மதிய உணவு இடைவேளைக்கு சற்று நேரம் முன் செந்தமிழினி, “கண்ணா” என்று அழைத்தாள்.
அவளது குரலில் தெரிந்த சிறு தயக்கத்தை உணர்ந்து கொண்டவன், அதை வெளிக்காட்டாமல் இயல்பான குரலிலேயே, “என்ன?” என்று கேட்டான்.
“ஒரு ஹெல்ப்”
“என்ன! சில் பீர் ஒன்னு வாங்கித் தரணுமா?”
அவள் தயக்கம் நீங்கி சட்டென்று சிரித்தபடி, “இல்லை லூசு.” என்றாள்.
“ஓ! நிஜமாவே குவாட்டர் வேணுமா?” என்று அவன் வரவழைத்த அதிர்ச்சிக் குரலில் வினவ, அவள் அவனது புஜத்தில் அடி போட்டபடி, “டேய்!” என்றாள்.
அவள் இயல்பிற்குத் திரும்பியதை உணர்ந்த அவன், “இப்போ சொல்லு.. என்ன செய்யணும்?” என்று கேட்டான்.
நண்பனின் விளையாட்டிற்கான காரணத்தை புரிந்து கொண்டவள், நன்றி எல்லாம் கூறவில்லை, அதை உணர்த்தும் விதமாக அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “லன்சுக்கு வெளியே போகலாமா?” என்று கேட்டாள்.
அவன் உற்சாகக் குரலில், “கரும்பு தின்ன கசக்குமா!” என்றான்.
“என்னோட ட்ரீட்”
“கண்ணா, இன்னொரு லட்டு திங்க ஆசையா!”
“டேய்.. நான் இன்னும் சொல்லி முடிக்கலை.”
“சோறு போட்டு, என்ன சொன்னாலும் செய்வான் இந்தக் கண்ணன்”
“அத்தான் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி இருந்தேன்.. அத்தான் லன்சுக்கு வெளியே போகலாமானு கேட்டு மெசேஜ் செய்து இருக்காங்க.” என்று அவள் நிறுத்த,
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “அவ்ளோ தானே! நானும் நீயும் முதல்ல போறோம்.. சார் வந்ததும் நான் தனி டேபிளில் உட்கார்ந்துக்கிறேன்.. ஆனா, பில் மட்டும் நீ பே பண்ணிடு” என்றான்.
“நண்பேன்டா” என்றபடி கையை தட்டிக் கொண்டாள்.
“இதுக்கு எதுக்கு இவ்ளோ தயக்கம்?”
“இதுவரை இப்படி செய்தது இல்லையே! அதான்..”
“இனி பழகிக்கலாம்” என்று அவன் கண்சிமிட்ட,
“இன்னைக்கு தான்” என்று கூறினாள்.
அவன், “பார்க்கலாம்” என்று கூற,
“என்ன பார்க்கலாம்?” என்று கேட்டாள்.
“உன் முகத்தில் உள்ள வானிலை அறிக்கை, இனி இது தொடரலாம்னு சொல்லுது.”
புரியாதவள் போல், “அப்படியா சொல்லுது!” என்று ஆச்சரியக் குரலில் கூற,
“ஹக்காங்கிறேன்” என்றான். இருவர் முகத்திலும் மென்னகை அரும்பியது.
பின் அவன் வேலையைத் தொடர, இவள் அலுவலகத்தில் இருந்து சற்று தள்ளி இருந்த ஒரு உணவகத்தின் பெயரைக் குறிப்பிட்டு கண்ணனுடன் வருவதாக அத்வைத்திற்கு புலனத்தில்(WhatsApp) குறுந்தகவல் அனுப்பினாள்.
“கண்ணனை ஏன் தொந்தரவு செய்ற?” என்று ஆங்கிலத்தில் அத்வைத் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“நீங்க என்ன காரணத்துக்காக ஆபீஸ் வேணாம்னு நினைச்சு வெளியே போய் பேசலாம்னு சொல்றீங்களோ! அதே காரணத்துக்காகத் தான்.” என்று இவள் பதில் அனுப்பினாள்.
“இருந்தாலும் அவனை தொந்திரவு செய்றதில் எனக்கு விருப்பம் இல்லை” என்று அனுப்பினான்.
“நான் என்னோட நண்பனைத் தான் கூப்பிடுறேன்.”
“ஆனா என்னோட விஷயத்திற்காக.. அப்போ நான் சொல்லத் தான் செய்வேன்.”
