உறக்கம் என் விழிகளை
தழுவும் போதெல்லாம்
போர்வையென
போர்த்திக்கொள்கிறேன்
உன் நினைவுகளை..
கோவிலிலிருந்து விதுரன் சொல்லாமல் வந்ததும் அவன் அலைபேசி எண்ணிற்கு,
உன் கவலை கண்டு
அணைத்து ஆறுதல் கூற
துடிக்கின்றேன்..
என் காதலை கண்டு
அருவருப்பாய் எண்ணி
அவமதித்து விடுவாயோ என்று
தயங்கி துவண்டு நிற்கிறேன்..
என்று தன் உள்ளத்தின் வரிகளை வார்த்தைகளால் அச்சிட்டு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பிவிட்டு விதுரன் பதிலுக்கு ஆவலுடன் ஹனிகா காத்திருக்க, கவிதையை கண்ட அடுத்தநொடி தெளிவான முடிவுடன் வரிகளுக்கு உரிமையானவளை தொடர்பு கொண்டான் விதுரன்.
“அடடா! மழை வரப்போகுதா? நீங்களே கூப்பிட்டீங்க” என்று கிண்டலுடன் ஹனிகா வினவிட, “ உன் பேச்சை விட பெரிய அடை மழை இருக்கா என்ன?” என்று பதிலுக்கு கிண்டல் செய்தான் விதுரன்.
அடைமழை
பேச்சுக்கு சொந்தக்காரி
நானடா..
உன் அரை நொடிப் பார்வையில்
உறைந்து நிற்கிறேன்
ஏனடா..
என்று ஹனி அதற்கும் கவிதை கூறிட ரசைனையுடன் சிரித்துக்கொண்டவன், “எனக்கு உன்னை மாதிரி கவிதை எழுத தெரியாது, அது மட்டும் இல்ல யாருக்கும் மெசேஜ் அனுப்பியும் பழக்கம் இல்லை, ஏதாவது முக்கியமான விஷயம் பேசனும்னா உடனே போன் பண்ணிடுவேன், மெசேஜ் அனுப்புறத விட போன்ல இன்னும் அதிகமா பேசலாம்னு தோணும்!, உன்ன டிஸ்டர்ப் பண்ணி இருந்தா சாரி”, என்று தன் செயலுக்கு காரணம் கூறி மன்னிப்பு வேண்டினான் விதுரன்.
“ டிஸ்டர்ப்பா? அது எப்பவும் பிஸியா இருக்கிறவங்களுக்கு சொல்ற வார்த்தை, ஐ அம் அல்வேஸ் வெட்டி!, காரணமில்லாம கூப்பிடமாட்டீங்க, சொல்லுங்க என்ன விஷயம்” என்றவள் குரலில் அளவுக்கு அதிகமான ஆர்வம் இருந்ததிட. “ஹனி, கொஞ்சம் வெளிப்படையா பேசனும்” என்று விதுரன் தயங்கிட, “வெளிப்படையாவா, ஓ.. பேசலாமே, என்கிட்ட என்ன தயக்கம் மாமா, போட்டு உடைச்சுடுங்க!” என்று விதுரன் தயக்கத்தை உடைத்தெறிந்தாள் ஹனிகா.
“ இன்னைக்கு கோவில்ல கேட்ட வார்த்தைய இனி அடிக்கடி கேட்குற சூழ்நிலை அமையலாம். அந்த காலத்துல முதல் மனைவி இறந்ததும் அவளோட தங்கச்சிய இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல, அந்த பொண்ணுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட யாரும் யோசிக்கமாட்டாங்க…” என்று விதுரன் பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் நுழைந்து , “ஆனா நம்ம கல்யாணத்துல அப்படி இல்ல மாமா, கல்யாண பொண்ணுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, பொண்ணோட பிடிவாதத்தாலதான் இந்த கல்யாணமே நடக்கப்போகுது”, என்றாள் ஹனிகா.
