அறைக்குத் திரும்பிய எழிலரசி, உடல் தூக்கி தூக்கிப்போட, அனத்திக் கொண்டு படுத்திருந்த தங்கையைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.
‘அம்மாட்ட படுக்கப் போறேன்னுட்டு இவ இங்க என்ன பண்றா?’யோசனையுடன் உடலைத் தொட்டுப் பார்க்க அனலாய்க் கொதித்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில் இருந்தது.
இரண்டு நாட்கள் கடந்தே வீடு திரும்பினாள் மிருத்யூஸ்ரீ.
நடந்த களேபரத்தில் தாய் திவ்யபாரதி வழக்கை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தது சுத்தமாக மறந்துவிட்டிருக்க, தன் அன்றாட வேலையில் மூழ்கிப்போனாள் எழிலரசி.
தேஜஸ்வினியின் வழக்குவேறு இழுத்தடித்ததில், அந்த நினைவே இல்லாமல் நாட்களும் கடந்திருந்தது.
ஆனால், அவள் தேடி எடுக்க வேண்டுமென நினைத்திருந்த அதே கோப்புகளை, வெற்றியின் மேஜையில் கண்டதும் அவளுக்குச் சகலமும் உறைந்தது.
கடந்த நாட்களாக விசாரித்துக் கொண்டிருந்த தேஜஸ்வினியின் வழக்கு, கிடப்பில் போட்டக் கல்லாக எந்தப் பக்கம் திரும்பினாலும் அது கடைசியில் வெற்றியிடமே சென்று முட்டி நின்றது.
முருகானந்தம் வீட்டுக் கண்காணிப்பு கேமரா பதிவுகள் கிடைக்காததில், காலையிலிருந்து அந்த தெருவுக்குள் நுழைந்த வாகனங்களை கணக்கிடவென அக்கம் பக்கக்கத்தினரின் சிசிடிவி பதிவுகளை வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருந்தாள்.
சொல்லி வைத்தாற்போல் அனைவரும், “வெற்றி சார் வந்து வாங்கிட்டுப் போய்ட்டாங்களே!” என்று அவனையே கைக்காட்டினர்.
பிண ஆய்வுத் தரவறிக்கையில் அவள் நினைத்ததுபோலவே அது கொலையா, தற்கொலையா, தேஜஸ்வினி கற்பழிக்கப் பட்டிருக்கிறாளா என்று கண்டறியக்கூடிய எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
பத்தாததிற்கு, அந்த வீட்டில் எண்ணற்ற கைரேகைகள் கிடைக்கப் பெற்றிருந்தன. ஒப்பிட்டுப் பார்த்த வரையில், சில பல அரசியல் வாதிகள், கட்சித் தொண்டர்கள், அரசு அதிகாரிகள், வேலைக்காரர்கள், தேஜஸ்வினி, ஷ்யாம் சுந்தர் இருவரினிது நண்பர்கள் என ஏராளமானது இருந்தது. அத்தனைப் பேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவதும் மிகச் சிரமம்.
அதிலும் சில அரசியல் புள்ளிகளை நெருங்கக் கூட முடியாத இடத்தில் இருந்தனர். தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.
கைது செய்யப்பட்ட, ஷ்யாம் சுந்தரின் அலைபேசியும் நெருப்பில் எரிந்த கூடாகத்தான் கண்டெடுக்கப் பட்டிருந்தது. அவன் கடைசியாக யார் யாருடன் பேசினான் என்ற தகவலைக் கேட்டு அலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு ஆள் அனுப்பினாள்.
“மேடம், அவங்க நெட்ஒர்க்க யாரோ ஹேக் பண்ணதுல பத்துநாள் டேட்டா அவங்ககிட்ட இல்லன்னு கையை விரிக்கிறாங்க மேடம்” என்றார் விசாரிக்கச் சென்ற இன்ஸ்பெக்டர்.
அவர் நேரத்துக்கு எஃப் ஐ ஆர் போடாததிலேயே அவர்மேல் அதிருப்தியில் இருந்தவள், “அதெப்படி டேட்டா இல்லாமப் போகும்” எனக் கடிந்துகொண்டு தானே நேராகச் சென்றாள்.
