அவளது வெற்றியா அவளிடம் கோபப்பட்டது! எழிலரசியால் நம்பமுடியவில்லை.
மெல்லியப் புன்னகை இழையோட கண்ணெடுக்காமல் அவன் தன்னை இரசிக்கும் கணங்களை அவனுடன் சேர்த்து அவளும் இரசித்திருக்கிறாள்.
அவனின் அந்தச் சிரிக்கும் கண்கள், அவன் பேசாத காதலை எல்லாம் சேர்த்து வைத்து அவளிடம் ஆயிரமாயிரம் கதைப் பேசி இருக்கிறது.
எப்போது அவனை இரசிக்க ஆரம்பித்தாளென கேட்டால் நிச்சயம் சொல்லத் தெரியாது. சிறுவயது முதலே களமாடும்போது அவனது காலின் நளினங்களை தன்னையும் மீறி வியந்திருக்கிறாள். எதிரி கணிக்கும்முன் கண்சிமிட்டும் நொடியில் கோணங்களை மாற்றி நின்று தாக்குவான்.
எந்த இடையூறும் தராது அவள் பார்வையை மட்டுமே யாசித்துச் செல்பவன் கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் புகுந்து இடையூறு செய்ய ஆரம்பித்திருந்தான்.
தூரத்திலிருந்து பார்வையால் மட்டுமே அவ்வப்போது தொட்டுச் சென்றவன் அவள் இதயத்தையும் தொட்டுத் திறக்க ஆரம்பித்திருந்த வேளை அது.
சலனமில்லாத அவனது பார்வைகள், தனிமையில் அவளைச் சலனப் படுத்தின.
அவன் வருவதற்கென்று நாட்கணக்கு கிடையாது. நினைத்துப் பாராத நேரத்தில் வந்து நிற்பவனை எதிர்பார்த்து அவளது பார்வை சுற்றுப்புறத்தை முதல்முறை அலசியபோது உள்ளுக்குள் அதிர்ந்து போனாள். அப்போதுதான் கல்லூரியில் முதல் வருடம் அடியெடுத்து வைத்திருந்தாள்.
அவள் பள்ளி படிக்கும்போதும் இதுபோல் வந்திருக்கிறான்தான். ஆனால் அப்போதெல்லாம் அவளைக் காணத்தான் வருகிறான் என்று அவளுக்குப் புரிந்திருக்கவில்லை. கார்த்தியை பார்க்க வருவது போன்றோ, இல்லை களரி பயிற்றுவிப்பது போன்றோ வருபவன், ஒருநாளும் இவளைக் காணாமல் சென்றதில்லை என்பதை காதலை உணர்ந்த பின்னாளில்தான் கண்டுகொண்டாள்.
அவன் உள்ளம் தெள்ளத் தெளிவாய் விளங்கி விட, அதன் பின்னான நாட்களில் எவ்வளவு முயன்றும் அவனைத் தேடியக் கண்களை அவளால் கட்டுப்படுத்த முடிந்ததில்லை.
அவன் வருகை நாட்களை மனதுக்குள் கணக்கிட்டவள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குமேல் தன்னைக்காணாமல் அவனால் இருக்கமுடியாது என்பதை கண்டு கொண்டிருந்தாள்.
அந்த கால இடைவெளிக்குள் அவன் வராத நாட்களில் தனக்குள்ளும் புசு புசுவென கோபம் எட்டிப் பார்க்க, மெல்லிய அதிர்வு தோன்றியது.
தானும் அவனைத் தேடுகிறோமா? தேடித் தேடிக் களைத்த மனது நிதர்சனத்தைப் பொட்டில் அடித்தாற்போல் உரைக்க, அதுவரை அலைபாய்ந்திருந்த மனதில் ஆசுவாசம் குடிகொண்டது.
கண்முன் வராமல் கண்ணாமூச்சி ஆடி தன்னை களவெடுத்துக் கொண்டான் என்று புரிந்ததும் மெல்லியப் புன்னகையுடனே வலம் வந்து கொண்டிருந்த நாட்கள் அவை.
