16

ஊடலின் முற்றுப்புள்ளி கூடல் ..

எதைப்பற்றி
யோசித்தாலும்
உன்னிடம் வந்து
நிலைக்கிறது
என் நினைவுகள்..
உனைப்பற்றி
யோசித்தால்
என்னவாகும்
என் நிலை…

பாராமுகம் காட்டி சென்ற தன்னவன் கோபத்தை  எண்ணி பெண்ணவள்  மனம்  ரணமாய் வலித்தது, தன் வேதனையை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல்  பசியில்லை என்று பொய்யுரைத்து,  இரவு உணவை தவிர்த்து அறைக்குள் சென்று முடங்கினாள் ஹனிகா.

ஹனிகாவிடம் முகம் திருப்பி சென்றவன் இரவு  வெகுநேரம் கடந்தே வீடு வந்து   சேர்ந்தான்.  எப்போதும் அவன் வருகைக்காக  சிறுகுழந்தையின் துள்ளலுடன்  வாசலில் காத்திருக்கும் ஹனிகாவை     ஆவலுடன் எதிர்நோக்கியவன், அங்கு தேன்மொழியை கண்டதும்  எதிர்பார்த்தது  கிடைக்காமல் போன ஏமாற்றத்துடன், “ என்ன அம்மா,  எங்க உங்க வாலு மருமக. கோபமா மூஞ்சியை தூக்கிவைச்சுட்டு உட்கார்ந்திருக்காளா?” என்று கேட்டபடி உள்ளே  வந்தவன்,  ஹாலிலிலும் அவள் இல்லாமல் இருக்க, ‘பயங்கர கோபம் போல’ என்று கோபத்தில் சுருங்கும் அவள் முகத்தையும்   சுழிக்கும்  இதழையும்  நினைத்து  மென்மையாய்  புன்னகை செய்தான்.

மருமகள்  சோகமாய் அறைக்குள் முடங்கிக்கிடக்க, அவளை காயம் செய்த மகனோ புன்னகை செய்தபடி நிற்க, “இப்போ எதுக்கு உனக்கு சிரிப்பு வருது?    நீ  கிளம்பி போனதுல இருந்து அவ  முகமே சரியில்ல, நைட் சாப்பிட கூட இல்ல,  அவ முகத்தை பார்க்கவே கஷ்டமா இருக்கு, ஆனா நீ கொஞ்சம் கூட வருத்தம் இல்லாம சிரிச்சுட்டு நிக்கிற!,  என் மருமக சாப்பிடுற வரைக்கும் உனக்கும் சாப்பாடு கிடையாது. போய் என் மருமகள சமாதானம் செஞ்சுட்டு அவ கையாலேயே பரிமாறச்சொல்லி சாப்பிடு” என்றார் தேன்மொழி.

“ என்ன அம்மா இப்படி சொல்லுறீங்க ? அந்த அழுத்தக்காரி  கோபத்துல எனக்கு சாப்பாட்டை கண்ணுல காட்டமாட்டா” என்று  பயந்தவன் போல பேசினான் விதுரன்.

“அப்போ நீயும் பட்டினி கிட. சமாதானமான வந்து சாப்பிடுங்க இல்ல அப்படியே படுத்துதூங்குங்க. தொட்டதுக்கெல்லாம் சின்னப்புள்ளைங்க மாதிரி சண்டை போடுறதுக்கு  இதுதான்  தண்டனை.  நான் தூங்கப்போறேன், என்னால மாத்திரை போட்டு ரொம்ப நேரம் முழிச்சிருக்க முடியாது.  நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு!” என்று தனது அறைக்குள் சென்றார் தேன்மொழி.

‘நல்ல மாமியார், நல்ல மருமக. ரெண்டு பேரும் சேர்ந்து  என்  தலைய நல்லாவே உருட்டுறீங்க’ என்று புலம்பியபடி   ஹனிகா இருக்கும்  அறைக்கு சென்றான் விதுரன். 

மின் விளக்கு கூட போடாமல் இருளில் மூழ்கி இருந்த அறையை ஒளியூட்டி கட்டிலின் ஓரத்தில் சுருண்டு கிடந்தவள் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன்.  அழுததற்கான அடையாளமாய்  கண்ணீர் தடம் பதிந்த கன்னத்தை பரிவுடன் வருடி “ஏய் என்ன சொல்லிட்டேன்னு இப்படி  அழுதுட்டு இருக்க குட்டிமா! “ என்று மென்மையிலும் மென்மையான குரலில் அழைத்தான் விதுரன்.

