Advertisement

பெண்ணியம் பேசாதடி – 3
 
அன்றில் பறவை தூது செல்ல காதல்
வளர்த்தார்களாம் அன்று!
மகன் தூது செல்ல காதல்
வளர்த்தேன் இன்று!
எக்காலத்திலும் காதல் கிறுக்கு
உண்டு போலும்.
தன் முன் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த வளவனை வெட்டவா குத்தவா என்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தான் ரமேஷ்.
அவனது கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலை அதிகம் உள்ளது.
என்னதான் வாமனன் தொழிலை பார்த்துக் கொண்டாலும். நிர்வாகம் முழுவதும் வளவனது வசம் தான்.
அதாவது தொழிலார் தேவைகள், சம்பளம்,வரி கட்டுவது முக்கியமாக வங்கிக் கடன்களை சரி பார்ப்பது, பணம் போக்கு வரத்து என்று அவன் பங்கீடு முதன்மை வகுத்து நிற்க, அவனோ தீவிர யோசனையில்.
மாதத்தில் முதல் நாள் இந்த வேலையைத் தொடங்கினால் தான் ஐந்து தேதிக்குள் அனைத்தையும் முடித்துத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் போட முடியும்.
இத்தனை வேலைகளை விட்டுவிட்டு தனது தகப்பனுக்குப் பெண் தேடி கொடுக்க யோசித்துக் கொண்டு இருக்கும் நண்பனை என்ன செய்யலாம் என்று பொங்கி கொண்டு இருந்தான் ரமேஷ்.
சரி அவன் தான் வெட்டி வேலை செய்கிறான் போகட்டும். தன்னையாவது வேலை செய்ய விடுகிறானா? அதுவுமில்லை. தன்னையும் சேர்த்துக் கொண்டு லூட்டி அடித்துக் கொண்டு இருக்கிறான்.
அன்றைய தினம் தந்தையிடம் வாக்கு கொடுத்துச் சரியாகப் பத்து நாள் சென்ற நிலையில். இன்று அவனுக்கு ஒரு தகவல் கிடைத்தது.
கிடைத்த தகவலில் அப்பெண் தந்தையின் கண்ணம்மாவாக இருக்க எழுபது சதவீதம் வாய்ப்புகள் உண்டு என்று மனம் ஓர் கணக்கு வைக்க அதனைத் தான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் வளவன்.
யோசனையில் இருந்து மீண்டவன் “டேய் ரமேஷ் எங்க சித்தி இருக்கற வீட்டுக்கு எதிர்த்த வீடு தாண்ட இந்த மலர் கொடி.அப்பாவோட பைத்தியமான ரசிகை யாம் சித்திகிட்ட கேட்டு அவங்களை பத்தி தெரிஞ்சுக்கனும்”
“சரிடா ஈவினிங் போயி கேட்டு பாரு”
“என்ன ஈவினிங் கா……. அதெல்லாம் முடியாது   இப்போ போறோம்” என்றவனைப் பார்த்து அலறினான் ரமேஷ்.
“என்னது சித்தி வீட்டுக்கா!…. நான் வரலடா சாமி அந்த ரவுடி கிட்ட பேசி. எவன் வாங்கி கட்டிக்கிறது பேச எனக்குத் தெம்பில்லை நீ போ” ரமேஷுக்குக் காஞ்சனை பற்றி நன்கு தெரியும்.
அதுவும் போக  அவரிடம் அடி வாங்கிய அனுபவம் அதிகம் உண்டு.படிக்கும் காலத்தில் வளவனுடன் அவர் வீட்டுக்கு சென்று பழக்கம் ஆகி அடி வாங்கும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கமாகி போனது.
“டேய் உன்னை யாரு உண்மைய சொல்ல சொன்னா? எங்க அப்பா மேட்டர் நம்ப இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும் நீ உளறி வைக்காத. சித்திக்கு தெரிஞ்சுது நம்ப உயிருக்கு உத்தரவாதம் இல்லை”.
“நல்ல குடும்ப அமைப்புடா நீ, உங்க அப்பா, சித்தி ரொம்ப சிறப்பு. எனக்கு என்ன நேரமோ என் வாழ்க்கை உங்ககிட்ட சிக்கி முழிக்கிது”.
“ரொம்ப தான்….. வாடா!. சித்தி வீட்டுக்கு போவோம்” இனி தான் என்ன சொன்னாலும் நண்பன் கேட்க மாட்டான்.
அலுவலக வேலைகளைத் தனக்குக் கீழ் இருக்கும் ஊழியர்களுக்குக் கொடுத்துவிட்டு நண்பனுடன் சென்றான் ரமேஷ்.
