சாரல் 31

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
சாரல் 31


அன்று விடுமுறை தினமாதலால் பொழுது சோம்பலாகவே விடிந்தது முகுந்தனுக்கு. நாள் முழுதும் பரபரவென வேலை செய்வதால், கிடைக்கும் அந்த இரண்டு நாட்களும் அவனுக்கு விலைமதிக்க முடியாதது தான். அதுவும் வெளியில் எங்கும் செல்லாது வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கதான் தோன்றும் அவனுக்கு. மெதுவே எழுந்து உடலை வளைத்துக் கொடுத்தான். சமையல் அறைக்கு செல்லவே கடுப்பாக இருக்க, இருந்தும் கூப்பாடு போடும் வயிற்றின் கூக்குரலுக்கு செவி மடுக்கும் எண்ணம் கொண்டவனாய், குளியலறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்துக்கொண்டவன், அடுக்களைக்குள் புகுந்துக் கொண்டான். அடுப்பில் பாலை வைத்துவிட்டு அது கொதிக்கும் வரைக்கும் கூட பொறுமையின்றி போனது அந்த வளர்ந்து கெட்டவனுக்கு. கைகள் அதன் பாட்டுக்கு சக்கரையையும், காபி தூளையும் சரிவிகிதத்தில் போட, நிமிடத்தில் தயாரானது காபி. கோப்பையில் ஊற்றிக் கொண்டவன், பால்கனியில் இருந்த பிரம்பு ஊஞ்சலில் வந்து அமர்ந்துக் கொண்டு, சுற்றுப்புறத்தை வெறிக்க துவங்கியவனின் கவனத்தை கலைத்தது அவனது நண்பன் ஜேக்கின் குரல். “குட் மோர்னிங்டா மச்சான்!” சோம்பல் முறித்தபடி அறையை விட்டு வெளியே வந்தவனின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன், “மோர்னிங்டா!” தானும் பதில் வணக்கம் செலுத்தினான்.



“டேய் மச்சான்! ஒரு காபி போடேன்!” நண்பனை பணித்துவிட்டு, அவனது மறுமொழியைக் கூட கேட்காது, குடுகுடுவென பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான். பின்னே யார் அவனிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது? “பரதேசி நாயே எனக்கு வேலை வைக்கிறதுலயே இரு! இருடி! ஒரு நாள் என் கையில சிக்காமலா போயிடுவ? அன்னைக்கு இருக்குடி உனக்கு!” மேலும் சிலபல அச்சில் ஏற்ற முடியாத நல்ல வார்த்தைகள் கொண்டு நண்பனை அவன் அர்ச்சித்தாலும், கைகள் ஜேக்கிற்கு அவன் கேட்டதை கலந்தது. சிறிது நேரம் கழித்து, பொந்துக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் ஆமையை போல மெதுவே தலையை நீட்டினான், ஜேக். இருவரும் என்ன வெவ்வேறு கண்டதிலா இருக்கிறார்கள்? நண்பன் திட்டுவது இவனுக்கு கேட்காது போக? முகுந்தன் இருக்கிறானா? என இன்னும் தலையை நன்றாக நீட்டி பார்த்து, அவன் இல்லை எனவும், தைரியமாக வெளியே வந்தான், ஜேக்.



“அப்பாடி!” பெருமூச்சு விட்டபடி கோப்பையை எடுக்க போக, அவனது நிம்மதிக்கு ஆயுள் குறைவென்பது போல பின்னிருந்து முதுகில் ஒருஅடி போட்டான் முகுந்தன். “அடேய் விளங்காதவனே! ஒரு காபி தானேடா கேட்டேன்? அதுக்கு எதுக்குடா இப்படி அடிக்கிற?” கடுப்புடன் கேட்டாலும், காப்பியை மறக்கவில்லை அவன்.


அதில் அவனை நன்கு முறைத்த முகுந்தனின் பார்வையை தூசி போல் தட்டி விட்டவன், “சரி சரி கோச்சுக்காத மச்சான்!” நண்பனை சமாதானம் செய்தவன், “டேய் மச்சான் இன்னைக்கு எதாவது ஸ்பெஷலா செய்யே….!” என்றவனின் குரல் முகுந்தனின் முறைப்பில் தேய்ந்து மறைந்தது. “நாயே நானே எப்படா லீவ் கிடைக்கும் கீழ விழுகலாம்ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்! இதுல ஐயாவுக்கு ஸ்பெஷலா கேட்குது!” என்றபடி ஜேக்கை தனது பிடிக்குள் கொண்டு வந்தவன், அவனது தலையில் நன்றாக கொட்டினான்.