“உண்மை தான்! உன் பிடிவாதத்தால மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்குது, ஆனா ஊர் உலகத்துல யாருக்கும் இந்த உண்மை தெரியாது, சொன்னாலும் புரியாது. பாக்குறவங்க பல விதமா பேசுவாங்க. அக்காவோட இடத்துக்கு தயக்கமே இல்லாம வர நினைக்கிறான்னு உன்னையும், வயசு வித்தியாசமே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறான், விவஸ்தை இல்லாதவன்னு என்னையும் பேசுவாங்க. முகத்துக்கு நேரா இல்லனாலும் நம்ம முதுகுக்கு பின்னாடி இந்த பேச்சு கண்டிப்பா இருக்கும், அது எல்லாம் தாங்கிக்கிட்டு தான் வாழனும்”, என்றான் விதுரன்.
“ உங்களுக்காக எல்லாத்தையும் தாங்குவேன் மாமா”, என்று ஹனி ஒப்புதல் வாசிக்க.. “இதை நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஹனி, கோவில்ல வைச்சே புரிஞ்சுகிட்டேன். முதல்ல இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்லாம தான் சம்மதம் சொன்னேன், மாமா நிச்சயத்திற்கு கேட்கும் போது கூட அம்மாவுக்காக மட்டும்தான் சம்மதம் சொன்னேன். இன்னைக்கு கோவில்ல வச்சு, உன் தாய் மாமா பசங்க என்னை அவமானப்படுத்தும் போது எனக்காக வந்து நின்னு உன் காதலோட ஆழத்தை நிரூபிச்சுட்ட, இப்போ மட்டும் இல்ல, எப்பவும் உன் காதல புரியவைக்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்க, நான் தான் புரிஞ்சும் புரியாத மாதிரி உன்னை கஷ்டப்படுத்திட்டே இருந்தேன். இத்தனை நாள் உன் மனசை காயப்படுத்துனதுக்கு என்னை மன்னிச்சுடுடா. இனி என்னைக்கும் உனக்கு கஷ்டம் கொடுக்க மாட்டேன்”, என்று உணர்வு பூர்வமாய் பேசினான் விதுரன்.
“ கஷ்டம் கொடுக்க மாட்டேன்னா வேற என்ன கொடுப்ப மாமா?” என்று ஆவலுடன் ஹனிகா வினவிட அவள் வார்த்தையை கவனியாது விதுரன் தொடர்ந்து பேசினான், “ இவ்ளோ நடந்ததுக்கு பிறகு இந்த கல்யாணம் நின்னா அது என்னை விட உன் வாழ்க்கைய தான் அதிகம் பாதிக்கும், அதுனால இந்த கல்யாணம் எப்படியாவது யார் மூலமாவது நின்னுடாதான்னு எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணத்தையும் துடைச்சு எறிஞ்சுடுறேன், இனிமே உன் காதல புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்”, என்றான்.
“என்ன காதல புரிஞ்சிக்க மட்டும்தான் முயற்சி பண்ணுவீங்களா? அப்ப காதலிக்க மாட்டீங்களா?” என்று தன் ஹனிகா தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த “நான் எதார்த்தத்தை பேசுறேன் ஹனி, என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ! இதுவரைக்கும் உன் மேல அப்படி ஒரு எண்ணம் வந்தது இல்ல, பெரியவங்க பார்த்து செஞ்சு வைக்கிற கல்யாணத்துல எப்படி கல்யாணத்துக்கு பிறகு காதலோ அதுதான் நம்ம வாழ்க்கைலையும் நடக்கப்போகுது. கொஞ்சம் கொஞ்சமா உன் காதலை எனக்குள்ள உள்வாங்கிட்டு, நிச்சயமா காதலிக்க ஆரம்பிச்சுடுவேன்” என்று விதுரன் உறுதியளிக்க, ‘வாங்கிட்டு திருப்பி கொடுக்க இது என்ன காதலா கத்திரிக்கா வியாபாரமா?’ என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டவள், உள்ளத்தில் நினைத்ததை வெளியில் மறைத்து, “சந்தியா மேல இருந்த காதலை விட அதிகமாவா மாமா?” என்று தன் சந்தேகத்தை வினவினாள் ஹனிகா.
