சௌதாமினி காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். எந்நாளும் இல்லாத திருநாளாக அன்றையதினம், தன் தோற்றத்தில் வெகு அக்கறை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
ஆரஞ்சு வண்ண லெனன் புடவையும், அதை எடுத்துக்காட்டும் படியான அடர் நீல நிற டிசைனர் ப்ளௌஸும், ஒரு கையில் தங்க வளையலையும், மற்றொரு கையில் டைடன் வாட்சும் அணிந்து, மிதமான அலங்காரமும், வாசனைத் திரவியமுமாகத் தயாரானாள். அவளைப் பாந்தமாகத் தழுவிய புடவையின் முந்தானையைச் சரிய விட்டு உடுத்தியிருந்தவள், கழுத்தில் வழக்கமாக அணியும் செயினுடன் இன்னுமொரு செயினையும் சேர்த்து அணிந்திருந்தாள்.
கற்பகவள்ளிக்கு கிளம்பி வந்த மகளைப் பார்த்து பெரும் ஆச்சரியம்! “என்னம்மா மழை எதுவும் வரப்போகுதா?” என்று கேலியாகக் கேட்டபோதும், ஆசையாக மகளை உச்சி முதல் பாதம் வரை வருடினார். மாலை வீடு திரும்பியதும் சுற்றிப்போட வேண்டும் என்று அக்மார்க் அன்னையாக நினைத்துக் கொண்டவருக்கு, திருமணத்திற்கு மட்டும் இன்னும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாளே என்று ஏக்கப் பெருமூச்சு வந்தது.
சிற்றன்னையின் ஏக்கம் அவரது பார்வையிலும், பாவனையிலும் புரிந்தாலும், சௌதாமினி அதைப்பற்றி மூச்சு விட்டாளில்லை! கன அக்கறையாக, “வாசுவுக்கு கம்பியூட்டர் கிளாஸ் சேரணுமாம் சித்தி. என்னை கூட்டிட்டு போகச் சொன்னான். அதான் கொஞ்சம் கெத்தா போகலாமேன்னு…” என்று கண் சிமிட்டி பதில் சொல்லிவிட்டு காலை உணவருந்த அமர்ந்து கொண்டாள்.
அக்கா சொன்னதைக் கேட்டுக்கொண்டே உணவருந்திக் கொண்டிருந்த இளையவனுக்கு எங்குச் செல்லவிருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்து விட்டது. நேற்று எதுவுமே சொல்லாமல் அக்கா மூட்டை கட்டி வைத்த விஷயம் இன்று இதுபோல மேலெழும் என்று அவன் நினைக்கவே இல்லை. தன் நிலையை விளக்கி பணத்தை கேட்டால், அக்கா தந்துவிடுவாள் என்று தான் எண்ணினானே தவிர, இதுபோல அக்கா முடிவெடுப்பாள் என்று அவன் யோசித்துப் பார்க்கவே இல்லை.
இந்த சூழலிலும், கவின்யாவின் நிலையே அவனை வெகுவாக அச்சுறுத்தியது. தன்நிலை, தன் குடும்பத்தின் கௌரவம் அனைத்தும் இக்கட்டில் இருந்த போதும், அவள் தன்னை நம்பி வந்த பெண் என்பதிலேயே மற்ற அனைத்தும் பின்னோக்கிச் சென்றிருந்தது. மனம் முழுக்க கவின்யா இதை எப்படித் தாங்குவாள் என்ற நிலையிலேயே அவன் உணர்வுகளும், எண்ணங்களும் தேக்கம் பெற்றது.
“சீக்கிரம் சாப்பிடு வாசு. கிளம்பணும்” அன்னையின் முன்பு இன்முகமாகச் சொன்னாலும், சௌதாமினியின் முகம் காட்டிய கண்டிப்பு அவனுக்குத் தெளிவாகவே புரிந்திற்று!
சுவை உணராமல், வயிறு நிறையாமல் உண்டேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு வசந்தன் எழுந்தான். அது புரிந்தாலும் ஏன் என்று கேட்கவேயில்லை மூத்தவள். அவளின் நிராகரிப்பு அவனுக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது.
காரின் அருகே சென்றதும் அமைதியாக ஓட்டுநருக்குப் பக்கத்து இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அவன் செய்கையை ஆச்சரியமாகப் பார்த்தபடி காரில் ஏறியவள் அதைக் கிளப்பியபடி, “ஒரே நாள்ல திருந்தாதடா. நம்ப முடியலை” என்றாள் கீழுதடு பிதுங்க.
அக்கா தாஜா செய்வதற்காக நடிக்கிறேன் என்று நினைக்கிறாள் போலும் என்று எண்ணியவனுக்கு முகம் விழுந்து விட்டது. மென்குரலில், “நான் இனி நல்லபடியா நடந்துப்பேன் கா…” என்று வாக்குறுதி தந்தான்.
