காலை எழுந்தது முதல் தன்மாமனின் முகத்தையுங்கூட பார்க்காமல் சுற்றி வந்தாள் எழிலரசி. ‘என்னை விட்டுப் போவேன் என்று எப்படி சொல்லலாம்?’ கோபத்துடனேச் சுற்றி வந்தவளால் ஒரு மணிநேரங்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.
காக்கி உடையில் கிளம்பி வந்தவள், உணவுமேஜையில் அமர்ந்ததும், கேட்ட முதல் கேள்வியே “மாமா சாப்பிட்டாச்சா” என்றுதான்.
வழக்கமாக கணவனிடமிருந்து வரும் கேள்வி மகளிடமிருந்து வரவும், வித்யாசமாகப் பார்த்தாலும் பதில் சொல்லவில்லை திவ்யபாரதி.
மகளின் மேல் இருந்த கோபத்தை தன் மௌனத்தில் காட்டி, அவளது தட்டில் இட்லியைப் பரிமாற, தாயின் முகத்தை சற்று நிமிடம் கூர்ந்தவள், தானே சாம்பாரை கொஞ்சமாகப் போட்டுக்கொண்டு தட்டுடன் மாடி ஏறினாள்.
கார்த்தி அவனது அறையில் ஒருக்கையை தலைமாட்டிலும் மறுகையை நெற்றிமேல் வைத்தபடி கண்மூடி படுத்திருந்தான்.
இரவு முழுவதும் அவனும் உறங்கவில்லை என அவனது சோர்ந்துக் கிடந்த முகமே சொல்ல, தட்டை பக்கத்து மேஜையில் வைத்தவள், எப்போதும்போல் அவனது காலில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
அவள் படுத்ததுதான் தாமதம், கார்த்தியின் விரல்கள் அவள் தலை வருடியது. மாமனும் மருமகளும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கார்த்தி அறையில் குளித்துவிட்டு அப்போதுதான் வெளியில் வந்த வெற்றியின் இதழ்களில் இந்தக் காட்சியைக் கண்டதும் மென் புன்னகை.
காக்கி உடையில் கவிழ்ந்தடித்துப் படுத்துக் கொண்டிருப்பவளைக் காணக் குழந்தைகள் அடித்த தாயிடமே கோபித்துக் கொண்டு திரும்பி வருவதைப் போல் இருந்தது.
தன்னிடமும் இப்படி அனைத்தையும் மறந்து ஓடிவருவாளா என்ற ஏக்கம் எழ, சிறு மூச்சுடன் வந்த சுவடு தெரியாமல் வெளியேறினான்.
மாமனுக்கு காலை உணவை ஊட்டி முடித்தே கீழே இறங்கியவள் தட்டை கழுவப்போட்டு விட்டு வெளியேற, மனங்கேளாமல்
“சாப்பிட்டுட்டுப் போடி” என்ற தாயை பதிலேதுமின்றி வெற்றுப் பார்வையுடன் கடந்தாள்.
உணவு மேஜையைத் தாண்டவும் அவளது கரம் சாப்பிட அமர்ந்திருந்த வெற்றியிடம் சிக்குண்டது.
எதுவும் பேசாது அருகில் அமரவைத்தவன், தனக்காக எடுத்து வைத்தத் தட்டை அவள்முன் நகர்த்தி வைத்தான்.
பரிமாற வந்த திவ்யபாரதியிடம், “என் மேலயும் தப்பிருக்கு” என்றதோடு முடித்துக்கொண்டவனின் பார்வை மனையாளிடம் திரும்பி, ‘சாப்பிடு’ என்றது. இருவரின் பாராமுகத்தில் அங்கு என்ன நடந்திருக்கும் என்று யூகித்திருந்தான்.
‘சுத்தம்! மாமன் சப்போர்ட்ல சும்மாவே ஆடுவா இப்படி புருஷனும், சேர்ந்து சப்போர்ட் பண்ணா இனி கூடம் இல்லாமலே சாமி ஆடுவா’ மனதிற்குள் சலித்துக் கொண்ட திவ்யபாரதி, கணவனின் இலேசான பார்வை மாற்றத்திற்கே வீம்பு பண்ணாது சாப்பிடும் மகளை வியந்த பார்வையுடன் கடந்து செல்ல, எதிரே வந்த கணவனின் மீது மோதி நின்றாள்.
“நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல, இரண்டும் ஒன்னை ஒன்னு விட்டுக்கொடுக்காது. பெட்டர் தள்ளியே இரு! அட்லீஸ்ட் அவன் முன்னாடி!” என்று சிரிக்கவும், “எல்லாம் ஓரே குட்டையில் ஊறின மட்டைங்க” என்றி திட்டிவிட்டு நகரும் மனையாளைக் கண்டு அவன் புன்னகை இன்னமும் விரிந்தது. மனைவி மட்டுமே மகளை கண்டிக்கும் ஓரே ஆள். அவளுக்கும் தடைபோட்டு அமரவைத்திருந்தான் மருமகன்.
அம்மு சாப்பிட்டு முடியும்வரை வெற்றியின் பார்வை மாறவும் இல்லை தனக்காக தட்டில் போட்டுக்கொள்ளவும் இல்லை. அவள் சாப்பிட்டு எழுந்து கொள்ளவும் இயல்பாக அவளது தட்டை தன் பக்கம் நகர்த்திக் கொண்டவன், கையில் தோள் பையுடன் வந்த மிருத்யூவிடம், “மிரு குட்டி எங்க கிளம்பிட்ட என்றான்?” திகைத்து விழித்துக் கொண்டிருந்த மனைவியை கொஞ்சமும் கண்டு கொண்டானில்லை.
அதே திகைப்புடன் விழி பிதுக்கிய திவ்யபாரதியைக் கண்டு செழியனுக்கு இன்னமும் சிரிப்பு பொத்துக்கொண்டு வர கண்டுகொள்ளாததுபோல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“பெங்களூர்ல இரண்டுநாள் செமினார் மாமா” என்றவளும் அவனுடன் சாப்பிட அமர்ந்து கொண்டாள்.
“மாமா உனக்கு ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன்!” என்றான் கைகழுவிக் கொண்டு வந்த மனைவியை ஓரப்பார்வையால் வெறுப்பேற்றி.
‘பொஸசிவ்வ தூண்டுறாராமா… இதெல்லாம நாங்க நிறையபடத்துல பார்த்தாச்சி!’ அலட்சியப் பார்வையுடன் கால்களில் ஷூவை அணிந்து கொண்டிருந்தவள், சாப்பிட்டு முடித்தவன் பாக்கெட்டிலிருந்த சிறிய பெட்டியிலிருந்து அழகிய கைச்செயின் ஒன்றை எடுக்கவும் இலேசாய் வாய் பிளந்தாள்.
அழகிய தங்கச் செயினில் நடுவில் சிறிய வடிவிலான ஹார்ட்டின் பெண்டன்ட் தொங்கவிடப்பட்டிருக்க அதன் இரண்டு பக்கமும் முத்துக்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.
“போட்டுக்கோ!” என்றவன், “இதை மிருத்யூக்கு மாட்டிவிடு மூஞ்செலி” என்று திரும்பி மனைவியையும் அழைக்க, ‘ரொம்ப ஓவரா போறடா’ கருவியபடி தங்கையின் கையில் மாட்டிவிட்டாள் அவள்.
“ஏன்டா மகனே வெறுபேத்துறியாக்கும். கொஞ்சம் முன்னாடி எங்க பாசப் பயிரை பொறாமையோட பார்த்துட்டு போனவன் தான நீ!” என்று படியிலிருந்து இறங்கி வந்த கார்த்தி,
“நீ சாயங்காலம் சீக்கிரம் வா அம்முக்குட்டி! மாமா இதைவிட பெருசா உனக்கு வாங்கித் தரேன்” என்றவனைக் கண்டு அனைவரும் மானசீகமாகத் தலையிலடித்துக் கொள்ள, வெற்றியை தடுத்துவிட்டு தங்கையைத் தானே விட்டுவிடுவதாக அழைத்துக் கொண்டு கிளம்பினாள் எழிலரசி.
குரோதத்துடன் தன்னைக் கடந்துச் சென்ற மனைவியைக் கண்டு குறும்பாய் புன்னகைத்தான் அவளது கணவன்.
*****
“சாரி! என்னை மன்னிச்சிடு!” என்ற குரலில் வாகனத்தை இயக்குவதற்காக சாவியை நுழைத்தவளின் கரம் அதனை இறுக்கிப் பிடிக்க அதிர்ந்து திரும்பினாள் எழிலரசி.
