Advertisement

குறிப்பு: இன்று ஒரு நாள் மாலை பதில் காலையில் பதிவிடுகிறேன்..

விலகல் 9

                விடுமுறை நாட்கள் முடிந்து கல்லூரி திறந்து ஒரு வாரம் கடந்திருந்தது.

விஜய் மற்றும் சில வகுப்பு தோழர்களுடன் திவ்யா ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது அங்கே வந்த பவித்ரா, “எதுக்குடி சீக்கிரம் வர சொன்ன? எப்பவும் வேணும்னு லேட்டா வர நீ, சீக்கிரம் வந்திருக்க! அப்படி என்ன விஷயம்?” 

“இன்னைக்கு தான் பஸ்ட் இயர்ஸ் வராங்க” 

“அதுக்கு?” 

“நாம தானே பைனல் இயர் சீனியர்ஸ்”

“நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.. நான் கிளாஸ் போறேன்” என்று கூறி கிளம்பப் போனவள் கையை பிடித்து நிறுத்திய திவ்யா,

“ஓடின! பிச்சிடுவேன்.. ஒழுங்கா வந்து உட்காரு” 

“இந்த ராகிங்லாம் வேணாம்டி” 

விஜய், “நாம பஸ்ட் இயரா இருந்தப்ப நம்மை ராகிங் பண்ணாங்க தானே! இப்போ நம்ம டர்ன்” என்றான். 

அவனை முறைத்த பவித்ரா திவ்யாவிடம், “உன்னை தான் ராகிங் பண்ண விடாமல் சேர்மேன் உன் கூடவே வந்தாரே!” என்றாள். 

“அதனால் தான் இந்த முடிவு” 

“என்ன?” 

“நம்மை தான் யாரும் ராகிங் பண்ணலை நாமாவது ராகிங் பண்ணலாம்னு” என்று கூறி கண் சிமிட்டினாள். 

பவித்ரா முறைப்புடன், “இது என்னடி லாஜிக்?” 

“இது தான் திவ்யா லாஜிக்” என்று கூறி புன்னகையுடன் விஜயுடன் கை தட்டினாள்.

“நீங்க என்னவும் பண்ணித் தொலைங்க.. என்னை எதுக்குடி பிடிச்சு வச்சிருக்க?” 

“பைனல் இயர் வந்தும் ரொம்ப நல்ல பிள்ளையாவே இருக்கிறியே! அதான் இனி எங்கள் ஆட்டம் எல்லாத்திலும் உன்னை சேர்த்துக்கிறதா முடிவு பண்ணிட்டேன்” 

“உனக்கு ஏன்டி இப்படி ஒரு நல்ல எண்ணம்! 

“ரியாக்சன் தப்பா இருக்கே! இதுக்கு நீ நெஞ்சை இல்லை பிடிச்சு இருக்கணும்” என்று கூறி மீண்டும் நண்பனுடன் கை தட்ட, பவித்ரா இருவரையும் முறைத்தாள்.

திவ்யா, “இங்க உட்கார்ந்து முறைச்சிட்டே நாங்க பண்றதை பாரு.. பஸ்ட் இயர்ஸ் நீ டெரர்னு நினைச்சுப்பாங்க” என்றாள். 

பவித்ரா ‘ஆண்டவா என்னை காப்பாத்து’ என்று மனதினுள் அலறியபடி அமர்ந்தாள்.

அப்பொழுது முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் வந்தனர். திவ்யாவின் கண்ணசைவில் விஜய், “ஏய்!!!” என்று கத்தி அவர்களை அழைத்தான்.

பவித்ரா, “அவங்க பஸ்ட் இயர்ஸ்னு எப்படி தெரியும்?” 

“நீயெல்லாம் எப்போ வளர போற! அவங்களிடம் ஐடி கார்ட் இல்லை..” 

“ஓ” என்றவள், “ஒருவேளை அவங்க ஐடி கார்ட் போடாமல் வந்தால்?” 

“நம்ம ஊர்காவலன்(கல்லூரி வாயில் காவலர்) ஐடி கார்ட் போடாமல் உள்ளே விடுவாரா?” 

“பஸ்ட் இயர்னு அவரை ஏமாத்திட்டு வந்திருந்தால்?” 

