அத்தியாயம்: 21
இனி தனிமையை பழகிக்கணும் என்று விரக்தியாய் கார்த்தி சொல்லவும் வெற்றியின் மனம் கனத்தது.
கார்த்தியும் சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை. எண்ணங்களின் அலைகளில் வார்த்தைகள் தானாய் கோர்த்துக் கொண்டன.
உண்மைதானே! இதே வருத்தம் அவனது எழிலரசிக்கும் இருக்குமே! இருவருக்கும் உள்ள அன்பை நன்றாக அறிந்தவன்தானே வெற்றியும்.
அதில் “அவ மட்டும் உங்களைப் பிரிஞ்சி இருப்பான்னு நினைக்கிறீங்களா?” நேரடியாக கார்த்தியின் விழிகளைப் பார்த்துக் கேட்டதும் உடைந்துபோனான் கார்த்தி.
இரும்பு மனிதனுக்கு கண்கள் கலங்கியது. என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினான். இதுவரை தான் எப்படி இருக்கப்போகிறோம் என்று யோசித்தானேத் தவிர தன் செல்ல மகளைப்பற்றி சிந்திக்காததை நினைத்து இன்னுமே வருந்தினான்.
பேச்சிழந்து நின்றவனின் கைகளைப் பற்றிக்கொண்டான் வெற்றி. “எங்களோட வந்திருங்க கார்த்திப்பா” உணர்வுப்பூர்வமாக அழைத்தான்.
மறுத்து தலையசைத்தவனுக்கு இப்போதும் பேச நா எழவில்லை.
“அப்போ, இதே நிலவ சாட்சியா வச்சி இவன்தான் என்புள்ள, என் வாரிசுன்னு அன்னைக்கு சொன்னதெல்லாம் சும்மா பேச்சுக்குதான்ல?” என்றதும் புரியாமல் பார்த்தான் கார்த்தி.
“என்ன? மறந்தாச்சில்ல! என்னையும் மறந்தாச்சி!” என்றவன் போலியான கோபம் கொண்டு கீழிறிங்கப் போக,
கார்த்திக்கே புதிதாக மணம் செய்து கொள்ளப் போகிறவனிடம் தான் பேசியது கொஞ்சம் அதிகப்படியாய்த் தோன்ற, “அது அம்முவ பிரியணுமேங்கிற வருத்தத்துல ஏதேதோ பேசிட்டேன் வாடா!” என்று கைப்பிடித்து இழுத்தான்.
“இப்படி சின்னப்பிள்ளையாட்டம் கோவிச்சிட்டுப் போறீயே. உன்னைய நம்பி, நான் என் மருமகளை எப்படிக் கட்டித் தருவேன்?” கார்த்தியும் போலி கோபம் கொண்டான்.
“எங்க? கட்டித் தராமத்தான் இருந்து பாருங்களேன்!” என்றான் மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு. பயிற்றுவித்தக் குருவிடமே, போட்டிக்குத் தயாரா? மோதிப்பார்ப்போமா? என்பதுபோல் இருந்த அவன் தோரணையில் கலக்கம் நீங்க மெச்சுதலாய்ப் பார்த்திருந்தான் கார்த்தி.
தான் இல்லையென்றாலும் தன் இளவரசியை இவன் நன்றாகப் பார்த்துக்கொள்வான் என்ற கர்வமும் கூட, மெதுவாய்ப் புன்னகைத்தான் குருவானவன்.
“அவளை என் பொண்டாட்டியா பார்க்க வச்சதே நீங்கதான் கார்த்திப்பா! முன்னயே அவளை ரொம்பப் பிடிக்கும். ஆனா அவளைத்தான் கட்டணும்னுங்கிற விதையை என் மனசுக்குள்ள முதல் முதல் போட்டது நீங்கதான்” என்றதும் அதிர்ந்தான் கார்த்தி.