“ஓ!” என்றதுடன் கோப முகவடியை(Smiley) அனுப்பினாள்.
அதைப் பார்த்து உதட்டோர மென்னகையை உதிர்த்தவன், “ஆமா, என்னோட விஷயம் தான்.. இனி நீ என்னில் அடக்கம் தானே!” என்று அனுப்பியவன், அனுப்பியதும் ‘அதிகமா அனுப்பிட்டோமோ!’ என்று நினைத்து அதை அழிக்க நினைக்க, அதற்குள் அவள் பார்த்துவிட்ட குறியீடு வந்ததும் அமைதியானான்.
அவன் அனுப்பியதை பார்த்து சிறு ஆச்சரியம் கொண்டவள், “பார்டா!” என்று பதில் அனுப்பினாள்.
அதன் பின் அவனிடம் இருந்து குறுந்தகவல் வரவில்லை. அவனைப் பற்றி அறிந்தவளாக வராது என்று அவளும் உணர்ந்து தான் இருந்தாள். அதனால், அவள் அகமும் முகமும் மலர்ந்த நிலையில் வேலையைத் தொடர, அத்வைத் தான் வேலையைத் தொடராமல் தான் அனுப்பிய குறுந்தகவலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘நானா அனுப்பினேன்!’ என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டவனுக்கு, தன்னையே நம்ப முடியவில்லை.
‘உன் கிட்ட ஏதோ மேஜிக் இருக்குது.. இல்லைனா யது ஒரே நாளில் உன்னை அம்மாவா நினைப்பானா! நானே என்னையும் அறியாம, கூட்டை விட்டு வெளியே வந்து அதிகம் பேசுறேன்.. கல்லா இறுகி இருந்த நான், இப்போ கொஞ்ச நாளா உணர்ச்சிகளை வெளிப் படுத்துறேன்னா, அதுக்கு நீ தான் காரணம்.. நீ தான் தமிழ்னு தெரிறதுக்கு முன்னாடியே, உன்னோட வெவ்வேறு பரிமாணங்களில் வியக்க வச்ச, இப்போ நீனு தெரிந்ததும் நான் பார்த்த அந்தக் குட்டி வாலு பொண்ணா இதுனு இன்னும் ஆச்சரியமா இருக்குது.’ என்று மனசுக்குள் அவளிடம் பேசியபடி அவளைப் பற்றி சற்று நேரம் யோசித்தான்.
‘உன்னோட பேச்சு என்னை மாற்றுதுனா, யது கிட்டயும், என் கிட்டயும் நீ காட்டுற அன்பு, காயப்பட்ட என்னோட மனசுக்கு இதமா இருக்குது..’ என்று கூறிக் கொண்டவன், ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டான். அது, செந்தமிழினி மரித்த தனது உணர்வுகளுக்கு புத்துயிர் கொடுத்து, தன்னை மீட்டு எடுக்கிறாள் என்றது தான். அதன் விளைவாக, தான் கல்லூரி கால அத்வைத்தாக மாறத் தொடங்கியதை உணர்ந்து கொண்டான்.
அவளது அன்பு மெல்லிய தென்றலுடன் வீசும் பூவின் மகரந்தத்தை நுகர்ந்த இனிமையான உணர்வை அவனுக்குத் தந்தது.
கைபேசியின் அழைப்பில் தனது சிந்தனையில் இருந்து வெளியேறியவன், அந்த அலுவலக அழைப்பை எடுத்துப் பேசி விட்டு வேலையைத் தொடர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து, செந்தமிழினியும் கண்ணனும் உணவகத்திற்குக் கிளம்பிச் சென்றனர்.
‘நல்லவேளை இன்னைக்கு லக்ஸ் வரலை.. இல்லை, கேள்வி கேட்டே என்னை கொன்னிருப்பா’ என்று நினைத்தபடி செந்தமிழினி பயணித்தாள்.
கண்ணன், “சார் கிளம்பினதை நான் பார்க்கலையே!” என்று கூற,
“நம்ம இடத்தில் இருந்து அத்தான் வெளியே போறது தான் தெரியாதே!” என்றவள், “நம்மை காக்க வைக்காம, நமக்கு முன் கண்டிப்பா வந்திருப்பாங்க” என்றாள்.
அவளது இறுதி வாக்கியத்தைக் கேட்டபடி அழைப்பை எடுத்த அத்வைத், “ஏசி டைனிங், பஸ்ட் ப்ளோர் வாங்க.” என்றான்.
