அவள் கெஞ்சியும் ஆறவில்லை அவன் மனம். சிறுவயது முதல் புரிந்த தவத்தை கொச்சைப் படுத்துவாளா? அவள் மீதான என் காதல் எதன் மீதுன்னு நான் புரிய வைக்க வேணாம்!

“நீ தான சொன்ன எடுத்துக்கன்னு” பாம்பாகச் சீறினான்.

“என்ன சொன்ன? பத்து நிமிஷம்… இல்ல பத்து நிமிஷம்” என்று கோபத்துடன் கவிழ்ந்திருந்த அவளது நாடியை அழுந்தப் பற்றி,

“நீ சொன்ன அந்த பத்து நிமிஷமும் எப்படி இருக்கணும் தெரியுமா? என்றவன் அவள் விழிகளை உறுத்து விழித்தான். 

“இதோ வரவேற்குதே உன் முன்னழகு. இந்த முன்னழகு என்னை வரவேற்கக் காத்திருக்கக் கூடாது! 

எப்பவும் வெட்டவா குத்தவான்னு முறைப்போட என்னைப் பார்க்குமே உன் முட்டைக் கண்ணு. அதுல எனக்கே எனக்கான அழைப்பு இருக்கணும்!

இப்படி பயந்து நடுங்கி மூடிக்கிடக்குதே இந்த விழிகள் அது நாணத்தோடு மூடிக்கிடந்து என்னை வான்னு அழைக்கணும்!

நான் அழுத்திப் பிடிச்சதால சிவந்து கிடக்குதே உன் கன்னம் அது என் பார்வைப் பட்டே குங்குமமா சிவக்கணும்!

உன் காதோரம் ஊசலாடுதே இந்த ஜிமிக்கி, அது நான் பேசும் இரகசியக் குரலுக்காய் காத்துக்கிடந்து சிணுங்கனும்,

உன் உதடுமேல துளிர்க்குதே முத்து முத்தாய் இந்த வியர்வைத் துளி, அது  ஒவ்வொன்னும் பன்னீராய் என் உதடு பட்டு இனிக்கனும்!

இதோ ஏறி இறங்குதே இந்தச் சங்குக் கழுத்து, நான் வைக்கும் குட்டி முத்தத்துக்காய் ஏங்கி கிடக்கணும்” என்றவன் நிறுத்தி அவளது ஆலிலை வயிற்றைப் பார்வையிட, அவன் அழுத்திப் பிடித்திருந்ததில் பேசமுடியாது தவித்திருந்தவளின் பார்வை ‘என்னை விட்டுவிடேன்’ என்று கெஞ்சிற்று.

அதில் திருப்தியாய் புன்னகைத்தவன், ”இதெல்லாம் நடக்கும்போது இந்த முன்னழகு மட்டுமில்ல மொத்தமும் வேணும். என்ன புரிஞ்சிதா!” என்று நாடியிலிருந்த கையை அவன் விலக்கவும், சரேலென விலக முயன்று விக்கித்து நின்றாள். முந்தானை இன்னமும் அவன் பிடியில் அல்லவா.

“வெற்றி ப்ளீஸ்..” என்றாள் தலை நிமிர்த்தாமல்.

அலட்சியமாகப் புன்னகைத்து, “நீ தான ஆசைப்பட்ட விளக்கம் குடுக்க வேணாம்? என்றவன்,

“முதல் தியரி க்ளாஸ் முடிச்சிதானே பிராக்டிக்கல் போக முடியும்” என்றதும் அவள் பயத்தோடு பார்க்க, அவனின் புன்னகை விரிந்தது.

மொத்தமாய் வியர்த்து விறுவிறுத்திருந்தாள். வெறும் பேச்சால் உடல் கூசச் செய்து வியர்வையில் குளிக்க வைத்திருந்தவனை இன்னமுமே விலகாத அச்சத்துடன் பார்க்க, அடக்க மாட்டாது சிரித்தவன், மீண்டும் அவளது முந்தானையைப் பிடித்திழுத்து தனக்கு வெகு நெருக்கமாக கொண்டு வந்தான். 