“ குழந்தைகிட்ட உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமான்னு கேட்குற மாதிரி இருக்கு உன் கேள்வி? காதல்ல இதை விட பெரிசு அதைவிட சின்னதுன்னு அளவு இருக்கா என்ன? கண்டதையும் போட்டு குழப்பிக்காம போய் தூங்கு” என்று அறிவுரை வழங்கிவிட்டு அழைப்பை துண்டித்தான் விதுரன்.
“அம்மாஞ்சி, காதலிக்க முயற்சி பண்ணுறாராம், முயற்சி பயிற்சி எடுத்து செய்ற விஷயமா இது!” என்று செல்லமாய் தன் கணவனாக போகும் காதலனை திட்டிக்கொண்டே.. அவன் எண்ணிற்கு
சூழ்நிலை கைதியாய்
சிக்குண்டு தவிக்கிறாய்..
உன்னை சிறைமீட்டு
என் காதல் கைதியாய்
காலம் முழுதும் வைத்திட..
கொள்ளை ஆசை கொண்டேனடா..
என்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி விட்டு விதுரன் நினைவிலேயே விழி மூட மறந்து உறக்கம் தொலைத்து நின்றாள் ஹனிகா.
‘காலம் நமக்கான சூழலை முடிவு செய்யும்’, என்று பதில் ஒன்று அனுப்பிவிட்டு, தனிமையில் அமர்ந்து கடந்தகால நினைவில் மூழ்கினான் விதுரன்.
சந்தியா மீது கொண்ட காதலை விடவா என்ற ஹனிகாவின் வார்த்தை சந்தியா மீது தான் கொண்ட காதலை நினைவுறுத்திட, பழைய நினைவில் கரைந்திடத் துவங்கினான் விதுரன்.
சந்தியா விதுரனை விடவும் ஐந்து வயது சிறியவள். அவள் பிறக்கும் போதே, இவனுக்கு அவள் என்று உறவுகளால் பேசி உறுதி செய்யப்பட்டது, அது அவன் மனதில் ஆழமாய் பதிந்ததாலோ இல்லை வயதின் ஈர்ப்போ, விதுரனுக்கு சந்தியா மீது மாமன் மகள் என்ற உரிமையையும் கடந்து தனி ஆர்வம் உண்டானது, அவன் வயதை ஒட்டிய முறைப்பெண் என்ற முறையிலும் அவள் அமைதி மீது கொண்ட ஆர்வத்திலும், அவளை அடிக்கடி பார்க்கும் ஆசையில் ஒவ்வொரு விடுமுறையிலும் மாமன் வீடே கதியென்று கிடந்தான். முதலில் வேறுபாடு இல்லாமல் கொஞ்சமேனும் பேசுபவள், நாளாக நாளாக அந்த பேச்சும் குறைந்து குழந்தைத்தனம் குறைந்து குமரியாய் மாறி நின்றவள் மீது முன்பிருந்ததைவிட ஆர்வம் அதிகரித்தது. தானாக வலிய சென்று பேசினாலும் தயக்கத்துடன் தலை கவிழ்ந்து விலகிச்செல்பவள் செயலில் அவளுக்கும் தன்னைப் போல ஈர்ப்பு உண்டு என்று எண்ணிக்கொண்டவன், அவள் தயக்கத்திற்கு மதிப்பு கொடுத்து பேச முயலாமல் கண்களால் மட்டும் காதல் கதை பேசி தன் மனதை புரியவைக்க முயற்சி செய்வான்.
