Advertisement

அத்தியாயம் 7

அடுத்த வந்த நாட்களில் ஆதிசேஷனும், வான்முகிலனும் உறவினர்களாகப் போவதுதான் ஊடகங்களின் பிரதான செய்தியானது.

“தீவிரமா திட்டம் போட்டு நாம காய் நகர்த்தினா எங்கிருந்தோ வந்த ஒருத்தி நம்ம திட்டமெல்லாம் அசால்ட்டா உடைச்சிட்டு போய்ட்டா” அலைபேசியின் மறுபக்கம் இருந்த ஆண் குரல் கோபத்தில் சீறியது.

“வான்முகிலன இந்த கேசுக்குள்ள இழுத்து ஆதிசேஷன் கூட கோர்த்து விட்டா, கொஞ்சம் நாள் ரெண்டு பேரும் அடிச்சிக்குவாங்க. அதுக்குள்ள நம்ம வேல முடிஞ்சிடும் என்று நினச்சேன். ஆனா அந்த லாயர் ரொம்ப ஷார்ப். பாய்ண்ட்ட புடிச்சி அத வான்முகிலன் கைலயே கொடுத்துட்டா”

“அவன அந்த பிளைட்டுலையே போட்டுத் தள்ளியிருக்கணும். தப்பிச்சிட்டான். சரி இப்போ என்ன பண்ண போற? ஆதிசேஷன் கூட அவன் சம்பந்தம் வச்சிகிட்டான்னா நம்மலால ஒண்ணுமே பண்ண முடியாது”

“அப்படியெல்லாம் நடக்க விடமாட்டேன். என்ன பண்ணனும் என்று எனக்குத் தெரியும்” என்ன பண்ண போகிறோம் என்பதை விலாவரியாக கூறிய அந்தக் குரல் அலைபேசியை அனைத்து விட்டது.

நாளை மறுநாள் ஆதிரியன் மற்றும் மளாவிக்காவின் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாட்டை இரு வீட்டாரும் மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆதிசேஷன் பேசியதும் வான்முகிலன் வீட்டுக்கு வந்து அன்னையிடம் தான் பேசினான்.

“ஏன் முகிலா… நீ அந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணல என்ற கோபத்துல நம்ம வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி கொடும படுத்த திட்டம் போடுறாரோ?” காஞ்சனாதேவி அச்சத்தோடு கேட்க, சத்தமாக சிரித்தான் வான்முகிலன்.

“அம்மா வர வர நீ சீரியல் பார்த்து ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்ட. வயசான காலத்துல அந்தாளு வெஞ்சன்ஸ் எடுக்கும் எண்ணத்துலயா இருப்பாரு?” விமான விபத்தை தொடர்ந்து நடப்பவைகளை கூறினால் அன்னை மேலும் பயந்து விடக் கூடுமென்று “ஆதிசேஷன் ஐயாக்கு நம்ம குடும்பத்துல சம்பந்தம் வச்சிக்கணுமாம். பொண்ணு குடுத்தா என்ன? பொண்ணு எடுத்தா என்னனு? என்று கேட்டாரு நானும் வீட்டுல பேசி சொல்லுறேன்னு சொன்னேன். பையன் நல்ல பையன்மா”

“என்ன பேசிகிட்டு இருக்கிறீங்க?” என்றவாறே அங்கே வந்தாள் சாருமதி.

அக்காவிடம் எப்படி விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவது என்று யோசித்தவன் ஆதிசேஷனை தெரியுமா என்று கேட்டான்.

“அவரத் தெரியாம இந்த ஊர்ல யாராச்சும் இருப்பாங்களா?” தம்பி என்ன நோக்கத்தோடு கேட்கின்றான் என்று புரியாமல் பேசினாள் அக்கா.

“அவரு நம்ம வீட்டுல சம்பந்தம் வச்சிக்கலாமா என்று மீண்டும் கேட்டாரு. அவர் மூத்த பேரனுக்கு. நல்ல பையன். ஆதிசேஷன போலவே  நிர்வாகம் பண்ணக் கூடியவன். அவன் பேர்ல மட்டும் ஏகப்பட்ட சொத்து. சுபிய பேசலாமா? மாளவிகாவ பேசலாமா? நீ சொல்லு. நான் பாட்டுக்கு சுபிய பேசி நீ உன் கிட்ட ஒரு வார்த்தக் கூட கேட்கலைன்னு சொல்லிடீனா? அதான் இப்போவே கேட்டேன். உனக்கு விருப்பமில்லைனா சொல்லிடு நான் சந்திராக்காக்கிட்ட பேசுறேன். நான் சொன்னா அவங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க” எப்படியெல்லாம் பேசினாள் சாருமதி சம்மதிப்பாளென்று வான்முகிலனுக்கு தெரியாதா?

