7 நாட்களுக்கு முன். ஆதிரையும் அர்ஜூனும் கடலடி தீவில் மாட்டிக் கொண்ட இரவு……….
அர்ஜூனும் ஆதிரையின் அருகில் படுத்துக் கொண்டு அவனது ஒருகையைத் தலையணையாக்கி படகின் மேற் கூரையை பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
இப்படிப்பட்ட சூழலில் அர்ஜூனின் மனநிலை எப்படியோ! ஆனால் ஆதிரையின் மனம் படபடப்பதை யாரிடம் சொல்ல முடியும். இதுவரை எந்த ஒரு ஆணின் அருகாமையும் உணர்ந்திராத ஆதிரைக்கு அர்ஜூனின் அருகாமையும் அவனின் உடல் வெப்பமும் உறங்கவிடாமல் தத்தளிக்க செய்தது. டார்ச் விளக்கையும் அணைத்தபின் உண்டான காரிருளோ ஆதிரைக்கு அச்சத்தை பன்மடங்கு பெரியதாகிற்று.
‘இந்தக் கடுவன் பூனை என்ன நினைத்தாலும் பரவாயில்லை. இவனிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்று உறங்குவதே சரியாகும். இந்த என் இதயம் என் பேச்சினை கேட்கும் எண்ணமற்று இப்படி ஓட்டம் பிடிக்கிறது. இதற்கு மேல் அமைதியாய் படுத்திருப்பது சரியாகாது‘ என்று எண்ணி அர்ஜூனை அழைக்க முயன்றாள் ஆதிரை. ஆனால், அவளின் மன போராட்டம் முடிந்து அவள் முடிவடுப்பதற்குள் கேட்ட சீரான மூச்சுக் காற்றின் சுவாசம் அர்ஜூன் உறங்கி விட்டதை உறுதிப் படுத்தியது. அந்த இருளிலும் அவன் மார்பு சுவாசத்தினால் உயர்ந்து இறங்குவதை ஆதிரையால் காண முடிந்தது. உறக்கத்திலிருக்கும் அவனை எழுப்ப மனமில்லாமல் செய்வதறியாது படுத்திருந்தது சில நிமிடங்களே.’ ஏதேனும் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் அறையில் வெளிச்சத்தையாவது ஏற்படுத்த வேண்டும். அந்த டார்ச் ligth எங்கே இருக்கிறது!' என்று எண்ணி ,ஆதிரை அவனோடு இணைந்திருந்த தன் ஒரு கையினை அசைக்காமல் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
' வெளிச்சமுடன் , வெளிக்காற்றை சுவாசித்தால் இந்த இதயம் சண்டித்தனம் செய்யாமல் இருக்குமோ!.' என்று எண்ணி அந்த அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆதிரை. 'ஏதோ ஜன்னல் போல தெரிகிறதே!' என்று தன் மற்றொருகையினால் எட்டி, அங்கிருந்த ஜன்னல் போன்ற ஒரு ஓட்டையை மறைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த சணல் கயிறு கொத்தை மெதுவாக நகர்த்தி, நிலவொளியினை ஸ்பரித்தாள் ஆதிரை. அந்த நிலவொளியிலும் சில்லிட்ட வெளிக்காற்றிலும் ஏற்பட்ட புத்துணர்வில் ஆதிரையின் மன படப்படப்பு வெகுவாக குறைந்தது. சில நிமிடங்களுக்குப்பின் மீண்டும் அர்ஜுன் அருகில் அவன்புறமாக திரும்பி அவனைப் பார்த்த வண்ணம் படுத்தாள். அவள் மீண்டும் படுப்பதற்குள் அர்ஜூனும் அவள்புறமாக திரும்பிப் படுத்திருந்தான்.
ஒருவரது முகம் ஒருவருக்கு மிக அருகில் தெரிந்தது , அப்போதுதான் உள்ளே வந்துவிட்ட நிலவொளியில் அர்ஜூனின் முக வடிவங்கள் தெள்ள தெளிவாகத் தெரிந்தது. அவனது ஆழ்ந்த உறக்கமும் அவன் முகமும் அவன் மிகவும் கலைத்திருக்கிறான் என்பதை ஆதிரைக்கு உணர்த்தியது. உறங்கிக் கொண்டிருக்கும் அவன் முகத்தையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரை. 'முகமே இப்படிச் சோர்ந்திருக்கிறதே! பழக்கமற்று படகு செலுத்தியதால் கைகளும் கூடக் கலைத்திருக்குமே!’ என்று அவன் கைகளை பற்றிவலி போக பிடித்தவிட தோன்றிய ஆதிரையின் ஆவலை அவள் தன்கூட்டுக்குள் வாழவேண்டுமென்ற கோட்பாடு தடுத்து நிறுத்தியது.