விதுரன் குரலும்   அழைக்கும் விதமும் வித்தியாசமாய் இருந்தாலும் கண்களைத் திறக்க மனமின்றி  இறுக்கமாய்மூடி இருந்தவளின் பொய்யான நடிப்பை உணர்ந்தவன், அவள் கரத்தினை  மெதுவாய் பற்றி தளிர் விரல்களில் தன் இதழ் பதித்து..

எனக்குள்
ஒளிந்திருக்கும்
உனக்கு..
நித்தமும்
ஒரு முத்தமேனும்
சத்தமின்றி
கொடுத்துவிடுவேன்..
மனதிற்குள்.. 

என்று அவளைப் போலவே கவிதை வரிகளில் தன் மனதை கூறிட, ஹனிகாவின்  இதழ் வியப்பில் மெதுவாய் விரிந்தது, கண்கள்  பதற்றத்துடன் துடித்தது, அவளிடம் அசைவை உணர்ந்த விதுரன் இன்னும் நெருங்கி இதழ் வருடி

பூவையவள் புன்னகையில்
என்னுள் புயல் ஒன்று
வீசக்கண்டேன்..
பேரழிவு கொண்டு..
வீழ்ச்சி கண்ட   என்னை..
முத்த நிவாரணம் செய்து…
மீட்சிக் கொள்ளச் செய்வாயா…
என் பேரழகே..

என்றபடி மெதுவாய்  விரிந்த இதழில் மென்மையாய் முத்தமிட, ஹனிகா உடல்  உணர்வுகளால் அதிர்ந்தது. 

“ஐ லவ் யூ ஹனி!” என்று கிசுகிசுப்பாய் அவள் காதில் முதன்முறையாய் தன் காதலை பகிர்ந்தான் விதுரன். 

அதுவரை கொண்டிருந்த பொய்யான நடிப்பை கைவிட்டு பட்டென்று எழுந்து அமர்ந்தவள் “ என்ன சொன்னீங்க?”  என்று அதிர்ச்சியுடன் வினவ, அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டவன் “ ஐ லவ் யூ டி பொண்டாட்டி,  லவ் யூ சோ மச். நீ இல்லாம என் வாழ்க்கையில எதுவுமே இல்ல” மீண்டும் அழுத்தமாய் தன் காதலை கூறியவன் அவள்   தோள்களை அணைத்து  பிடித்தான்.

அவன் கைகளைத் தட்டி விட்டவள், “பொய் சொல்றீங்க. என்னை சமாதானப்படுத்த தான இப்படி சொல்றீங்க?” என்று கோபத்தை விடாமல் பிடித்துவைத்தாள் ஹனிகா.

“இன்னைக்கு காலையில   வரைக்கும், எனக்குள்ள இருக்கிற உன்னை உணரவே இல்ல ஹனி, கூடவே இருக்கிறதுனால   கொஞ்சம் கொஞ்சமா உன்னைப்  பிடிக்க ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைச்சேன். கோயிலுக்கு போன நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு அம்மா போன் பண்ணி சொன்னதும்,   சின்ன குழந்தை மாதிரி எங்கேயாவது நின்னு வேடிக்கை  பார்த்துட்டு இருப்பன்னு தான் முதல நினைச்சேன். அதுக்கப்புறம் என்னையே அறியாம எனக்குள் ஒரு பயம் வரத்தொடங்கிடுச்சு, உனக்கு ஆக்சிடென்ட்டுன்னு போன் வரவும்  தான் முதல் தடவையா நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு யோசிச்சேன். உனக்கு ஏதாவது ஒன்னு தப்பா நடந்திருந்தா உன் கூடவே நானும் வந்துடனும்னு முடிவு எடுத்தேன்”, என்று விதுரன் கூறிய அடுத்தநொடி அவன் கன்னத்தில் வலிக்கும்படி அடித்திருந்தாள் ஹனிகா.

“இப்போதான் காதல சொன்னீங்க அதுக்குள்ள  சாகுறத பத்தி பேசுறீங்க!,அறிவு இல்ல.  என்னைப் பொறுத்த வரைக்கும் தற்கொலைதான் உலகத்திலேயே முட்டாள்தனமான விஷயம், பிரச்சனைய எதிர்கொள்ள தைரியம் இல்லாத கோழைங்க தான் தற்கொலயத்தேடி போவாங்க, சந்தியா தற்கொலைக்கு பிறகு நம்ம குடும்பத்துல எல்லாரும்  எவ்ளோ கஷ்டப்பட்டோம்,  எல்லாம் தெரிஞ்சிருந்தும் இப்படி பேசினா என்ன அர்த்தம்?” என்று கோபமாய் துவங்கியவள், விதுரனின் குறுகுறு பார்வையில் அமைதியானாள்.

