Advertisement

கதிரவனின் கனல் அதிதீவிரமாக தொடங்கியிருந்த நேரத்தில், அந்த காட்சி இளங்குமரன் கண்களில் பட்டது. கதிரவனின் நிறமும், கடலின் நீலமும் கலந்து….. “கடலின் மீது வாரி இறைத்த மரகத சிதறல்களாக தெரிந்தன தீவுக் கூட்டங்கள். அந்த கூட்டத்தின் முதலில், பரப்பளவில் சற்று பெரியதாகவும், அடர்ந்த மரங்கள் நிறைந்த வனமாகவும் காணப்பட்ட நிலப்பரப்பின் வலது மூலையில் நாவாய்கள் நிற்பது தெரிந்தது. அந்த நாவாய்கள் நிற்கும் பகுதி தவிர, மற்ற பகுதி எல்லாம் மரங்களும், மணற் திட்டுகளுமாக காணப்பட்டன. இளங்குமரன் வேகமாக நூலேணியில் இருந்து இறங்கி வந்தான்.


சென்னி…நாம் “மாநாக்காவாரத்தை” நெருங்கிவிட்டோம். படைகளை தயார்படுத்து!!.. முரசொலிகளுக்கும், சங்கொலிகளுக்கும் ஏற்ப செயல்பட உத்தரவிடு…. என்றான். காரியங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டன.
“மாநாக்காவாரம்” எனப்பட்ட அந்த பெரிய தீவை இப்போது தெளிவாக பார்க்க முடிந்தது. இளங்குமரன் தயாராக நாவாயின் முகப்பில் நின்று கொண்டு, தீவையும், துறைமுகத்தையும், கூர்ந்து கவனிக்கலானான். துறைப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது என்பதை நாவாய்களின் நகர்வில் உணர்ந்து கொண்டவன், இடதுபுறமாக தூரத்தில் ஐந்து நாவாய்கள் புலிக்கொடியுடன் நிற்கக் கண்டான். ஆனால் அவை தீவின் வலது புறம் இருந்த துறைமுக பகுதிக்குச் செல்லாமல், மூன்று கடற்கல் இடதுபுறமாக மூக்கு போல இருந்த பகுதி வழியே பயணப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததை இளங்குமரன் அறிந்துகொண்டான். ஆயினும் “மாநாக்காவாரம்” என்னும் துறைமுகம், ஆபத்தானது அல்ல என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டான். ஆகவே தாமதமின்றி தாக்குதலை நடத்த முடிவெடுத்தான்.


விரிந்து பிரியும் சமிஞ்சைக்கான முரசை அடிக்க உத்தரவிட்டான். நாவாய்கள் அனைத்தும் துடிப்பு வலிப்போரின் துணையுடன், வேகம் எடுக்கத் தொடங்கின. பாய்மரங்களில் பாய்கள் மொத்தமாக சுருட்டப்பட்டு இருக்க, முரசொலி கேட்டவுடன் அறுபது, அறுபது நாவாய்கள், என இளங்குமரன் மரக்கலத்தின் பின்னிருந்து…. வலப்புறமும், இடப்புறமும் ஆக பிரிந்தன. இளங்குமரன் நாவாய் முன்வர, அவன் நாவாயின் பின்வந்த பத்து நாவாய்களால் வேல் முனை போன்ற வடிவம் உண்டானது கடற்பரப்பில். நாவாய்கள் பிரிந்து அணிவகுத்து சென்ற போது “திரிசூலம்” ஒன்று “மாநாக்காவாரம்” தீவின் மீது பாய்வது போல இருந்தது.