‘இன்று காலை எவ்வளவு கோபமாக பேசினான். பின் எனக்காக அக்கறைக் கொண்டு நேரிடையாக இல்லையென்றாலும், அவன் கம்பனி அறையில் வந்து ஆருதலாகப் பேசி என் மகனிடமும் கொண்டு சேர்த்தானே! இவனிடம் நான் என்ன குறை கண்டு எடுத்தெறிந்து பேசினேன். அப்படிப் பேசியும் கூட என் மீது அக்கறைக் கொண்டு இங்கே வந்து நின்றானே! அது சேகர் அங்கிள் சொன்னதற்காகவே என்றபோதிலும் அவ்வளவு பெரிய ஆள் ஒரு கிராமமே இவன் சொல்லுக்காக காத்திருக்குமென்று கூட சேகர் அங்கிள் சொன்னாரே! அப்படிப்பட்டவன் என்னைத் தேடி பழக்கமற்ற படகினை ஓட்டிக் கொண்டி இவ்வளவு தூரம் வந்தானே!. ஏன் இவற்றை இவன் செய்ய வேண்டும்.? என்னை காத்திடவே வந்திருந்தவனை இந்த தீவிலே நான் எவ்வளவு உதாசினம் செய்தேன். இருந்த போதும் 'போடி' என்று விட்டு விலகிச் செல்லாமல், இந்த யாருமற்ற காட்டில் நான் தவிக்க கூடுமென்று எண்ணி எனக்காகத் துணை நின்று இதோ! இப்போதுகூட என் மீது அக்கறைக் கொண்டு கைக் கட்டுண்டிருந்தால் உறங்க வசதியாக இருக்காதே என்றும் கவலையில்லாமல் என் கைகளை அவனுடன் இணைத்துக் கொண்டானே! ஏன் என் மீது இவனுக்கு இவ்வளவு அக்கறை!’ என்று ஆதிரைக்கு அர்ஜூனின் மீது ஒரு நல் மதிப்பு உண்டானது. குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருக்கும் அர்ஜூனின் சிகையை ஆசையாக வருட வேண்டுமென்ற ஆவல் ஆதிரைக்கு உண்டானது.
இவ்வாறாக ஆதிரையின் என்ன போக்கு கடிவாளமற்ற குதிரையாக ஓடிக் கொண்டு ஆதிரையின் உறக்கம் சண்டித்தனம் செய்து வெகுதாமதமாகதான் அவள் கண்களை வருடியது.
அடுத்த நாள் காலை 6 மணி போல் ஆதிரைக்கு விழிப்பு வந்தது. ஆச்சரியப் படும் விதமாக அர்ஜூன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான்.என்ன செய்வதென்று புரியாமல் விழித்த ஆதிரை, ‘ஒரு வேளை இன்னும் காலை ஆகவில்லையா!’ என்று அந்தச் சன்னல் வழியே வெளியில் பார்த்தாள் சுள்ளென்று வெயில் அடிக்கவில்லையென்றாலும் நிலவொளியை விடக் கொஞ்சம் ஒளி அதிகமாகத் தெரிந்தது. ‘அப்போ இந்தத் தீவிற்குள் பகல் வெளிச்சத்திற்குக் கவலையில்லை.’ என்று பெருமூச்சுவிட்டாள். ஆனால் 'அர்ஜூன் இன்னும் எவ்வளவு நேரம் உறங்கக் கூடும். அதுவரை நான் இப்படியே அமர்ந்திருப்பதா! இம்முகும்.. அது சரி பட்டு வராது. அதனோடு என் உடலிலும் தலை முடியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பு தண்ணீரின் வாசனை இனி என்னால் பொறுக்க முடியாது. முதலில் ஏதேனும் ஆறோ குலமோ இருக்கிறதா என்று பார்த்துக் குளிக்க வேண்டும் ' என்று தனகுள்ளே பேசிக் கொண்டு அர்ஜுன் தன் கைக்குள் போட்ட கயிற்றுச் சுருக்கை அவன் கையினை அசைக்காமல் தளர்த்து அவள் கையினை விடுவித்துக் கொண்டாள். மெதுவாக எழுந்து அவன் காலுக்கு கீழிருந்த drum – ன் மீதிருந்த phone – ஐ எடுத்துத் தான் வெளியில் இருக்கிறேன். கவலைப் பட வேண்டான். விரைவில் வந்துவிடுவேன் என்று phone -ன் note pad – ல் எழுதிவிட்டு, phone – ஐ on செய்தால் தெரியும்படி வைத்துவிட்டு மெதுவாக அந்தப் படகு அறையின் கதவை திறந்து வெளியில் வந்தாள் ஆதிரை.