அடிவாங்கிய கன்னத்தை தடவியபடி “நம்ம கல்யாணம் நடக்கலன்னா  செத்துடுவேன் கையில மூட்டைப்பூச்சி மருந்து  டப்பாவை வைச்சு  உருட்டி மிரட்டி இந்த அப்பாவி பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ,  தற்கொலை முட்டாள்தனமான விஷயம்ன்னு சொல்ற இதைக் கேட்கவே வேடிக்கையா இல்ல” என்று விதுரன் பகடி பேசிட “நான் பூச்சி மருந்தை குடிச்சுடுவேன்னு  மிரட்ட தான் செஞ்சேனே  தவிர குடிக்கல,  குடிச்சுட்டு உயிரைவிடுற அளவுக்கு நான் முட்டாளும் இல்ல” என்று மிடுக்காய் அறிவித்தாள் ஹனிகா.

“அடடா இந்த விஷயம் முன்னாடியே தெரியாம போச்சே. சும்மா மிரட்ட மட்டும்தான் செய்றேன்னு தெரிஞ்சிருந்தா, இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காமலேயே இருந்திருப்பேனே. ஒரு பொண்ணு நமக்காக உயிரை விட போகுதேன்னு பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிட்டு இப்போ அடி வாங்கிட்டு உக்காந்திருக்கேன்”, என்று அலுத்துக்கொண்டான்   விதுரன்.

கோபமாய் அங்கிருந்து ஹனிகா  எழுந்திட, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக்கொண்டவன், “கோபம் மட்டும் மூக்கு மேல வருது”, என்று செல்லமாய் அவள் மூக்கை இழுத்து பிடித்தவன் அதில் மெதுவாய் முத்தமிட்டு, “கிறங்கடிக்கிறடி” என்று காதலுடன் கிசுகிசுப்பாய் கூறி இடை வருடி இதழ் நாடி விதுரன்  முன்னேறிட..

நெருங்காதே..
நீ..
நொறுங்கிடுவேன்..
நான்..

என்று சிரித்தபடி அவன் எண்ணத்திற்கு தடை  விதித்து அவசரமாய் விலகி நின்றவள், “பசிக்குது மாமா”  என்று சிணுங்கிட, “அடியே ராட்சசி ஒரு மனுஷன்  ஆசையா பேசுறேன், பசிக்குதுன்னு சொல்ற”,  என்று விதுரன் சிடுசிடுக்க, “பசிக்குதுன்னா  பசிக்குதுன்னு   தான் சொல்வாங்க. தூக்கம் வருத்துன்னா சொல்லுவாங்க”, என்று ஹனிகா பதிலுக்கு முகம் காட்ட, “ஓ.. அடுத்து அதை வேற சொல்லுவியா?” என்றான் விதுரன்.

“சொன்னா என்ன தப்பு.. சார் எவ்ளோ திமிரா முகத்தை கூட திரும்பி பார்க்காம போனீங்க. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்ததுன்னு தெரியுமா? நீங்க என்கிட்ட  பேசாம கோபமா போனதுலயிருந்து மனசு கஷ்டமா இருந்துச்சு,  சரியாவே சாப்பிடல, ரொம்ப பசிக்குது, நீங்க பேசுறது கூட எங்கயோ  கிணத்துக்குள்ள இருந்து பேசுற மாதிரி மந்தமா கேட்குது” என்று தன்  பசிக்கு காரணம் சொன்னாள் ஹனிகா.

அதற்கு மேலும் தாமதிக்காமல் உணவு உண்ண ஹனிகாவை இழுத்து சென்றான் சென்றான் விதுரன்.

சுடச்சுட தோசை வார்த்து தட்டில் வைத்து ஹனிகா கொடுக்க அதை  மணக்கும் குழம்பில் தொட்டு  அவளுக்கு ஒருவாய் தனக்கு ஒருவாய் என்று மாற்றி மாற்றி விதுரன் ஊட்டிவிட உணவுடன் காதலையும் சேர்த்து  ரசித்து உண்டு கொண்டிருந்தனர்  கணவன் மனைவி இருவரும்.  

அவர்களுக்கே தெரியாமல்  வந்து  சமையல் அறையை  எட்டிப்பார்த்து சென்ற தேன்மொழியும்  இருவருக்குமிடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற நிறைவுடன் உறங்கச் சென்றார்.

இரவு உணவு முடிந்து அறைக்குள் நுழைந்ததும் சற்றும் தாமதியாது சட்டென்று ஹனிகாவை  பின்னிருந்து அணைத்து கொண்டவன், கழுத்து வளைவில் முத்தம் பதித்து..