“செகண்ட் இயர் முதற்கொண்டு நம்ம முகங்கள் அவருக்கு பழகி இருக்கும்.. யாரு பஸ்ட் இயர்னு அவருக்கு தெரியும்.. அப்படியே நாம தப்பா கூப்பிட்டாலும் யாரும் நம்ம தலையை சீவிட போறதில்லை.. எப்படியும் நாம தான் சீனியர்” 

பவித்ரா “ஹீ..ஹீ” என்று சிரித்தபடி திவ்யாவின் சிறு கடுப்பை போக்க நினைத்தாள்.

அவர்கள் வகுப்பு தோழன் ஒருவன் பவித்ராவை பார்த்து, “இப்படி ஒரு முறையாவது நீ கேள்வி கேட்டு இருந்தால் அந்த நொந்த குமார் ஓடி இருப்பான்” என்றான். 

பவித்ரா அவனை முறைக்க, அவன் அதை கண்டுக் கொள்ளவே இல்லை. 

அப்பொழுது விஜய் அழைத்த நான்கு மாணவர்கள் அங்கே வந்தனர்.

ஒவ்வொருவரையும் பார்த்த திவ்யா சிறு பயத்துடன் இருந்த மாணவனை பார்த்து, “ஒரு பாட்டு பாடிட்டு போ” என்றாள்.

அவன், “எனக்கு பாட தெரியாதே” என்றான். 

“இங்க என்ன சூப்பர் சிங்கர்ஆ நடக்குது! சும்மா பாடு டா” 

அவன் விசுவாசம் படத்தில் இருந்து ஒரு பாட்டை பாடினான். அவன் பாடிய அழகில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருந்தது.

திவ்யா, “சரி சரி.. போ” என்றதும் அவன் விட்டால் போதுமென்று ஓடினான்.

அடுத்து இயல்பாக இருந்த இருவரையும், “ரெண்டு பேரும் ஒரு டூயட் சாங்க்கு டான்ஸ் ஆடுங்க” என்றாள்.

இருவரும் முழிக்க திவ்யாவுடன் இருந்த ஒருவன், “ஐடம் சாங்க்கு ஆடுங்க” என்றான்.

திவ்யா, “டேய்!” என்று போலியாக மிரட்ட, அவன், “சும்மா ஒரு ஜாலிக்கு தானே திவி” என்றான்.

“சரி பொழச்சு போ” என்றவள் அந்த மாணவர்களிடம், “ஹ்ம்ம்.. அவன் சொன்னது போல் ஆடுங்க” என்றாள்.

ஒருவன், “நீங்களே பாட்டு சொல்லுங்க ப்ரோ” என்றான்.

நாடியை தடவியபடி யோசித்தவன் பிரியாணி திரைபடத்தில் இருந்து ‘மிஸிசிபி’ என்று தொடங்கும் பாடலை கைபேசியில் ஒலிக்க விட்டான்.

அந்த மாணவர்கள் ஆடத் தொடங்கவும் அவன், “டேய் ஒருத்தன் பையன் மாதிரி ஆடு” என்றான். ஏனெனில் இருவருமே அந்த பாடலில் ஆடிய நடிகையை போல் ஆடத் தொடங்கியிருந்தனர்.

அசடு வழிந்துவிட்டு, “நீ பையன் மாதிரி ஆடு” என்று இருவரும் ஒரே நேரத்தில் மற்றவனை கூற, மற்றவர்கள் சிரிக்க பவித்ரா நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

பவித்ரா திவ்யா காதில், “ஏன்டி இந்த கொடுமையெல்லாம் என்னை பார்க்க வைக்கிற!” என்றாள்.

தில்லுடன் நின்றுக் கொண்டிருந்த மாணவனை பார்த்து திவ்யா, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். 

“சஞ்சய்” 

“அவனுங்க ஒரு முடிவிற்கு வரட்டும்.. நீ என்னப் பண்ற! அழகான மூணு சீனியர் பொண்ணுங்க கிட்ட பெயரை கேட்டுட்டு வா” என்றாள்.

அவன், “ஒரு சந்தேகம் கேட்கலாமா சீனியர்?” 