“இப்போல்லாம் அடிக்கடி தனியா சிரிக்கிற. இது நல்லதுக்கில்ல. ஆமா சொல்லிட்டேன்.” மிரட்டிய தோழி ரம்யாவை, “சும்மா இருடி” என அடக்கி இருக்கிறாள்.
சிறுவயதிலிருந்து முட்டிக்கொண்டதாலோ என்னவோ காதலை மறைத்து அவனிடம் முறைப்பையே வெளிப்படுத்தி இருக்கிறாள்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாய் அவன் வராதபோது, நிலமை தலைகீழாயிற்று. என்னாயிற்றோ? என்ற பதற்றம் குடிகொண்டதில் அவளால் எதிலும் கவனம் செலுத்த முடிந்ததில்லை.
விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவனைப்பற்றியத் தகவல்களை அவனது நண்பர்கள் மூலம் திரட்டினாள். ஐபிஎஸ் முடிக்கப்போகிறான் என்று தெரிந்ததும் மனம் குதுகலித்தது. அவளது கனவும் அதுதானே!
தந்தைக்காக இன்றி அவனுக்காகவும் சேர்த்தேத் தனதுக் கனவை இன்னும் திடப்படுத்திக் கொண்டாள்.
காணாமல் போனவன் திடீரென ஒருநாள் வந்து நின்றான். அப்படி ஒரு ஆசுவாசம் அவளிடம். கண்கள் பணித்தது. ஓடிச்சென்று ஏன் வரவில்லை என்று கேட்டு கேட்டு அறைய வேண்டும்போலொரு ஆவேசம். அதே ஆவேசத்துடன் அவன் நெஞ்சிலயே பதுங்கிக் கொள்ள வேண்டும்போல் ஒரு துடிப்பு.
தன்னை முழுமையாக உணர்ந்து கொண்டாள். அவனில்லாத வாழ்வு சுகிக்காது என்று புரிந்தநொடி தைரியமாக அவன் முன்னே சென்று நின்று விட்டாள்.
இதுவரை அவனும் அவளிடம் பேச முயற்சிக்காததில் அவளும் அதை முயற்சிக்கவில்லை. இந்த சொல்லாக் காதல் மிகவும் பிடித்தது. நேராக அவன் பார்வையில் படும்படி டீக்கடையில் சென்று வம்பிழுத்துவிட்டு வந்தாள்.
காதலைச் சொல்லாமலே அவன்மீதான தன் உரிமையைப் பார்வையால் நிலைநாட்டினாள்.
காதலில் தேடலும் சுகமல்லவா! தேடித் தேடியே அவனுள் அவளை தொலைக்கவும் வைத்திருந்தான் அவன்.
அப்படி ஆசை ஆசையாய் நெஞ்சில் சுமந்திருந்தவன் இன்று கொண்டிருந்த கோலம் அவளுள் கொஞ்சநஞ்சம் ஒட்டியிருந்த மிச்சக் காதலையும் முற்றிலுமாக துடைத்தெறிந்திருந்தது.
புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிய வெற்றி அரைமணி நேரத்தில் திரும்பி வந்திருந்தான்.
நேராக அம்முவிடம் வந்து, “அந்தப் பையனை ரீலீஸ் பண்ணு” என்றவனின் முகம் கடினப்பட்டுக் கிடந்தது.
“ஃபோன் வரும்போதே எதிர்பார்த்தேன் எஸ் பி சார்” அலட்சிய சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
“இன்ஸ்பெக்டர் எஃப் ஐ ஆர் போட்டாச்சா” அவனை கொஞ்சமும் சட்டை செய்யாது குரல் கொடுத்தாள்.
“இல்ல, மேடம்! அது வந்து…” என்று இழுத்தவரிடம், “என்ன வந்து போயின்னுட்டு இருக்கீங்க. எஃப் ஐ ஆர் எங்க?” என்றாள் எரிச்சலாக.
“மேடம்! வெற்றி சார்தான் நான் வர்ற வரை எஃப் ஐ ஆர் போட வேண்டாம்னு சொல்லிட்டுப் போனார்” அம்முவின் கோபத்தில் பழியைத் தூக்கி வெற்றியின் மீது போட்டுவிட்டுத் தான் தப்பித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
“ஓ…” என்றாள் இளக்காரமாக.