“எத்தனைபேர்தான் மேடம் கேப்பீங்க? நேற்றே வெற்றி சார்கிட்ட இருந்தவரை குடுத்தாச்சி! நீங்க சொல்ற டேட்ல எல்லாம் எங்ககிட்ட டேட்டா இல்ல மேடம். வேணும்னா உங்க டீம் வச்சி கூட செக் பண்ணிக்கோங்க” என்று கை விரித்துவிட, அவளுக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.
இதிலும் வெற்றியின் கைங்கர்யம் இருப்பதாகவே எண்ணினாள். ஒவ்வொரு இடத்திலும் அவளுக்கு முன்பாகவே அவன்போய் நிற்பது ஏன்? நடந்த கொலையை மறைக்கவா?
‘வாங்குன காசுக்கு மேல கூவுறான்’ பல்லைக் கடித்தாள். ‘நீ எப்படி அந்த பையனை இதுலருந்து காப்பாத்தறேன்னு நானும் பார்க்கிறேன்’ கோபத்தில் மனம் பொறுமியபடி அமர்ந்திருந்தாள்.
வேறு வழியே இல்லை. கைரேகைப் பதிவுகளைக் கொண்டு ஒவ்வொருவராகத்தான் விசாரித்தாக வேண்டும். அந்த தரவுகளும் அவனுடைய கஸ்டடியில் இருக்கவே அதைக் கேட்டு வாங்கவென வெற்றியை தேடிக்கொண்டுச் சென்றாள்.
“சார் இருக்காரா?” அவனது அறையினுள் நுழையும் முன் அவனது உதவியாளரிடம் அனுமதி கேட்டாள்.
அவள் ஏற்கனவே வெற்றியிடம் அலைபேசியில் அனுமதிப் பெற்றே வந்திருந்ததில் சொல்லி விட்டேப் போயிருந்தான் போலும், “நீங்க வந்தா உள்ள உட்கார வைக்கச் சொன்னார் மேடம்” என்ற உதவிக்காவலர் அறையின் கதவைத் திறந்து விட்டார்.
“லேட் ஆகுமா?” அவளுக்குப் பொறுமையில்லை. இப்போதே அவனது சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்போல் இருந்தது.
“விசாரணைக் கமிஷன்ல ஆஜராகிட்டு இப்போதான் வந்தார் மேடம்! சாப்பிடத்தான் போயிருக்கார். நீங்க உள்ள உட்காருங்க!” என்றவர் வெற்றி சொல்லிவிட்டுச் சென்றதற்கிணங்க அவளுக்குப் பழச்சாறு கொண்டுவரச் சென்றார்.
விழிகளால், அவனது அறையை வலம் வந்தாள். களரியில் வென்ற கோப்பையைத் தூக்கிப் பிடித்தபடி மேஜையில் அவனது பதின்பருவ வயது புகைப்படம் ஒன்றிருக்க, ‘இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல’ என்று மனதுக்குள் நொடித்துக் கொண்டாலும், அவளையும் மீறி அவளது விரல்கள் அதைத் தொட்டுத் தடவியது.
‘என்ன பண்ணிட்டு இருக்க?’ அவளது மனசாட்சிப் போட்ட அதட்டலில் திடுக்கிட்டு சுயத்திற்கு திரும்பினாலும், அந்த அறை முழுவதும் அவனது வாசம் நிறைந்திருப்பதாகவே தோன்ற, அவளது கட்டுப்பாட்டைக் கடந்து, மனம் தடுமாறிக் கொண்டிருந்தது.
சீக்கிரம் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருக்க, பொறுமையிழந்து அவனது அலைபேசிக்கு முயற்சித்தாள்.
‘பருவம் மாறா வயதில் பத்திரம் காட்டி முறைத்த என் பவள மல்லியே’ என்றது ஒரு கீச்சுக் குரல்.
ஏதோ பறவைச் சத்தம் அவளுக்கு மிக அருகிலேயேக் கேட்க, ‘என்ன இது புதுசா ரிங்டோன்’ என்ற ஆர்வத்தில் எட்டிப்பார்த்தாள். அலைபேசியை அறையிலயே விட்டுச் சென்றிருந்தான்.
அந்த பறவையின் குரல் தொடர்ந்து இன்னும் ஏதேதோ கவிபாடிக் கொண்டிருக்க, அதை விடுத்து, அலைபேசியில் ஒளிர்ந்த பெயர் அவளது கவனத்தைச் சிதறடித்தது.