உன்னை நான் நம்பவில்லை என்று அவளது மௌனமே கட்டியம் கூறியது. அதில் எழுந்த வருத்தத்தோடு, “அக்கா இப்ப நம்ம கண்டிப்பா அங்க போகணுமா?” என்றான் தயங்கித் தயங்கி.
அக்கா நான் சொன்னதை நம்பவில்லையா? என் வாக்கில் நம்பிக்கையில்லை; இப்பொழுது என் சொல்லிலுமா? என வேதனையாக எண்ணியவன், “நிஜமாலுமே அவனுங்க பிளாக்மெயில் பண்ணறாங்கக்கா…” என்றான் கம்மிய குரலில்.
“ம்ப்ச்” என்று வெளிப்படையாகச் சலித்தவள், “நீ கெட்டு போறதும், வயதுக்கு மீறி சில விஷயங்கள் செய்யறதும் எப்படி எனக்கு தப்புன்னு படுதோ… பிடிக்கலையோ… அதே மாதிரி தான், அவனுங்க பிளாக் மெயில் செய்யறதும் எனக்குச் சரியா படலை. அதுக்கு நான் ஒத்துப் போக மாட்டேன்” என்றாள் கறாராக.
அதில் விழித்தவன், “அக்கா கவின்யா இதெல்லாம் தாங்க மாட்டா கா. பிளீஸ்கா… அவ பாவம். அவளுக்காகவாவது கொஞ்சம் யோசிக்கா” என்றான் கெஞ்சலாக.
“உனக்கு மூளைன்னு ஒன்னு வேலையே செய்யாதாடா. இன்னைக்கு பணம் கேட்கிறானுங்க. நீயும் தந்துடற. இதே இன்னும் போகப்போக கேட்டுட்டே இருந்தா நீயும் எவ்வளவு தருவ? நீ ஏற்கனவே திருடின மோதிரமும், பணமும் கூட இவனுங்களுக்காகத்தான் இருக்கும் போல. சரி ஒரு கட்டத்துல அவனுங்க அந்த பொண்ணே வேணும்ன்னு கேட்டா அப்ப ரெண்டு பேரும் என்ன செய்வீங்க?” அவள் கோபமாகத் திட்ட, அவனது முகம் வெளிறியது.
“அக்கா…” என்றான் பரிதாபமாக.
“நாளும் யோசிக்கணும் வாசு. சரி நீங்க செய்தது ரொம்ப பெரிய தப்புதான். அதை நான் இல்லைன்னு சொல்லலை. இப்ப அதுக்காக எவ்வளவு நாள் ஒரு திருட்டு கும்பலுக்கு பணம் தர போறீங்க. முதல்ல அங்கே போயி அவனுங்க கிட்ட பேசிப் பார்ப்போம். அவனுங்க ஆள் எப்படின்னு ஒரு கணிப்பு கிடைக்கும். அதுக்கு தகுந்த மாதிரி மேற்கொண்டு யோசிக்கலாம். ஆனா, பணம் மட்டும் கொடுக்கக் கூடாது. அதை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் மறந்துடாத” என்றாள் கண்டிப்புடன்.
“அதையெல்லாம் இதுபோல செய்யும் முன்ன யோசிச்சிருக்கணும். தப்பைத் தைரியமா செய்யறீங்க. ஆனா, அதை வெளியில் சொல்லும்போது எதுக்கு இவ்வளவு பயம்?”
“அக்கா அவ வீட்டுல தெரிஞ்சா ரொம்ப பிரச்சினை ஆயிடும் கா. இதுமாதிரின்னு தெரிய வந்தா படிப்பை நிறுத்தி கல்யாணம் கூடச் செய்து வெச்சுடுவாங்க கா” என்றான் கலக்கமாக.
இத்தனை கட்டுப்பாடுகளோடு இருக்கும் பெண்ணா இத்தனை தூரம் துணிந்தாள்? என்று சௌதாமினிக்கு தலை கிறுகிறுத்தது. இருந்தும் தம்பியிடம் காட்டும் சிறு இளக்கம் கூட பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று புரிந்தவள் எதையும் காட்டிக் கொள்ளாமல், “ எவ்வளவோ கஷ்டப்பட்டு பொண்ணுங்க படிக்கவும், வேலைக்குப் போகவும் நம்ம நாட்டுல சுதந்திரம் வாங்கி தந்தாங்க. ஆனா, உங்களை மாதிரி ஆட்களோட கீழான செயலால அதை எவ்வளவு அழகா முடக்க முடியுது. இதெல்லாம் ரொம்ப பெரிய சாதனை. இதை நினைச்சு நீ தாராளமா பெருமை படலாம்” என்றாள் இளக்காரமாக.