அச்சத்தில் படபடத்த அவள் விழிகளுடன் மோதி, “கவலைப்படாத மூஞ்செலி! உன் கண்ணு என்னைக்கு என்னை காதலா பார்க்குதோ, அன்னைக்கு இதை நீ எடுக்க வேண்டாம் நானே…” என்று கண் சிமிட்டியவன் அவள் மேலாடையை அதனிடத்தில் பொருத்த, பெருத்த ஆசுவாசத்துடன், நொடியில் முந்தானையை இழுத்தெடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டாள்.

உயிர் மூச்சு சீரானது. தன்னையும் மீறிய ஆசுவாசத்தில் அவள் கண்கள் லேசாகக் கலங்க, அதைக் கண்டு கொண்டவனிடம் மெல்லிய முறுவல்.

இது முழுக்க முழுக்க தன் முட்டாள் தனத்தில் விளைந்தது என்பதால் வெற்றியின் மீது கோபப்படவில்லை அவள். மாறாக தன் நம்பிக்கை இன்னும் பொய்த்துவிடவில்லை என்பதில் மெல்ல மீண்டு கொண்டிருந்தாள்.

ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் பிணக்குகள் தீருமா? இவன் என்ன நினைக்கிறான்? என்ன செய்கிறான்? ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.

அதில், “நீங்க நினைக்கிறது என்னைக்குமே நடக்காது. என் கண்கள்ல காதைலைப் பார்க்கணும்னா நீங்க வாழ்க்கை முழுக்க சந்நியாசம்தான் வாங்கணும்” என்று விரக்தியாய் சொல்லிவிட்டு அவள் நகர, சத்தமாய்ச் சிரித்தவனில் திரும்பினாள்.

மேலும் கீழுமாக அவளை ஏளனமாகப் பார்த்து, “போடி ஊர்ல நீ மட்டும்தான் பொண்ணா என்ன?” என்றவன் கட்டிலில் விழுந்து, போர்வையையும் இழுத்து மூடிக்கொண்டான்.

போர்வைக்குள்ளே அவன் குலுங்கிச் சிரிப்பது அப்பட்டமாய் தெரிய.

“ஓஹோ! அப்படி வேற ஒரு நினைப்பிருக்கோ?” என்றாள் கோபமாக.

‘இராட்சசி தெளிஞ்சிட்டா’ என்று மனசுக்குள் சிரித்தவனும்,

“ஏன்! கீழயே உன் தங்கச்சி இருக்காளே” என்று போர்வைக்குள்ளிருந்தே குரல் கொடுக்க, அனைத்தையும் மறந்து பத்திரகாளியாக மாறி இருந்தாள்.

தன்னவளின் பிடிவாதத்தையையும், அழுகையையும், கோபத்தையும் மாற்றத் தெரிந்த வித்தைக்காரன் அவன்.

“என்னைத் தவிர வேறோரு பொண்ணை பார்ப்பேன்னு சொன்னதே தப்பு. இதுல என் தங்கச்சிக் கேட்குதோ?” காதலுக்கேயான பொறைமைக்குணம் தலை தூக்க காதில் புகை வராதக்குறையாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தவளை லேசாகப் போர்வையை விலக்கிப் பார்த்தான். 

இடுப்பில் கை வைத்து அங்கும் இங்கும் பார்வையை அலைய விட்டபடி நின்றவளில் இரசனைக் கூடியது.

அவளோ சுவற்றின் மூலையில், துருவனை வாக்கிங் அழைத்துச் சென்றுவர கார்த்தி சாத்தி வைத்திருந்த லத்தியைக் கையிலெடுத்தவள் ஒரே போடாகக் கட்டிலில் சாத்த, ‘ஆத்தாடி’ என அதிர்ந்தவன் நொடியில் உருண்டு கட்டிலுக்கு அடியில் சென்றான்.

போர்வையோடு வாரிச் சுருட்டி எழுந்தவன், இன்னமும் அடிக்க கையில் இலத்தியுடன் பத்திரகாளியாக நின்றிருந்தவளைக் கண்டு, “அடிப்பாவி” என நெஞ்சில் கை வைத்து அதிர, “படாத இடத்துல பட்டா புள்ள பொறக்குமாடி கூறு கெட்டவளே!  

“இங்க இருந்தா நம்ம உசுருக்கு உத்திரவாதம் இல்ல. வா மயிலா! ஓடிருவோம்” என்றவன் மேஜையிலிருந்த கிளிக்கூண்டையும் தூக்கிக்கொண்டு போர்வையோடே வெளியில் ஓடினான்.

தலையில் போர்த்திய போர்வையோடு கையில் கிளிக்கூண்டை பிடித்தபடி தலைதெறிக்க ஓடியவனைக் கண்டு சிரிப்பு பொத்துக்கொண்டு வர வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

‘ஆமா! முதலிரவு அறையில கிளி கூண்டு எதுக்கு?’ மெல்லிய முனகலுடன் அப்போதுதான் கிளிக்கூண்டை கவனித்திருந்தாள்.

ஒருவேளை அவனுக்கும் அந்த எண்ணமே இல்லையோ? இல்லைனா உள்ள கிளியையும் தூக்கிக்கிட்டு வருவானா?

எல்லாத்தையும் இப்போக் கேளு! அவள் மனமே அவளை இடித்துரைத்தது.

அவ்வளவு நெருங்கியும், அவன் தவறாகத் தீண்டாததை கவனித்துதான் இருந்தாள். கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்தானோ? தாய் சொன்னதுபோல் அவள்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா?

முதலில் என் கோவத்தைக் கட்டுப்படுத்தனும். தாய் எப்போதும் சொல்வதுபோல் அவளது ஆத்திரமும் அவசரமும் இன்று அவளையே பாதித்திருந்ததை கண்முன்னே உணர்ந்திருந்தாள்.

அலங்காரம் முடித்துத் தயாராக இருந்தபோது தந்தையுடனான அக்ரீமெண்ட் என்ற வார்த்தை வேறு வெகுவாக அவளை குழப்பி இருந்தது.  

ஆனால் படுக்கை அறையில் தாயின் கோப்பு எதற்கு? வெகுவாகக் குழம்பினாள். 

முதலில் தந்தைக்கும் கணவனுக்கும் நடுவில் என்ன இருக்கிறதென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

சிந்தித்ததின் விளைவாக, மேலுதட்டின் மேல் அரும்பிய வியர்வைத் துளி ஒன்று அவள் இதழ்களைத் தொட, ‘இந்த வியர்வை முத்துக்கள் என் உதடு பட்டு’ அவனின் குரல் காதோரம் பேச, அதற்குமேல் நினைக்கமுடியாமல் தேகம் சிவந்தாள். 

நெஞ்சின் அடி ஆழத்தில் புதைத்திருந்த காதல் பட்டும் படாமல் அவள் தேகம் படர்ந்தது.

‘கேடி! தொட்டிருந்தால் கூட இவ்வளவு நடுங்கி இருப்பேனா தெரியல. தொடாமலே நான் பண்ணின தப்ப புரிய வச்சிட்டான்’ வெட்கத்துடன் மெல்ல தலையிலடித்துக் கொண்டாள்.

வியர்வைப் போக சிறிது மேலுக்கு ஊற்றிக்கொண்டவள் இலகு உடைக்கு மாறி வெளியில் வந்தாள்.

வெளியிலோ வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடிவந்த வெற்றியைக் கண்டதும்,

“என்னடா மகனே இவ்ளோ லேட்டு? நீ வருன்னு எக்ஸ்ட்ரா தலகாணில்லாம் போட்டு ரெடி பண்ணி வச்சிருக்கேன். வா வா! வந்து படு! தன்னருகில் விரித்திருந்த பாயில் தட்டிக் கூப்பிட்ட கார்த்தியை முறைத்தான் வெற்றி.

“முறைக்காதடா மகனே! நீ கைல கிளியோட போகும்போதே தெரியும். எப்படியும் வெளில வந்து விழுவன்னு.” என்றதும் முறைத்தபடியே,

“திட்டம் போட்டுக்குடுத்ததே நீங்க தானோ” என்றவன் கிளி கூண்டை அருகில் வைத்து விட்டு அவர் அருகில் தொப்பென்று விழுந்தான்.