அவன்தான் அவனேதான்! வாகனத்தின் பின் இருக்கையில் சிங்கம் சூர்யா கெட்டப்பில் ஜீன்ஸ் டீ சர்ட் சகிதம் அமர்ந்திருந்தான். அவனது கரகரத்த குரல் மட்டுமே அவனை அடையாளப்படுத்திக் காட்டியது.
“நீ எ…ப்படி உள்ள?” தங்கையை செமினாருக்காக விட வந்திருந்தவள், பூட்டிச்சென்ற வாகனத்தில் அவன் அமர்ந்திருக்கவும் லேசான தடுமாற்றத்துடன் கேட்டாள்.
அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல், “அன்னைக்கு என்னை எதிர்பார்த்திருப்பல்ல” என்றான் ஒருவித ஏமாற்றம் கலந்த குரலில். பெருமூச்சுடன் விழி மூடித்திறந்தாள் அவளும்.
“ரொம்பவே எதிர்பார்த்தேன்” என்றதும் அவனது விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
திரும்பி அவனது ப்ரௌன் நிற லென்ஸ் பொருத்திய விழிகளையே பார்த்திருந்தவள், “ஏன் வரல” என்றதும் அவனில் சின்ன தடுமாற்றம்.
“நிஜம்மா என்னை எதிர்பார்த்தியா?” என்றவனின் குரலிலிருந்த வலி அவளை திகைப்பில் ஆழ்த்தியது. அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறினான்.
“ம்ம்..” என்றாள் காரை நகர்த்தியபடி.
“எனக்கும் அந்த கல்யாணத்தில விருப்பம் இல்லாம இருந்துச்சி” என்றதும் நிமிர்ந்து பார்த்தான். அவளும் கண்ணாடியில் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார் முக்கிய சாலையை எட்டியிருந்தது.
“நா..ன் நான்” என்று தடுமாறியவன் மேலே சொல்ல முடியாமல் தலையைக் கோதியபடி திரும்பிக் கொண்டான்.
அவளும் அவனது தடுமாற்றத்தை கண்ணாடி வழியே வியப்புடன் பார்த்திருந்தாள்.
“என்னோட காதல் உன்னை பாதிச்சுதா?” என்ற நொடி அவனது தலை அதிவேகத்தில் காரின் கண்ணாடி கதவில் மோதியது.
வலியுடன் அவன் எழுந்தபோது அவனது ஒரு கையில் விலங்கு பூட்டி காருடன் பிணைக்கப்பட்டிருக்க, வாய்க்குள் பிஸ்டலை சொருகி இருந்தாள் எழிலரசி.
“ஏய் இராஜாளி பொண்டாட்டி! என்னை தடுமாறவச்சி ஏமாத்திட்டில்ல” சிறைக் கம்பிகளுக்கு பின்னாலிருந்து பேசினான்.
சிறை அறைக்குள், அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தவனின் பதற்றத்தை இரசித்தபடி வெற்றிக்கு அழைத்தாள்.
அது ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்’ என்ற பதிலைச்சொல்ல ‘ரொம்ப நல்லது’ என்றாள் முனுமுனுத்து. ‘இவனை வச்சி என்னை எவ்ளோ கிண்டல் பண்ணின? உனக்கு இருக்கு!’ நினைத்தவளாய் அடுத்து தந்தைக்கு அழைத்தாள்.
அதற்குள், “யாரு உன் இராஜாளிக்கு சொல்லப்போறீயா? நான் நினைச்சா அவனை இல்லாம பண்ணிட்டு உன்னைத் தூக்கிட்டுப் போக முடியும்” என்றதும், “முடிஞ்சா செய்டா!” என்று அவனது டீ சர்ட்டைப் பிடித்து கம்பிகளுக்கிடையே இழுத்திருந்தாள். “முடிஞ்சா அவரை மீறி என் மேல கையை வச்சிப்பார்!” என்றவளது விழிகளில் ஆவேசம்.
அவளது ஆவேசத்தையும், அவள் பிடித்திருந்த தனது டீ ஷர்ட்டையும் மாறிமாறிப் பார்த்தவனின் இதழ்களில் குறுநகை. “ச்சீ!” என்று உதறித் தள்ள நகைத்தபடி பின்னால் சென்றான் அவன்.