“டேய் போதும் போதும் படுபாவி விடுடா!” அவனது பிடியில் இருந்து தப்பிக்க முயல, முகுந்தனின் பிடி இரும்பாய் இருக்க, கரும்பு இயந்திரத்தில் சிக்கிய கரும்பு போலானான், ஜேக். அந்நேரம் பார்த்து முகுந்தனின் போன் அடித்து அவனது கவனத்தை கலைக்க, “டேய் மச்சான்! போதும் விடுடா! நான் இங்க தான்.. உன்கூட தான் இருப்பேன்! என்னை அப்புறம் கூட கவனிச்சுக்கலாம். முதல போனை எடுடா ராசா!” என கெஞ்சவும் போனால் போகிறதென விட்டான், முகுந்தன். அவன் சென்றதும், தலையை தேய்த்துவிட்டுக் கொண்ட ஜேக், “ஐய்யாடி என்னா அடி அடிக்குறான்? பாவி பய என் மண்டையே பணியாரம் மாதிரில வீங்கி போச்சு!” என புலம்பியபடியே சோபாவில் அமர, சிறிது நேரம் கழித்து இறுகிய முகத்துடன் வந்தான் முகுந்தன்.


அவன் வதனம் கண்டே எதோ சரியில்லை என உணர்ந்த ஜேக், தனது விளையாட்டுத்தனத்தை விட்டொழித்தவனாய், “என்னடா மச்சான்? யாரு போன்ல? ஏன் உன் முகமே ஒரு மாதிரி இருக்கு?” அக்கறையாய் விசாரிக்க, அவனது தாடை எலும்புகள் இறுகியது. அதனை கவனித்த ஜேக், “ம்ம்ம்ச் என்னடா? ஏன் ஒருமாதிரி இருக்க?” நண்பனின் கரத்தை ஆதுரமாய் பற்றிக் கொள்ள, “ஒன்னுமில்லடா! எல்லாம் இந்த கிழவி தான்!” சலிப்பை தாங்கி வந்தது குரல்.


நண்பனின் குரலில் புரியாது விழித்த ஜேக், அமைதியாய் நோக்க, “அந்த கிழவியை…” கோபத்தில் பற்களை நெருநெருவென கடித்தான். “எங்க அப்பத்தா தான் போன் பண்ணுனது. அக்காவை போய் பார்த்துட்டு வரவாம். ஏதோ ஒரு தடவை போனா போகுதுன்னு விட்டா ரொம்ப ஓவரா தான் போறாங்க! அன்னைக்கே முடியாதுன்னு சொல்லியிருக்கணும்! அன்னைக்கு இவங்க சொன்னதுக்கெல்லாம் சரி சரின்னு மண்டையை மண்டையை ஆட்டுனது தான் இப்ப தப்பா போச்சு!” நண்பனின் கோபத்திற்கு பின்னிருக்கும் காரணத்தை அறிந்தவனாய் அமைதி காத்தான் ஜேக்.



“எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருதுடா மச்சான்! எல்லாம் என்கூட பிறந்தவளை சொல்லணும்! அவ இப்படி இருக்கவும்தான்… எல்லாரும் நம்ம தலை மேல ஏறி ஆடுறாங்க! அவ சரியா இருந்திருந்தா எனக்கு இதெல்லாம் தேவையா? அவங்க என்ன சொன்னாலும் தலையை தலையை ஆட்டிக்கிட்டு, இவ பதில் பேசாம இருக்கவும் தான் அவங்க எல்லாரும், எங்களை கண்டா இளக்காரமா இருக்கு! எல்லாம் அவ கொடுத்த இடம் தான். அந்த சுண்டு தன்யா கூட அவளை மதிக்க மாட்டேங்குது!” அக்கா மகளின் நடத்தையை கண்டு அதிருப்தியாய் முகம் சுளித்தான், முகுந்தன்.


“அந்த வீட்டுல இருக்க எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்குதுங்க. கொஞ்சம் கூட மட்டு மரியாதை தெரியாம..!” கோபத்தில் கடுகடுத்தவனை அடக்கும் வழி தெரியாது விழித்து கொண்டிருந்தான், அவன் நண்பன். சலிப்பாய் தலையை பற்றிக் கொண்டு அமர்ந்தவனை கண்டு, “சரி விடுடா மச்சான்! நீ என்ன சொன்ன?” என கேட்க, “நான் என்ன சொல்வேன். முடியாதுன்னு நல்லா திட்டிவிட்டுடேன்!” சீற்றம் தணியாது கோபத்தில் ஏறியிறங்கியது, ஆணவன் மூச்சு. “ச்சு அவங்களே பாவம்டா! பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க?” நண்பனுக்கு புரிய வைக்க முயன்றான், ஜேக்.