“அவளுக்கு இந்த மாமன் மேல பாசம் மகனே! மாமன் தனியா படுத்திருக்கானேன்னு துணைக்கு உன்னை அனுப்பி இருக்கா. வேற ஒன்னுமில்ல” என்றதும், “தகப்பா வேணாம்! அழுதுருவேன்” என்றவனின் முகபாவனையில் இருவருக்கும் சிரிப்பு வந்திருந்தது.

அவர்கள் சிரித்த சத்தத்தில் மயிலாவும் அதேப்போல் சிரிக்க, “என்னடா மகனே நம்மளைப்போலவே சிரிக்குது” என்றான் கார்த்தி வியந்து.

“பாடவே செய்யும்! மயிலா பாடு” என்றான்.

அப்போதுதான் அம்முவும் குளித்து முடித்து வெளியில் என்ன செய்கிறான் என எட்டிப் பார்த்தாள். மாமனும், மகனுமாய் அருகருகே படுத்திருக்கக் கண்டவளின் உள்ளம் நிறைந்துபோக மறைந்து அங்கேயே நின்று கொள்ள மயிலா பாடியது.

“செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே… உன் ப…சாரி! கருத்த கூந்தலின் காட்டுக்குள் காணாமல் நான் போனேனே… நகம் கடிக்கும் பெண்ணே நடக்காத ஆசை நல்ல நேரம் பார்த்தால் நடக்காது பூசை…” என்று அது முடிக்க வாயைப் பொத்திச் சிரித்திருந்தாள் எழிலரசி.

வெற்றியோ மயிலாவை அதிர்ச்சியாகப் பார்த்தவன், ‘இப்படி கோர்த்து விட்ருச்சே பக்கி’ என்று மிரண்டு கார்த்தியைக் காண, 

“ஏன்டா மகனே இப்படில்லாமா திக்கித் திக்கிப் பாடின? உன்னை வெளில அனுப்பினதோட விட்டாளேன்னு சந்தோசப்படு மகனே!” என்றதும், ‘நல்ல வேளை பாட மட்டும் சொன்னோம். அங்க சொன்ன டைலாக்லாம் பேசி இருந்துச்சி இந்த கட்டுமரமே இந்நேரம் எனக்கு டின்னு கட்டியிருக்கும்’ என்றவன் கார்த்தியைப் பார்த்து அசடு வழியச் சிரிக்க, “சகிக்கல மகனே” என்றான் அவன்.

“ஆமா! முதலிரவு அறையில மருமகளுக்கு ஆதரவா லத்தியைக் கொண்டு வச்சிட்டுப் பேச்சைப் பாரு” என்றவன் முறுக்கிக் கொள்ள, “அது யூஸ் பண்ணாத ரூம்னு பழைய பொருள் போட்டு வச்சிருந்தேன். க்ளீன் பண்ணும்போது மறந்துட்டாங்க போல” என்றவன், “அடி பலமோ!” என்று சிரிக்க, “ஜஸ்ட் மிஸ்” என்றவனிலும் மென் புன்னகை.

எழிலரசியும் தூக்கம் வராது அவர்களைக் கண்டவாறு வாசலிலேயே அமர்ந்து கொண்டாள்.

தலைக்குக் கையைக் கொடுத்து வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த வெற்றி தூக்கம் வராது புரண்டு புரண்டு படுக்க, கார்த்திக்கு அவன் நிலை பாவமாக இருந்தது. 

இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்று அனைவருக்குமே தெரியும். அதனால்தான் கட்டாயப் படுத்த விரும்பாமல் விரும்பும்போது வாழட்டும் என்று பெயருக்கு மெல்லிய அலங்காரத்துடன் அன்றைய சம்பிரதாயத்தை முடித்துக் கொண்டனர்.

அதில் மனம் இளக, அருகில் படுத்திருந்தவனின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தான். அம்முவும் தூக்கம் வராது தவிக்கும் நாட்களில் தலையை வருடிக்கொடுத்துதான் தூங்க வைப்பான். அந்த ஞாபகத்தில் வருட, உண்மையில் அதுவரை கண்ணாமூச்சி ஆடிய தூக்கம் அவன் வசப்பட மெலிதாய் சொக்கியவன் கார்த்தியின் மேல் கையைய் போட்டு அணைத்தவாறு படுத்துக்கொண்டான். அது அவனது வெகுநாளைய ஏக்கமும் கூட.