அவன் கண்ணில் தெரிந்த சிரிப்பில் யோசனையுடன், “என்ன?” என்றாள்.

அவன், “அழகானனு சொன்னீங்களே! அப்படி யாரும் என்ன கண்ணுக்கு தெரியலையே!” என்றாள். 

“நக்கலு!! போய் கேட்டுட்டு வா டா” 

அவன் புன்னகையுடன், “என்ன சீனியர்! ஒரு ஐ லவ் யூ சொல்ல சொல்லுவீங்கனு பார்த்தேன்” என்று இழுக்க, 

திவ்யா, “நேரம் டா! ஐ லவ் யூ க்கு பதில் பெயரையும் இயரையும் கேட்டுட்டு ‘நீங்க ரொம்ப அட்டு பிகரா இருக்கிறீங்க’னு சொல்லிட்டு வர.. நான் அவர்களிடம் கன்ஃபர்ம் பண்ணுவேன்” என்றாள். 

அப்பொழுதும் அவன் அசராமல், “அப்படி செய்யலைனா என்ன பண்ணுவீங்க சீனியர்?” என்று வினவினான்.

விஜய், “டேய் என்ன கொழுப்பா! எங்களை யாருனு நினைச்ச! பேட்ட படத்தில் வந்த டெரர் கங் போல!” என்றும்,

முதலில் பேசியவன், “இவ யாரு தெரியுமா! சேர்மன் ரிலேடிவ்” என்றான்.

அவனை கடுமையாக முறைத்த திவ்யா விஜய்யிடம், “நீ ஏன்டா நம்மளை வில்லன் ஆக்குற!” என்றாள்.

பின் சஞ்சய் பக்கம் திரும்பி, “நான் சேர்மன் ரிலேடிவ்வும் இல்லை.. நாங்க டெரர் கங்-கும் இல்லை.. சொன்னதை செய்யலைனா சின்னதா பனிஷ்மென்ட் தருவோம்” 

“அதையும் செய்யலைனா!” 

அப்பொழுது சற்று தள்ளி ஒரு ஆசிரியை சென்றுக் கொண்டிருக்க திவ்யா, “வனிதா மேம்” என்று கத்தி அழைத்தாள்.

அவர் திரும்பியதும், “இந்த சரீ உங்களுக்கு சூப்பரா இருக்குதாம்.. நம்ம சஞ்சய் சொல்றான்” என்றாள்.

அந்த ஆசிரியை முறைத்து விட்டு செல்ல சஞ்சய் சிறு பயத்துடன், “ஏன் சீனியர்!” என்றான்.

பவித்ரா திவ்யா காதில் மெல்லிய குரலில், “மேம் உன்னை தான் முறைச்சிட்டு போனாங்கனு தெரியாமல் பயபுள்ள பயப்புடுதே!” என்றாள்.

திவ்யா புன்னகையுடன், “விடு விடு” என்றுவிட்டு சஞ்சயிடம், “நீ தானே என்ன செய்வேன்னு கேட்ட! அதான் ஒரு சின்ன சாம்பிள்” என்றவள் ஆட சொன்ன மாணவர்களை பார்த்து, “இன்னுமாடா முடிவு பண்ணலை! ஒரு பையனை போல் ஆட இப்படி அடிச்சிகிறீங்களே டா!” என்றாள் சிரிப்புடன்.

சஞ்சய், “நான் பெயர் கேட்டுட்டு வரேன் சீனியர்” என்று நகர திவ்யா, “அட்டு பிகரை மறந்திராத” என்றாள். 

அவன் திரும்பி பார்த்து, “கண்டிப்பா சொல்லணுமா சீனியர்?” என்று கேட்டான். 

“இவ்ளோ தானா உன் தில்லு! இவ்ளோ நேரம் கெத்தா நின்ன!” 

“அது!” 

“அட்டு பிகர்னும் சொல்லிட்டு வர” 

“சரி சீனியர்” என்றபடி அவன் கிளம்பினான்.

அவன் கிளம்பியதும் அந்த மாணவர்கள் ஆடினர். அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

அவர்கள் ஆடி முடித்ததும் திவ்யா, “உங்க பெயரென்ன? என்ன டிபார்ட்மென்ட்?” என்று கேட்டாள். 