“அந்த எஃப் ஐ ஆர கொண்டு வாங்க நானே போட்டுக்கிறேன்” என்றவள் வெற்றியை அலட்சியமாய்ப் பார்த்தாள். அவனது கோபம் கிளறுப்பட்டுக் கொண்டிருந்தது.
‘இருக்கிற கடுப்பில் இவ வேற’ பல்லைக் கடித்தான். அதுவும் மற்றவர் முன்பு இவளே மதிக்க வில்லை என்றால் மற்ற யார் மதிப்பார்.
தன்னவளின் முதல் வழக்கு. அதில் தானே அதிகாரியாய் தலையிட வேண்டி இருந்ததில் ஏற்கனவே ஏகக் கடுப்பில் இருந்தவனை அவளின் அலட்சியம் வெறுப்பேற்றியது.
“அம்மு நான் உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்” பொறுமையை இழுத்துப் பிடித்து வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
அவனை நிமிர்ந்தும் பாராமல், இன்ஸ்பெக்டர் கொண்டு வந்த முதல் தகவல் அறிக்கையை நிரப்ப ஆரம்பித்தாள். வெற்றி பார்த்தப் பார்வையில் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து விலகிச் செல்ல, “அம்மு…” என்றான் இயலாமையுடன்.
மற்றவர்களும் ஏதோ பெரிய இடத்துப் பிரச்சனை என்பது வரை புரிந்ததில், இதெல்லாம் சாதாரணம் என்பதுபோல் அவரவர் வேலையைப் பார்த்தனர்.
அவள் கைகளிலிருந்து அதைப் பிடுங்கி எடுத்தான். “அவன் தப்பு செய்திருக்கமாட்டான் அம்மு” என்றான் கடைசிப் பொறுமையாக. கண்கள் ‘புரிந்து கொள்ளடி’ என்று கெஞ்சியது.
அவனுக்கும் இதில் தலையிடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
காலம் ஏன் அவள்முன் எப்போதும் தன்னை குற்றவாளியாகவே நிறுத்துகிறது? அவனுக்கு தன் மீதே சலிப்பு வந்தது.
“அவன் தப்பு செஞ்சானா இல்லையான்னு முடிவு பண்ண வேண்டியது கோர்ட். நீங்களோ நானோ இல்ல. எஃப் ஐ ஆர் போட்டு கோர்ட்ல நிறுத்த வேண்டியது என் கடமை!
என்னை என் வேலையை செய்ய விடுங்க! ப்ளீஸ்” என்றவள் வாசலைக் கைக் காட்டினாள்.
‘என்னையே வெளியே போகச் சொல்வாளா?’ அதிகாரத்துக்குப் பயப்படாத அவளின் துணிச்சல் ஒரு பக்கம் புன்னகையை வரவழைத்தாலும் அதை இரசிக்கும் சூழ்நிலையில் அவன் இல்லை.
“ஹீ இஸ் எ ஸ்டூடண்ட். எஃப் ஜ ஆர் போட்டா அவன் படிப்பே வீணாப் போகும். அது உனக்குப் புரியலயா?” என்றான்.
“அவனே குற்றத்தை ஒத்துக்கிறானே அது உங்களுக்குப் புரியலையா?” எதிர்வாதம் செய்தாள்.
“அவன் ஷாக்ல இருக்கலாம். அதுலருந்து வெளிவர அவனுக்கு கொஞ்சம் டைம் தேவை.
நான் உண்மையைச் சொல்ல வைக்கிறேன். எனக்கு கொஞ்சம் டைம் குடு! ப்ளீஸ்!”
தன் பதவி, அதிகாரம் எல்லாம் அவளின் முன்னால் அவனுக்கு ஒன்றுமே இல்லை.
ஒவ்வொருமுறையும் அவள் தன்னைத் தவறாக நினைக்கக் கூடிய இந்த சூழ்நிலைதான் அவனைக் கொன்றுத் தின்றது. அதில் எல்லாத்தையும் மறந்து கிட்டத் தட்ட அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“ஓ.. எவ்ளோ பணம் வாங்கினீங்க? அரசியல் புள்ளியாச்சே பெட்டி வெயிட்டோ? என்றாள் மார்புக்கு குறுக்காக கையைக் கட்டி.
