அத்தியாயம்: 25
அவர்களுக்குள் பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி நாட்கள் கடந்தன.
ஆனால் வழக்கின் அடி ஆழம்வரை தோண்ட ஆரம்பித்திருந்தான் வெற்றி.
“வெற்றி சார பார்க்கணும்!” என்றது ஒரு கரகரத்தக் குரல்.
வாரணம் ஆயிரம் படத்தில் வரும் வயதான சூர்யா போல் அதே தோற்றத்தில் கையில் ஒரு ஸ்டிக்குடன் நின்றிருந்த நெடியவனை ஏற இறங்கப் பார்த்த உதவிக் காவலர், “வெயிட் பண்ணுங்க. சார்கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் திரும்பி வந்து, “சார் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றாராம். உள்ள போங்க!” என்றார்.
உதவிக் காவலரை அழைத்து, “அரைமணி நேரத்துக்கு என்னை யாரும் பார்க்க அனுமதிக்க வேண்டாம்” என்ற வெற்றி அவரை வெளியே அனுப்பினான்.
அவர் வெளியில் சென்றதுமே, சிரித்தபடி, “இந்த கெட் அப் நல்லாருக்கே” என்றான் அந்த நெடியவனைப் பார்த்து.
“அடப் போ சார்! ஒவ்வொரு தடவ உன்ன பார்க்க வரும்போதும் இதை வேற ஒட்டிக்கிட்டு அரிக்கிது தெரியுமா” என்ற அந்த நெடியவன் தன் தலையிலிருந்த விக், தாடி மீசை எல்லாம் வெற்றியின் கண் முன்னாடியே பிய்த்து மேஜையில் வைக்க சத்தமிட்டுச் சிரித்தான் வெற்றி.
“சிரிக்காதண்ணா” என்றான் உரிமையாய். “இப்படி கரகரன்னு பேசி என் ஒரிஜினல் வாய்ஸ் எனக்கே மறந்துடும்போல” என்றவன் தனது அழகான சுருள்முடியை கோதிவிட்டபடி “இப்போதான் மண்டைக்குள்ள காற்று போகுது. அந்த ஃபேனைக் கொஞ்சம் இப்படித் திருப்புண்ணா” என்றதும், “ஏ.சி. தான் ஓடுதுல்ல” என்றாலும் சிரித்தபடியே மின் விசறியையும் அவன் பக்கமாகத் திருப்பினான் வெற்றி.
“நீ இப்படியே இங்க வர்றது தெரிஞ்சா பரலோகம் போய்டுவ! பரவால்லயா?” என்ற வெற்றி சத்தமாகச் சிரிக்கவும், “அய்யோ அண்ணாத்த…” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
“இதுக்கு நீ அந்த ஜீப் குண்டு வெடிப்பிலயே என்னை சாக விட்ருக்கலாம். என் கூட தப்பிக்கவிட்டியே சேகரு! உங்க போலீஸ் ஆளுங்க அவன் பின்னால ஃபாலோ பண்றது தெரிஞ்சி அவனை போட்டுட்டானுங்க தெரியுமா?” என்றான் பயத்துடன். போலீஸ் அப்ரூவராக மாறுகிறேன் என்றதும் அன்று வெற்றியால் தப்பவிடப்பட்ட சுருள்முடி மண்டையன்.
சிரித்தபடி “தெரியும்!” என்ற வெற்றியை அவன் வாய்பிளந்து பார்க்க, “அவன் பின்னால ஆள அனுப்பினதே உன் மேல சந்தேகம் இல்லாத மாதிரி காண்பிச்சி உன்னை அங்க ஃபிரீயா சுத்தவிடத்தான்” என்றதும், “பலே கில்லாடி அண்ணாத்த நீ” என்றான் சுருள்முடி.
“அன்னைக்கு ஜீப் குண்டு வீச்சில தப்பிக்க வைக்கிறாமாதிரி தப்பிக்க விட்டு நேக்கா எங்க ஆளுங்கள வச்சே அவனைப் போட வச்சிட்டல்ல. இதே நான் அன்னைக்கு அப்ரூவரா மாறலைன்னாலும் என்னையும் போட்டுத் தள்ளிருப்பல்ல” என்றான் போலிக் கோபத்துடன்.