இருவரும் பெயரையும் பிரிவையும் சொன்னதும் திவ்யா, “நல்ல ஆடுனீங்க.. காலேஜ் டே வரும் போது கூப்பிட தான் கேட்டேன்.. கிளம்புங்க” என்றாள்.

அப்பொழுது கன்னத்தில் கை வைத்தபடி சஞ்சய் வந்தான்.

திவ்யா, “என்ன டா!” 

“ஒரு சீனியர் அடிச்சுட்டாங்க” என்று சோகமாக கூறினான். 

விஜய், “அடி பலமோ!” என்று புன்னகையுடன் வினவ, சஞ்சய் ஆம் என்பது போல் தலையை ஆட்டினான்.

திவ்யா, “யாரு அடிச்சா?” 

“பெயரையும் டிபார்ட்மென்ட்டையும் கேட்டப்ப முறைச்சாங்க.. நான் அட்டு பிகருன்னு சொன்னதும் அடிச்சிட்டாங்க” என்றதும் பசங்க சிரிக்க,

தோழர்களிடம், “சிரிக்காதீங்க.. பாவம் டா” என்ற திவ்யா சஞ்சயிடம், “இப்படி ஆகும்னு நினைக்கலைடா.. சாரி” என்று கூற, அவளது தோழர்கள் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

சஞ்சய் புன்னகையுடன், “விடுங்க சீனியர்.. இப்போ என் பெயர் பேமஸ் ஆகிரும் தானே” என்றவன் “சீனியர்.. அவங்க தான் அடிச்சாங்க” என்றான்.

அவன் கை நீட்டிய நபரை பார்த்த திவ்யா, “நிச்சயம் உன் பெயர் பேமஸ் தான் மகனே! ஏன்னா அவங்க சீனியர் இல்லை மேடம்” என்றாள். 

“சீனியர்!!!” என்று திவ்யாவை பார்த்து அவன் திகிலுடன் அழைக்க, பசங்க வாய்விட்டு சிரித்தனர்.

பவித்ரா மனதினுள், ‘இன்னைக்கு இவளுக்கு பதில் இவன் வினையை கூட்டிட்டானே!’ என்று புலம்பினாள்.

திவ்யா மெல்லிய சிரிப்புடன், “விடுடா.. ராகிங்னு அவங்களுக்கு தெரிந்திருக்கும்.. உனக்கு பிரச்சனை வராது” என்றவள், “நீ ஏன்டா அவங்க கிட்ட போன! சரீ கட்டியிருக்கும் போதே யோசிக்க வேண்டாமா?” என்று கேட்டாள். 

“இன்னொரு சீனியர் தான் அவங்க கிட்ட சொல்ல சொன்னாங்க.. அவங்க பைனல் இயர் ஸ்டுடென்ட்னு வேற சொன்னாங்க” 

விஜய் மற்றும் மற்ற நண்பர்கள், “யாருடா இப்படி கோர்த்து விட்டது!”, “யாரா இருக்கும்?”, “யாரு அது?” என்று தங்களுக்குள் வினவ,

திவ்யா, “உன்னிடம் சொன்னது பையனா பொண்ணா?” 

“பையன் தான்”

புருவம் சுருக்கி யோசித்த திவ்யா, “அந்த பொறுக்கி சைமன்னா தான் இருக்கும்.. இவனுக்கு டாஸ்க் கொடுத்த போது, இங்கே பார்த்துட்டே தான் போனான்.. என்னை மாட்டி விட நினைத்து பக்கி இவனை கோர்த்து விட்டிருக்கு” என்றவள் சஞ்சயிடம், “உனக்கு பிரச்சனை வராது.. வந்தால் நான் தான் ராகிங் பண்ணேன்னு சொல்லிடு.. என் பெயர் திவ்யா.. பைனல் இயர் CSE டிபார்ட்மென்ட்” என்றாள்.

சஞ்சய் புன்னகையுடன், “பிரச்சனை வந்தால் என்னை மாட்டிவிட்ட சீனியரை சொல்லிக்கிறேன்..” என்றான்.

