25…
உதிரம் பருகி வாழ்ந்தவன்
நானடி…
இன்று உன் உறவைத் தேடி
அலைகிறேன்
ஏனடி..
மன்னரின் நிலை குறித்து கவலை கொண்ட சேவகர்கள் அவசரமாய் அரண்மனை வைத்தியரை அணுகி, விசித்திரமாய் நடந்து கொண்ட மன்னரின் நடவடிக்கைகளை விவரித்தனர்.
“என்ன சொல்கின்றீர்!, பசிக்கிறது என்றவர் கொடுத்த பழங்களை புசிக்காமல் சேவகன் கையில் வடிந்த உதிரத்தை குடித்தாரா?, நீங்கள் கூறும் எதையும் என்னால் நம்ப இயலவில்லையே!” என்று நம்பிக்கையின்றி பேசினார் அரண்மனை வைத்தியர்.
“நாங்கள் உண்மையைத் தான் உரைக்கின்றோம் வைத்தியரே. மன்னர் மிகவும் விசித்திரமாக நடந்து கொள்கிறார், அவர் உடலில் இருந்த உதிரம் முழுவதும் வற்றிப் போனது போல் உடலும் முகமும் பனிமூட்டம் போல் வெளிரிய தோற்றத்துடன் காட்சி தருகிறது. வேட்கையுடன் இறை தேடி அலையும் வேங்கை போல் அறைக்குள்ளேயே ஆவேசத்துடன் நடந்து கொண்டிருக்கிறார், கைக்கு கிட்டிய இறை புசிக்க கிட்டாதது போல் நம் மன்னரின் கண்கள் ஏமாற்றத்திலும் ஏக்கத்திலும் கலங்கித் தவிக்கிறது. விரைந்து வாருங்கள் மன்னரின் உடல் நிலையை பரிசோதித்து வேண்டிய வைத்திய பணிகளை தொடருங்கள்” என்று கவலையும் கலக்கமுமாய் மன்னரின் அறைக்கு வைத்தியரை அழைத்து சென்றனர் சேவகர்கள்.
அந்தப்புரத்தின் வாயிலில் நுழையும் போதே ஒரு அபலைப் பெண்ணின்.. அலறல் குரல் அனைவரின் செவிகளையும் எட்டியது… “என்ன இது? ஏதோ ஒரு பெண் அச்சத்துடன் கதறும் குரல் கேட்கிறது..” என்று வைத்தியர் நடையை தளர்த்தி நகராமல் நிற்க…
“பணிப்பெண் எவரேனும் இரவின் இருளில் எதையேனும் கண்டு பயந்து அபயக் குரல் எழுப்பி இருப்பர். நீங்கள் விரைந்து வாருங்கள் நாம் மன்னரை சென்று சந்திக்கலாம்”என்று சேவகன் ஒருவன் திசை திரும்பிய வைத்தியரின் கவனத்தை மீண்டும் மன்னன் புறம் திருப்பி அங்கிருந்து அவசரமாய் அழைத்துச் சென்றான்.
பெண்ணின் குரல் வந்த திசைக்கு அந்தப்புரக் காவலர்கள் விரைந்தனர்.
சற்று தொலைவில் இரத்த வெள்ளத்தில் மடிந்து கிடந்த பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியும் அச்சமும் கொண்டனர்.
உள்ளுக்குள் உண்டான பயத்தை பொருட்படுத்தாமல் சடலத்தை மெதுவாய் நெருங்கினர் சேவகர்கள்.
ஓசையின்றி எட்டு வைத்த பாதத்தின் ஒலியையும் தெளிவாய் கவனித்த செவிகள்.. மூளைக்கு அபாயம் எனும் எச்சரிக்கை விடுக்க.. தூண்களின் மறைவில் தன்னை மறைத்துக் கொண்டு… அவசரமாய் அங்கிருந்து ஓடியது ஒரு உருவம்.