தன் அண்ணன் குடும்பத்தாரை ஒதுக்கிவிட்டு, அவரின் தங்கை குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் கணவன் மீது உண்டான கோபம் ஆசையாய் வந்து செல்லும் விதுரன் மீது அவ்வப்போது திரும்பும், அதை பொருட்படுத்தாது சந்தியாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஹனிகாவை காரணம் காட்டி அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுகிறேன் என்று போக்கு காட்டி தன் மீது சந்தேகம் வராதபடி அடிக்கடி வந்து செல்வான் விதுரன்.
சந்தியா கல்லூரி படிப்பு முடிக்கும் போது வசுந்தராவின் அண்ணன் தன் மகனுக்கு சந்தியாவை பெண் கேட்டு வந்தார். அப்போது தான் விதுரன் சொந்தமாய் கட்டுமானத் தொழில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ச்சியும் கண்டு கொண்டிருந்தான்.
“ இங்க பாருமா வசு, எனக்கும் உன் புருஷனுக்கும் முன்னபின்ன பேச்சுவார்த்தை சரி இல்லன்னு உனக்கே தெரியும், அதுக்காக இருக்கிற சொந்தபந்தத்த விட்டுட முடியுமா? எத்தனை மனஸ்தாபம் மனக்கசப்பு இருந்தாலும் ஒரே கல்யாணத்துல எல்லாத்தையும் தலைகீழாக மாத்தமுடியும், அந்த நம்பிக்கையில தான் நானே வலிய வந்து பொண்ணு கேட்கிறேன், எப்படியாவது பேசி உன் புருஷன இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு”, என்று ஒரு வற்புறுத்தலுடன் தன் விருப்பத்தை கூறிச் சென்றார் வசுந்தராவின் அண்ணன்.
தன் அண்ணன் குடும்பத்துடன் இணைந்திட இதை விட்டால் வேறு வழியில்லை என்ற எண்ணம் கொண்ட வசுந்த்ராவும் தன் கணவரிடம் இதை பற்றி பேசினார், “உனக்கு மூளை குழம்பிடுச்சா, உன் அண்ணனே பெரிய அடாவடிக்காரன், அவர் பையன் அவருக்கும் ஒருபடி மேல, இந்த வயசுலயே அடிதடி கட்டப்பஞ்சாயத்துன்னு வேண்டாத ஊர் வம்பெல்லாம் சுமந்துட்டு திரியுறான், அவனுக்கு போய் நம்ம பொண்ண கொடுக்கணும்னு சொல்லுற! சந்தியா குணம் எங்க? உன் அண்ணன் மகன் குணம் எங்க? அழுத்தி பேசுனாலே அழுதுடுவா நம்ம பொண்ணு, அவளை போய் இந்த பாழும் கிணத்துல தள்ள உனக்கு எப்படி மனசு வந்துச்சு”, என்று சம்மதம் சொல்லாமல் சிடுசிடுத்தார் கணபதி.
“ நம்ம பொண்ணுக்கு என் அண்ணன் மகன் பொருத்தம் இல்லன்னா வேறு யாரு பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்லுறீங்க, உங்க தங்கச்சி பையன் பொருத்தமா இருப்பானா?, அப்படி ஒரு நினைப்பு இருந்தா அந்த எண்ணத்தை இங்கயே குழி தோண்டி புதைச்சுடுங்க, இந்த கல்யாணத்துக்கு நான் ஒருநாளும் சம்மதிக்கமாட்டேன், என் அண்ணன் பையன் கூடத்தான் நம்ம பொண்ணு கல்யாணம் நடக்கணும்” என்று பிடிவாதம் பிடித்தார் வசுந்தரா.