“ஓகே அத்தான்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள், கண்ணனுடன் அங்கே சென்றாள்.
இவர்கள் உள்ளே சென்றதும், அத்வைத் கையை தூக்கிக் காட்டி தனது இருப்பிடத்தை தெரியப் படுத்தினான்.
இருவரும் அங்கே சென்றனர். செந்தமிழினி அத்வைத் எதிரே அமர, கண்ணன், “ஓகே சார்.. நான் அந்த டேபிளில் உட்காருறேன்.” என்றான்.
அத்வைத், “சாரி..” என்று ஆரம்பிக்க,
கண்ணனோ, “சாரிலாம் சொல்லி அசிங்கப் படுத்தாதீங்க, சார்..” என்றான்.
அப்பொழுது அங்கே துருவ் வந்தான். அலுவலக நண்பர்களுடன் மதிய உணவிற்காக அங்கே வந்தவன், உள்ளே நுழைந்ததும் இவர்களைப் பார்த்து நண்பர்களிடம் சொல்லி விட்டு இங்கே வந்து விட்டான்.
கண்ணன் மென்னகையுடன், “எனக்கு கம்பெனி கொடுக்கவே வந்தியா துருவ்?” என்றான்.
துருவ் செந்தமிழினியை முறைத்தபடி, “இந்த நல்லவன் கூட மேடமிற்கு கல்யாணம் முடிவாகி இருக்குது.. சொன்னாங்களா, மேடம்?” என்று கேட்டவன் முடித்த போது, கண்ணனைப் பார்த்தான்.
சிறிது அதிர்ந்த கண்ணன் பின் மென்னகையுடன் தோழியின் கையை குலுக்கிய படி, “கன்க்ராட்ஸ் மச்சி” என்றான்.
“நீங்க ரெண்டு பேரும் முடிவு செய்துட்டீங்க தானே!” என்று விடாமல் பொரிந்த துருவ் கண்ணனைப் பார்த்து, “ஏன் சொல்லலைனு கேட்க மாட்டியா?” என்றான்.
கண்ணன் மென்னகையுடன், “என்னிடம் சொல்ற விஷயமா இருந்தால் அவளே சொல்லுவா” என்றான்.
அத்வைத் சிறு ஆச்சரியத்துடன் கண்ணனைப் பார்க்க,
துருவோ, “உன்னை பத்தி தெரிந்தும் உன் கிட்ட சொன்னேன் பாரு! என்னைச் சொல்லணும்.. ஆனா, என்னால் அப்படி இருக்க முடியாது..” என்றவன் செந்தமிழினி அருகே அமர்ந்தான்.
அத்வைத், “துருவ்” என்று அழைக்க,
அவனோ, “நான் உன் கிட்ட பேசலை.. இவ கிட்ட தான் கேட்கிறேன்..” என்றான்.
அலட்டிக் கொள்ளாமல், “விடுங்க அத்தான்” என்ற செந்தமிழினி, “இப்போ இவன் நமக்கு நடுவில் நந்தி மாதிரி உட்கார்ந்து இருந்தா, இவனோட பஸ்ட் நைட்ல, யதுவை இவன் கூட படுக்க அனுப்பிடலாம்.” என்றாள்.
கண்ணன் சிரிப்பை அடக்கியபடி பார்த்துக் கொண்டு நிற்க,
‘அடிப்பாவி’ என்பது போல் பார்த்த துருவ், “பரவா இல்லையே சாப விமோசனம் கொடுத்து முரட்டு காளிங்கில் இருந்து பஸ்ட் நைட் வர வந்துட்டியே!” என்றான் சிறு நக்கலுடன்.
இதற்கு நடுவில், செந்தமிழினியும் துருவும் பேசிக் கொண்டிருந்த பொழுது, அங்கே வந்த மேஜை பணியாளரிடம் தனக்கும் செந்தமிழினிக்கும் உணவை சொல்லி விட்டு கண்ணனைப் பார்த்த அத்வைத், அவன் மறுப்பாக தலை அசைக்கவும், பணியாளரை அனுப்பி இருந்தான்.
எழுந்து நின்ற துருவ் ஆள் காட்டி விரலை ஆட்டியபடி, “வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்” என்று அழுதுவிடும் குரலில் கூற,
கண்ணன் வாய்விட்டுச் சிரிக்க, அத்வைத் முகத்தில் கூட சன்னமான புன்னகை அரும்பியது.