“ஏன் நீ சொன்னா நான் கேட்க மாட்டேனா? சுபிய விட ரெண்டு மாசம் என் பொண்ணு மூத்தவ. மாளவிகா இருக்க சுபிக்கு கல்யாணம் பேசினா ஊர் என்ன சொல்லும்?” தம்பிக்கு தான் தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவள் ஆதிசேஷனின் சொத்துமதிப்பை பற்றி தெரியுமென்பதால் உடனே சம்மதித்து விட்டாள்.

சாருமதியை சம்மதிக்க வைப்பதுதான் சிரமம். அவள் கணவன் கார்திக்பாபுவை சம்மதிக்க வைப்பது ஒன்றும் வான்முகிலனுக்கு சிரமமில்லை.

அடுத்து மாளவிகா “மாமா பேசுறேன் ஆதிசேஷனோட பேரன உனக்கு மாப்பிள்ளையா பார்த்திருக்கேன்” என்றதும் சரியென்று விட்டாள்.

எந்தக் கேள்வியும் கேட்காமல் மாளவிகா சரியென்றது வான்முகிலனுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதான் சம்மதித்து விட்டாளே என்று அவளை உடனே டில்லியிலிருந்து புறப்பட்டு வரும்படி கூறினான்.

அவளும் வந்து விட நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பமாகி விட்டன.

நிச்சயதார்த்த பத்திரிக்கையும் அனைவருக்கும் கொடுத்திருந்தநிலையில் மாளவிகா மற்றும் ஆதித் ஒன்றாக இருக்கும் காணொளி சமுக வலைதளங்களில் வளம் வர இரு வீட்டிலும் பூகம்பம் வெடித்தது.

“என்னமோ என் பொண்ணு ஆதித்திய பத்தி தப்பா சொன்னான். அவன் வீட்டு பொண்ணு லட்சணம் எப்படி இருக்கு?” கோபத்தில் கத்தினான் ஆதிசங்கர்.

“நிச்சயதார்த்த பத்திரிக்கை வேற ஊர் பூரா கொடுத்துட்டோம் இந்த நேரத்துல இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கு. நிச்சயதார்த்தத்தை நிறுத்தினா பெருத்த அவமானம்” என்றான் ஆதிதேவ்.

“அந்த எழவு வீடியோவ உடனே இன்டர்நெட்டுல இருந்து தூக்கிட்டேன். வீடிவோவ நெட்டுல ஏத்தின அரைமணி நேரத்துல எத்தனை கோடி பேர் பார்த்திருப்பாங்களோ தெரியல. என் பையன் ஒன்னும் அந்த பொண்ண கட்டாயப்படுத்தி ஒண்ணா இருந்தது போல தெரியல” என்றான் ஆதித்தை பெத்த ஆதித்யன்.

தான் பெற்ற மூணு புத்திரர்களும் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதிசேஷன் “நீங்க மூணு பேரும் ஒரு விசயத்த மறந்து பேசிகிட்டு இருக்கிறீங்க. எங்களுக்கும் அந்த வான்முகிலனுக்கும் இடைல பிரச்சினையை உண்டு பண்ணனும் என்று யாரோ திட்டம் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்குறாங்க. நிச்சயதார்த்த பத்திரிகை ஊர் பூரா கொடுத்து, நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கும் பொழுது இப்படியொரு வீடியோவ வெளியிடிருக்கான்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். இந்த நிச்சயதார்த்தம் நடக்கக் கூடாது. ஆதித்திய வேணாம்னு சொன்ன வான்முகிலேனோட நாம சண்டை போடணும்” தீவிரமான முகபாவனையில் சொன்னார் ஆதிசேஷன்.

“ஆமாம் தாத்தா முதல்ல அந்த வீடியோல இருக்குறது நம்ம ஆதித்தும், மளவிகாவுமா என்றே தெரியாது. இப்போதான் யாரோ இருக்குற வீடியோல யாரோ முகத்த பக்காவா எடிட் பண்ணிடுறாங்களே” என்றான் ஆதிரியன்.

“சபாஷ் டா பேராண்டி. நான் பெத்தவனுங்க போல முட்டாள்தனமா யோசிக்காம சரியா யோசிக்கிற. சரி நீ சொல்லு என்ன பண்ணலாம்?”