அலைபேசியை துண்டித்து, “என்ன கேட்ட? உன் காதல் பாதிச்சுதாவா? பாதிச்சுது ரொம்பவே பாதிச்சுது.
எங்க என் வெற்றிகிட்டருந்து என்னை ஒரேடியா பிரிச்சிருவியோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயத்தோடேதான் அவரோட தாலிய வாங்கிக்கிட்டேன். அதனாலயே அடுத்தமுறை உன்னை பிடிச்சே தீரணும்னு வெறியோட சுத்திட்டு இருந்தேன்” என்றதும் அவனது கண்களில் இரசிப்புத் தன்மை கூடியது.
“அவரோட காதலியா இருக்கும்போதே என்னைத் தொட்டா உன் சங்க அறுத்துருப்பார். திரும்ப அவரை பார்க்க முடியாம போய்டுமோன்னுதான் பயந்தேனே தவிர. உன் மிரட்டலுக்கு இல்ல!” என்றவள் இன்னும் அவனை நெருங்கி, “அப்படியே நீ என்னை தூக்கியிருந்தாலும் ஏன் எதுவுமே பண்ணி இருந்தாலும் கூட அவர் என்னை விட்டுக்குடுத்திருக்க மாட்டார்டா பொறுக்கி!” என்றதும் அவனது கண்களில் சுவாரஷ்யம்கூட “ச்..ச் ச்…” என்று உச்சிக் கொட்டி மெச்சியப் பார்வைப் பார்த்தான்.
“பார்ரா…இராஜ பருந்துக்கு வந்த வாழ்வ…!” என்று இதழ் வளைத்து, “அன்னைக்கு ஐம்பது கோடி சரக்கா நீயான்னு என் பாஸ் கேட்டப்ப ஐம்பதுகோடி சரக்குதான் முக்கியம்னு உன் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டனேன்னு இன்னைக்கு ரொம்ப வருத்தப்படுறேன்டி செல்லம்” என்றதும் மிதமிஞ்சிய அருவெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.
அவனின் ப்ரௌன் நிற விழிகளும் அவளை இரசனையுடன் பார்த்திருக்க,
“உன் கண்ணு மூக்குன்னு இந்த புருவம் இந்த உருவம் எதுவுமே உண்மை இல்ல. நீ எல்லாம் அவர் முன்னாடி நிக்கவே தகுதி இல்லாதவன்” என்று கசப்பாய்ச் சொன்னவள், அதே வேகத்தோடு வெளியில் நின்றிருந்த கான்ஸ்டபிள் இருவரை அழைத்து, “இவன் மீசை தாடின்னு அக்குவேறா ஆணிவேறா பிரிச்சிப்போடுங்க” என்றதும் அவளது அலைபேசி சிணுங்கியது.
செழியன்தான், அவளது தவறிய அழைப்பைக் கண்டு திரும்ப அழைத்தவன் மகள் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் திகைத்திருந்தான்.
“ஆர் யூ சுயர்? இல்ல அன்னைக்கு டெக்ஸ்டைல்ல நடந்தா மாதிரி வேற…” என்றதும், பணியிலிருப்பதையும் மறந்து, “அப்பா…” என்றாள் பல்லைக் கடித்து. சிறிது நேரம் தகப்பனிடம் பதில் இல்லாமல் போனது.
அவனது நொடி நேர மௌனத்தில் அதைப் புரிந்துகொண்டவளுக்கு கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது. இதே வாய்தானே என் பெயரைக் கெடுத்து விடாதே என்று சொன்னது.
சின்ன இடைவெளிக்குப் பின், “வெற்றிக்கு சொல்லிட்டியா” என்றான்.
“போன் அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா. அதான் உங்களுக்கு…” என்றதும் பாதியில் நிறுத்தி, “சரி! நான் வரேன். அதுவரைக்கும் எச்சரிக்கையாவே இருங்க. யாரும் கிட்ட போக வேண்டாம்!” என்று எச்சரித்து அலைபேசியை துண்டிக்கவும், சிறைக்கதவை திறந்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் இருவரும், “மேடம்…!” என்று அலறினர்.