வெற்றி அவனுக்கு அளித்திருந்த சலுகையில் நன்றாகவே உரிமை எடுத்துக் கொண்டான்.
“அதான் அப்ரூவரா மாறிட்டியே! சரிவிடு! எதாச்சும் தகவல் கிடைச்சுதா?” என்றான் விளையாட்டைக் கைவிட்டு.
“எங்க அண்ணாத்த! நான்லாம் வெறும் சப்ளையர் தானே. என்னையெல்லாம் டீப்பா விடுவானுங்களா? அதும் இல்லாம சேகர் மாட்டுனதுலருந்தே ரொம்ப எச்சரிக்கையா இருக்கானுங்க. இதுல பெரிய கை யார் இருக்கான்னு ஒன்னும் தெரியல அண்ணாத்த! ஆனா இந்த தடவை உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்” என்றதும் “அதை முதல்ல சொல்லுடா! என்றான் வெற்றி ஆர்வமாக.
“எங்க ஆளுங்க திருவண்ணாமலைல இருக்கிற ஒரு காலேஜ்பக்கம் அடிக்கடி போய்ட்டு போய்ட்டு வர்றானுங்க. அந்த காலேஜ் பெயர் கூட ஏதோ T ல ஆரம்பிக்கும் என்றவன் சிந்திக்கவும்,
வெற்றி, “TJ எஞ்ஜிசினியரிங் காலேஜா?” என்றதும். “ஆமா அதேதான்” என்றான் சுருள்முடி. யோசனையானான் வெற்றி. ஏனெனில் அது இறந்துபோன தேஜஸ்வினிக்கு சொந்தமான கல்லூரி.
“அங்க என்ன பண்றானுங்க? ட்ரக்ஸ் சப்ளை?” என்று வெற்றி யோசனையாகவும், “அட நீ வேறண்ணா. எல்லாம் திருந்திட்டானுங்க. இங்க பாரு!” என்று கையில் ஒரு புத்தகத்தை எடுத்தவன், “இதைத்தான் பெட்டி பெட்டியா கொண்டு அங்க இறக்குறானுங்க!” என்றான்.
அவன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கிப்பார்த்தான் வெற்றி. நீதிக்கதைகள் என்று தலைப்பிட்டிருந்தது. ‘இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே’ என்று நினைவில் ஆட அதை முழுவதுமாகப் புரட்டிப் பார்த்தான். சாதாரணமாகத்தான் இருந்தது.
கல்லூரிக்கும் நீதிக்கதைக்கும் என்ன சம்மந்தம்? எங்கேயோ தவறாகப் பட்டது. “சரி நீ கிளம்பு! நான் பார்த்துக்கிறேன்” என்ற வெற்றி சில இலட்சங்களை எடுத்து சுருள்முடியின் கைகளில் திணித்தான்.
“இனி இந்தப்பக்கமே வராத! எங்கேயாவது ஊரைப் பார்த்து போய்டு! இனிமேல் உன் தேவை இருக்காது. இருந்தா கூப்பிடுறேன்” என்றதும்,
“கல்யாணத்துக்கு கூட கூப்பிடமாட்டேனுட்ட. அக்கா எப்படி இருக்கு அண்ணாத்த!” என்றவன் சந்தோஷமாக பணத்தை எடுத்துக் கொள்ள, “இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கொக்கா இங்கதான் வருவா. இருந்து பாய் சொல்லிட்டுப் போயேன்” என்று வெற்றி சிரிக்க, கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.