‘மூஞ்செலி காலிங்’ என்று ஒளிர்ந்த பெயருடன், ஆளுக்கொரு கோப்பையைத் தூக்கியபடி, அவளும் அவனுமாய் சேர்ந்து நின்ற சிறுவயது புகைப்படம் ஒளிர, ‘மூஞ்செலின்னே சேவ் பண்ணி வச்சிருக்கானா? இவன…’ கோபத்தில் எழுந்தவள், அதில் ஒளிர்ந்த புகைப்படத்தைக் கண்டு, ‘இதை எங்கிருந்து சுட்டான்’ என்று அலைபேசியைக் கையிலெடுத்தாள்.
அதுவரை அலைபேசி மறைத்துக் கொண்டிருந்த மஞ்சள் நிற கோப்பின் மேல் எழுதப்பட்டிருந்த பெயர் தெள்ளத் தெளிவாய் கண்ணில் பட, அவளுக்கு சர்வமும் நடுங்கியது.
அவள் படிக்க நினைத்த தாய் திவ்யபாரதியின் கோப்பு. அவனது மேஜையில் எப்படி?
கதவு லேசாக தட்டப்படும் ஓசையில் அனைத்தையும் இருந்த இடத்தில் வைத்துவிட்டாள். பழச்சாறுடன் உள்ளே வந்தார் உதவியாளர்.
“நீங்க இந்த ஜூஸைக் குடிங்க மேடம்! நான் சார் சாப்பிட்டாரா பார்த்துட்டு வரேன்” என்ற காவலர் வெளியேற முயல,
“இந்த… ஃபைல். இது… இது எப்படி இங்க வந்துச்சி” என்றாள் திணறியபடி.
“ஓ! இந்த பாரதி சீரியல் மர்டர் கேஸா? சார் கேட்டார்னு நான்தான் மேடம் இரண்டுநாள் முன்னாடி ஹெட் ஆஃபீஸ்லருந்து தேடி எடுத்துட்டு வந்து கொடுத்தேன்” என்று வெளியேறி விட, அவளுக்குதான் பேயறைந்து போல் இருந்தது.
பல வருடங்களுக்கு முன்பு முடிந்துவிட்ட வழக்குக்கும், வெற்றிக்கும் என்ன சம்மந்தம். இதை ஏன் தேடி எடுத்து வர வேண்டும்?
எண்ணங்கள் தறிக்கெட்டு ஓட, அந்தக் கோப்பை தன் பக்கமாக இழுக்க முயன்றவளின் கரங்கள் அவளையும் அறியாமல் நடுங்கியது.
அவள் படிக்க நினைத்த வழக்குதான். ஆனால் அதை வெற்றியின் மேஜையில் கண்டதில் கொஞ்சம் தவித்துப் போனாள். எல்லாவற்றையும் தந்தை பக்காவாக முடித்துவிட்டார்தான். இருந்தும் வெற்றியைப் பற்றி அறிந்தவளால் பதறாமல் இருக்க முடியவில்லை.
வெற்றியின் அலைபேசியை பக்கத்தில் எடுத்து வைத்தவள், கோப்பினை மெல்லப் பிரித்தாள்.
முதல் பக்கத்தில் திவ்யபாரதியின் செல்லரித்த இளவயது புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. விழிகளில் நீர்த்திரையிட தாயின் முக வடிவை வருடினாள்.
இளவயது திவ்யபாரதிக்கும், இப்போது இருக்கும் தாய்க்கும்தான் எத்தனை வித்தியாசம்?
அம்மு பிறந்ததுமே, செழியனுக்கு விருப்பமே இல்லை என்றாலும் தன் முகவடிவை சின்ன முகமாற்று அறுவைச் சிகிச்சை (ஃப்ளாஸ்டிக் சர்ஜரி) மூலம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டாள் திவ்யபாரதி.
அதுவும் அவனுக்குக் கிடைத்த பதவி உயர்வுகளை அவளுக்காக அவன் மறுப்பதால் வற்புறுத்திச் செய்து கொண்டாள்.
இப்போது வயது மூப்பின் காரணமாக இன்னமுமே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தாள். அதனால்தான் செழியன் தைரியமாக அவளை சென்னை அழைத்து வந்தது.