*************
அங்கு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தார் காஞ்சனை.அதில் ஒரு குத்து பாடல் ஓடி கொண்டு இருந்தது.அதனை பார்த்தவாரே ரமேஷும் வளவனும் உள்ளே நுழைந்தனர்.
டீபாய் மேல் கால் வைத்து ஆட்டியவாரே பாட்டு கேட்டு கொண்டிருந்தவர் வாயிலில் அரவம் கேட்டு திரும்ப அங்கே நின்ற வளவன், ரமேஷை பார்த்து “ஹே.. யூ… தடி ….மாடுஸ்” என்று வரவேற்க ஏக கடுப்பு ரமேஷுக்கு.
“என்னடா உங்க வீட்டுல ஒருத்தருக்கும் மரியாதைனா என்னனு தெரியாதா” என்று காஞ்சனை விட்டுவிட்டு வளவனிடம் எகிற.
அதையெல்லாம் கண்டு கொள்வளா காஞ்சனை “உங்களுக்கு இந்த மரியாதையே அதிகம்” என்றவள் மீண்டும் அவர்களைக் கண்டு கொள்ளாமல் டிவி பார்க்க அதில் எரிச்சலான வளவன் ஓடி சென்று டீவியை நிறுத்தினான்.
“எதுக்குடா நிறுத்தின”.
“நீயெல்லாம் என்ன பொண்ணு நாளைக்கி உன்ன கட்டி கொடுத்தா எங்க தாத்தாவை தான் திட்டுவாங்க”.
“எனக்கு என்னடா குறைச்சல்” என்று சண்டைக்கு வர உஷாரான வளவன் தனக்கு இப்போது காரியம் தான் முக்கியம் என்று எண்ணி இல்லாத பொறுமையை பிடித்து கக்கத்தில் வைத்து கொண்டு,
“உன்கூடச் சண்டை போட வரல சித்தி எனக்கு முக்கியமா ஒரு விஷயம் தெரியணும்.என்ன? ஏதுன்னு? கேள்வி கேட்காம தயவு செஞ்சு நான் கேட்டதுக்குப் பதில் மட்டும் சொல்லு”.
அவனது தன்மை பேச்சில் விடயம் பெருசு போலும் என்று எண்ணிய காஞ்சனை “சரி சரி அழுதுடாத கேளு சொல்லுறேன் என்றவள் வளவன் அருகில் நிற்கும் ரமேஷை பார்த்து,
“டேய் அரை லூசு நீயும் உட்காரு” என்று ரமேஷையும் வாரினாள்.அவனும் “குடும்பமா இது” என்ற முணு முணுப்போடு உட்காந்தான்.
“சித்தி நம்ப வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல மலர்கொடினு ஒரு ஆண்ட்டி இருக்காங்களா?”
“ஆமா அவங்களுக்கு என்ன?”
“அவங்களை பத்தி தெரியுமா உனக்கு சொல்லேன்” என்றவனை முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு பார்த்த காஞ்சனை.
“அவனாடா நீ” என்று கேட்டு வைக்க முதலில் புரியாமல் இருந்த ஆண்களுக்குப் பின்பு புரிய இருவரும் உக்கிரமாக முறைத்தனர்.
“உன்னை” என்ற வளவன் அவள் கழுத்தை பிடித்து நெறிக்கப் போக.அவனை இழுத்துப் பிடித்தான் ரமேஷ்.
“விடுடா என்ன இன்னக்கி காஞ்சனையை கஞ்சி ஆக்கி பொங்கி தின்னல நான் வாமணன் மகன் இல்லடா என்றவனை அரும்பாடுபட்டு அடக்கினான் ரமேஷ்.
“அட ஏண்டா நீ வேற!… உட்காந்து தொலைடா உங்களோட முடியல” என்ற ரமேஷ் .
“சித்தி இது ரொம்ப முக்கியமான மேட்டரு படுத்தாம அவங்களைப் பத்தி தெரியுமா? தெரியாதா? அதைச் சொல்லு” பொறுமை காற்றில் பறக்க ரமேஷ் சற்று குரல் உயர்த்தி கேட்க
“சரி!.. சரி!.. கூல்… கூல்….அவங்களுக்கு ஒரே பொண்ணு. இப்போதான் கல்யாணம் பண்ணாங்க அவங்க வீட்டுக்காரு இறந்துட்டார்.இப்போ மாமியாரோட இருக்காங்க”
தகவல் கிடைத்த மகிழ்ச்சியில் வளவன் “சூப்பர் சித்தி உன்கூடப் பேசுவாங்களா?”