“நீ தெய்வம் அண்ணாத்த வூட்லயே வச்சி எப்படித்தான் சமாளிக்கிறியோ” என்றதும், “அடிங்..” என்று வெற்றி பாய்ந்து வர, “நான் வரேன் அண்ணாத்த, எனக்காக என் ஒயிலா ரெயில்வேஸ்டேஷன்ல காத்துக்கிடக்கும். அக்காவ கேட்டதா சொல்லு! என்றவன் தெறித்து ஓடினான்,
“இதை ஒட்டிக்கிட்டுப் போடா. இல்ல போற வழியிலயே போட்டுத் தள்ளிடுவானுங்க. அப்புறம் உன் ஒயிலா இலவு காத்தக் கிளி ஆகிடும்” என்று சிரித்தபடியே மீசை தாடியை அவன் மீது தூக்கி எறியவும், அதையெல்லாம் மீண்டும் ஒட்டிக்கொண்டு வந்தது போலவே திரும்பினான் சுருள்முடி மண்டையன்.
அவன் சென்றதுமே யோசனையான வெற்றி TJ கல்லூரி சம்மந்தப்பட்ட வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று உதவியாளர்களை விட்டுத் தேடச் சொன்னான்.
இதற்கிடையில் முருகானந்தத்தின் சொத்துக்கள். அவர் செய்யும் தொழில் என்று அலசிக்கொண்டே வந்தவன் வந்து நின்ற இடம் அவரது கல்குவாரி.
பொறிதட்டியது. கொஞ்ச நாட்கள் முன்பு கல்குவாரி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று பதிவானது நினைவில் வர, வேறு சில வழக்குகளையும், அது சம்பந்தப்பட்ட செய்தித்தாள்களையும் வரவழைத்தான்.
ஒரு செய்தித்தாளில் ‘அமைச்சர் முருகானந்தத்தின் கல்குவாரியில் விழுந்து கல்லூரி மாணவிகள் மூன்று பேர் தற்கொலை’ அதிலேயே அவன் கவனம் நின்றது.
அந்த மூன்று பேரின் பின்புலத்தை ஆராய்ந்தான். மூவரும் ஒரே கல்லூரியில் படித்திருந்தனர். அதுவும் தேஜஸ்வினியின் தாயின் பெயரில் இயங்கிவரும் எஞ்சினியரிங் கல்லூரி. தாய் இறந்தபிறகு அவளது தாய்வழி தாத்தா நிர்வகித்தாலும், கையெழுத்திடும் உரிமை பதினெட்டு வயது நிறைவடைந்ததும் தேஜஸ்வினியை அடைந்திருந்தது.
அந்தச்சம்பவமும், விடுமுறைநாளில் தாத்தாவுக்குத் துணையாக தேஜஸ்வினி கல்லூரியை நிர்வகித்த போதுதான் நடந்திருக்க, மிகுந்த யோசனையானான் வெற்றி.
அந்தநேரம், பணமும் அரசியலும் விளையாடியதில் தற்கொலை என்றதோடு வழக்கை இழுத்து மூடி விட்டிருந்தனர்.
மீண்டும் அனைத்து வழக்குகளையும் ஆரம்பத்திலிருந்து தோண்ட ஆரம்பித்திருக்க, மொத்தமாய் அம்முவை இந்த வழக்கிலிருந்து விடுவித்திருந்தான். அதில் அவளுக்கு இன்னமுமே கோபம்.
ஆனால் வீட்டுக்கு வந்ததும் நித்தம் ஒரு சேஷ்டை செய்தவனில் அதைக் காட்டமுடியாது அவள்தான் திணறி நின்றாள்.
ஒரு வாரத்திலயே திவ்யபாரதியிடம் சொல்லி விட்டான். “உங்க கையாலயே சாப்பிட்டுட்டு இருந்தா என் பொண்டாட்டி கையால எப்போ சாப்பிடுறது அத்த?” என்றவனை வாயில் வைத்த பூரியுடன் அம்மு நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் கண்களில் தெரிந்த மிரட்சியே சமையலில் அவள் கெட்டித்தனத்தை சொல்லிவிட, அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.
அதில் நிமிர்ந்து, “அவளுக்குத் தெரியலைன்னாலும் பரவால்ல நானும் கார்த்திப்பாவும் சமாளிச்சிக்கிறோம்” என்றதும் திவ்யபாரதியாலும் ஒன்றும் பேச முடியவில்லை.