மற்றவர் திவ்யபாரதியை அறியாமல் இருக்கலாம். ஆனால் அதே கிராமத்தில் பிறந்து வளர்ந்த வெற்றிக்கு?
இந்த கேள்வி வந்ததுமே வெற்றியை நினைத்துப் பயம் உண்டானது.
கார்த்தி செய்த கொலைக்கும் சேர்த்து தன் மீதே பழியைப் போட்டுக் கொண்டு சரணடைந்திருந்த திவ்யபாரதியை, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் வழியில் விபத்தில் இறந்துவிட்டதாகச் சித்தரித்தே, காப்பாற்றினார் தந்தை என்று அறிவாள்.
ஆனால் திவ்யபாரதி உயிரோடிருப்பது வெற்றிக்கு தெரியுமே!
தாயைக் காப்பாற்றியக் கையோடு, பத்திரிக்கை, மீடியா என்ற சுவடே இல்லாத மலைக்கிராமத்திற்கு மாற்றல் வாங்கிக்கொண்ட செழியன், அங்கேயே திவ்யபாரதியை மணந்தும் கொண்டான்.
திவ்யபாரதிக்காகவே தனக்கு கிடைத்த பதவி உயர்வைக் கூட சில வருடங்கள் தள்ளிப்போட்டு, சுற்றி சுற்றி இதுபோல் கிராமங்களாகத்தான் மாற்றல் வாங்கிக் கொள்வான்.
சுற்றி இருந்த கிராமங்களின் வளர்ச்சியும், அவன் ஆற்றிய சேவைகளும், அவன் மறுத்தாலும் செழியனுக்கு பதவி உயர்வைத் தேடித் தந்துகொண்டே இருந்தது.
இறுதியாக காவல்துறையின் உயர் பதவியான டிஜிபியாக பதவி உயர்வு பெற்றபோது சென்னைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
திவ்யபாரதியும் மூப்பின் காரணமாக நிரம்பவே மாறி இருக்கவே வற்புறுத்தி தன்னுடன் சென்னைக்கு அழைத்தும் வந்துவிட்டான். அந்த வழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லாததும் ஒரு காரணம்.
அதற்காக வீட்டுச் சிறையில் எல்லாம் இருந்ததில்லை திவ்யபாரதி. மலைக்கிராமத்துப் பள்ளிகளில் பணியாற்றி இருக்கிறாள்.
தேவைப்பட்ட இடங்களில் எல்லாம், அந்த மலைக்கிராமத்தின் தலைவரின் பெண்ணாகத்தான் திவ்யபாரதி அறிமுகப் படுத்தப்பட்டாள். மற்றவர்களால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாதுதான். அந்தளவுக்குத் தந்தை சான்றிதழ் முதல் அனைத்தும் பக்காவாக ஏற்பாடு செய்து வைத்திருப்பதை அறிவாள்.
ஆனால் அதே ஊரில் வளர்ந்தவனாயிற்றே வெற்றி! அந்த ஊரில் இருப்பவர்களுக்கு திவ்யபாரதியின் மீதுள்ள வழக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவள் ஊர்த்தலைவரின் சொந்த மகள் அல்ல என்று தெரியுமே!
‘இது.. இது.. அன்னைக்கும் வெற்றி வீட்டுக்கு வரும்போது இதே ஃபைல்தானே தரையில் கிடந்தது?’ பொறி தட்டியது.
அன்று அவளது வீட்டிற்கு வெற்றி வந்திருந்தபோது, அவன் சிதற விட்டக் கோப்புகளில் இந்தக் கோப்பும் தரையில் கிடந்தது அவளின் நினைவில் வந்து போனது.
அன்று பாரதி என்ற பெயர் கண்ணில் பட்டது கருத்தில் பதியாமல் போக கடந்துச் சென்றிருந்தாள்.
அன்றும் அன்னையை விசாரிக்கத்தான் வீடு வரை தேடி வந்தானா? தந்தையை மட்டும் என்றால் அலுவலகத்தில் பார்த்திருக்கலாமே? அதற்குமேல் அவளால் சிந்திக்க முடியவில்லை. உலகம் தட்டாமாலை சுற்றியது.