மாநாக்காவாரம் துறைமுகத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, சங்கொலி திடீரென எழுந்தது. துறைமுகத்திலிருந்தும் நாவாய்களிலிருந்தும், தரைப் பகுதியிலிருந்தும் எரிகணைகளும், அம்புகளும் பாய்ந்து, கடலில் வந்து கொண்டிருந்த சோழர்களின் கடற்படை மீது தாக்குதல் செய்ய முயற்சித்தன. சில அவற்றின் மீது பட்டாலும், நாவாய்களின் நகர்வில் அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்குள் இளங்குமரன் சங்கொலிக்க, திரிசூலத்தில் இருந்து சாரை சாரையாக அம்புகள் மாநாக்காவாரம் நிலத்தில் இருந்த வீரர்களையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாவாயிலிருந்த வீரர்களையும், தாக்கின. இளங்குமரன் சென்னியும் எரிகணைகளை நாவாய்கள் மீது எய்யத் தொடங்கினர்.


யுத்தம் உக்கிரமாக இருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மாநாக்காவாரம் பகுதியில் இருந்த ஸ்ரீவிசயத்தின் போர்வீரர்களும், துறைமுக காவலர்களும் சரணடைய கையை உயர்த்தினர். சோழ நாவாய்கள் துறைமுகத்தை ஆக்கிரமித்து சுற்றி வளைத்து நின்றன. உயிரிழந்தோர், காயமுற்றவர்கள் தவிர்த்து மீதமிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இளங்குமரன் மாநாக்காவாரம் துறைமுகத்தின் கலங்கரை கோபுரத்தின் மீது புலிக் கொடியை பறக்க விட்டான். சோழ கடற்படை வீரர்கள் கரையில் நுழைந்தனர். நாவாய்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்க, இன்றும் நாளையும் வீரர்கள் ஓய்வு கொள்ள இளங்குமரன் உத்தரவிட்டான்.


சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீவிசயத்தின் வீரன் ஒருவன், சோழப்படை வீரர்களை எச்சரிக்கை செய்தான். துறைமுக எல்லைகளை கடந்து கானகத்திற்குள் செல்லாதீர்கள்….!!! என மீண்டும் மீண்டும் எச்சரித்தான். அதை சோழ வீரர்கள் காதில் வாங்கவே இல்லை. கானகத்திலிருந்து துள்ளி வந்த சில புள்ளி மான் களையும், காட்டுக் கோழிகளையும் கண்ட சோழ வீரர்கள், “ஆஹா….!! அருமையான கறி விருந்துக்கு பொருட்கள் கிடைத்து விட்டன”, என கூறிக்கொண்டு அவற்றை வேட்டையாட சென்றனர்.

ஸ்ரீ விசய வீரன் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தான். அவன் குரல் மட்டும் ஓயாது எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தது.
அதை துறைமுகத்தில் இருந்த, ஒரு மர அறையிலிருந்து கேட்ட இளங்குமரனும், சென்னியும் அவனை நோக்கி வந்தனர்.


ஏன் இப்படி கத்துகின்றாய்? என சென்னி கேட்டான். சோழ தலைவர்களே!… உங்கள் வீரர்களை தடுங்கள்!. கானகம் நோக்கி செல்ல வேண்டாம்!! வேட்டையாட வேண்டாம்!! ஆபத்து…. ஆபத்து… என்று மீண்டும் அவன் புலம்பினான்.
சென்னி அவனை அதட்டினான். “நீ வாயை திறந்தாய் என்றால் கடலுக்குள் வெட்டி எறியப்படுவாய்” என்றான். அவன் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த வீரன், மீண்டும் கத்த தொடங்கினான்.


இளங்குமரனுக்கு அவன் கூறுவதில்ஏதோ அர்த்தம் இருப்பதாக தோன்றியது. அதற்குள் சென்னி, அவனை அடிக்கப் பாய்ந்தான். அதை தடுத்த இளங்குமரன்!.. வீரனே! நீ சொல்ல விழைவது என்ன? என்பதை விளக்கமாக கூறு, என்றான்.