“பேசும்!.. பேசும்!.. உங்க அப்பா ரசிகை.எப்போ பாரு உங்க அப்பாகிட்ட கையெழுத்து வாங்கி கொடுங்கன்னு அப்பாவை படுத்தி எடுத்துடும்.
அப்பாவும் வாங்கிட்டு வந்து கொடுப்பார்…. சரி நீ ஏன் இதெல்லாம் கேட்குற” புருவம் சுருங்க கேட்ட பெண்ணிடம்.
“இல்ல அப்பாக்கு நிறைய லெட்டர்ஸ் எழுதி இருக்காங்க.நம்பப் பதிப்பகத்துல இருந்து முதல் புக் முணு பேருக்கு போகுது.அதுல ஒருத்தவங்க தான் இந்த மலர் கொடி”.
“சரிடா அதுக்கு என்ன இப்போ”.
“ப்ச் உனக்கு சொன்னா புரியாது அவங்க கூடப் பேசணும்”.
“அடேயப்பா!… அலுத்து கொண்டவள் அவங்க டாக்டர் நைட் டியூட்டி போலத் தூங்கிட்டு இருக்காங்க.நாளைக்கி லீவு தான் வந்து பேசு.
என் தோழி கிட்ட சொல்லி உன்னை அறிமுக படுத்த சொல்றேன்”. வாண்டை எண்ணி காஞ்சனை சொல்ல.
“நீயும் உன் தோழியும் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.அவங்க கிட்ட கூட்டி போனா மட்டும் போதும்” என்றவனை முறைத்தவள் சரியென்று விட்டாள்.
அதன் பின்பு அடுக்கலைக்குள் சென்றவள் ரமேஷுக்கும் வளவனுக்கும் உணவை கொடுத்து அவர்கள் வயிற்றை நிறைத்தே அனுப்பினாள்.
இது தான் காஞ்சனை எதற்கும் அலட்டி கொள்ளாத பெண்.அது போக எந்த விடயத்தையும் தோண்டி துருவ மாட்டாள் அதையும் மீறி அவர்களே விடயத்தைச் சொன்னாலும் அப்படியா? என்று ஓர் அலட்சிய பாங்கு தான் அவளிடம் அழகு ராட்சசி.
*********
இரவு வேளை போலும்  வாமனன் பேரிளம் பெண்ணுடன் பேசி கொண்டு இருந்தார் “என்ன எழுத்தாளரே!.. கோபம் போச்சா? பத்து நாள் என்கூடப் பேசவே இல்ல நான் போன் போட்டாலும் எடுக்கல” மனைவியின் திவசமன்று பேசியது தான் அதன் பின் எழுத்தாளர் பேச வில்லை அதை எண்ணி தான் பேரிளம் பேசியது.
“வேலைடாம்மா” தன்மையாகப் பேசியவரை நம்ப முடியாமல்
“இது யாரு வாமனன் எழுத்தாளர் தானே”.
மௌன சிரிப்புடன் “நானே தான்” என்றார் பேரிளம் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.அவரது அமைதி எங்கோ இடித்தாலும் அதனைப் பெருசாக அவர் எண்ணவில்லை.
“ரொம்பச் சந்தோசம் இந்த மென்மை வாதியை கூடப் பிடிச்சு தான் இருக்கு”.
“அது சரி” என்றவர்
“சாப்பிட்டியாடா” என்று கேட்க
“ஆச்சுங்க எழுத்தாளரே!… சரி உடம்பைப் பார்த்துக் கோங்க நான் வைக்கிறேன்” என்றவள் வழக்கம் போல் அவர் பதிலை எதிர் பார்க்காமல் வைத்து விட்டாள்.
எப்பொழுதும் இருவரிடமும் அதிகப் பேச்சுக்கள் இருக்காது.ஒரு சில வினாடிகளே நீடிக்கும் அதுபோலத் தான் இன்றும்.அதனால் எழுத்தாளரின் மௌனம் பேரிளம் பெண்ணுக்கு பிடிபடவில்லை.
யார் சொல்வதாம் அவளுக்கு ‘புலி பதுங்கி உள்ளது பாய்வதற்கு நேரம் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது’ என்று.