“அன்னைக்கு லதா டீச்சர் உங்ககிட்ட லவ்வைச் சொன்னப்போ என்ன சொன்னீங்க? இவன்தான் என் வாரிசு, எனக்கு கொல்லிப் போடுவான்னு சொல்லல?”
அதை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறான்?! அதிர்ச்சியும், ஆச்சர்யமுமாக தன் எதிரில் கையைக் கட்டிக்கொண்டு நின்றவனைக் கேள்வியுடன் பார்க்க, மறக்கலாமா? என்ற ஆதங்கத்துடன் நின்றிருந்தான் வெற்றி.
அன்று, தந்தை இறந்தத் துக்கத்தில் சாப்பிடாமல் ஒழுங்காகப் படிக்காமல் இருந்தவனை ஊரிலிருந்து வந்ததுமே தன் மாமனிடம் சொல்லியிருந்தாள் எழிலரசி.
கேள்விப்பட்டதுமே கார்த்தியும் இரவோடு இரவாகவே வெற்றியைக் காணச்சென்றான்.
“உனக்கு அப்பாவா குருவா நான் இருக்கும்போது உனக்கு என்னடா பிரச்சனை? எவ்ளோ படிக்கிறியோ படி!” என்றதும் “நான் செழியன் அய்யா போல போலீசாகனும்” என்ற சிறுவன் வெற்றியை தட்டிக் கொடுத்தான் கார்த்தி.
“உங்கப்பா நிலத்தை எல்லாம் குத்தகைக்கு விட நல்ல ஆள் பார்த்துவிடறேன். அது போதும் உன்னை படிக்கவைக்க. நீ யார்கிட்டயும் போய் நிக்க வேணாம் புரியுதா? நான் பார்த்துக்கிறேன்.
எந்த பிரச்சனைன்னாலும் என்கிட்ட ஓடி வா!” என்று தேர்தல் சொன்னவன் அவனது தாயிடமும் விடைபெற்று கிளம்பப்போக, “நான் வீடுவரைக்கும் வந்து விட்டுட்டுப் போறேன் ஆசானே” என்று கிளம்பினான் சிறுவயது வெற்றி.
“சரிடா பெரிய மனுஷா! வா போலாம்!” என்றவன் அவனைத் தோளோடு இறுக்கிக் கொள்ள, இருவரும் கார்த்தியின் வீடுநோக்கி நடந்தனர்.
அப்போது எதிர்ப்பட்டாள் லதா டீச்சர்! கார்த்தியுடன் ஒரே பள்ளியில் வேலை பார்ப்பவள். அவன்மீது தீராத காதல். அவளின் எண்ணம் புரிந்தே அவளிடம் சிக்காமல் திரிந்தவனை இன்று தனிமையில் காணவும், “கார்த்தி சார்! ஒரு நிமிஷம். நான் உங்ககிட்டப் பேசியே ஆகணும். ப்ளீஸ்!” என்றாள்.
அவனுக்குமே இதைத்தொடர்வது சரியாகப் படவில்லை. இருந்தும் அருகில் சின்னப்பிள்ளையை வைத்துக்கொண்டு எப்படிப் பேசுவது எனத் தயங்கியவன், “நாளைக்குப் பேசலாமே!” என்று தவிர்க்கப் பார்க்க விடவில்லை அவள்.
இப்போது விட்டால் மறுபடியும் இப்படிச் சந்தர்ப்பம் அமையாமலே போய்விடும். அல்லது அமைக்க விடமாட்டான்.
அதில், “வெற்றி! நீ கொஞ்சம் திண்ணையில உட்காருப்பா! சார் இப்போ வந்துடுவார்” என்று லதா டீச்சர் சொல்லவும், வெற்றி விலகி தள்ளி நின்றுகொண்டான்.
ஆனால் அவர்கள் பேசுவது அவனுக்குத் தெளிவாகவே கேட்டது.
அவள் தெளிவாகத் தன் காதலைச் சொல்ல திடமாக மறுத்துவிட்டான் கார்த்தி. அதற்கும்மேல் எதையும் மறைக்க விரும்பாதவன்
தன்னைப்பற்றின முழுக்கதையையும் சொல்லச் சொல்ல, கூடவே கேட்டிருந்த வெற்றிச்செல்வன் உறைந்து விட்டான்.