“உன் சம்மதம் யாருக்கு வேணும், கல்யாணம் பண்ணிக்க போறது என் பொண்ணு அவ சம்மதம் இருந்தா போதும்” என்று மனைவியை உதாசினப்படுத்தி, சந்தியாவை அழைத்து திருமணத்திற்கு சம்மதம் கேட்க மறுத்து ஏதும் பேசாமல், “உங்களுக்கு எது விருப்பமோ அது தான் என் விருப்பம் அப்பா”, என்று அவளும் சம்மதம் சொல்லிச் செல்ல தேன்மொழியை முறைப்படி பெண் கேட்டு வரும்படி அழைப்பு விடுத்தார் கணபதிநாதன்.
திருமணத்திற்கு நாள் குறித்து இருவரின் ஜாதகமும் கணிக்கப்பட்டது. விதுரன் ஜாதக அமைப்பின்படி முப்பது வயதிற்கு மேல்தான் திருமணயோகம் இருப்பதாகவும் அதற்கு முன் நடக்கும் திருமணம் நிலைக்காது என்றும், சந்தியா ஜாதகத்தின்படி இன்னும் சில மாதங்களுக்கு நேரம் சரியில்லை, அவளை மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு ஜோதிடர் கணித்து சொல்ல, அதை அப்படியே தன் அன்ணனிடம் ஒப்பித்த தேன்மொழி, “இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இந்த கல்யாணத்தை தள்ளிப்போடுவோம் அண்ணா. சந்தியாவுக்கும் இப்போ இருபது வயசுதான ஆகுது, அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம், மேற்படிப்பு என்ன படிக்கணும் ஆசைப்படுதோ அதை படிக்கட்டும், அதுக்கப்புறம் கல்யாணப் பேச்சை எடுக்கலாம், இவனும் அதுக்குள்ள தொழிலில் நல்ல நிலைமைக்கு வந்துடுவான்”, என்று தயக்கத்துடன் கல்யாணத்தை நிறுத்த முயன்றார் தேன்மொழி.
“ உனக்கு உன் அண்ணியோட பிடிவாதம் எப்படின்னு நல்லாவே தெரியும், அவளோட அண்ணன் மகனுக்கு சந்தியாவை கட்டி கொடுக்கணும்னு ரொம்பவே விருப்பப்படுறா. நாம தயங்குற ஒவ்வொரு நிமிஷமும் அதை அவங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய பார்ப்பாங்க, விதுரன் மாதிரி பொறுப்பான, பொறுமையான பையன் கூட தான் என் பொண்ணோட வாழ்க்கை அமையனும்னு ஆசைப்படுறேன். நாம பார்த்து முடிச்சு வைக்கிற கல்யாணம் அவ்ளோ சீக்கிரத்துல முறிஞ்சு போக விட்டுடுவோமா? கட்டம் தான சரி இல்லன்னு சொல்றாங்க அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கும், அதை செஞ்சிட்டு கல்யாணத்தை நடத்திவைப்போம்”, என்று தங்கைக்கு சமாதானம் கூறி கல்யாணத்தை முடிவு செய்தார் கணபதி நாதன்.
ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களிடம் அலசி ஆராய்ந்து அவர்கள் கூறிய இரண்டு பரிகாரத்தையும் முறையாக செய்துவிட்டு திருமணத்திற்கான நாள் குறித்தனர் பெரியவர்கள். தன் காதல் கரம் சேரப்போகும் கனவுடன் விதுரன் சந்தியாவை தனிமையில் சந்தித்து, “நடக்குறது கனவு மாதிரி இருக்கு தியா. என்ன, தியான்னு சொல்லுறேன்னு பார்க்கிறியா? மனசுக்குள்ள உன்னை அப்படித்தான் அடிக்கடி கூப்பிட்டு பார்த்துக்குவேன், நம்ம கல்யாணத்துக்கு பிறகும் இப்படி தான் கூப்பிடுவேன்”, என்று தானாய் உரிமை எடுத்துக்கொண்டு மேலும் தொடர்ந்தான், “உன் மாமா வீட்ல இருந்து உன்னை பொண்ணு கேட்டு வரவும் அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சிடுச்சுனு நினைச்சேன், கடைசில உனக்கும் எனக்கும் கல்யாண பேச்சுவார்த்தை நடந்து இன்னும் ஒருவாரத்துல கல்யாண தேதியும் நெருங்கி வந்திடுச்சு, என்னால எதையும் நம்ப முடியல, நம்பாம இருக்கவும் முடியல, என்னடா இவன் இப்ப வந்து இப்படி கேட்குறானேன்னு தப்பா நினைக்காத, உனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கு தான, உன் சம்மதத்தோட தான இந்த கல்யாணம் நடக்குது?” என்று தயக்கத்துடன் விதுரன் பேசிட,
“ என் அப்பா விருப்பம் தான் என் விருப்பமும்” என்று தன் தந்தைக்கு கூறிய அதே பதிலை விதுரனிடமும் கூறி விலகி சென்றாள் சந்தியா.
கூச்ச சுபாவம் கொண்ட சந்தியா இந்த அளவிற்கு பேசியதே பெரிய விஷயம் என்று எண்ணிக்கொண்டு, ஆயிரம் கனவுகள் மனதில் சுமந்தபடி திருமண நாளை எதிர்நோக்கி விதுரன் காத்திருக்க, திருமண வேலைகள் எதிலும் தலையிடாமல் விலகி இருந்த வசுந்தரா.. “என் அண்ணன் மகனை விட நீ எந்த விதத்துல உசத்தி, பெத்தவ வயிறு எரிஞ்சு சொல்றேன், நீங்க நல்லாவே இருக்கமாட்டீங்க”, என்று தான் பெற்று சீராட்டி வளர்த்த மகளுக்கும் அவள் வாழ்வின் சரிபாதியாகப் போகும் மருமகனுக்கும் வயிற்றெரிச்சலுடன் சாபம் கொடுத்தார் வசுந்தரா.
எவர் விருப்பையும் வெறுப்பையும் பொருட்படுத்தாது திருமண நாளும் வந்தது. கலவரமான முகபாவத்துடன் அருகில் வந்து அமர்ந்தவள் கரத்தினை ஆதரவாய் பற்றிக்கொண்ட விதுரன், “கூட்டத்தைப் பார்த்து பயப்படாத, உன் பக்கத்துல நான் இருக்கேன்”, என்று ஆறுதல் கூறிய பிறகும் அவள் முகத்தில் நிலைத்திருந்த குழப்பமும், கவலையும் குறையவில்லை, அவ்வப்போது ஒருவித பயத்துடன் மண்டபத்தின் வாயிலை வெறித்து எதையோ எதிர்பார்த்து கவலை படிந்த முகத்துடன் தலை கவிழ்ந்து கொண்டாள் சந்தியா.
தன் அம்மா திருமணத்திற்கு வரவில்லை என்றுதான் கவலை கொள்கிறாள் என்று விதுரன் உட்பட கூடியிருந்த உறவுகளும் எண்ணிக்கொண்டனர். குறித்த நேரத்தில் தலை குனிந்திருந்தவள் கழுத்தில் மஞ்சள் சரடு அணிவித்து தன் சந்தியாவை தன் வாழ்வில் சரிபாதியாக இணைத்துக்கொண்டான் விதுரன்.
“நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு தியா. எல்லாம் கனவாவே இருந்து காலைல கண்ணு முழிக்கும் போது நீ என் பக்கத்துல இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்”, என்று நடக்காத விஷயத்தை எண்ணிக்கொண்டு தன்னை மறந்து உறக்கம் கொண்டான் விதுரன்.
ஒவ்வொரு இரவும்
உன்னை நினைத்து
நினைவுகளை அணைத்து
மீண்டும் மீண்டும்
உன்னுடன் வாழ்ந்து மீள்கிறேன்..