குட்டி வயதில், வகுப்பறைக்கு தூக்கி வரும் அம்மு உறங்கிவிடும்போதெல்லாம் கார்த்தி இப்படி வருடி விடுவதைக் கண்டிருக்கிறான். 

அப்போது தொப்பென்று அருகில் கேட்டச் சத்தத்தில் படக்கென கண் விழித்தான் வெற்றி. வேண்டுமென்றே கார்த்தியின் கால்மீது தலகாணியைப் போட்டுவிட்டு முறைத்தபடி நின்றிருந்தாள் அவனது எழிலரசி.

அவன் பார்த்ததும், படக்கென கார்த்தியின் கால் மீது தலை வைத்து அவர்களுக்கு நேர் எதிராக ட வடிவில் படுத்துக்கொண்டவள், வெற்றியின் தலையிலிருந்த கார்த்தியின் கையை இழுத்து தன் தலைமேல் வைக்க புன்முறுவல் பூத்தான் கார்த்தி.

அவளது குணம் அவன் அறிந்ததுதானே! யாருக்கும் அவனை விட்டுக்கொடுக்க மாட்டாள். அதுவரை வாசலிலிருந்து இருவரையும் இரசித்திருந்தவள் கார்த்தி வெற்றியை வருடி விடவும், புதிதாய்க் கோபம் முளைக்க தானும் போட்டிக்கு வந்து விட்டிருந்தாள்.

புன்னகை அரும்ப மௌனமாய் இருவருக்கும் தலையைக் கோதிவிட அந்த சூழ்நிலையை அனுபவித்தவாறே இருவரும் கண்மூடினர்.

அந்நேரம் கார்த்தி தனியாக இருப்பான் கொஞ்சநேரம் பேசிவிட்டு வருகிறேன் என மனைவியிடம் சொல்லிவிட்டு மாடி ஏறிய செழியன், அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.

கார்த்தியின் நெஞ்சில் வெற்றி கைப்போட்டிருக்க, கால்மாட்டில் மகள் படுத்திருக்க நடுவில் முழி பிதுங்கி படுத்திருந்தவனைக் கண்டதும் சிரிப்பு வந்தது.

‘ஒத்த ரோசா! பிள்ளைங்கள ரொம்ப அருமையா வளர்த்துருக்கடி!  மௌனமாய் செழியன் குலுங்கிச் சிரிக்க, ‘டேய் எதாவது சொல்லி காப்பாத்துடா’ விழிகளால் கெஞ்சிய கார்த்தியைப் பார்க்க பார்க்க சிரிப்புத் தாளவில்லை அவனுக்கு.

மூவருக்கும் தலைமாட்டுப் பக்கமாய் நின்றவனை கார்த்தி மட்டுமே கவனித்திருக்க, கார்த்தியின் வருடலில் விழி மூடி இருந்த இருவரும் கவனிக்க வில்லை.

‘என்ஜாய் ராஜா’ என சத்தமின்றி உதடு அசைத்தச் செழியன், ‘நான் போய் என் பொண்டாட்டிக்கு கதை சொல்லப்போறேன் போடா’ என்று சைகையில் சொல்லிவிட்டு வந்த சுவடின்றி கீழிறிங்கினான்.

உண்மையில் செழியனின் மனது நிறைந்திருந்தது. கார்த்தியை மகன் மருமகள் என்று குடும்பமாய்ப் பார்க்க அவ்வளவு மனம் சந்தோஷத்தில் இருந்தது. 

மகள் எப்படியும் வாழ்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை வெற்றி நிறையவே தந்திருந்தான். அதனால்தான் இருவருக்குள்ளும் பிணக்குகள் இருப்பது தெரிந்தும் மணம் முடித்தும் வைத்திருந்தான்.

அவன் கொண்ட சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள மனைவியைத் தேடியவன், அந்த வயதிலும் இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் குழந்தைபோல் தாவி இறங்கினான்.