எப்படிப்பட்ட மனிதன் இவன்! குருவாக மட்டுமே பார்த்து வந்தவனின் மனதில் பசைப் போட்டதுபோல் கார்த்தியின் பிம்பம் பதிந்து போனது.
இறுதியாக அவள், “உங்களுக்கென்று குடும்பம் வேண்டாமா?” என்றதும், “என் அம்முக்குட்டிதான் என் உலகம்” என்றான்.
ஏனோ கண்முன்னால் தன் மாமன் மகள் சீரழிந்ததைக் கண்டவனால் குடும்ப வாழ்வில் ஈடுபடமுடியும் என்று தோன்றவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவனது மாமன் மகள்தான் அவனைக் காந்தர்வ மணம் புரிந்துகொண்டாளே!
அப்போது வேண்டுமானால் அது சிறுபிள்ளை விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அந்த சம்பவத்தின்பின் அவளே எல்லாமும் ஆனாள். அவனுக்கு என்றுமே அவள் விளையாட்டல்ல. உயிர் சுவாசம்.
கிட்டத்தட்ட 25 வருடங்கள் அவளையே மூச்சாகச் சுவாசித்து அந்த கொடூரர்களை வதைத்தவன் அவன். திடீரென்று மாற்றிக் கொள்ளச் சொன்னால் அந்த சுவாசமே தடைபட்டுப் போகாதா? அவனால் முடியவில்லை.
மீதம் இருக்கும் வாழ்க்கையையும், காற்றில் கலந்துவிட்ட அவளின் சுவாசத்தைக் கொண்டே மீட்பதென உறுதியாய் நின்றுவிட்டான்.
அதில் இந்த குட்டி அம்முபோதும் தன் மீதம் வாழ்க்கைக்கு என்றவன் உறுதியாய் மறுத்துவிட, சமாதானம் ஆகவில்லை லதா டீச்சர்.
“அவ பொம்பிளைப் பிள்ளை! நாளைக்கு வேற ஒருத்தன் வீட்டுக்குப் போனா நீங்க தனிச்சுப் போய்டுவீங்க! அப்போ புரியும் தனிமைன்னா என்னன்னு அது எவ்வளவு கொடுமையானதுன்னு” என்றாள் ஆதங்கமாக.
அதிலிருந்த உண்மை அவனைச் சுட்டாலும், “என் கூடவே இருக்கிறாப்போல மாப்பிள்ளை பார்த்துட்டா போச்சி!” என்று மென்சிரிப்புடன் சொன்னவன் அவளின் மனதையும் மாற்ற முயன்றான்.
“பொம்பிளைப்புள்ளை கொல்லிப்போடாது கார்த்தி சார்! அதுவும் அவளை நீங்க மாமனாத்தான் வளர்த்துட்டு வர்றீங்க. அவ எப்படி கொல்லிப்போடுவா?” என்றதும் தூரத்திலிருந்த வெற்றியை அழைத்தான் கார்த்தி.
“இதோ இவன் போடுவான்! என் வாரிசு! நான் கத்துக்குடுத்த கலைகளின் வாரிசு மட்டுமில்ல. எனக்கும் வாரிசா இருந்து போட மாட்டானா என்ன?” என்றவன், “ஏன்டா வெற்றி இந்த ஆசானுக்கு கொல்லிப் போட மாட்ட?” என்று இவனிடம் கேள்வியும் கேட்க, “ஆம்” என்று பலமாய்த் தலையாட்டினான் வெற்றி.
“அவ்வளவுதான்!” என்றவன் கார்த்தியை மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“கண்டிப்பா இந்த ஜென்மத்தில இவங்கதான் என் வாரிசு, வாழ்க்கை எல்லாம். நீங்க உங்க வழியைப் பாருங்க டீச்சர்” என்றவன் வெற்றியின் தோளில் கைப்போட்டுக்கொண்டு வீடு வந்து சேர, அந்நிகழ்வு பசுமரத்தாணியாய் வெற்றியின் மனதில் பதிந்து போனது.