எதை அவன் எதிர்பார்த்துப் பயந்தானோ அதையேக் கேட்டுவிட்டாள். உடல் இறுகியது. அதுவரை இருந்த இளகுத் தன்மை காணாமல் போனது.
“நாம குடும்பம் நடத்த தேவையான அளவு வாங்கி இருக்கேன். போதுமா! இப்போ அவனை வெளிய விடு!” என்றவன் அதுவரை அவள் கண்ட வெற்றி அல்ல.
அந்நேரம் பார்த்து, மேஜைமேல் இருந்த அவனது அலைபேசி ஒலி எழுப்பியது.
அதில், ‘முருகானந்தம் எம்.பி’ என்று ஒளிர்ந்த பெயரைக் கண்டதும், வெறுப்பானப் பார்வையை அவன் மீது வீசினாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தபடி, அலைபேசியை எடுத்து காதில் வைத்தான். “எஸ் ஸார்! இன்னும் அரைமணி நேரத்துல தம்பி வீட்டுக்கு வந்துடுவார்” என்றுவிட்டு வைத்தான். ஏளனமாய் அவளது உதடுகள் வளைந்தது.
‘ச்சி! நீயும் மனிதன்தானா?’அற்பமாகப் பார்த்து வைத்தாள்.
“இப்படி அசிங்கப்பட்டப் பணத்துல நான் உன் கூட குடும்பம் நடுத்துவேன்னு நினைக்கிறியா” அவன் காதுக்குள் சீறியவள், “இது என் ஸ்டேஷன்! வெளிய விட முடியாது.” என்றாள் அதிகாரமாய்.
“உன்னை எப்படி குடும்பம் நடத்த வைக்கணும்னுங்கிறதை நான் பார்த்துக்கிறேன்!” அவளைப்போலவே அவனும் சீறினான்.
இந்த சூழ்நிலையில், என்ன சொன்னாலும் அவள் விளங்கிக் கொள்ளப் போவதில்லை. விளக்கும் சூழ்நிலையிலும் அவன் இல்லை. அதில் வெற்றியின் கோபம் அவளிடமே திரும்பியது.
“இப்போ நான் அவனைக் கூட்டிட்டுப் போறேன்” என்றவன் அவனே சாவியை எடுத்து சிறையைத் திறக்கப் போக, குறுக்காக வந்து மறித்து நின்றாள்.
“யார் சொன்னாலும் சரி! நான் இதுக்கு அனுமதிக்கவே மாட்டேன்”
“அம்மு! ப்ளீஸ் வழிவிடு!” எச்சரித்தான்.
அவள் அப்போதும் மறுத்துத் திடமாக நின்றாள்.
இரண்டு கைகளையும் விரித்து, பூட்டை மறைத்துக்கொண்டு வழி மறித்தபடி அவள் நின்றிருந்த கோலம், அந்தச் சூழ்நிலையிலும் அவனுக்குப் புன்னகையை வரவழைத்தது.
‘பிடிவாதக்காரி’ கொஞ்சத் தோன்றிய மனதை இழுத்துப் பிடிக்க பெரும்பாடுப் பட்டான்.
“அப்போ நீ வழி விட மாட்ட!” இரசனையுடன் சுற்றிலும் பார்வையைச் சுழற்றினான். அவரவர் வேலையில் மூழ்கி இருந்தவர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
அவள் இடுப்புக்கு இரண்டு பக்கமும் ஊடாகக் கையைக் கொண்டுபோனவன், பூட்டைத் திறந்துவிட்டு, புன்சிரிப்புடன் புருவத்தை ஏற்றி இறக்க, அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
வெளியில் நடந்த பிரச்சனைக்கும், தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான் அந்த இளைஞன்.
வெற்றி “வா” என்றழைக்க, அதற்கும் பதில் இல்லை. வெற்றுப் பார்வைப் பார்த்தான்.