வீரன் உதடுகளும், கண்கள் படபடத்தன. தலைவரே!அந்தக் கற்குவியல்களுக்குப் பின்புள்ள காடுகளுக்குள் செல்ல வேண்டாம். நாங்கள் யாரும் எப்போதும் செல்வது கிடையாது. இந்த “பெரிய நாக்காவரம்” தீவில் அபாயம் உள்ளது. இங்குள்ள பூர்வகுடிகளிடம் சிக்கினால், உயிர் போய்விடும். அவர்கள் இந்த தீவிலும், அடுத்து வரும் இரு தீவுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றனர். விஷ ஊசிகளாலும், விஷ அம்புகளாலும், மறைந்திருந்து தாக்கும் அவர்களிடம் தப்பிக்க இயலாது….. என்றான்.


அப்படி என்றால், சோழ போர்க்கலங்கள் இப்பகுதியை கடந்து மறு பகுதியில் சென்றபோது இதுதான் நிகழ்ந்ததா? என இளங்குமரன் ஸ்ரீவிசயத்தின் வீரனிடம் கேட்டான். அப்போது கானகத்திற்குள் சென்ற சில சோழ வீரர்கள் அலறும் ஒலியும், அதன் பின் அமைதியும் நிலவியது. ஸ்ரீவிசயத்தின் வீரன் கூறினான்,… ஆபத்து! வந்துவிட்டது… உடனே படைவீரர்களும், நீங்களும் மரக்கலங்களுக்கு தப்பிச் செல்லுங்கள். இங்கே நிற்காதீர்கள்!… போய் விடுங்கள்!!!!….. என சத்தமிட்டான்.


இளங்குமரன் தன் இடையிலிருந்த சங்கெடுத்து ஒலியெழுப்ப, சோழ வீரர்கள் நாவாய்களுக்கு சென்று, வேகமாக ஏறத் தொடங்கினர். இளங்குமரனும், சென்னியும் அந்த ஸ்ரீ விசயத்து வீரனை உடன் அழைத்துச் செல்ல முயன்றபோது, அவன் வர மறுத்துவிட்டான். ஏனெனில் அவன் காயப்பட்டிருந்தான். அதற்கு பதிலாக அவர்களை நாவாய்களுக்கு திரும்ப அவசரப்படுத்தினான்.
கரையிலிருந்து சுமார் ஒரு கல் தொலைவில் நின்றிருந்த நாவாயை, நீந்தியும், சிறு படகுகள் மூலமும் சோழ வீரர்கள் எட்டினார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆத்திரமும், வன்மமும் உண்டாகி இருந்தது. யார் இந்த பூர்வகுடிவாசிகள்? அவர்களை அழித்தொழிக்க வேண்டும்…!! என பேசியபடி இருந்தனர்.


இளங்குமரனும், சென்னியும் அவர்களின் நாவாயை எட்டிய அடுத்த கணம்,!!!… பின்னே ஒரு படகில் வந்து கொண்டிருந்த சில சோழ வீரர்களின் அலறல் ஒலி கேட்டது. இளங்குமரனும் சென்னியும் திரும்பி கரையை பார்க்கும் போது, சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கருப்பான உயரமான, உருவத்தில் சிலரும்….. மஞ்சளும் குள்ள உருவமாக சிலரும்…. கானகத்திலிருந்து வெளிப்பட்டனர். மஞ்சள் நிறத்தவரும், கருப்பினத்தவரும்…. ஆண்களும்,பெண்களுமாக வந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களும் வித்தியாசமாக இருந்தது. அம்புகளை தெளிவாக, அதே வேளையில் சரியான குறியுடன் செலுத்தினர். மஞ்சள் நிறத்தவர் குழல் போல எதையோ வாயில் வைத்து ஊத, அவற்றிலிருந்து விஷ ஊசிகள் வேல் போல பாய்ந்து வந்தன. சோழ வீரர்கள் தங்கள் வில்லில் நாணேற்றினர்.சிலர் வேல் எறிய தயாராகினர்.