என் மனைவி, என் தந்தை, என் குடும்பம் என் சம்பாத்தியத்தில்தான் சாப்பிட வேண்டும் என்பதை இதைவிட நாசுக்காய் ஒருவராலும் சொல்லிவிட முடியாது. ஒருவரின் மனதும் உடையாமல் பத்திரமாய் கையாண்டிருந்தான்.
கார்த்தியையும் கூட்டு சேர்த்ததிலேயே தெரிந்தது. இனி கடைசிவரை கார்த்தி தன் பொறுப்புதான் என்று சொல்லாமல் சொன்னவனை என்ன சொல்லிவிட முடியும்.
அதில் நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள். அவனுக்கும் வெற்றி சொன்னதுதான் சரியாகத் தோன்ற மனைவியிடம் சம்மதமாய் விழி மூடித் திறந்தான்.
“சரி தம்பி! உங்க இஷ்டம். நல்ல நாளா பார்த்துச் சொல்றேன். ஆரம்பிச்சிக்கலாம்” என்று தாயும் சொன்னதில் விழி பிதுங்கியது எழிலரசிக்கு. முடிந்தவரை எதிரிலிருந்தவனை முறைக்க, தன் தட்டிலிருந்த பூரியைக் காட்டி ‘வேணுமா’ என்றான் அவன்.
யாரும் அறியாமல், பக்கவாட்டில் ‘த்து’ என்று துப்பிக் காண்பித்தாள். அதில் சட்டென்று குறுநகை வந்துவிட அருகில் மிருத்யூ பக்கமாய் திரும்பிக் கொண்டான்.
“அம்முக்குட்டி என்ன எழுந்துட்ட?” என்றதும் சாப்பிட்டு முடித்து எழப்போன எழிலரசி திரும்பினாள்.
“இன்னொரு பூரி வச்சிக்கோ.” அவளை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே மிருத்யூவின் தட்டில் விடாப்பிடியாய் இன்னொரு பூரியை வைத்து அமர வைக்க, ‘இவன…’ பல்லைக் கடித்தாள் அவனது மனையாள்.
“மாமா, ப்ளீஸ் போதும்! என்ற மிருத்யூவை விடவில்லை அவன்.
‘ஓவர் கொஞ்சல்ஸா இருக்கே! இருக்கட்டும் ஒருநாள் இருக்கு இவனுக்கு’ வேண்டுமென்றே வெறுப்பேற்றுபவனை, ‘போடா இதுக்கெல்லாம் அசருர ஆள் நான் இல்லை’ என்று அலட்சியப் பார்வையுடன் தட்டைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.
வேலை விசயத்தில் அவன் எப்படியோ பெண்கள் விசயத்தில் அவன் ஸ்ரீராமன். அதை நன்றாகவே அறிவாள். பெயருக்குத்தான் மிருத்யூவை வைத்து அவளை வெறுப்பேற்றுகிறானேத் தவிர உண்மையில் அவன் வந்தபிறகுதான் மிருத்யூ படிப்பு படிப்பு என்று ஒதுங்கிக் கொள்ளாமல் மீண்டும் கலகலப்பாக மாறிக் கொண்டிருக்கிறாள்.
அக்கா அக்கா என்று பின்னாலே சுற்றியவள். இன்று எடுத்ததுக்கும் மாமா என்கிறாள். அதில் அவளுக்கு இலேசான பொறாமையும் கூட.
உண்மையில் அப்படித்தான் பார்த்துக் கொள்கிறான் அவனும். வீட்டுக்கு எப்போது வந்தாலும் மிருத்யூவை இழுத்து வைத்து வம்பிழுக்காமல் விட்டதில்லை.
சாப்பிடும்போது எழிலரசி இருக்கிறாளோ இல்லையோ கட்டாயம் மிருத்யூவைப் பிடித்து பக்கத்தில் அமர வைத்துக் கொள்வான். கலகலவென்று செல்லும் சாப்பாட்டு நேரம்.
பாதிநாட்கள் செழியனுக்குப் பதிலாய் மிருத்யூவை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும் அவன்தான். எதிலும் ஒதுங்கிக் கொள்ளாமல் தானாகவே குடும்பத்தில் ஒருவனாய் எடுத்துச் செய்தான்.
