Advertisement

33…

நடந்து முடிந்த திருமணத்தை நிர்மூலமாக்குவதற்கு வேண்டிய ஆதாரம் கிடைத்து விட்ட நிம்மதியுடன் பெண் கடத்தலுக்கு உதவி புரிவதற்காக உடன் வந்த நண்பர்களை தேடிச் சென்ற பேரனை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் வேலம்மாள்.

” என் மாமா மகளை கடத்திட்டு வர சொன்னா எவளோ ஒருத்தியை கடத்திட்டு வந்து ராத்திரி முழுக்க காவல் இருந்திருக்கீங்க!, உங்களுக்கெல்லாம் மண்டையில மூளை தான் இருக்கா வேற எதுவும் இருக்கா?” என்று தான் எதிர்பார்த்த எதுவும் நிறைவேறாத வெறுப்புடன் கத்திக் கொண்டிருந்தான் மதியழகன்.

“எங்கள என்ன செய்ய சொல்ற, நீ சொன்ன ரூம்ல இந்த பொண்ணு தான் இருந்துச்சு. இந்த பொண்ண தூக்கிட்டு வரதுக்குள்ள என்ன பாடுபட்டோம்னு எங்களுக்கு தான் தெரியும், இதுல உன் மச்சினன் வேற எங்க மேல சந்தேகப்பட்டு எடக்கு மடக்கா கேள்வி கேட்டுட்டு, ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டான். ஒரு வழியா அவன் கிட்ட இருந்து தப்பிச்சு இங்க வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ” என்று முதல் நாள் இரவு நடந்ததை சுருக்கமாக கூறி முடித்தனர் கடத்தலில் ஈடுபட்ட நண்பர்கள் நால்வரும்.

” தப்பான ஆள கடத்திட்டு பேச்சு வேறயா உங்களுக்கு, ஆமா என்ன இவ இன்னும் மயக்கத்துல இருந்து எந்திரிக்காம இருக்கா, ” என்று குழப்பமாய் வினவினான் மதியழகன்.

” எங்களுக்கு என்ன தெரியும்?, நேத்து தூக்கிட்டு வந்ததுல இருந்து அசையக் கூட இல்ல, ஒருவேளை ஒரேடியா போயிட்டாளோ!. “என்று நால்வரில் ஒருவன் பயம் காட்ட.. “டேய் வாய வச்சுட்டு சும்மா இரேன்டா, இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு நீ வேற எதுலையாவது என்னை கோர்த்து விட்டுடாதே, குடுத்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆகியிருக்கும், அதான் இன்னும் கண்ணு முழிக்காம இருப்பா. சரி சரி இதுக்கு மேல இவ இங்க இருந்தா… சரிப்பட்டு வராது. மறுபடியும் அந்த சாக்கு முட்டையில கட்டுங்க.. போற வழியில எங்கேயாவது தூக்கிப் போட்டுட்டு போயிடலாம்.” என்றான் மதியழகன்.

“என்னடா அசால்டா தூக்கி போட்டுட்டு போயிடலாம்னு சொல்ற?, நைட்டு ரிசப்ஷன்ல இருந்த ஆள் அசந்த நேரம் யாருக்கும் தெரியாம மூட்டையை உள்ள தூக்கிட்டு வந்துட்டோம், இப்போ பட்டப் பகலுல இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிட்டு போனா என்ன ஏதுன்னு சந்தேகப்பட்டு விசாரிக்க மாட்டாங்க.”என்று நிலைமையை புரிய வைக்க முயன்றான் நால்வரில் ஒருவன்.

“அதுவும் சரிதான்… நீங்க ஒன்னு பண்ணுங்க, இன்னைக்கு நைட்டு வரைக்கும் இங்கேயே இருங்க, ஆள் அசந்த நேரம் இந்த பொண்ண எப்படி கொண்டு வந்தீங்களோ அதே மாதிரி மூட்டைல கட்டி பக்கத்துல இருக்குற பார்க்குல போட்டுட்டு ஊருக்கு கிளம்பி போயிடுங்க.. ” என்று யோசனை கூறினான் மதியழகன்.

“அதுவரைக்கும் இந்த பொண்ணு மயக்கத்துல இருக்குமா இடையில் கண்ணு முழிச்சிட்டா பிரச்சனையாகிடாது..” என்று அடுத்த கேள்வியை மற்றொருவன் வினவிட… “மயக்கம் கலைஞ்சு எந்திரிக்கும் போது.. இந்த மயக்க மருந்த துணியில தெளிச்சு மூக்குல வச்சுடு, மறுபடியும் மயங்கிடுவா.. ” என்று ஏற்கனவே வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்த மயக்கம் மருந்தை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு.. கை செலவிற்கு என்று சட்டை பையில் இருந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்ப தயாரானான் மதியழகன்.

சரியாக அறையை விட்டு வெளியேறிய நேரம் அவனது அலைபேசி மெதுவாய் சிணுங்கியது, அலைபேசி சிணுங்களை நிறுத்தி காதில் வைத்தவன், “என்ன.. ?” என்று அசட்டையாக வினவிட… எதிர் முனையில் இருந்து ” டேய் மதி எங்கடா இருக்க?” என்று குதூகலமாய் வினாவினார் வேலம்மாள்.