அதற்குள் அந்த கூட்டத்தின் தலைவன் போல் இருந்தவன்… ஸ்ரீவிசய வீரனின் குரல்வளையை கடித்து, அவனை அப்படியே தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தான். மற்றவர்கள் வித்தியாசமாக குரல் எழுப்பியபடி அவனைப் பின் தொடர்ந்தனர். கரைவரை வந்தவர்கள் அங்கேயே நின்று விட்டனர். அவர்கள் குரல் மட்டும் ஓயாது ஒலித்தபடி இருந்தது. ஸ்ரீவிசய வீரனை அந்தக் கூட்டத்தின் தலைவன், குரல்வளையை கடித்து குருதியை குடித்ததைக் கண்டதும், சோழ வீரர்களுக்கு முகத்தில் பீதி ஏற்பட்டது. அவர்கள் அப்படியே உறைந்து நின்றனர். கரையில் கடந்த சில சோழ வீரர்களையும், கரையைத் தாண்டி கடலுக்குள் இறந்து கிடந்த ஒரு சில ஸ்ரீவிசயத்தின் வீரர்களையும் விஷ அம்புகளில் வீழ்த்தப்பட்டு கிடந்த மற்ற வீரர்களையும், சிலர் இழுத்துக் கொண்டு கரை திரும்பினர். கரையின் மணலில் அந்த உடல்களை இழுத்து இழுத்து, அங்கும் இங்குமாக வெறி கொண்ட குரல் எழுப்பியவாறு உலவினர். சிலர் மண்ணை பறிக்க, அந்த உடல்களை அதற்குள் தள்ளி புதைத்தனர். ஸ்ரீவிசயத்தின் வீரன், உயிரற்ற உடலை தரையில் எறிந்தான் கூட்டத்தின் தலைவன். பின் காட்டில் கடந்த சில மரத்துண்டுகளையும், கட்டைகளையும் ஒன்றுகூட்டி தீ வைத்தனர். அவர்கள் தீ பற்ற வைக்கவும், ஆதவன் மேற்கில் மறையவும் நேரம் கச்சிதமாக இருந்தது. ஸ்ரீவிசயத்தின் வீரன் நெருப்பில் தூக்கி போடப்பட்டான்.


துறைமுகத்தில் மரத்தால் உருவாக்கப்பட்டிருந்த அலுவல் அறையின் பெரிய தூண்களும், பலகைகளும் பெயர்த்து எடுக்கப்பட்டு தீயில் இடப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிய அனைவரும் அதை சுற்றி ஆடத் துவங்கினார்.
இளங்குமரன், சென்னி உள்ளிட்ட அத்தனை சோழ வீரர்களுக்கும், ஆச்சரியம். அதேவேளையில் ஒருவித பயமும் ஏற்பட்டது. இளங்குமரனுக்கு ஓலைச்சுவடியில் இருந்த குறிப்புகள் நினைவிற்கு வந்தது. ஆனால் இவர்களை வென்றே ஆகவேண்டும். “கத்தியை விட புத்தி பெரியது” இவர்களை விடிந்த பிறகு வேறு விதமாக கையாள வேண்டும் என்று தீர்மானித்தான்.


விடிய விடிய நெருப்பு அணைக்கப்படவில்லை. குழுமியிருந்த அந்தக் கூட்டமும் கலையவில்லை. அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே இருந்தனர்.


அடுத்த நாளின் காலை பொழுதில், நெருப்பு அணைந்து, கடற்கரைப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அவர்களில் பலர் உறங்கியிருக்க, சிலர் மட்டும் விழித்திருந்து நாவாய்களை கண்காணித்தபடி இருந்தனர். இளங்குமரன் தயாரானான்,… சென்னி அவனிடம் எவ்வளவோ கூறியும் அவன் கேட்கவில்லை. அவன் படகில் ஏறி, தானே துடுப்பை வலித்துக் கொண்டு கரை நோக்கி பயணப்பட்டான். அதனைக் கண்ட சோழ வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போக வேண்டாம் என அவர்கள் கூக்குரலிட்டனர்.