ஆனால், இன்னமும் மொட்டை மாடியில் கார்த்தியின் தலைக்கோதலில்தான் இருவருக்கும் தூக்கம் பிடித்தது.
உண்மையில் அவளுடன் தனிமையை எதிர்கொள்ள வெற்றி தயங்கினான். அதில் அவன்தான் ஆளுக்குமுன் தலைகாணியுடன் கார்த்தியைத் தேட, அதையே அவளும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள்.
ஒரு பக்கம் பயம் இருந்தாலும் சரிவிகிதத்தில் அவன் மீதான கோபமும் வெறுப்பும் இருந்ததில் அவளும் அவனுடனான தனிமையை விரும்பவில்லை.
அதுவும் தினம் காலையில் அவன் காலில் இருந்து எழுபவளுக்கு நித்தம் ஒரு கதை சொன்னான்.
ஒருநாள், சீச்சி… தூக்கக் கலக்கத்தில், துருவன் என்று நினைத்து உன்னை படுக்க வைத்தேன் என்பான். ஒருநாள் கார்த்திப்பாதான் கால் வலி தாங்காமல் உன்னை உருட்டி விட்டது என்பான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் கார்த்தியை அவனுக்கே விட்டுக் கொடுத்து விட்டு சற்றுத் தள்ளிப் பாயைப் போட்டுக் கொண்டு படுத்துவிட்டாள்.
கார்த்திக்கே என்னவோ போல் இருந்தாலும் சிறுபிள்ளையாய் அடம்பிடித்து நின்றவர்களை அவனால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. அதில் என்னமும் பண்ணித் தொலைங்க என்று ஊருக்கு ஓடிவிட, அன்று ஆளுக்கு முன் தலகாணியுடன் வெளியே ஓடினாள் அவனது மூஞ்செலி.
அதில் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.
“வாடி வாடி நாட்டுக்கட்ட… வசமா வந்து மாட்டிக்கிட்ட…” என்று பாடிக்கொண்டே வெளிவந்தவனில் அதிர்ந்து திரும்பினாள் அவள்.
மயிலாவும் அவன் பாடியதை அப்படியே திருப்பிப் பாட, அவனிடம் முடியாமல் மயிலாவை முறைத்து, “கிட்ட எதும் வந்த.. காலை உடைச்சி கறிக்குழம்பு வச்சிடுவேன் மயிலா” என்றாள் மிரட்டலாய்.
அது தனக்குச் சொன்னது என்று புரிந்தவனின் புன்னகை விரிய, ‘உங்க போதைக்கு நான் ஊறுகாயா?’ புலம்பிய மயிலா கண்ணை மூடிக்கொண்டது.
“ஏன்டி மயிலா! இன்னைக்கு நைட்டோட நைட்டா உள்ள தூக்கிடுவமா?” என்று மனையாளை ஓரப்பார்வை பார்க்க, அவளது முகம் கலவரமடைந்தது.
செஞ்சாலும் செய்வானோ? கீழே தாய் தகப்பன் இருக்க கத்தக்கூட முடியாதே!
அவசரமாய் எழுந்தவள் வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துத் தன் தலகாணிக்கு அடியில் வைத்துக் கொண்டாள். ‘வீடு திறந்து இருந்தாதான தூக்குவ’ என்றவள் பார்த்து வைக்க, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான் அவன்.
அவளுக்கு சற்றுத் தள்ளி பாயை விரித்து மல்லாக்கப் படுத்தவனில் பெருமூச்சொன்றை அவள் வெளியேற்றிவிட்டுக் கண்ணை மூடினாள்.
திடிரென, “நிலவைக் கொண்டு வா! கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தைப் போட்டு வை…இன்று முதல் இரவு… (படம் வாலி) என்றவன் பாடவும் அதிர்ந்து எழுந்தே விட்டாள்.
அடக்கமாட்டாமல் சிரித்தவனிடம் வாயைக் கொடுக்கவும் பயம். எதாவது ஏடாகூடாமாக சொல்லுவான். எதற்கு வம்பென்று மூட்டிக்கூட்டி அமர்ந்து, அதன்மேலை தலையை சாய்த்துக் கொண்டாள். ‘தூங்கினால் தானே தூக்குவ?’ கண்ணைக் கொட்ட கொட்ட முழித்திருந்தாள்.