குழந்தை என்று
கொஞ்சிடவோ..
குமரியென்று
எல்லை மீறிட
மிஞ்சிடவோ..
மதில் பூனையாய்
தடுமாறி  நிற்கிறேன்
நானடி..
மயக்கம்  தந்து
என்னை தவிக்கவிடுவது
என்ன நியாயமடி.. 

என்று தன் தடுமாற்றத்தை அறிவித்தான் விதுரன். “பாருடா சாருக்கு கவிதை எல்லாம் வருது!” என்று வியப்பில் விழி விரித்து விதுரன் பிடியிலிருந்து விலகி நின்றாள் ஹனிகா. 

கவிதை எழுத தெரிந்தவர்கள்
எல்லாம்
காதலிக்கின்றார்களா!
என்று நான் அறியேன்…
காதலிக்க துவங்கியவர்கள்
எல்லாம்
நிச்சயம் கவிதை
எழுத துவங்கிடுவார்கள்
என்று   கண்டறிந்தேன்..
உன் காதலால்
நானும்  கவிஞன்
என்றறிந்தேன்.. 

என்று அதற்கும் அவள் பாணியிலேயே கவிதை கூற, “அடடா…காதல் பரிட்சையில பாஸ் மார்க் வாங்கிடுவீங்க போல மாமா”  என்று ஹனிகா வியக்க, ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த கை சங்கிலியை எடுத்து ஹனிகாவின் தளிர்  கரத்தில் விதுரன் அணிவிக்க அதை பார்த்து சற்று ஏமாற்றத்துடன் முகம்  சுழித்தவளோ “ என்ன இது? “ என்று சிணுங்கிட,  “ ஏன் குட்டிமா பிடிக்கலையா?”என்று ஏமாற்றத்துடன் வினவினான் விதுரன். 

வி மற்றும் ஹெச் என்ற இரு ஆங்கில எழுத்து ஒன்றுடன் ஒன்றாய்  பிணைந்து இருக்க அதனை சுற்றி இருந்த இதய வடிவ  வளையம் முழுவதும் வெண்கற்களால்  மின்னியது, “அழகா இருக்கு, ஊருக்குப் போகும்போது, அவர் உனக்கு என்ன வாங்கித் தந்தார்ன்னு  சொந்தபந்தம்  கேட்கும்போது இந்த வெள்ளி  பிரேஷ்லெட்டை காட்டினா எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என்று  காரணம் சொன்னாள் ஹனிகா.

“அட மக்கு இது வெள்ளி இல்ல,பிளாட்டினம். சுத்தி இருக்கிறது வெறும் கல்லு இல்ல, வைரம். இன்னோரு விஷயம். நாம  போட்டுகிற  நகையோ உடையோ  நம்ம விருப்பத்துக்கு தான் இருக்கனுமே தவிர அடுத்தவங்க  நம்மை எடை போடுறதுக்காக இருக்க கூடாது” என்று விதுரன் அறிவுரை வழங்கிட “ ஆகட்டும் குருஜீ!, “ என்று தலை சரித்து சிரித்தாள் ஹனிகா.

“வெரி குட். இப்போ இந்த குருஜீ காதல் பாடம் நடத்தட்டுமா” என்று சரசம் பேசியபடி மெல்ல நெருங்கிட பெண்மையின் பதட்டத்துடன் பின் நகர்ந்து நின்றவள் “இன்னைக்கு  என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று அவன் கிறக்கத்தை கிரகித்து ஹனிகா  விசாரிக்க “நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல. என்னைக்கு எனக்குள்ள  உன்னை  பார்க்கிறேனோ, அன்னைக்கு தயங்காம உன்னை  என்னோட  ஒண்ணா சேர்த்துப்பேன்னு சொன்னேன்ல”,  என்றவன் அதற்கு மேலும் வீண் வாதம் புரியாமல் தன் காதலை  அறிவுறுத்தி தனக்குள் தன்னவளை இணைத்துக்கொண்டான் விதுரன். 

நதியோட இலையாக பயணித்த பெண்ணவள் கடல் சேரும் நதியாக தன் காதல் கணவனுடன்  ஒன்றிணைந்தாள். 

கொஞ்சம் கொஞ்சமாய்
நம்மை
கிறங்கடிக்கும்..
காதலும்
ஒரு போதை தான்..
மீள வழி கிடைத்தாலும்
மீட்சியை விரும்பாது..
வீழ்ச்சியை தேடி  செல்லும்..
காமமும்
காதலின் ஓர் வேதம் தான்..