mallika
Administrator
அவள் எரிகின்றாள்…!
உச்சிவரியில் இருந்து
கால் கொலுசு வரை - அத்தனை
நகையணிந்து…
அத்தனை ஒப்பனைகள்
செய்து…
கைகளில் மருதாணிச்சிவப்பும்
கன்னங்களில் நாணச்சிவப்பும
போட்டியிட…
கையில் மலர் மாலையுடன்
மணமேடை நோக்கிச்சென்றவளை
காமிராக்கள் தவிர்த்து
எத்தனை கண்கள் - தம்
நினைவு பெட்டிக்குள்
சிறையெடுத்துக்கொண்டன…
அங்கிருந்த எத்தனை வாய்கள்
திறந்தபடி மூடாதிருந்தன… .
ஆம்… அவள் அத்தனை அழகானவள்…
பண்பிலும், குணத்திலும் கூட
அவளை மிஞ்ச ஆளில்லை…
அப்படியிருந்தும் - சில
வாய்கள் புரளி பேசத்தான் செய்தன…
அவள் தந்தையை உறவினர்
பொறாமையாய்
பார்க்க…
அவள் உதடுகளும், கண்களும்
சின்னச்சிரிப்பை நீண்ட நேரமாய்
தத்தெடுத்திருந்தன…
மங்கள வாத்தியங்கள் முழங்க
தலைகுனிந்து தாலியை வாங்கிக்கொண்டு
பெற்றவனை பார்க்க - அவன்
கண்களில் நீர்த்துளி
அவள் உதடுகளில் வரும்போதிருந்த
அதே மாறாத புன்னகை.
வந்தவரெல்லாம் வாழ்த்தி
விடைபெற்றனர் - அப்போதும்
அதை புன்னகை…
யாருக்கு தெரியும்…?
அந்த மாறாத புன்னகையின்
பின்னும் அத்தனை வலிகள்
இருக்க கூடும் என…
வலிகளை மறைக்க
சிரிப்பு வேலி போட்டுக்கொண்டவள்
அவள் ஆசை, கனவுகளை
எல்லாவற்றிற்கும்
மனதுக்குள்ளே சிதை வைத்து விட்டு
மறுபடியும் தீக்குளிக்க வந்தாள் - என
யாருக்கு தெரியும்… ?
நித்யா சிவா