இழுத்துப் போர்த்திக்கொண்டு போர்வைக்குள் குலுங்கி குலுங்கிச் சிரித்தான்.
முதுகில் இரண்டு வைத்தால் என்ன என்று தோன்றும் அளவுக்கு ஆத்திரம் வந்தாலும் வாயை மட்டும் திறக்கத் தயாரில்லை அவள்.
அதற்குள் விழித்துக்கொண்ட மயிலா பாதித்தூக்கத்தில் கேட்ட, ‘இன்று முதல் இரவு… என்று ராகமிழுத்துப் பாட, அருகில் கிடந்த கட்டையை எடுத்து அதன் கூண்டின் மீது எறிந்தாள்.
மயிலா பாடவும் இன்னும் அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அதில் “என் இளமைக்கு உணவு” என்று போர்வைக்குள்ளிருந்தே பாடினான். தாங்க முடியாமல், “இப்போ தூங்கப் போறீங்களா இல்லையா” என்றாள் முறைத்து.
மயிலாவிடமும் திரும்பி, “மயிலா நீ இனி வாயைத் திறந்து பார்” என்றவள், “துருவா” என்று குரல் கொடுக்க, சற்று தூரத்தில் படுத்திருந்த துருவன் எழுந்து அவள் அருகில் வந்தான்.
அவனைக் கண்டதும், “நோ அம்முக்குட்டி” என்று அலறியது மயிலா. இத்தனைநாள் பழக்கத்தில் ஓரளவுக்கு அனைவரின் கூப்பிடும் பெயரும் மயிலாவுக்கு அத்துப்படியானது.
“இனி வாயைத் திறந்த துருவனுக்கு தூக்கிக் குடுத்துருவேன்” என்று மிரட்டியவள், “துருவா! மயிலாகிட்ட போய்ப் படு! என்றதும் அது வாலாட்டியபடி கூண்டின் அருகில் செல்ல, “ஐ லவ் யூ துருவ்” என்ற மயிலா கண்ணை மூடிக்கொண்டது.
போர்வையை லேசாக விலக்கி அவளின் மிரட்டலை இரசித்துக்கொண்டிருந்தவன் மனையாள் தன்பக்கம் திரும்பவும் கவுந்தடித்துப் படுத்துக் கொண்டான்.
வெகுநேரம் அவள் அமர்ந்தே இருக்க அவனுக்கே பாவமாகப் போயிற்று.
“மூஞ்செலி பேசாம படுறி! அதான் கதவை மூடிட்ட இல்ல?” என்றவன் திரும்பிப் படுத்து தூங்குவதுபோல் பாவனை செய்ய, சிறிது நேரத்தில் அவளும் தூங்கிப்போனாள்.
அவள் உறங்கிவிட்டதை சீரான மூச்சில் அறிந்து கொண்டவன், மென் புன்னகையுடன் இமை மூடினான்.
மறுநாள் கண்விழித்தவள் கண்டது சீனப் பெருஞ்சுவராய் அவன் மார்பைத்தான். அதிர்ந்து கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாள்.
ஏறி இறங்கிய மார்பு அது உண்மைதான் என்று பறைசாற்ற மூச்சுப் படும் தூரத்தில் அவனின் அருகாமை. அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள். லேசான படபடப்பு வேறு. அவன் இன்னும் நன்றாக உறக்கத்தில்தான் இருந்தான்.
அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. நேராக எழுந்துச் சென்று வாளி நிறையத் தண்ணீர் பிடித்தவள் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் முகத்தில் கவிழ்க்க, பதறியடித்து எழுந்தமர்ந்தான்.
முறைத்தபடி வாளியுடன் நின்றிருந்தவளிடம், “லூசாடி நீ? மனுஷனைத் தூங்க விடமாட்டியா?” என்று தொப்பலாக நனைந்த டீ சர்ட்டை உதறினான். இலகு உடையில் தூங்கினாலும் இரவிலும் அவள் முன்பு உள் பனியனோடுகூட உறங்கியதில்லை அவன்.