” நான் எங்க இருந்தா உங்களுக்கு என்ன?, இப்ப எதுக்கு தேவை இல்லாம போன் பண்ணி தொந்தரவு பண்றீங்க?” என்று கடுப்புடன் பேசினான் மதியழகன்.

” எதுக்கு இப்போ இவ்வளவு கடுப்பா பேசுற?”என்று வேலம்மாள் வினவ… ” நான் நினைச்ச எதுவும் நடக்கல, அப்புறம் கடுப்பாயில்லாம வேற எப்படி இருப்பாங்களாம்!, எனக்கு உதவி பண்ணுவாங்கன்னு இந்த நாலு உதவாக்கரைங்கள கூட கூட்டிட்டு வந்து என் தலையில நானே மண்ணள்ளி போட்டுகிட்டேன். பொண்ண கடத்த சொன்னா பொண்ணோட பிரண்டை கடத்திட்டு வந்து காவலுக்கு இருக்கானுங்க லூசுப் பயலுக. அவனுங்கள மட்டும் தப்பு சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல, மதுவுக்கு மயக்க மருந்து கொடுக்கிற வேலையை உங்க கிட்ட தானே கொடுத்தேன், அதை நீங்க சரியா செஞ்சிருந்தா இந்நேரம் இந்த பொண்ணு இருக்க வேண்டிய இடத்துல மது இருந்திருப்பா எனக்கும் அவளுக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்கும். “என்று ஆற்றாமையுடன் பேசிக் கொண்டே சென்றான் மதியழகன்.

  ” மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்க்க மது குடிச்சத நானும் உன் அம்மாவும் எங்க கண்ணால பார்த்தோம். அதுக்கப்புறம் எங்க தப்பு நடந்ததுன்னு எனக்கு ஒன்னும் புரியல” என்றார் வேலம்மாள்.

“என்னத்த பாத்தீங்க?, நீங்க சொல்ற மாதிரி மயக்க மருந்து மது குடிச்சிருந்தா அவ தானே இந்த இடத்தில மயங்கி கிடக்கணும். ” என்று கடுகடுத்தான் மதியழகன்.

“அவ குடிச்சதை நாங்க பார்த்தோம் அதுதான் உன் கிட்டயும் சொன்னோம். சரி நடந்தது நடந்துடுச்சு இனி அத பத்தி பேசி ஒன்னும் ஆகப் போறது இல்ல. இப்போ இங்க என்ன நடந்தது தெரியுமா?, “என்று கோமதி மூலமாக அறிந்து கொண்ட விவரத்தை முழுவதுமாய் விவரித்து முடித்தவர், “நீ எங்க இருந்தாலும் கிளம்பி உடனே அந்தப் பெரிய பங்களாவுக்கு வந்துடு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களையும் அங்க வர வச்சு, உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்” என்று நிகழ்த்தவிருக்கும் கலவரத்திற்கு பேரனை துணைக்கு அழைத்தார் வேலம்மாள்.

” அது சரி அப்போ என் மாமா மகளை கட்டினவன் ஒரு அரை பைத்தியமா, என்னை ஏமாத்தின அந்த குடும்பத்துக்கு இது தேவை தான். “என்று உள்ளத்தில் நிறைந்து கிடக்கும் வக்கிரத்தை கொட்டி தீர்த்தான் மதியழகன்.

” இதெல்லாம் அந்த ஊமை கொட்டானுக்கு பத்தாது இதுக்கு மேலயும் அவள கதற விடப் போறேன். இப்போ மொத்த குடும்பத்தோட குடுமியும் நம்ம கையில இருக்கு.., மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏமாத்திட்டாங்கன்னு பெரிய பிரச்சனை பண்ணி, உன் மாமன் மகளை கையோட நம்மக் கூட ஊருக்கு இழுத்துட்டு போயிடலாம். கல்யாணம் முடிஞ்ச கையோட பொண்ண கூட்டிட்டு வந்த சேதி ஊரு முழுக்க பரவி, ஊரே மொத்த குடும்பத்தையும் கண்டுபடி பேசும். வெளியே தல காட்ட முடியாம குடும்பமே கூனி குறுகி கிடக்கும்.. வாழா வெட்டியா பொண்ணு இப்படி வாழ்க்கையை இழந்து கிடக்குறத பாத்து என் புள்ள என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கும்போது, நீ வந்து அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறதா சொல்லி நீ ஆசைப்பட்ட மாதிரி மதுவை கல்யாணம் பண்ணிக்கோ… வாழ்க்கையை இழந்த மகளுக்கு வாழ்க்கை கொடுத்துட்டன்னு உன் மாமனும் உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவான். ” என்று யோசனை கூறினார் வேலம்மாள்.

” அடடா இது நான் போட்ட பிளான் விட பக்காவான பிளானா இருக்கே.., இதோ நான் உடனே அங்க கிளம்பி வரேன். நீங்களும் நம்ம சொந்த பந்தத்துல பிரச்சனைய பேசிப்பேசியே பெருசாக்கிற ஆட்களை கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்துடுங்க.. இன்னைக்கு பெரிய சம்பவம் பண்ணிடலாம்” என்று வேலம்மாளிடம் கூறியவன் அலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு அவசரமாய் அங்கு இருந்து கிளம்பினான் மதியழகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement