Advertisement

தூரம் 1

“மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரப்போவுது, யார்லாம் மண்டாபிடி செய்யப்போறீங்களோனு வரிசையா வந்து பதிவு பண்ணிடுங்க” கோவில் நிர்வாகி சொல்ல ஊரார் எல்லாரும் வரிசையாக வந்து பெயரினை சொல்ல, எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார் அந்த கோவில் நிர்வாகி சண்முகம்.

“காசி”

“கணேசன்”

“தமிழ்செல்வன்” என்று அவரவர் பெயர்கள் சொல்லிக் கொண்டு வர இடையே

“லட்சுமணன்” என்று குரல் கொடுத்தான் சக்தி.

“என்னது? லட்சுமணனா? திலகர்னு எழுதுங்க” என்று சட்டமாக சொன்னார் வாஞ்சி நாதன். திலகரின் மகன்.

“என்ன தம்பி, திலகர் அய்யா தானே முதல்ல செய்வார்?” என்று சண்முகம் கோபமாக வாஞ்சிநாதனை பார்த்திருந்த சக்தியிடம் கேட்க

“இப்ப வரிசையாதானே பெரியப்பா பெயர் எழுதுறீங்க? அப்போ எங்க தாத்தா பெயரை எழுதுங்க. பின்னாடி சொன்னவர் பெயரை அப்புறம் எழுதுங்க” என்றான் அவன்.

“வரிசையானாலும் ஊர்ல எப்பவும் இதே வழக்கம்தானே சக்தி? திலகர் மாமா கோச்சுப்பார்” என்றதும்

“அவன் கிட்ட என்ன மச்சான் விளக்கம் சொல்றீங்க? நாங்கதான் முதல்ல செய்யணும். அப்புறம் அவங்களை சொல்லுங்க” என்று வாஞ்சி நாதன் பிடிவாதம் கொள்ள

“ஏன் வாஞ்சி? அவன் முதல்ல பெயரை சொல்லிட்டான்னு விட்டுக்கொடுத்தா என்ன?” இன்னொரு பெரியவர் கேட்க

“இவனுங்களுக்கு ஏன் விட்டுக் கொடுக்கணும்?” என்று வாஞ்சிநாதன் கத்தினார்.

“எங்க அப்பா இந்த நாட்டுக்காக போராடினாரு, இவனுங்க குடும்பம் என்ன பண்ணானுங்க துரைக்குக் கூஜா தூக்கின கும்பல்தானே?” என்று எள்ளலாய்க் கேட்டார் வாஞ்சி நாதன்.

அதில் பாஸ்கரனுக்கு கோபம் வந்தது.

“வாயை மூடு வாஞ்சி நாதன்! அதிகம் பேசாத.” என்று அதட்ட

“என்ன பெரியப்பா? எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவர் திலகரா இல்லை ஹிட்லரா? நானும் இந்த நாட்டுக்கு சேவை செய்ற வேலையிலதானே இருக்கேன்” என்று  சண்முகத்தைக் கேட்டான் சக்திவேல். சக்திவேல் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.

“ஆமா ஆமா! பெரிய சேவை…” என்று அதுவரை அமைதியாக இருந்த லாலா  வாயைத் திறந்தான். திலகரின் பேரன், வாஞ்சி நாதனின் மகன் லாலா லஜபதி ராய்.

“என்னடா திமிரா?” என்று சக்தி எகிற

“சக்திவேல்!” என்று அவனை அதட்டினார் அவன் அப்பா பாஸ்கரன்.

“திமிர்தான்!” என்ற லாலா சொல்லியவன்

“என்ன மாமா? அவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறீங்க?” என்றபடி பேனாவை எடுத்து பெயரை எழுத போக, அவன் கையை முறுக்கினான் சக்தி.

அவ்வளவுதான் கலாட்டா அங்கே! இருவரும் அடித்துக் கொள்ள, இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தனர். லட்சுமணனும் திலகரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே வர இருவரின் பேரன்களும் முறைத்தபடி நின்றனர்.

சக்தியின் அடியால் லாலாவின் சட்டை கிழிந்து அவன் முகம் கன்றி போய்விட்டது. சக்திவேலின் கன்னம் சிவந்திருக்க , பார்த்த லட்சுமணன் துடித்துவிட்டார்.

“வேலை வெட்டி இல்லாத வெட்டி பய கூட எல்லாம் உனக்கு என்ன பேச்சு சக்தி? இவனோட சண்டை போட்டு இவனை சண்டியர் ஆக்குறியா? சும்மா பழைய பெருமை பேசிட்டு கிடக்குற பயலுக்கிட்ட ஏன் சண்டை போற, உனக்கு ஒரு தகுதி இருக்கு. தெய் ஆர் நாட் எகுவள் டூ யூ! ” என்றபடி பேரனின் கசங்கிய சட்டையை நீவிவிட, லாலா கடுங்கோபத்துடன் சக்திவேலை முறைத்தான்.

திலகர் லட்சுமணனை முறைத்தபடி மகனிடம்,

“கண்ட பய கிட்ட பேரனை அடி வாங்க விட்டு வேடிக்கை பார்ப்பியா நீ?” என்று மகனை கடிந்தபடி பேரனை தன்னோடு அழைத்து செல்ல

“இவனுங்க மண்டாபிடி பண்றதுக்குள்ள, மண்டையை உடைக்காம விட மாட்டானுவ போலயே” என்று சண்முகம் புலம்பினார்.

அருகே இருந்த ராஜதுரை அவனிடம், “நீங்க செய்றதும் தப்புதானே பெரியப்பா, திலகர் தாத்தாவே எப்பவும் செய்யணுமா? வரிசைப்படி பெயர் சொன்னது சக்திவேல் தானே?” என்று கேட்டான்.

“நீ உங்க பங்காளிக்குத்தாண்டா வக்காலத்து வாங்குவ” என்று சண்முகம் ராஜதுரையைப் பேசினார். வாஞ்சி நாதன் மகனை பைக்கில் ஏற்றிக்கொண்டு சுதந்திர விலாஸுத்துக்குள் நுழைந்தார்.

சுதந்திர விலாசம் திலகரின் வீடு. திலகரின் தந்தை சுப்ரமணியம் சுதந்திர போரட்ட தியாகி. அதனாலயே மகன், பேரன், கொள்ளு பேரன் என்று எல்லாருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்.

 

 

Advertisement