முதல்நாள் உடைமாற்றுவேன் பழகிக்கொள் என்று சொன்னதோடு சரி! ஒருநாளும் அந்த சங்கடத்தை அவன் தந்ததே இல்லை. கார்த்தியின் அறையில் குளித்து உடைமாற்றிய பிறகே வருவான். கார்த்தி கேட்டால், “உங்க மருமக அங்க குளிக்கிறா. எனக்கு நேரமாச்சு கார்த்திப்பா” என்று கடந்துவிடுவான்.
“உங்களை யாரு கிட்ட வரச்சொன்னது?” என்றாள் கோபத்தில்.
அவளை ஒருமுறைப் பார்த்தவன், “நான் வராம?” என்றான் மொட்டையாக.
அதில் அவளுக்கு ஏன்டா கேட்டோம் என்றானது.
“அப்புறம் எதுக்கு ராத்திரி நல்லவன் வேஷம் போட்டீங்களாம்” என்றாள் அப்போதும்.
“எனக்கு ஆசை பாரு. உன்கிட்ட வந்து உருள. சுத்தி கண்ணைத் திறந்து பாரு புரியும்” என்றதும் சந்தேகத்தோடே சுற்றும் முற்றும் பார்த்தாள். அவர்கள் படுத்திருந்த இடம் தவிர மாடி முழுவதும் ஈரமாக நனைந்திருந்தது.
“இப்போ புரியுதா? நைட்டு நல்லா மழை பெய்ஞ்சது கூடத் தெரியாம தூங்குற. நீ படுத்திருந்த இடம் தவிர எல்லாம் தண்ணீ. வீட்டையும் பூட்டியாச்சி நான் எங்க போறதாம்?” என்றதும் திகைத்தாள்.
மழை பெய்வது கூடவா தெரியாமல் தூங்கினோம்? அவளால் நம்பமுடியவில்லை. அவள் படுத்திருந்த இடத்தில் ஓடுகளால் தாழ்வாரம் அமைக்கப்பட்டிருக்க அந்த இடம் தவிர்த்து அனைத்தும் ஈரமாகி இருந்ததில் அவன் சொன்னது உண்மை என்று நம்பிக்கொண்டாள்.
அவனை ஏறிட்டவள், “சாரி” என்ற ஒற்றை வார்த்தையுடன் தலகாணிக்கடியிலிருந்து சாவியை எடுத்து நீட்ட, உதட்டில் மறைத்த புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
திவ்யபாரதி சொன்ன நல்லநாளுக்கு இன்னும் நாட்கள் இருக்க, அம்மு எழிலரசி இறங்கி வரும்முன் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருந்தான் வெற்றி.
காக்கிச் சீருடையில் இறங்கி வந்தவள், இரண்டு இட்லிகளை அவசரம் அவசரமாய் வாயில் போட்டுக்கொண்டாள். திடீரென ஞாபகம் வந்தவளாய், “அம்மா என் ஷூ மழைல நனையாம எடுத்து வச்சியா” என்றதும் “மழையா? என்னடி சொல்ற?” என்றாள் மகளை வித்யாசமாகப் பார்த்து.
“உனக்கும் நைட்டு மழை பெய்ஞ்சதே தெரியலையா? அய்யோ போச்சி என் ஷூ” என்றதும் அவள் மண்டையில் கொட்டி, “கனவு எதும் கண்டியா? கத்திரி வெயில்ல நைட்டானா வேகுது மழையாம்ல?”
“இல்லம்மா…மாடில்லாம் நனைஞ்சி” என்றவள் பாதியில் நிறுத்தி அதிர்ந்து வெற்றியை ஏறிட, குடித்த தண்ணீர் புரைக்கேற சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.
“என்ன தம்பி சொல்றா இவ?” விநோதமாக மகளைப் பார்த்த திவ்யபாரதி, வெற்றி சிரிக்கவும் புரியாமல் கேள்வியை அவனிடம் திருப்பினார்.