சட்டெனக் கேட்ட கதவுத்திறக்கும் சத்தத்தில் பதறியவள், கோப்பை மூடி வைக்க முயல, அவள் இருந்த பதற்றத்தில் வெற்றியின் அலைபேசியில் பட்டு அது கீழே விழவும் வெற்றி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
கீழே விழுந்த வேகத்தில் அதே பறவையின் பாட்டு மீண்டும் ஒலி எழுப்பியது.
அதைக் குனிந்து கையிலெடுத்தபடியே நிமிர்ந்தவன் அவளது வியர்த்த முகத்தைக் கண்டு மெலிதாய்ப் புன்னகைத்தான்.
“நடிக்காத மூஞ்செலி! உன் கைல வச்சிப் பார்த்துட்டு இருந்ததைத்தான் நான் பார்த்துட்டனே!” உல்லாச புன்னகையுடன் மேஜையில் குதித்து ஏறி அமர்ந்தவன், அவளது தாயின் கோப்பை எடுத்துச் சுழற்றினான்.
“அப்போ சீக்கிரமா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருவ தானே!” என்றதும், “வெற்றி…” என்றாள் தன்னையும் மீறி. வியர்த்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
“இப்படி பொசுக்குன்னு சாய்வன்னு தெரிஞ்சிருந்தா முன்னவே இதைக் காட்டி சிக்க வச்சிருப்பேனே” என்று சத்தமாகச் சிரித்தவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
சிக்க வைப்பானா? தாயின் வழக்கை வைத்தா? அவளது வெற்றியா? இன்னமும் நம்ப முடியவில்லை அவளால்.
இன்னமும் அவளது தாயின் கோப்பை கையில் வைத்துச் சுழற்றியவனை நம்பாமல் என்ன செய்வது?
“உட்காரு! ஏன் நிக்கிற!” அவன் வந்த பதற்றத்தில் எழுந்து நின்றிருந்தவளை அமரச்சொல்ல முள்ளில் அமர்வதுபோல் தயங்கியபடி அமர்ந்தவளின் கலங்கிய முகம் கண்டு அருகில் நெருங்கினான்.
“ஏய் மூஞ்செலி என்னாச்சி! உனக்குப் பிடிக்கலைன்னா வேணாம்! எவ்ளோ நாளானாலும் சரி நான் காத்திருக்கிறேன். ஆனா…” என்றவன் நிறுத்த..
“இல்ல நான் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன்” என்றாள் அவசரமாக.
“மூஞ்செலி!” என்றான் சந்தோஷ கூச்சலாக.
அவனால் அவன் காதுகளையே நம்ப முடியவில்லை. விளையாட்டாகத்தானே கேட்டது.
“எது? இந்த மர்டர் கேஸூக்காக நாடகமாடுறியா?” என்றான் நம்பாமல்.
அவளது பார்வை அவனது கைக்கடியில் சிக்கிக்கொண்டிருந்த தாயின் கோப்பில் படிய, ‘இல்லை’ என மறுத்துத் தலையாட்டினாள்.
“நீங்க யோசிச்சிதான் சொல்றீங்களா வெற்றி?” என்றவளின் குரல் நடுங்கியது. இன்னமும் நம்பாத பார்வைப் பார்த்தாள்.
“ப்ச்…” என்று மறுத்துத் தலையாட்டினான். நீ எதிர்ல இருந்தா யோசிக்கவே தோனாதுடி” என்றான் அவளிடம் மட்டுமே வெளிப்படும் ஆழ்ந்த குரலில்.
“தப்போ சரியோ, உன்னைக் கிட்ட வச்சிக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு தோணும். பண்ணியும் இருக்கேன்” என்று கண்சிமிட்டியவனில் உதிரம் உறைந்தாள்.
இவனையா காதலித்தோம்! நொடியில் கண்கள் குளமாகிவிட, மறைத்துத் முகத்தைத் திருப்பினாள்.
“சரி, நீ சொல்லு! ஏன் இந்த திடீர் மாற்றம்? உன்னை நம்பலாமா? சந்தேகக் குரலில் கேட்டவன் விளையாட்டுபோல் மீண்டும் மேஜையில் ஏறி அமர்ந்து கோப்பைத் தூக்கிப்போட்டு பிடித்தான்.
பதில் சொல்லவில்லை அவள். ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்தாள். அவனது குரலும் செய்கையும் எப்போதும்போல் வம்பிழுப்பதாகத் தோன்றியது.