திவ்யா புன்னகையுடன் அவனுடன் கை குலுக்கி, “அவனை பார்த்தால் போட்டோ எடுத்து என்னிடம் காட்டு” என்றாள்.

அவன் புன்னகையுடன் வலது கை கட்டை விரலை காட்டினான்.

“சரி… நீங்க கிளம்புங்க” என்றதும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மூவரும் கிளம்பினர்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களை பார்த்து, “என்னங்க டா?” என்றாள். 

விஜய், “நீ சாரி கேட்டதில் தான் ஷாக் ஆகி நிற்கிறான்க” என்றான். 

“தெரிந்தே செய்த தப்புக்கு யாராவது சாரி கேட்பாங்களா! இது வேற.. இப்போ என்னால் நீங்க யாராவது பாதிக்கப்பட்டால் சாரி கேட்க மாட்டேனா! அது போல் தான் இதுவும்” என்றவள் இரண்டு முதலாம் ஆண்டு மாணவிகளை அழைத்தாள்.

நண்பர்கள் முகத்தை பார்த்தவள், “டோரை க்ளோஸ் பண்ணிட்டு கெத்தா நில்லுங்கடா” என்றாள்.

அவர்கள் சிறிது அசடு வழிந்துவிட்டு கெத்தாக நின்றனர்.

திவ்யா பவித்ராவிடம், “நீ தான் இவங்களை ரகிங் பண்ண போற” என்றாள்.

அவள் அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைக்க திவ்யா ‘ஆரம்பிச்சிட்டியா!’ என்பது போல் பார்த்தாள்.

அந்த மாணவிகள் வந்ததும் திவ்யா தோழியின் கையை இடித்தாள்.

பவித்ரா சற்று கறாரான குரலில், “உங்க பெயர் என்ன?” என்றதும் நண்பர்கள் பவித்ராவை ‘பார் டா!’ என்பது போல் பார்த்தனர்.

பவித்ராவோ உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள். அதை அறிந்த திவ்யா மெல்லிய குரலில் நண்பர்களிடம், “இது பில்டிங் ஸ்டராங் பேஸ்மென்ட் வீக் டா” என்றாள். நண்பர்கள் மெலிதாக சிரித்தனர்.

அந்த மாணவிகள் பெயரை சொன்னதும் பவித்ரா, “சரி ஒரு பாட்டு பாடிட்டு போங்க” என்றதும் அந்த மாணவிகள் பாடிவிட்டு சென்றனர்.

அவர்கள் நகர்ந்ததும், “அப்பா!” என்று பவித்ரா மூச்சை வெளியிட்டாள்.

அவளை பார்த்து, “நீயெல்லாம் தேறவே மாட்ட” என்றுவிட்டு திரும்பிய திவ்யா கண்கள் மின்ன, “விஜி.. அங்கே வரவனை கூப்பிடு” என்றாள்.

அவள் காட்டிய திசையில் பார்த்தவன், “ஐடி கார்ட் இல்லைனாலும் பார்த்தா பஸ்ட் இயர் மாதிரி தெரியலையே திவி!” என்றான். 

“டைரக்ட் செகண்ட் இயரா இருக்கும்.. எப்படியும் நமக்கு ஜூனியர் தானே கூப்பிடு” 

விஜய் அப்பொழுதும் யோசனையுடன் நிற்கவும், “டேய்! நம்ம கிளாஸ் முத்துக்குமார்  ஜித்து-லாம் நம்மை விட நாலு வயசு ரெண்டு வயசு பெரியவங்க தான் ஆனா நம்மளுடன் படிக்கலையா!! அதை போல் இவனுக்கு வயசு கூடயா இருந்தாலும் நமக்கு ஜூனியர் தானே! கூப்பிடு” என்றாள்.

அரை மனதுடன், “ஏய்! வைட் ஷர்ட்” என்று விஜய் கத்தினான்.

அந்த வெள்ளை சட்டைக்காரன் சுட்டு விரலால் ‘என்னையா!’ என்பது போல் கேட்டான்.

விஜய், “ஆமா.. நீ தான்.. இங்கே வா” என்றான்.

அவன் இவர்களை நோக்கி வரவும் விஜய் திவ்யாவிடம், “நீ ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கிற?” 