சடலத்தை நெருங்கிய சேவகர்கள் அது அந்தப்புரத்து பணிப் பெண் எனும் அடையாளத்தை கண்டு கொண்டு…”யார் இத்தகைய கொடூரச் செயலை செய்தது..?” என்று ஒரு காவலாளி கேள்வி எழுப்ப.. “அந்தப்புரத்திற்குள் கள்வன் எவரேனும் நுழைந்து இருக்கக்கூடுமோ..?” என்று சந்தேகமாய் வினவினார் மற்றொரு காவலாளி.
“இல்லை நுழைந்தது கள்வன் எனில் அவன் கவனம் இப் பெண்ணின் ஆபரணங்கள் மீது மட்டுமே படிந்திருக்கும், சற்று பெண்ணின் சடலத்தை கவனித்து பாருங்கள் இப்பெண் உடலில் பற்கள் பதிந்த தடம் உள்ளது. “என்று மற்றொரு காவலாளி முன்னவர் கூறிய வார்த்தையை மறுத்து உரைத்தார்.
“அவ்வாறெனில் ஏதேனும் காட்டு விலங்கு நுழைந்திருக்க கூடுமோ..?” என்று மற்றொரு காவலாளி சந்தேகத்துடன் கேள்வி எழுப்ப..”இல்லை காட்டு விலங்கு எனில்.. இப்பெண்ணின் சடலத்தில் பல இடங்களில் விலங்கின் நகக்கிரல்களும் கோரப் பற்கள் படிந்த காயங்களும் இருந்திருக்க கூடும்..”என்று மறுத்தார் மற்றொரு காவலாளி.
“கள்வனோ காட்டு விலங்கோ இல்லை எனில் இத்தகைய கொடும் பாவச் செயலை செய்தது யார்?” என்று மற்றொரு காவலாளி வினவ…
” இத்தகைய கொடும் பாவச் செயலை, பலி பாவங்களுக்கு அஞ்சாத கொலைகாரன் அன்றி வேறு எவராலும் செய்ய இயலாது…” என்றார் மற்றொருவர்.
“நம் அரண்மனைக்குள் இவ்வாறான கொடும் பாவச் செயல்களை செய்து கொண்டிருந்தது… அரண்மனை ஜோதிடரின் மைந்தனும், நம் மன்னரின் ஆருயிர் நண்பருமான காந்தாரன் தான், இப்போது அவர் உயிருடன் இல்லையே,!, நம் மன்னர் தான் அவருக்கு மரண தண்டனை அளித்து கழுவேற்றிவிட்டாரே!.. மீண்டும் உயிர் பலி தொடர்கிறது எனில் நம் மன்னர் தவறான தீர்ப்பு வழங்கி விட்டாரா?, கொடும் கொலைகள் புரிந்தவனுக்கு பதிலாக குற்றம் எதுவும் புரிந்திடாத நிரபராதியை கொலைக் களம் அனுப்பி வைத்தாரா நம் மன்னர்.. ” என்று குழப்பத்துடன் வினவினார் ஒரு காவலாளி.
” என்ன பிதற்றல் இது?, நம் மன்னர் எதையும் தெளிவாய் ஆராயாமல் தீர்ப்பு வழங்கக் கூடியவர் இல்லை என்று இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். இது ஏதோ சதிகாரர்களின் செயல் போல் தெரிகிறது.. வாருங்கள் உடனே சென்று நம் அரண்மனை ஆலோசகரை சந்தித்து விபரத்தை கூறுவோம்…. ” என்று காவல் பணியாளர்கள் அரண்மனை ஆலோசகர் இருப்பிடம் தேடி ஓடினர்.
சேவகர்கள் மூலம் மன்னரின் நிலை குறித்து அறிந்து கொண்ட அரண்மனை வைத்தியர் அந்தப்புரத்தில் ஆடம்பரமாய் அமைக்கப்பட்டிருந்த கீர்த்தி வர்ம தேசிங்கனின் தனி அறைக்கு வந்து சேர்ந்தார்.
சேவகர்கள் உரைத்தது அனைத்தும் பொய் என மெய்ப்பிப்பது போல் மஞ்சத்தில் அமைதியாய் உறக்கம் கொண்டிருந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.