கூக்குரல்கள் நாவாயில் எழுவதையும், படகு ஒன்று கரைக்கு வருவதையும் கண்ட அந்த தீவுவாசிகள் மீண்டும் ஆத்திரமடைந்தனர். இளங்குமரனை திரும்பிச் செல்ல சைகை செய்தனர். சிலர் கோபத்தில் நச்சு அம்புகளை எய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களை அவர்கள் தலைவன் தடுத்தான். பின் திரும்பிச் செல்ல வற்புறுத்தி சைகை செய்தான். இளங்குமரன் பதிலுக்கு சைகை செய்தான். அந்த சைகை கரையில் இருந்த தலைவனுக்கு புரிந்திருக்க வேண்டும். அவன் அனைவரையும் அமைதிப்படுத்தினான்.
இளங்குமரன் கரையெட்டும் வரை, இருபுறமும் அமைதி நிலவியது. சோழ வீரர்கள் நாவாய்களை, சென்னியின் உத்தரவுப்படி சிறிது தூரம் கரையை நோக்கி நகர்த்தி இருந்தனர். அம்புகள் கரையை தொடும் தூரம் வரை நெருங்கி இருந்தவர்கள், தங்கள் வேல்களையும், அம்புகளையும் நாணேற்றி தயாராக வைத்திருந்தனர்.

இளங்குமரன் கரையை நெருங்கியதும், இடையில் வைத்திருந்த இரு குறும் வாள்கள், மற்றும் தன் உடைவாளை, கரையில் இருந்த அவர்கள் பார்வையில் படும்படி……படகிலேயே வைத்து விட்டு, மணல் திட்டில் இறங்கினான். இருகைகளையும் கூப்பியபடி மணல் திட்டை கடந்து, அவன் அவன் அனைவரையும் அமைதிப்படுத்தினான்.


இளங்குமரன் கரையெட்டும் வரை, இருபுறமும் அமைதி நிலவியது. சோழ வீரர்கள் நாவாயகளை, சென்னியின் உத்தரவுப்படி சிறிது தூரம் கரையை நோக்கி நகர்த்தி இருந்தனர். அம்புகள் கரையை தொடும் தூரம் வரை நெருங்கி இருந்தவர்கள், தங்கள் வேல்களையும், அம்புகளையும் நாணேற்றி தயாராக வைத்திருந்தனர். இளங்குமரன் கரையை நெருங்கியதும், இடையில் வைத்திருந்த இரு குறும் வாள்கள், மற்றும் தன் உடைவாளை, கரையில் இருந்த அவர்கள் பார்வையில் படும்படி படகிலேயே வைத்து விட்டு, மணல் திட்டில் இறங்கினான்.

இருகைகளையும் கூப்பியபடி மணல் திட்டை கடந்து, அவன் கரையில் கால்பதிக்க, அந்த உயரமான கருத்த தேகம் உடைய தீவுவாசிகளின் தலைவன், அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான். இளங்குமரன் உடையும், அவன் கைகள், கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்கள் போன்றவற்றை பார்த்து வாயைப் பிளந்தவன்….!!!! அவனிடம் சைகையில் பேசத் தொடங்கினான். இளங்குமரன் அவனிடம் தங்களை யார் என்றும்? எதற்காக இந்த தீவிற்கு வந்தோம் என்பதையும் விளக்க முயற்சித்தான். இருவருக்கும் இடையே பல்வேறு சைகைகள், சில நாழிகைகள் நடந்தன.


