
அப்போது தான் தன் தந்தையின் கூற்று நினைவில் வந்தது. " தீரா இந்த உலகத்தில தூய்மையான அன்பை விட பெரிய சக்தி எதுவும் இல்லை" அந்த நினைவுகளில் இருந்து மீண்டவள்
தன் மூன்று சக்திகளும் எவை என அறிந்த தீரா சந்தோஷத்துடன் துள்ளி எழுந்தாள். இதனை அதிர்ந்த பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தன இரு சோடி விழிகள்.
தீராவின் சந்தோஷத்தில் அவளின் அன்புக்குரியவர்கள் கண்களிலும் சந்தோஷம் தென்பட்டது.

வரதன் " உன் சக்தியை இழந்த பிறகும் எப்பிடி உன்னால திரும்ப எழ முடிஞ்சிது" என அதிர்ச்சியுடன் வினவ

"நீ எங்க எல்லார் கிட்டயும் மாய சக்தியை தான் எடுக்க முடிஞ்சது ஆனா அதை விட பெரிய சக்தியான தூய்மையான அன்பை உன்னால எடுக்க முடியல"

அவன் குழப்பத்துடன் பார்க்க

"முதலாவது பெற்றோரோட அளவில்லாத அன்பு" என தன் பதக்கத்தை தொட்டாள். அது ஊதா நிறத்தில் மின்னிறது.

"இரண்டாவது எதையும் எதிர்பார்க்காது தோள் கொடுக்கும் தூய நட்பு" என தீரா ரக்ஷியை நோக்கி தன் வலக்கையை நீட்ட அவள் அதனை ஒரு தலையசைப்புடன் பற்றிக் கொண்டாள்.

"மூன்றாவது கள்ளங்கபடமில்லாத ஒரு
சகோதரனின் அன்பு " என தன் இடக்கையை அகரனை நோக்கி நீட்ட
அவன் ஒரு புன்சிரிப்புடன் அவளது கையை பற்றிக்கொண்டான்.

"இந்த மூன்றும் கிடைச்சா, இதை விட வேறென்ன எனக்கு பெரிய சக்தி இருக்கப் போகுது" என அவ்விருவரின் கைகளையும் இறுகப்பற்றி தன் கண்களை அழுந்த மூடித்திறக்க அவளின் நீலக்கண்கள் மின்னின. அந்தக் கண்களின் ஒளியில் மேகங்கள் தன் கரும்போர்வையை தூக்கி எறிந்தன.

வரதன் நிலைமை கையாள தன் அடிமைகளையும் உடன் அழைத்தான்.
தீரா அவர்களை பற்றியிருந்த கைகளோடு வரதனை நோக்கி நீட்ட அதிலிருந்து புறப்பட்ட நீல நிறச்சுவாலை அவனைத் தாக்க. அவனது அடிமைகள் தூர வீசி எறியப்பட அவனோ அந்த சுவாலையில் சிக்குண்டு வலி தாங்காமல் துடிதுடித்தான்.

ரக்ஷி,"அவன விட்டிறாத தீரா" என
தீரா மீண்டும் ஒரு புன்னகையுடன் பற்றியிருந்த கைகளோடு மீண்டும் பலமாக தாக்க அவனோ "அதீரா!!!" என அலறியபடியே தூசுத்துகள்களாக மாறி மறைந்தான். மக்களின் அடிமை விலங்குகள் உடைப்பட்டன, மேகங்களும் தம் சந்தோஷத்தைக் காட்ட மழை பொழிந்தன. அந்த மழையோடு தீய எண்ணங்களும் கரைந்து ஓடின.


சில நாட்களுக்குப் பிறகு....

ரக்ஷிதாவும் அகரனும் செல்லம்மாளும் தீராவின் வீட்டில் உணவு மேசையை சுற்றி அமர்ந்திருந்தனர்.

ரக்ஷி " தீரா! இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?"

தீரா " இதோ வந்துட்டேன்" என ஒரு பாத்திரத்தை கொண்டு வந்து ரக்ஷிதாவின் முன்னே வைத்தாள்.

அகரன் ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டு "அக்கா வாசனை ஆளத் தூக்குது"
இதற்கு தீரா ஒரு புன்னகையை பதிலாகத் தந்து விட்டு அவனின் தலையைக் கோதினாள்.

ரக்ஷி "தூக்கும் தூக்கும்"என
செல்லம்மாள் அவளின் கையை அடித்தார்.

ரக்ஷி இதைக் கண்டுகொள்ளாமல் தீராவை நோக்கி " என்னதிது?"

தீரா "ம்ம்... உப்புமா"

"ரொம்ப தப்புமா"

"வெளிய செருப்பிருக்கு மா"

"நான் இதையே சாப்பிட்டுக்கிறேன் மா"

"அந்த பயம் இருக்கட்டும்" என மிரட்டி விட்டு தானும் சிரித்து விட அனைவரும் மனம் விட்டு சிரித்து உண்டனர்.

அதே சிரிப்புடன் அவர்கள் சுவரை நோக்க மருதனின் முழுமைப்பெறாத ஓவியம்
எழில் கொஞ்சும் ஊரில், மக்களின் முகத்தில் சிரிப்புடனும், அவர்களுக்கு நடுவில் ஆட்சி உரிமைப் பெற்ற தங்கக் காப்பு அணிந்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் தீராவுடனும், அவளை கண்கள் மின்ன சந்தோஷத்தில் தீராவை கட்டியணைத்தவாறு இருந்த ரக்ஷிதா மற்றும் அகரனுடன் ஓவியம் முழுமைப்பெற்று சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

அந்த ஓவியத்தின் அருகே இருந்த ஓவியத்தில் மருதனும் மகிழ்நிலாவும் சிரித்துக்கொண்டிருந்தனர்.

"தூய அன்புக்கு நிகர் எதுவும் இல்லை"

....................முற்றும்...........................

-கி.பிரஷாதி-
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரசாத் கிருஷ்ணா டியர்
 
Last edited:

Prashadi

Member
இத்துடன் என் முதல் எழுத்து பயணம் முடிவடைந்தது. வாசித்து விட்டு கருத்துக்களை கூறுங்கள்.
 

Sainandhu

Well-Known Member
நல்லா எழுதியிருக்கீங்க.....நல்ல கற்பனை...வளம்
அன்பு வெல்லும் ன்ற மெஸஜ் ....
வித்தியாசமா, refreshing ஆ இருந்தது படிக்க...
குழந்தைகளுக்கு பெட் டைம் ஸ்டோரியா சொல்லலாம்..
வாழ்த்துக்கள்.....ப்ரஷதி..
அடுத்த கதையுடன் வாங்க....:)
 

Prashadi

Member
நல்லா எழுதியிருக்கீங்க.....நல்ல கற்பனை...வளம்
அன்பு வெல்லும் ன்ற மெஸஜ் ....
வித்தியாசமா, refreshing ஆ இருந்தது படிக்க...
குழந்தைகளுக்கு பெட் டைம் ஸ்டோரியா சொல்லலாம்..
வாழ்த்துக்கள்.....ப்ரஷதி..
அடுத்த கதையுடன் வாங்க....:)
நன்றி அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top