கார்த்தியை வீடுவரை விட்டுவிட்டு, ஒரே ஓட்டமாகத் தாயிடம் வந்து சேர்ந்தான் வெற்றி.
“அம்மா…அம்மா! ஆசானை கடைசிவரை கூடவே வச்சிப் பார்த்துக்கணும்னா என்ன பண்ணனும்?” என்றான் மூச்சிரைக்க ஓடிவந்து.
“ஏன்டா இப்போ?” என்ற தாயிடம், “சொல்லுங்கம்மா! நான்தான் கொல்லிப்போடணுமாம்! அப்பாக்கு நான்தானேப் போட்டேன்” என்ற மகனை விநோதமாகப் பார்த்தவர், “அதுக்கு நீ அவர் வளர்க்குறாரே சின்னக்குட்டி அவளைத்தான் கட்டணும்!” விளையாட்டாய்தான் சொன்னார் அவன்தாய்.
ஆனால் அன்றிலிருந்து பிடித்துக்கொண்டான் வெற்றி. ஏற்கனவே அவளைப் பிடிக்கும். அதுவும் அவன் சாப்பிடாமல் இருந்தபோது வந்து பேசிய அம்முவின் அக்கறை அப்போதுதான் பதின்பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்தவனுக்கு வேறுவிதமாய் இனித்தது.
அன்றிலிருந்து, அம்மு பாதம் பதிக்கும் இடங்களில் எல்லாம் வெற்றியின் பார்வைத் தொடர ஆரம்பித்தது.
கட்டினால் அவளைத்தான் கட்டவேண்டும் என்று உறுதியாய் இருந்தான். அது கார்த்திக்காகவா இல்லை அம்முக்காகவா என்றால் அந்த வயதில் பிரித்தறியத் தெரியாது.
விதை அவன் விளைவு அவள் அவ்வளவுதான்.
“இப்போ சொல்லுங்க அன்னைக்குச் சொன்னது பொய்யா? என்கூட வரமாட்டீங்களா?” என்றவனை அன்று போலவே தோளோடு அணைத்துக் கொண்டான் கார்த்தி.
இருந்த கவலை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்திருந்தது.
இருந்தும், “எனக்காகன்னு பார்த்து பார்த்துச் செய்ற என் செழியனை விட்டுட்டு என்னால எங்கேயும் வரமுடியாதுடா! என்றான் இயலாமையுடன்.
“பாவம் அவன் தவிச்சுப் போய்டுவான்டா” என்றதும்,
“அப்போ நான் அங்க வரலாமில்ல” என்ற வெற்றியை கண்டு உண்மையில் திகைத்தான்.
என்ன மாதிரியான அன்பு இது?
“நிஜம்மாவா? எனக்காகவா? நீ என்னோட வந்து இருப்பியா?” நம்ப முடியாமல் கேள்விமேல் கேட்க, “என் அம்முக்காகவும்” என்றவனை இறுகத் தழுவிக் கொண்டான் கார்த்தி. கண்கள் பனித்தது.
அன்று முதன் முதலாக கார்த்திப்பா என்றழைத்தது தன் காதலிக்கான வெறும் வாய்வார்த்தையல்ல என்று புரிந்தது. அவன் பட்ட கவலை எல்லாம் ஒன்றுமே இல்லை என தூசியாகத் தட்டிவிட்டிருந்தவனில் உண்மையாகவே நெகிழ்ந்திருந்தான் கார்த்தி.
வெற்றி சொன்ன அத்தனையையும் அம்முவும் கேட்டிருந்தாள். இன்று அவனின் வாசம் அவளை நிலை இழக்கச் செய்திருக்க, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது எல்லாம் சேர்ந்து அவளை உலைக்களமாக மாற்றி இருந்தது.