இறுதியாக தலைவன், இளங்குமரனை அவர்களோடு வருமாறு பணித்தான். இளங்குமரன் அவர்களோடு கானகத்தின் உள்ளே சென்றான். கானகத்தின் உள்ளே சென்ற இளங்குமரன் கண்கள் மகிழ்விலும், ஆனந்தத்திலும் நிறைந்தன. உயரமாக வளர்ந்து செழித்து இருந்த மரங்களும், செடிகளும் சூழ்ந்திருக்க, இடையிடையே தென்னை மரங்கள் தோப்புகளாக இருந்தன. சிறியதொரு மலையும் காணப்பட்டது. அந்த மலையிலிருந்து நீர்வீழ்ச்சி ஒன்று பாய்ந்து ஓடியது. அதன் ஓரத்தில் இருந்த சோலைகளும், அதன் உயர்ந்த மரங்களின் இடையே கட்டப்பட்டிருந்த தேன்கூடுகள், நிறைந்து நீரோடையில் சொட்டிக் கொண்டிருப்பதை கண்டான். புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக ஓடி விளையாடியதும், கானகவாசிகளிடம் சினேகமாக வந்து ஒட்டி உறவாடியதும், இளங்குமரனை வியப்பில் ஆழ்த்தின. நீண்டதொரு பயணம் என்றாலும், அலுப்போ, துளி வியர்வையோ குமரனுக்கு ஏற்படவில்லை. அவர்கள் சிறிய மேடான பகுதியை கடந்து சிறிது தூரம் சென்ற பிறகு, நிறைய குடிசைகளும் வசிப்பிட பகுதிகளும் தென்பட்டன. தென்பட்டன. நிறைய கானக வாசிகள் அங்கே இருந்தனர். அவர்கள் இளங்குமரன் சூழ்ந்துகொண்டு, அவனைத் தொட்டு தொட்டு பார்த்தனர். பயணம் அந்த கிராமத்தின் நடுவே இருந்த கோயில் போன்ற பகுதியில் நிறைவடைந்தது.


தலைவன் இளங்குமரனிடம், மரத்தில் செய்யப்பட்டிருந்த ஒரு சாமி உருவத்தைக் காட்டி ஏதோ சைகையில் கூறினான். இளங்குமரனுக்கு விளங்கிற்று….!!! இவர்கள் தன்னிடம் சத்தியம் செய்ய கேட்கிறார்கள் என்று. தீர்மானமாக அவர்கள் அனைவர் முன்பும் தன் விரலை, கீறி ரத்தத்தில் சத்தியம் செய்தான். சத்தியம் யாதெனில், “கானகத்தின் உயிர் வாழும் ஜீவராசிகள்…. கானகத்தின் மரங்கள்…. இயற்கை சார்ந்த எதற்கும் தீங்கிழைப்பது கிடையாது. தலைவன் அந்தஸ்தில் உள்ளவர் தவிர வேறு யாரும் கானகத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது,”. போன்றவைதான். அவர்கள் தலைவன் அவற்றை அடையாளப்படுத்தி காட்ட, காட்ட இளங்குமரன் ஒவ்வொரு செயலுக்கும் உறுதி கூறினான்.


அவர்கள் தலைவனும் மற்றவர்களும் உற்சாக குரல் எழுப்பிய பின், அவர்கள் குமரனுக்கு பருக ஏதோ கொடுத்தனர். இளங்குமரன் சமாதானத்தின் அடையாளமாக அதை பருகினான். பின் கானகவாசிகள் சிலருடன், மீண்டும் கடற்கரை நோக்கி பயணித்தான். கரையை அவன் எட்டும் நேரத்தில் லெமூரியா கடந்து சோழப் பேரரசின் தலைவனும் ஜெயசிம்ம சரபன், பண்டித சோழன், நிருப திவாகரன், தான வினோதகன் என்றெல்லாம் புகழப்பெற்ற சக்கரவர்த்தி ராஜேந்திர சோழரின் நாவாய், “மாநாக்காவாரம்” தீவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது.


“அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்கவர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொரும் அகப்படுத்து
உரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்து அவன் அகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சாதிரத் தோரணமும் மொய்த தொளிர்
புனைமணிப் புதவமும் கனமனிக் கதவமும்
நிறைநீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்”
( இராஜேந்திரன் மெய்கீர்த்தி)


கடாரத்தில் புலிக் கொடியைப் பறக்கவிட்ட இராஜேந்திரர், விஜயதுங்கவர்மன் கோட்டை வாயிலில் இருந்த விச்சாதிரத் தோரணத்தையும் பலவகைக் கற்களும், புஷ்பராகமும், பொரித்த பொற்கதவுகளையும், பெயர்த்தெடுத்து வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு, தாயகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அவரின் பெரிய நாவாயை சுற்றி சோழர் கடற்படை நாவாய்கள் சூழ்ந்து வந்தன. நாவாயின் மேற்தளத்திலிருந்த அறையில் அமைக்கப்பட்டிருந்த பஞ்சனையில் கண்ணயர்ந்து இருந்தார் சோழ சக்கரவர்த்தி.


முன்னதாக புறப்பட்டிருந்த சோழர் கடற்படையின் ஒரு பிரிவு, இந்நேரம் தாயகத்தை நெருங்கி இருக்கும் என்று பேசியபடி வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்த வீரர்கள், கடற்பரப்பை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அரசருக்கு பணிவிடை செய்யும் சேவர்களும், பிற வீரர்களும், பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க முன்னே சென்ற நாவாயிலிருந்து முரசறைந்து செய்தி ஒன்று பரிமாறப்பட்டது.
இராஜேந்திரரின் நாவாய்க்கு செய்தி கிடைத்ததும், அதை பெற்றுக்கொண்ட வீரன் ஒருவன் சோழ கடற்படையின் தலைமை வைத்தியரும், பேரரசரின் ஆலோசகருமான சஞ்சீவி சித்தரை அணுகினான்.

விபரம் அறிந்து அதிர்ந்து போனாலும், வேகமாக செயல்பட்டவர் நூல் ஏணியில் ஏறி பாய்மர கண்காணிப்பு மாடத்தை எட்டினார். எதிரே தெரிந்த கடற்பரப்பில் சோழக்கொடி தாங்கிய நாவாய்கள் ஒரு தீவை சூழ்ந்து நிற்பதை கண்டவர், மாலை நெருங்கும் வேளையில் கரையை எட்டுவதா? அல்லது தாக்குதல் செய்வதா? என குழம்பினார். பின் ஏதோ தனக்குத் தானே தீர்மானித்துக் கொண்டவர் பாய் மரத்திலிருந்து இறங்கி வந்தார்.


பேரரசன் முரசொலி கேட்டு கண் விழித்திருந்தான். அறையின் மூலையில் இருந்த சிறிய இடத்தில் முகத்தை கழுவியவர், அவர் அறை கதவை திறந்துகொண்டு வெளியே வரவும் சஞ்சீவ சித்தர் அவரை நெருங்கவும் நேரம் சரியாக இருந்தது.


என்ன வைத்தியரே!. ஏன் இந்தப் பதட்டம்? முரசொலி ஒலித்தது ஏன்? கடலில் ஏதேனும் பருவ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?!! இல்லை அபாயகரமான செய்திகள் கிடைத்துள்ளதா?? என்றார் இராஜேந்திரர்.


மன்னவா!.. மூன்று தினங்களுக்கு முன்பே கிளம்பிய நம் சோழ கடற்படையின் இளங்குமரன் தலைமையிலான பிரிவு, இதோ இன்னும் சில கடல் கல் தொலைவிலிருக்கும் “மாநாக்காவாரம்” துறைமுகத்தில் நிற்கின்றன. ஆனால் வீரர்களின் நடமாட்டமோ, நாவாய்களில் ஆரவாரமோ இல்லை. மாலை மங்கத் தொடங்கி விட்ட இந்தபொழுதில், நாம் கரையை எட்டுவதா? போர்புரிய தேவையுள்ளதா? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளங்குமரன் உள்ளிட்ட நம் படைக்கு, என்னவாயிற்று என்பது புரியவில்லை என்றார்!! சஞ்சீவ சித்தர்.

Advertisement