அப்படி இருந்துவிடக்கூடாதா என்று பேராசையும் பட்டாள். ஆனால் நிதர்சனம் அவளது தாயின் கோப்பின் வடிவில் அவன் கைகளில் அல்லவா இருந்தது.
சட்டையைப் பிடித்து இப்படி மிரட்டி கரம்பிடிக்கவா, என்னையே சுற்றி வந்து காதலித்தாய்? என்று உலுக்க வேண்டும்போல் இருந்தது.
ஆனால் அவன் வாயால் மிரட்டல்தான் என்று சொல்லிவிட்டால் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கிறதா?
பார்வை அவன் தூக்கிப்போட்டுப் பிடித்தக் கோப்பில் படிந்து மேலும் கீழுமாக சென்று வர, “சம்மதம்தான்!” என்றாள் திடமாக.
“அந்த ஃபைலை எடுத்த இடத்துலயே வச்சிடுங்க ப்ளீஸ்” என்றவளின் குரல் மெலிந்து ஒலித்தது.
“சரி வச்சிட்டேன்!” என்றவன் அதை மேஜை மீது வைக்க அவளுக்கு அயர்ந்து வந்தது.
அதையும் வெட்கம் என்று கருதிக் கொண்டவனுக்கோ குட்டிக் கரணம் போட வேண்டும்போல் இருக்க குதித்து இறங்கினான்.
திரும்பி நின்று கேசத்தைக் கோதிவிட்டவன் தன்னை நிலைப்படுத்த பெரும்பாடு பட்டான்.
அப்போதும் முடியாமல் போக, “நான் நம்ப மாட்டேன்! எனக்குச் சத்தியம் பண்ணு!” என்றவன் அவள் தாயின் கோப்பின் மீது கைவைக்க, அதற்குமேல் அவளால் முடியவில்லை.
“சம்மதம்… சம்மதம்! போதுமா!” குரல் மெலிந்து ஒலித்தாலும் அதில் இருந்த ஆவேசத்தை தலைகால் புரியாத நிலையில் இருந்தவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அவள் சம்மதம் சொன்ன நொடியே வானத்தில் பறந்தவனைக் கல்யாணக் கனவுகள் ஆக்கிரமித்துக் கொண்டன.
“நிஜம்மாவா மூஞ்செலி!” கையைப் பிடிப்பதுபோல் அருகில் வர பதறி விலகினாள். “முதல்ல அப்பாட்ட பேசுங்க” என்றவள் எழுந்து கொண்டாள்.
“உங்க அப்பாட்டல்லாம் என்னைக்கோ பேசியாச்சி! என்றதும் அவள் நடை நின்றது. அதற்குதான் வீட்டுக்கு வந்தானோ?
“எல்லாருமே உன் பதிலுக்காகத்தான் பதற்றத்தோட வெயிட்டிங்!” என்றான் அவளது மனநிலை புரியாமல்.
“ஓ…” என்றவள் அவனை வெற்றுப் பார்வைப் பார்க்க, திருமணத்திற்கு அவள் சம்மதித்துவிட்ட சந்தோசத்தில் இருந்தவனும் அதைக் கவனிக்கத் தவறினான்.
“அன்னைக்கே சொன்னேன்ல, உன்னை குடும்பம் நடத்த வைப்பேன்னு” என்றவனின் குரல் உல்லாசமாய் அவள் முதுகுக்குப் பின்னால் கேட்க, திரும்பி நின்று, “நீங்க ஜெயிச்சிட்டிங்க வெற்றி” என்றவள் உயிரற்றப் புன்னகையால் கடந்து சென்றாள்.
தேஜஸ்வினி விசயத்தைக் கேட்காமலே செல்வது வேறு அவள் மனதைப் பிசைந்தது. சட்டையைப் பிடித்து கேட்க வந்தவள், தன்னை நிலைப்படுத்திக் கொள்ளக் கூட முடியாமல் தளர்ந்த நடையுடன் வெளியேறினாள்.
மாற்றி மாற்றி இருவரும் மற்றவர் விளையாடுவதாக நினைத்து வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொண்டிருந்தனர்.
(ஹா…ஹா… வெற்றி நல்லவன் வல்லவன்னு கொடி பிடிச்ச அனைவரும் வரிசையில் வரவும்…)