“இப்போ நீ வரப்போறியா இல்லையா?” கையைப் பிடித்திழுக்க, வரமறுத்துக் கையை உதறியவன் அசைந்தானில்லை.
சிறைக்கு உள்ளேயும் வெற்றியின் குரல் ஓங்கி ஒலித்ததில் சுயம் மீண்டாள் எழிலரசி. வரமாட்டேன் என்று அடம்பிடிப்பவனை பிடிவாதமாகக் கட்டாயப் படுத்துகிறான் என்று புரிந்ததும் இயலாமையுடன் வெறுப்பும் சேர்ந்தது.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கழித்து முகத்தைத் தொங்கப் போட்டபடி வெளிவந்தவனைப் பின்தொடர்ந்தான் வெற்றி.
அவன் வந்தபோது தனது நாற்காலியில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தவளின் முகம் இரத்தமெனச் சிவந்துக் கிடந்தது.
“நான் கூட்டிட்டுப் போறேன்” தகவலாக அவன் தெரிவிக்க, “தாராளாமா!” என்றவள் “அதுக்கும் முன்னாடி இதுல கையெழுத்துப் போட்டுட்டு கூட்டிட்டுப் போங்க எஸ் பி சார்!” என்றாள்.
ஆராய்ச்சியாய் வளைந்த புருவத்துடன் கையில் வாங்கிப் பார்த்தான். முதல் தகவல் அறிக்கை.
அந்தப் பையனின் மேல் வழக்கை எழுதிமுடித்து, திரு எஸ்பி வெற்றி தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது அனுமதியின்றி விடுவித்துச் செல்வதாக அவன் மீதும் சேர்த்தேக் குற்றத்தை எழுதி இருந்தாள்.
‘இவ்வளவு சொல்லியும்’ கோபம் உச்சிக்கு ஏறியது.
அதைத் தூள் தூளாகக் கிழித்தெறிந்தான்.
“அவன் மேல் எஃப் ஐ ஆர் போடக்கூடாதுன்னா போடக்கூடாது. இட்ஸ் மை ஆர்டர்! காட் இட்!” டேபிளைத் தட்டி அவன் சொன்ன வேகத்தில் உள்ளுக்குள் நடுங்கிப் போனாள்.
இவ்வளவு நாள் சீண்டியிருக்கிறான், வெறுப்பேற்றி இருக்கிறான்.
ஆனால் இந்த இரத்தமெனச் சிவந்த கோப முகத்தை இதுவரை அவள் கண்டதில்லை. கண்டதில்லை என்பதைவிட அவளிடம் அவன் காட்டியதில்லை என்றே சொல்லலாம்.
அவனைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறாள். அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.
மெய்யோ, பொய்யோ? தந்தையைப் போலவே டிப்பார்ட்மெண்டில் சிம்ம சொப்பணம் அவன்.
அவள் துணிந்து அவனை எதிர்த்து நின்றதெல்லாம் அவன் காதல் கொடுத்த தைரியமே ஒழிய, வேறு யாராலும் நிச்சயம் அவன் முன்னால் அப்படி நின்று விட முடியாதென்று அறிவாள்.
அவனுமே, அவனுடைய சில்மிஷத்தை எல்லாம் அவளோடும் குற்றவாளிகளோடும் நிறுத்திக் கொள்வான்.
முதல்முறை அவன் கோபத்தைப் பார்த்ததில், உள்ளுக்குள் நடுங்கினாலும், ஒரு மூலையில் இதயம் வலி கண்டது.
அவன் மேஜையைத் தட்டியச் சத்தத்தில் ஸ்டேஷன் மொத்தமும் வேறு திரும்பிப் பார்க்க, கூனிக் குறுகிப் போனாள்.
அவமானத்தில் முகம் கறுக்க நின்றிருந்தவளை வெற்றுப் பார்வைப் பார்த்தவன், அந்த இளைஞனின் கைப்பிடித்துக்கொண்டு அவளைக் கடந்து செல்ல, மொத்தமாக நொறுங்கினாள்.
அவன் மீதான காதல், கண்ணுக்கு முன்னால் கண்ட அவனது கயமைத் தனத்தில் மொத்தமாக விலகி இருந்தது.