“யாரும் கிட்ட வந்தா யோசிக்கவே மாட்டேன். அமுக்கிடுவேன்” என்றவன் தன் இடுப்பின் பட்டையோடு வெடிகுண்டு இணைத்ததை தூக்கிக் காட்டிக்கொண்டிருந்தான். அம்முவுக்கும் அதிர்ச்சிதான். ஆனாலும் அவனின் பழைய சந்திப்புகள் நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தைத் தந்தது.
“வெயிட் பண்ணுங்க! டி ஜி பி யே நேர்ல வர்றார்.” என்றவள், வெடிகுண்டு நிபுணர்களையும் வரச்சொல்லி விட்டு வைத்தாள்.
கோபத்தில் தலையைக் கோதியபடி திரும்பி நின்றிருந்தான் அவன். அலட்சியப் பார்வையுடன் அவள் இருப்பிடத்தில் அமர, வெற்றி அழைத்தான்.
கேள்விப்பட்டதுமே பெருமையாக எதும் சொல்வான் என்று எதிர்பார்த்தால் போலும். மாறாக, “உன்னை யார் அவனை அரஸ்ட் பண்ணச் சொன்னது?” என்று சீறியவனில் உண்மையில் அதிர்ந்தாள்.
அவன் பேசுவது வேறு சரியாகக் கேட்காமல் இருக்க, நம்ப முடியாமல், “என்ன புரியல” என்றதுமே மீண்டும் சீறினான் அவன்.
“அவனை பிடிக்கத் தெரியாமத்தான் உன்னையே சுத்தி சுத்தி வந்தவனை விட்டு வச்சிருக்கோமா?” அவனை வெளிய விடு!” என்று கடுகடுத்தான்.
என்றுமில்லாத கடுமை. அவளுக்கு நீர்த் துளிர்க்கப் பார்த்தது. அடக்கிக் கொண்டு நிமிர்ந்தவள், “முடியாது” என்றாள் ஒற்றை வார்த்தையாக.
“அம்மு ப்ளீஸ்…” என்றான் கெஞ்சலாக. அவளிடம் கோபம் எடுபடாது.
“அவனைப் பத்தி உனக்குத் தெரியாதுடி. எதாச்சும் பண்ணிடப் போறான். அவனை நான் பார்த்துக்கிறேன்.” என்று கெஞ்சியும் அசைய மறுத்தாள்.
“அப்போ தெரிஞ்சேதான் அரெஸ்ட் பண்ணாம விட்டு வச்சிருக்கீங்களா? ஏன் இவன்கிட்டயும்…” என்றவள் முடிக்கும்முன்,
“ஆமா! தெரிஞ்சிதான் விட்டு வச்சிருக்கேன். போதுமா?” அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என அறிந்து கோபத்தில் அவனும் சீற, அதுவரை அவள் அடக்கிய விழிநீர் கன்னம் தொட்டது.
திருமணத்தின் கடைசிநொடிவரை எவ்வளவு துடித்தாள். என் உணர்வுகள் புரியாமல் போனதா இவனுக்கு? யாரும் அறியாமல் சுண்டிவிட்டாள்.
அவள் விழிநீரை அடக்கிக் கொண்டிருக்க, “இவன் வெறும் அம்புதான். இவன் பின்னாடி பெரிய டீம் இருக்கு. அவன் ஆளுங்க ஸ்டேஷனையே உடைச்சி தூக்கிட்டுப் போவானுங்க. நான் சொல்றேன்ல அவனை விடு! இல்ல நீதான் சஸ்பென்ஷன் வாங்குவ, ” என்றதும், சிறிது யோசித்தவள், “அதை நான் பார்த்துக்கிறேன்” என்று வைத்து விட்டாள். கூடவே மெல்லிய நகைப்பு தோன்றி மறைந்தது.
அப்போது, செயின் பறித்துவிட்டதாகச் சொல்லி இரண்டு பெண்கள் ஸ்டேஷனுக்குள் பதற்றத்துடன் வந்தனர்.
அவர்கள் புகார் கொடுத்துக் கொண்டிருக்கவே சின்னதாய் வெடிச்சத்தம். தொடர்ந்து புகை மூட்டமாய் இருக்க, அனைவருக்கும் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. புகை கலைந்தபோது அவன் இருந்த செல் திறக்கப்பட்டு அது காலியாக இருக்க அந்தப் பெண்களும் மாயமாய் மறைந்திருந்தனர்.