***********
அடுத்த நாள் விடியலே வளவனுக்கு காஞ்சனை வீட்டில் தான்…
காஞ்சனையின் வீட்டில் வளவனைப் பார்த்தவாறு புருவங்கள் சுருக்கி அமர்ந்து இருந்தது அந்தக் குட்டி வாண்டு அதன் பார்வை வளவனை உசுப்பி விட,
“ஏய் என்னடி பார்வை? எனக்கு நேரமில்லை வந்து அந்த ஆண்ட்டியை காட்டு” என்று வளவன் அதட்ட”.
“காஞ்சனை இவன் டி பேசுதான் நான் கூட்டி போக மாத்தேன் போ” வளவன் ‘டி’ என்று அழைத்தது பிடிக்காமல் குட்டி வாண்டு தனது தோழியிடம் முறையிட
“டேய் ஒழுங்கா என் தோழிகிட்ட நடந்துக்கோ இல்லையா நீயே பேசிக்கோ” என்றவளை பார்த்து மனதுக்குள் பல்லை கடித்தவன் .
எல்லாம் என் நேரம் முதல உங்க இரண்டு பேரையும் பிரிக்கனும்.வேலை மட்டும் நல்ல படியா முடியட்டும் அதுக்கு அப்புறம் இருக்கு கருவியவன் வெளியில் சிரித்துக் கொண்டே வாண்டை கைகளில் அள்ளியவன் வெளியில் வந்து விட்டான்.
கன்னத்தோடு கன்னம் வைத்து “பட்டு குட்டி இனி நம்ப இரண்டு பேரும் ப்ரண்டு” என்று கொஞ்ச அவனது மூன்று நாள் தாடி குத்தியது போலும் குண்டு கன்னங்களைத் தேய்த்தவாரே,
 “சீ! … போ! நான் பாய்ஸ் கூட எல்லாம் ப்ரண்ட் ஆக மாத்தேன்” என்றவளது பேச்சில் எரிச்சல் கொண்டவன் குட்டி கன்னத்தைக் கடித்து வைத்தான்
“ஆ! .. ம்மா!..” என்று கத்தியவளை பார்த்து.
“ராட்சசிங்களா!… எங்க இருந்துடி பேச கத்துகிற நீ, ஒழுங்கா அந்த ஆண்ட்டியை காட்டு.இல்ல இன்னொரு கன்னத்தையும் க டிச்சு வச்சுடுவேன்” கடிப்பது போல் செய்கை செய்து மிரட்ட.
அதில் பயந்த குட்டி வாண்டும் இரு கன்னங்களையும் மூடி கொண்டு “நான் காத்துறேன் கடிக்காத மாமா” என்க.
“அப்படி வாடி வழிக்கு மாமவமுள்ள மாமா இனிமே சொன்ன பேச்சு கேக்கல கடி தான்” என்று மிரட்ட அதற்குள் மாடிக்கு வந்து இருந்தனர்.
வளவனிடம் இருந்து இறங்கி அங்கிருந்த மலர்கொடியை நோக்கி ஓடியது வாண்டு.
அவர் தான் மலர் கொடி என்று அறிந்த வளவன் அவரை பார்த்து மலைத்து நின்றான்.அந்த வயதிலும் கம்பீரமாக அழகாக இருந்தார் பெண்.
அவரிடம் சென்ற வாண்டு வளவனைக் கை காட்டி விட்டு ஓடி சென்றது.வளவனைக் கண்டு கொண்ட மலர் கொடிக்கு முகம் மலர்ந்தது.
“ஹாய்!……” என்றவர் அவனை நோக்கி வந்தார்.சிறு அறிமுகத்திற்குப் பின்பு இருவரும் மெல்ல பேச்சை தொடங்கினர்..
***********
கீழே ஓடி சென்ற அந்த வாண்டு நேராகக் காஞ்சனையிடம் சென்று முதல் வேலையாக வளவன் கடித்தை போட்டு கொடுத்துவிட்டு பொய் கண்ணீர் வடிக்க.
அவளும் வளவனை ஒரு கை பார்க்கலாம் என்று இருவரும் கூடி பேசி திட்டம் தீட்டினர்.
மலர்கொடியிடம் பேசிவிட்டு முகம் கொள்ளா புன்னகையுடன் வந்த வளவன் வழமை போல் தான் அமருமிடத்தில் அமர்ந்த நொடி ஆ!…ஆ!…….. என்று அலறினான்.
அவனது அலறலில் காஞ்சனையும் வாண்டும் உருண்டு பிரண்டு சிரித்தனர்.
உன்னை எண்ணியே நாட்கள் தொலைகிறது,
எங்குதாண்டி உன் வாசம் சொன்னால்,
உன் வசம்!.. உன் எழுத்தாளர்!….
 

Advertisement