தன்னால் இந்தச் சிறு தொடுகையையே தாளமுடியாதபோது மீதத்தை அவளால் சிந்தித்துக்கூடப் பார்க்க இயலவில்லை.
அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. பேசாமல் அனைத்தையும் தந்தையிடம் சொல்லிவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்றும் நினைத்தாள்.
அவள் காதலித்தவன்தான். ஆனால் ஒரு கயவனைக் கட்டிக்கொள்ள முடியாது. ஒருபக்கம் தாயின் வழக்கு, அவனது மிரட்டல். அவனது அருகாமை எனத் தவித்துப் போனதில் மனப்புழுக்கம் தாங்காமல் அனைவரும் தூங்கியதும் எழுந்து மொட்டைமாடிக்கு வந்தவள் அனைத்தையும் கேட்டிருந்தாள்.
அவர்கள் வரும் ஓசை தெரிய, அமைதியாக கீழிறிங்கியவளின் உள்ளம் தெளிந்திருந்தது. ‘யாருக்காக இல்லை என்றாலும் என் மாமாவோட சந்தோஷத்துக்காக அவனை சகித்துக் கொள்வேன்’ என்ற முடிவுடன் கீழிறங்கினாள்.
“சோ, ஒருவழியா என்னைக் கட்டிக்கத் தயாராகிட்ட! பயத்துல அவன் எடுத்துக்குடுத்த புடவையைத்தான் கட்டிட்டு வருவனுல்ல நினைச்சேன்” என்றான் தன்னருகில் அவன் எடுத்துத் தந்த தங்கமும் மெரூனும் கலந்த புடவையில் தேவதைக்கு நிகராக அமர்ந்திருந்தவளின் காதில் குனிந்து.
கை பாட்டுக்கு ஐய்யர் சொன்னதை செய்து கொண்டிருந்தது. அவளும் அதையேச் செய்தாலும், “நான் செழியனோட பொண்ணு” என்றாள் முறைத்து.
“இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த வெற்றியோட பொண்டாட்டி” என்றவன் இரகசியமாய் கண்சிமிட்டினான்.
“அது தாலி கட்டுற வரைக்கும் உறுதியில்ல” என்றாள் ஐயர் தந்த அரிசியை நெருப்பில் போட்டபடி.
“மாப்பிள்ளைவாள் பொண்ணோட கையைச் சேர்த்துண்டு சேர்ந்தாப்ல இதை நெருப்பில் போடுங்கோ” என்ற ஐயர் இருவரின் கையிலும் தானியங்களை அள்ளித் தந்தார்.
“அப்போ, இன்னமும் அவன் தூக்கிட்டுப் போக வருவான்னு நம்புற” என்றவன் அவளின் மருதாணியில் சிவந்த தளிர் விரல்களைப் பற்றப்போக,
“தூக்கிட்டுப் போனா நல்லாருக்கும்” என்றவளின் பட்டென்ற பதிலில் அவன் கை அப்படியே நின்றுவிட்டிருந்தது.
பதில் சொன்னவளின் முகத்தை ஏறிட்டான். அவள் தயங்காது பதில் பார்வைப் பார்த்து வைத்தாள்.
‘ராட்சஸி! நிம்மதியா தாலிகட்டக்கூட விடமாட்டா!’ வாய்க்குள் அவன் முனுமுனுத்தாளும் அவளுக்கு நன்றாகவே கேட்டது.
அதில் அவளின் செந்நிறம் பூசிய இதழ்கள் மெல்ல விரிய, “சிரிக்கவா செய்ற! உன்னை இருடி” என்றவன் எழுந்து கொள்ள, “என்ன பண்றீங்க?” அதிர்ந்து விழித்தாள்.
“அம்பி என்ன பண்றேள்!” அம்முவுக்கும் மேல் அதிர்ந்து நெஞ்சைப் பிடித்தார் ஐயர்.