“அது ஒன்னுமில்லத்த! நேற்று அனல் ஜாஸ்தி இருக்கவும், தண்ணீர் புடிச்சி மாடி ஃபுல்லா ஊத்தி விட்டேன். அதை மழைன்னு நினைச்சிட்டா உங்க பொண்ணு” என்றவன் எழிலரசியைக் கண்டு கண்சிமிட்ட, திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள் அவள்.
பொய்யி… பொய்யி… பொய்யி! வாயைத் திறந்தாளே பொய்யி. பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. எப்படி எல்லாம் நம்பும்படி பொய் சொல்கிறான்.
அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது. அதையும் காதல் பார்வையாய் எடுத்துக் கொள்பவனை என்ன செய்வது.
அவளுக்கு இப்போதே கண்ணைக் கட்டியது. மீதம் நாட்களை இவனுடன் எப்படி கழிக்கப்போகிறோம்? தினம் தினம் ஒவ்வொரு நாடகத்தை அரங்கேற்றுபவனை சமாளிக்க முடியாமல் திணறினாள்.
புல்லட்டை உதைத்துக் கொண்டிருந்தவன், சிறு தலையசைப்புடன் அவளிடம் விடைபெற, அது அருகிலிருக்கும் தன் தாய்க்காக என்று புரிந்தது. வேறு வழியின்றி சிறியதாய் அவளும் புன்னகைத்தாள். அவனது கன்னத்துச் சதைகள் சுருங்கியதில் அவன் இன்னமும் சிரித்துக் கொண்டிருப்பது புரிந்தது.
உண்மையில் வெற்றியால் சிரிப்பை அடக்க முடியாமல்தான் எழுந்து வெளியில் வந்துவிட்டான். நேற்று வெகுநேரம்வரை தூக்கம் பிடிக்கவில்லை. திருமணம் ஆனதிலிருந்து பாதி இரவுக்குமேல் அவளை காலில் தூக்கிப் போட்டுக்கொண்டதில் இத்தனை நாளாக நன்றாகத் தூங்கி இருந்தான். திடிரென அவள் இல்லாமல் அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.
அவளின் அருகாமை வேண்டும் என்று அடம்பிடித்தது மனம். அதுவும் கார்த்தியும் வேறு இல்லாததில் ஒரு கட்டத்திற்கும் மேல் அவனால் முடியவில்லை. தொடத்தானேக் கூடாது. அவள் மூச்சுக்காற்றுங்கூட போதுமே!
ஆனால் இடையில் அவள் கண்முழித்துவிட்டால் சொல்ல காரணம் வேண்டுமே! ஒரேடியாக அவனை ஒதுக்கி விட்டாலோ இல்லை அவள் முகம் வாடினாலோ அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. அதில் துருவனையும் மயிலாவையும் தண்ணீர் படாமல் அவள் அருகில் விட்டுவிட்டு மொட்டை மாடி முழுவதும் தண்ணீர் ஊற்றி விட்டான்.
ஒரு பொய் சொல்ல என்னென்ன வேலை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு. அவனுக்கே சிறுபிள்ளைத் தனமாகப் பட்டாலும் அவள் அருகாமைக்குமுன் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.
அனைத்தையும் முடித்து அவள் சுவாசக்காற்றின் சூட்டில் சுகமாய் தூங்கிவிட்டிருந்தான்.
அவள் விழிக்கும்முன் எழுந்துவிடத்தான் எண்ணியிருந்தான். ஆனால் பலவருடக் காதல் அவளின் அருகாமையில் அதீத மயக்கத்தையும் தந்திருந்தது.
அந்த நினைவின் இனிமையில் புன்னகையோட ஸ்டேஷன் வந்து சேர்ந்தவனுக்கு தேஜஸ்வினியின் அலைபேசி பேரதிர்ச்சியை வைத்தபடிக் காத்திருந்தது.
(விக்டரையும் ஹீரோவாக மனதில் நிறித்தி சைட் அடித்த என் செல்லக்கிளிகளுக்கு இந்த புகைப்படம் சமர்ப்பணம். ஹி..ஹி..)