“என்னடா பாவம்? என்ன பாவம்ங்குறேன்? ஒரு நல்ல மனுஷனை புரிஞ்சிக்காம, அவர் மனசை சிதறடிச்சுட்டு, எங்க அப்பா ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் எல்லாரும் அமைதியா இருந்தாங்க தானே. அப்ப அனுபவிக்கட்டும்! நல்லா அனுபவிக்கட்டும்!” கோவத்தில் சீறினான், முகுந்தன். அவனது வார்த்தைகளை கேட்டு அதிர்வுடன், “டேய்! யாரோ ஒருத்தர்காக உன் குடும்பத்தையே பலிப்பியாடா? இதெல்லாம் நல்லாயில்லடா சொல்லிட்டேன்!” நண்பனாய் அறிவுறுத்தினான்.



நண்பனது வார்த்தைகளில் கட்டுக்குள் வந்த முகுந்தன், “பாவம்டா அந்த மனுஷன்! அம்மா கூடவே இருந்தாலும், விஷ்வா மாமானா எனக்கு ரொம்ப பிடிக்கும்! அவர் முகத்துல எப்போதும் ஒரு சிரிப்பிருக்கும். நீயும் கூட சேர்ந்து சிரின்னு சொல்ற மாதிரி தான் அவரோட சிரிப்பிருக்கும்! எங்கக்கா அவரை கல்யாணம் பண்ணியிருந்தா, இப்ப இருக்கிறதைவிட ஓகோனு அவளை வாழ வச்சுருப்பார்டா அந்த மனுஷன்! எல்லாம் அவரை சொல்லணும்…. ஒரு மனுஷன் நல்லவரா இருக்கலாம் ஆனா அநியாத்துக்கு நல்லவரா இருக்க கூடாதுடா! அப்படியிருந்துட்டா இந்த உலகம் நம்மளை ஏறி மிதிச்சுட்டு போய்டும்னு நான் அவரை பார்த்து தாண்டா கத்துக்கிட்டேன்! மாமா மாமனு எங்க அக்கா அவர் பின்னாடியே சுத்துவா! அவர் கண்ணுல ஒரு சிரிப்பிருக்கும்! யாரு மனசையும் நோகடிக்க தெரியாதவர்டா சுந்தர் மாமா! ஆ… ஆனா அ…வரை போய் நோகடிக்க எப்படி எங்கப்பாக்கு மனசு வந்துச்சோ?” அன்றைய நினைவில் கோபம் அதிகமானாலும், ஒரு நல்லவரை வருத்திய வருத்தம் அவனது குரலில் மிகுந்திருந்தது.



“எங்கக்கா ரொம்ப அழுதுக்கிட்டே இருந்தா. அப்ப நான் சின்ன பையன்றதால எனக்கு நடக்கிறது ஒன்னும் புரியலை. திடீர்னு ஒரு நாள் எங்க வீட்டுக்கு யார் யாரெல்லாம் வராங்க. எங்க அக்காக்கு பூ வைக்குறாங்க. எங்க அக்காவும் அதெல்லாம் அமைதியா ஏத்துக்கிட்டா. எனக்கு அவமேல செம்ம கோபம். என்னடா இவ எதுவும் சொல்லாம அமைதியாகவே இருக்காளே? அப்ப இவ சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குதான்னு! எங்க விஷ்வா மாமாவை ஆளையே காணோம். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அவருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதான்னுட்டு. அன்னையில இருந்து எங்க அக்கா முகத்துல சிரிப்பேயில்லை. வீட்டுல எல்லாரும் எங்க அப்பாகாக தங்களை சந்தோசமா காட்டிக்கிட்டாங்க. அந்த கல்யாணம் நடக்க போறதுல சந்தோசமா இருந்த ஒரே ஆள் எங்க அப்பா தான். எப்பவும் அக்கா முகத்துல இருக்க சிரிப்பை, நான் அதுக்கு அப்புறம் பார்க்கவேயில்லை. கல்யாணத்துக்கு முந்தைய நாள் எதேச்சையா அவ ரூம் பக்கம் போகும் போது, சரண்யா அக்காவை கட்டிக்கிட்டு அவ அழுத அழுகையை நான் மறக்க முடியாது!” என்றவனுக்கு கண்கள் தானும் கலங்கியது அந்த நாளின் நினைவில்.




சாரல் அடிக்கும்….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top