“இருங்கோ ஐயரே! இவாளுக்கு வேண்டியவா யாரோ வரணுமாம். தம்பி எப்பவுமே கொஞ்சம் லேட்டுதான். அதான் எங்கயாச்சும் தூங்கிட்டிருக்காரான்னு செத்தப் பார்த்துட்டு வந்திடுறேன்” என்று செல்ல முயன்றவனின் கையைப் பிடித்திழுத்து அவள்தான் அமரவைக்க வேண்டியிருந்தது.
“இரண்டுபேரும் மந்திரத்தை சொல்றேளோ இல்லையோ நன்னா மாத்தி மாத்தி மண்டகப்படி நடத்தறேள்! உங்க இரண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்த மகராசன் யாருடா அம்பி!” என்றதும் “லவ் மேரேஜ்” என்று சிரித்தவனை பாவையவள் முறைக்க, “நேக்கு மயக்கமே வருதுடா” என்றார் ஐயர் அதிர்ந்து.
நடப்பவற்றை மேடையின் கீழிருந்து பார்த்திருந்த திவ்யபாரதி என்னமோ ஏதோ என்று மேடை ஏறப் போக, ஆளுக்கொரு பக்கமாய் கையைத் தடுத்துப் பிடித்திருந்தனர் செழியனும், கார்த்தியும்.
“என்னங்க அங்க…” என்றவளைத் தடுத்து இருவரும் மேடையைக் கைக்காட்டினர்.
மேடையிலோ, “என் மானமே போச்சி” என்றாள் அருகில் அமர்ந்தவனை முறைத்து.
“நான் நடத்தி வைக்கிற நூறாவது கல்யாணம். இரண்டுபேரும் தயவுசெஞ்சி என் மானத்தை முதல்ல காப்பாத்திடுங்கோ!” என்ற ஐயர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்று குரல்கொடுக்க, கெட்டிமேளச் சத்தம் அந்த மண்டபத்தை நிறைக்க, மங்கல நாணைக் கையிலெடுத்தான் வெற்றி.
“ஏய் மூஞ்செலி! உனக்கு கடைசிச் சான்ஸ். இப்பக்கூட சொல்லு! எங்கிருந்தாலும் அவனைத் தேடிக் கூட்டிட்டு வருவேன்” என்றவனை அவள் முறைக்க, “அப்போ ஓகே சொல்லுடி!” பேரம் பேசினான் அவன்.
“எதுனாலும் சொல்லிட்டு செய்டா அம்பி! சுகர் பேஷண்ட் ரா நானு” என்ற ஐயரை இருவரும் கண்டு கொள்ளவில்லை.
அவன் விழிகளோடு விழி கலந்து நின்றாள். “சொல்லுடி கட்டட்டுமா?” என்று அவள் கருமணியோடு அவன் கலந்துரையாட, அது வெள்ளிப் பூ ஒன்றை விழியோரமாய் பூக்கச் செய்தநொடி அவன் கரம் தாமதமின்றி நாண்பூட்டி தன்னவளாக்கிக் கொண்டது.
‘அப்பாடா’ என்று யார் மூச்சி விட்டனரோ இல்லையோ ஐயர் மூச்சு விட்டார்.
“அதுங்க சேட்டையை இப்பவே ஆரம்பிச்சிருச்சிங்க. நீ இங்கிருந்தே வேடிக்கை மட்டும் பார்” என்று கலங்கி நின்ற மனைவியின் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டான் செழியன்.
கணவன், மனைவி இருவரும் கார்த்தியின் முகம் பார்க்க, அது கலங்கி நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. அதில் “இங்கப்பாருடா, பாறையில கூட ஊத்தெடுக்குது” என்று செழியன் கேலி செய்ய, “ச்சீப் போடா மடையா!” என்ற கார்த்தி நண்பனை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
மணமக்களும் அந்தக் காட்சியை நிறைவுடன் கண்டிருந்தனர்.
(திங்கட்கிழமை வெற்றியின் முதல் இரவில் சந்திக்கலாம் டியர்ஸ்… பை பை…)