“அரசே!…”என்று வைத்தியரின் உரக்க குரலில் உறக்கம் களைந்து எழுந்தவன்.. “வாருங்கள் வைத்தியரே!, இந்நேரத்தில் தாங்கள் என் அறைக்கு வர அவசியம் என்ன வந்தது ?, ஏதேனும் முக்கிய விபரம் பேச வேண்டுமா?” என்று வெகு இயல்பாய் பேசினான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.
“அது ஒன்றும் இல்லை அரசே!, தாங்கள் ஏதோ விசித்திரமாக நடந்து கொள்வதாய் சேவகர்கள் வந்து கூறினார்கள், ஆகையால் தங்களின் உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று பரிசோதித்துப் பார்க்க வந்தேன்.”என்று தவறு செய்தவர் போல் தயங்கியபடி பேசினார் அரண்மனை வைத்தியர்.
“என்ன நான் விசித்திரமாக நடந்து கொண்டேனா!, என்ன பிதற்றல் இது!, இதோ பாருங்கள் உங்கள் கண் முன் தான் நிற்கிறேன்.. என்னிடம் ஏதேனும் குறை தெரிகிறதா?.. இன்னும் உங்களுக்கு ஐயம் தீரவில்லை எனில் தாராளமாக என்னை பரிசோதித்துக் கொள்ளுங்கள்..”என்று அனுமதி வழங்கினான் கீர்த்தி வர்மன்.
மன்னரின் கோபத்திற்கு அஞ்சிய வைத்தியர் மெதுவாய் பின் நகர்ந்து செல்ல…” மன்னரே உத்தரவு வழங்கி விட்டார் பின் ஏன் தயங்குகின்றீர்கள் வைத்தியரே!, பரிசோதித்துப் பாருங்கள்”என்று வைத்தியரின் தயக்கத்தை புரிந்து கொண்ட சேவகர்கள் ஒன்றாய் குரல் கொடுக்க.. மறுத்து எதுவும் கூறாமல் கீர்த்தி வர்மன் அருகில் சென்ற வைத்தியர் அவன் இமைகளை மெதுவாய் விரித்து விழிகளை பரிசோதித்து விட்டு, அவன் கரம் பற்றி தேகத்தின் நிறத்தை ஆராய்ந்தார்.
வளமை போல் எல்லாம் நலமாய் இருக்க, தன்னை அழைத்து வந்த சேவகர்கள் புறம் திரும்பிய அரண்மனை வைத்தியர், “சேவகர்களே!, இங்கு என்ன நடக்கிறது?, மன்னர் எப்போதும் போல நலமாக தானே இருக்கிறார், பின் ஏன் வேண்டாத கதை கட்டி என்னை இங்கு அழைத்து வந்தீர் !” என்று கோபமாய் வினவினார்.
“இல்லை வைத்தியரே!, சற்று நேரத்திற்கு முன்…”என்று சேவகர்கள் எதையோ சொல்லத் துவங்க..”சற்று நேரத்திற்கு முன் இங்கு என்ன நடந்தது எதுவும் நடக்கவில்லை..”என்று குரலை உயர்த்தி எதிரில் இருந்தவர்களை பேசவிடாமல் செய்தான் கீர்த்தி வர்மன்.
“இல்லை அரசே!, தங்கள் விழிகளிலும் தேகத்திலும் உண்டான வேற்றுமையை எங்களால் உணர முடிந்தது, இதோ இவன் கையில் காயம் கண்டு உதிரம் வடிந்தது. அதனைக் கண்ட தாங்கள் சற்றும் யோசிக்காமல் அவன் காயத்தில் இருந்து வடிந்த உதிரத்தை பருகினீர்கள்..” என்று முன் நடந்ததை விவரித்தான் சேவகன் ஒருவன்.
“உதிரம் பருக நான் என்ன காட்டு மிருகமா?, நான் இந்நாட்டு அரசன். வேண்டாத கதை பேசி என் நேரத்தை வீணடிக்காமல் விரைந்து இங்கிருந்து சென்று விடுங்கள்..”என்று சேவகர்களுக்கு அதிகாரமாய் உத்தரவு பிறப்பித்தான் கீர்த்தி வர்மன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யார் ரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள்,நுரையீரல் நோய் உள்ளவர்கள்,ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்,போதைப் பழக்கம் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~