அக்காவின் ஒவ்வொரு குத்தல் பேச்சுக்கும் வெகுவாக குன்றிப் போனான் வசந்தன். எவ்வளவு பெரிய விஷயங்களையும் வெகு சாதாரணமாகச் செய்து விடுகிறோம் என்று அவனுக்கு மனம் குன்றியது. உண்மையாகவே மனம் வருந்தினான் தான்! ஆனால், அவன் செய்த பிழைகளின் அளவுகள் பெரியது என்பதால் சௌதாமினியால் இம்மியளவு கூட அவனிடம் இளக்கம் காட்ட முடியவில்லை.
“என்ன பேச்சையே காணோம்”
“நான் எத்தனை சாரி சொன்னாலும் போதாதுக்கா…” என்றான் வருத்தத்துடன்.
“எத்தனை பேருக்கிட்ட சாரி கேட்க வேண்டியிருக்கும்ன்னும் நினைச்சு பாரு… லிஸ்ட் நீளமோ நீளம். ஒரு பொண்ணை மனசுல நினைக்கிறதுக்கே எவ்வவளோ யோசிக்கணும். ஆனா, உன்னோட தகுதிக்கு… பெத்தவங்க கிட்ட ஒட்டுண்ணியா வாழ்ந்திட்டு இருக்கும் இந்த நிலைக்குக் காதலே பெருசுங்கிறப்ப… காமம்…” அந்த வாக்கியத்தை முடிக்கக் கூட முடியாமல் இதழ் கடித்து, பெருமூச்சு விட்டுத் தடுமாறினாள்.
“நான் ரொம்ப ரொம்ப மட்டமா நடந்துட்டேன் இல்லைக்கா” என்று சொன்னவனின் கண்கள் கலங்கியிருக்க, தன் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தான். வசந்தன் அழுவதும் சௌதாமினிக்கு கஷ்டமாகவே இருந்தது. அதன்பிறகு என்ன நினைத்தாளோ எந்த பேச்சும் பேசாமல் அவன் குறிப்பிட்ட ஏரியாவிற்கு வண்டியை விட்டாள்.
“பிரௌசிங் சென்டர் எங்க இருக்கு?” என்று அவனிடம் கேட்டபடியே அவன் சுட்டிக்காட்டிய இடத்திற்கு வண்டியைக் கொண்டு நிறுத்தினாள். அருகில் இருந்த போலீஸ் வாகனத்தை அவள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தம்பியோடு பிரௌசிங் சென்டருக்குள் நிமிர்வோடு நுழைந்தவள் அங்கு நின்றிருந்தவனைச் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ந்து, மிரண்டு விழித்தாள்.
அவனுக்கும் அதே நிலை தான் போலும்! இவள் உள்ளே நுழைந்ததுமே இவள் புறம் பார்வையைத் திருப்பியவனின் புருவங்கள் ஏகத்திற்கும் ஏறி இறங்கியது. ஆச்சரியமாம்!
கூடவே அவனது விழிகளோ ஆர்வமாக அவளை உச்சி முதல் பாதம் வரை வருடிவிட்டு மெச்சுதலாக அவளை நோக்கியது. காலையில் சித்தி பார்த்த அதே பார்வை தான். அதே ரசனையும், மெச்சுதலும் தான்! ஆனால், இவன் எப்படி அதுபோல பார்க்கலாம் என அவளுக்குள் பெரு நெருப்பு எரிந்ததில், அவளது விழிகள் அனலைக் கக்கியது.
அதையெல்லாம் கண்டுகொள்பவன் சர்வேஸ்வரன் இல்லையே! அவள் ஏதோ காதல் பார்வை பார்ப்பது போல அவளுக்கு பதிலுக்கு மென்னகையைப் புரிந்து விட்டு, மீண்டும் தன் முன்பு நின்றிருந்தவர்களின் மீது கவனத்தைப் பதித்தான்.
“சொல்லுங்கடா… எத்தனை நாளா நடக்குது இந்த திருட்டுத்தனம்?” என்று அதட்டினான்.
“தெரியாம பண்ணிட்டோம் சார்…”
“என்னது தெரியாமையா? ச்ச்… ச்ச்…” என அநியாயத்துக்கு நக்கல் செய்தவன், இருவரின் கன்னங்களிலும் பொறி பறக்க அரை விட்டான். தலை கிறுகிறுக்க சுழன்றவர்களின் கன்னங்களில் அவனது கை விரல் தடங்கள் அப்பட்டமாகத் தெரிந்தது.
அக்காவும், தம்பியுமே அவனது அதிரடியில் சற்று அரண்டு தான் நின்றிருந்தார்கள். மீண்டும் இவர்கள் புறம் பார்வையைத் திருப்பி இவர்கள் தோற்றத்தைக் கவனித்தவன், “ம்ப்ச்…” என்று தன் நெற்றியில் பெரு விரலும், மோதிர விரலும் கொண்டு தேய்த்து விட்டுக் கொண்டான்.