ப்ரதீபனோ! ரிஷியோடு அமர்ந்து மலர்விழியுடன் கதையடித்துக் கொண்டிருந்தான்.
"இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பி வந்திருக்க, அந்தாள ஒண்ணுமே பண்ண தோணாம எப்படி நீ அமைதியா இருக்க" ஆதங்கமாக மலர்விழி கேக்க
புன்னகைத்தவாறே "எதிர்த்து போராடினாலும் அவங்க என் அம்மாவும், மாமாவும் அதான் ஒதுங்கிப் போய்டலாம்னு நினச்சேன்" ரிஷி சொல்ல
"சரி நீ ஒதுங்கியே இரு" என்ற மலர்விழி மெளனமாக
"நீ ஏதாவது செய்ய போகிறாயா? இந்த அத்தானுக்காக பழிவாங்க கிளம்பிட்டாயா?" குறும்பாக ரிஷி கேட்க
"இருடா உன் பொண்டாட்டிக்கு கிட்ட பத்தி வைக்கிறேன்"
"அம்மா தாயே அந்த ராட்ச்சி கிட்ட மட்டும் என்ன கோர்த்து விடாத. பூரிக் கட்டையாலையே அடிப்பா" ரிஷி வலிப்பது போல் நடித்தவாறே சொல்ல பின்னாலிருந்து அவனின் காதை திருகியிருந்தாள் கயல்விழி.
"நான் ராட்சசியா? உள்ள வாங்க வச்சிக்கிறேன்"
"செல்ல ராட்சசி டி" என்று கயலை பார்த்து கூறிய ரிஷி மலர்விழியை பார்த்து "நான் சொன்னேனே உள்ள போய் கவனிக்கிறாளாம்" என்றவன் மீண்டும் வலி தாங்க முடியாமல் தவிப்பது போல் நடிக்க மலர்விழிக்கு ரிஷி சின்ன வயதில் நடுநடுங்கி நின்ற தோற்றம் கண்ணில் வர கண்ணில் நீர் கோர்த்தது.
"ஏய் மலர் எதுக்கு அழுகை" ப்ரதீபனும், ரிஷியும் ஒன்றாகவே பதற தூரத்தே இவர்களை பார்த்திருந்த அமுதன் பல்கலைக் கடித்தான்.
"சின்ன வயசுல எவ்வளவு பாடு பட்டிருப்ப, எவ்வளவு வலிச்சிருக்கும். உன்ன நல்லா பார்த்துக்க முடியலன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. எல்லாத்துக்கும் சரியா உனக்கு நல்ல மனைவி அமைஞ்சிருக்கா" என்று கயல்விழியின் கையை பிடிக்க மலர்விழியின் கண்களை துடைத்தவாறே
"பழசெல்லாம் எதுக்கு மலர் வேணாமே" என்றாள் கயல்விழி.
அவள் எண்ணமெல்லாம் பழங்கதையை கிளறுவதால் தன் கணவனின் மனம் காயப்படும் என்பதே!
"ஆமா அத்த அம்மாக்கு தெரியாம எனக்கு ஊட்டிக் கூட விடுவாங்க. அம்மா பார்த்து விட்டு ஒருநாள் அத்தையின் கன்னத்திலையே அறைஞ்சாங்க. அது என்னால மறக்கவே முடியல. இருந்தாலும் அம்மாக்கு தெரியாம என்ன குளிப்பாட்டி, சோறூட்டி, தூங்க கூட வைப்பாங்க"
"ஆமா நாம வேறு வீட்டுல இருக்குறதால உன்ன சரியா பார்த்துக்கொள்ள முடியவில்லையென்று சொல்லிக் கொண்டே இருப்பாங்க" அன்னையின் நினைவில் மலர்விழி.
"சரி வாங்க போய் தூங்கலாம்" ரிஷியின் கையை பிடித்தவாறே கயல் மலர்விழியை பார்த்து சொல்ல
"பாத்தியா உள்ள கூட்டிட்டு போய் என்ன பொளக்க போறா" எழுந்தவாறே ரிஷி கிண்டலடிக்க
"வாய் மேலையே போடு கயல்" என்றாள் மலர்விழி.
"பாருடா.. ஒன்னு கூடிட்டாங்க" பிரதீபன் ரிஷியை பார்த்து சொல்ல
"அது சரி உன் பொண்டாட்டி எங்க?" மலர்விழி ப்ரதீபனை நோக்க
"அந்த கும்பகர்ணி இந்நேரம் குறட்டை விட்டுக் கொண்டு இருப்பாள்" என்றாள் கயல்.
"அவ மட்டும் தூங்கி இருக்கட்டும் அவளுக்கு இருக்கு இன்னைக்கி" மனதில் குமைந்தவாறே அனைவருக்கும் இரவு வணக்கத்தை கூறிக் கொண்டு விடைப் பெற்றான் பிரதீபன்.