“எனக்கும் அவனுக்கும் ஒரு கணக்கு பாக்கி இருக்குது” 

“உனக்கு அவனை தெரியுமா?” 

அந்த வெள்ளை சட்டைக்காரனை பார்த்தபடியே, “ஹ்ம்ம்.. இவன் தான் அந்த தியேட்டர் பார்ட்டி” என்றாள்.

பவித்ரா, “அதான் அன்னைக்கே அவன் தலையில் பாப்-கார்ன் கொட்டிட்டியே! அப்புறம் ஏன்டி பிரச்சனை பண்ற?” 

“திவ்யா என்றால் பிரச்சனை தானே!” என்று கூறி கண் சிமிட்டியவள் வெள்ளை சட்டைக்காரனை பார்த்தபடி நின்றாள்.

அவனும் இவளை பார்த்தபடி தான் வந்துக் கொண்டிருந்தான்.

விஜய், “நீ இன்னும் அதை மறக்கலையா! எவ்ளோ நாள் ஆச்சு! அவன் முகம் உனக்கு ஞாபகம் இருக்குதா?” என்றான். 

பவித்ரா, “சண்டை போட்டாலும் சைட் அடிச்சாளே!” என்று முணுமுணுக்க,

அதை கண்டுக் கொள்ளாத திவ்யாவின் மனமோ அன்று போல் இன்றும் அவனது கம்பீரத்தை ரசித்தது ஆனால் அதை கண்ணில் காட்டாமல் கெத்தாக நின்றாள்.

அங்கே வந்த வெள்ளை சட்டைக்காரன் கைகளை கட்டிக் கொண்டு கெத்தாக நின்றான்.

திவ்யா, “உன் பெயர் என்ன?” என்று வினவ,

அவனோ, “உன் பெயர் என்ன?” என்று வினவினான். 

விஜய், “நாங்க சீனியரா நீ சீனியரா! கேள்வி கேட்டால் பதிலை சொல்லு………………..”
‘சொல்லு டா’ என்று சொல்ல வந்தவன் அந்த வெள்ளை சட்டைகாரனின் தீர்க்கமான பார்வையில் அவனையும் அறியாமல் வாயை மூடிக் கொண்டான்.

வெள்ளை சட்டைகாரன் பார்வையை திவ்யாவிடம் திருப்பினான்.

திவ்யா, “உன் பெயரை கேட்டேன்” என்றாள். 

அவன் அலட்சியத்துடன், “நானும் தான் உன் பெயரை கேட்டேன்” என்றான். 

“நான் தான் முதலில் கேட்டேன்” 

“ஸோ வாட்! பதிலையும் நீயே முதலில் சொல்லிடு” 

திவ்யா கடுப்புடன், “முதலில் மரியாதை கொடுத்து பேசு” 

அவன் நக்கலுடன், “அதை நீ சொல்றியா!” 

“நான் சீனியர்” 

“என்னை பார்த்தால் உன்னை விட சின்னவனா தெரியுதா?” 

அவள் பல்லை கடித்துக் கொண்டு, “இப்போ பெயரை சொல்ல முடியுமா முடியாதா?” 

“முடியாது” என்றுவிட்டு அவன் நகர போக, கடுப்புடனும் எரிச்சலுடனும் சுற்றி பார்த்த திவ்யா விஜய் அருகில் இருந்த பாதி அருந்திய தேநீர் கோப்பையை எடுத்தபடி, “ஏய்!” என்றாள்.

அந்த வெள்ளை சட்டைகாரன் திரும்பியதும் அவனது வெள்ளை சட்டையை வெள்ளை டி-ஷர்ட்டாக மற்றியிருந்தாள்.

அவள் தேநீரை ஊற்றிய அடுத்த நொடி அவன் அவள் கன்னத்தில் அடித்திருந்தான். திவ்யா அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான், அடுத்த நொடியே அவனை அடிக்க கையை ஓங்கி இருந்தாள். ஆனால் அதை வெகு சுலபமாக தடுத்து, “பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா இரு” என்றவன் வேகமாக அங்கிருந்து சென்றான்.

இணைய காத்திருப்போம்…

Advertisement