வெளியில் வந்த ஆதிரையின் கண்கள் அச்சரியத்தின் உச்சத்திலிருந்தது. வானவில்லின் வண்ணங்கள் கடலில் கலந்துவிட்டதா என்ன பல வண்ண மீன்கள் அந்தத் தீவினை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தன. கடவுளின் இந்த அற்புத தீவினை காணக் கண் கோடி வேண்டாமோ!. சில நிமிடங்கள் அந்த அற்புத காட்சியினை கண்கள் விரியப் பார்த்தாள். இப்படியே நின்றிருந்தால் காலம் போவது தெரியாது என்பதை உணர்ந்த ஆதிரை பிடிவாதமாக கவனத்தை திருப்பி அங்கிருந்த கரையை சுற்றுமுற்றும் பார்த்தாள் ஆதிரை.
கடற்கரையின் மிக அருகில் சில தென்னை மரங்கள் இருந்தன. அதனை ஒட்டி உள் நோக்கிப் பார்த்தால் அடர்ந்த மரங்கள் தெரிந்தது. இருந்த போதும் அந்த மரங்களின் எண்ணிக்கை போக போகக் குறைந்திருக்க வேண்டும் , அடர்ந்த காடுகளுக்கு அப்பால் வெறும் புல்வெளிகளோடு கூடிய ஒரு சிறிய மலைக் குன்று ஆதிரையின் கண்களுக்கு தெரிந்தது. அந்த மலையின் உச்சிக்கு மிக அருகில் கடலின் மேற்பகுதி தெரிவது போல் இருந்தது. அர்ஜூன் எழுந்ததும் இதனைச் சொல்ல வேண்டுமென்று ஆதிரை தனக்குள் சொல்லிக் கொண்டாள். தண்ணீரின் சலசலப்பு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததால் மிக அருகில் ஏதேனும் ஆறு இல்லை ஓடை இருக்க வேண்டும் என்று ஆதிரை உணர்ந்தாள்.
இப்படியே நின்றுக் கொண்டிருந்தால் மெய் மறந்து இந்த இயற்கையின் அழகில் சிலையாக இங்கே நின்றுவிடக் கூடுமென்று , தலையினை ஒருமுறை சிலுப்பிக் கொண்டு உடனே ஆதிரை அவள் வேலையில் இறங்கினாள். படகில் பார்த்த அரிவாள் மற்றும் கத்தியினை கொண்டு வந்து தன் தம்பி கந்தன் சொன்னது போல அங்கிருந்த குச்சியுடன் இணைத்து சணல் கயிற்றின் மூலம் படை போன்ற அமைப்பை உண்டாக்கினாள்.
அதனைக் கொண்டு அங்கிருந்த தென்னை மரத்தில் தெரிந்த சில தேங்காய்களையும் சில பச்சை தென்னை ஓலைகளையும் இழுத்து கீழே தள்ளினாள் ஆதிரை. அந்தத் தேங்காய்களின் முனையினை இளநீர் சீவுவது போல சீவி , அர்ஜூனிற்காக படகில் வைத்துவிட்டு வந்தாள். கிராமத்தில் தனியே தம்பி கந்தனுடன் இருந்த இந்த ஓரிரு வருடத்தில் ஆதிரை தெரிந்து கற்றுக் கொண்ட இவை இந்த இக்கட்டான சூழலில் உதவக் கூடுமென்று ஆதிரை அப்போது எண்ணவில்லை. ஏனோ அர்ஜூனிற்காக தேங்காயினை வெட்டும் போது ஆதிரையின் முகத்தில் ஒருவித புன்னகையும் மகிழ்ச்சியும் உண்டானது.