“பாதிக்கப்பட்டது மாளவிகாவும்தான். நாம உடனே வான்முகிலன் வீட்டுக்கு போய் பேசணும்” என்ற என்ற ஆதிரியனுக்கு நிச்சயமாக ஆதித்தான் தவறு செய்திருப்பான் என்று தோன்ற வேறு விதமாக யோசித்தான்.

“எதுக்கு வீட்டுக்கு போகணும்? ஏதாவது ஹோட்டல் ரூமுக்கு வரச் சொல்லி பேசலாமே” என்றான் ஆதிசங்கர். 

“ரூம் புக் பண்ணி வரச் சொல்லுறது எல்லாம் ஒபிசியல் பேச்சுக்கு ஓகே. இது குடும்ப விஷயம். நாம போய் பேசலாம். நீங்க யாரும் வர வேணாம் நானும் தாத்தாவும் மட்டும் போறோம்” என்ற ஆதிரியன் ஆதிசேஷனை பார்த்தான். அவர் அனுமதியில்லாமல் எதுவும் நடக்காதே.

“சரி போலாம்” என்று ஆதிசேஷன் உடனே கிளம்ப வெளியே இருந்து உள்ளே வந்து கொண்டிருந்த ஆதித்தையும் வண்டியில் ஏற்றியிருந்தான் ஆதிரியன். 

வான்முகிலன் வீட்டில் சாருமதிதான் கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.

மாளவிகாவிடம் வந்த வான்முகிலன் “வீடியோவ எடிட் கூட பண்ணியிருக்கலாம். ஆனா என்ன நடந்தது என்று உன் கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டா, அடுத்து என்ன பண்ணலாம் என்று நான் யோசிக்க முடியும்” என்றான்.

“இங்க எனக்கு ப்ரெண்ட்ஸ் என்று யார் இருக்காங்க. சுபியோடத்தான் ஒரு பார்ட்டிக்கு போய் இருந்தேன். அங்க தான் ஆதிய {ஆதித்}பார்த்தேன்.

“ஐயோ ஐயோ ஐயோ என் பொண்ணோட இந்த நிலைமைக்கு இவ தான் காரணம் எல்லாம் இவ திட்டம் போட்டுத்தான் பண்ணியிருக்கா” என்று சாருமதி சுபியை அடிக்க முனைந்தாள்.  

“ஐயோ நான் ஒண்ணுமே பண்ணல” கண்கலங்கி நின்றாள் சுபலக்ஷ்மி.

“அம்மா…” என்று மாளவிகா கத்த

“நீ இப்போ அமைதியாக நிற்கலைனா, நிச்சயதார்த்தத்தை நிறுத்திடுவேன். வீடியோல இருக்குறது உண்மை எங்குறதாலதான் நிச்சயதார்த்தம் நின்னுபோச்சு என்று ஊர் பேசும். அது உனக்கு சந்தோஷமா?” அக்காவை அதட்டினான் வான்முகிலன்.

 “இதுக்கும் சுபிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்ற மாளவிகா அன்று என்ன நடந்தது என்று கூற ஆரம்பித்தாள்.

சுபியின் தோழி ஒருத்தியின் பார்த்டே பார்ட்டிக்குத்தான் இருவரும் போய் இருந்தனர். அதுவும் வீட்டில் போர் அடிப்பதாக கூறிய மாளவிகா சுபி கிளம்பிப் போகும் பொழுது அவளோடு தொற்றிக் கொண்டிருந்தாள்.

பார்ட்டிக்கு சென்றால் பார்ட்டி போர் அடித்தது. நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று மாளவிகா சுபியிடம் விடைபெற்று வெளியே வரும் பொழுது அடுத்த அறையில் வேறேதோ பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. ஆட்டம், பாட்டம் என்று கலைகாட்டவே இவள் எட்டிப் பார்க்க, பின்னாடியிருந்து அவளை உள்ளே தள்ளியவன் “கம் அண்ட் ஜோஇன் பேபி” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்.

டில்லியில் பிறந்து வளர்ந்த மாளவிகாவுக்கு அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரொம்பவே பிடித்திருந்தது.

“உன் பேரென்ன” அவன் கொடுத்த கூல் ட்ரின்க்சை வாங்கியவாறே கேட்டாள் மாளவிகா.

“ஆதித்”

அங்கே சத்தம் அதிகமாக இருக்க “ஆதி” நல்லா இருக்கு. என் பேர் மாளவிகா” என்றாள்.

ஆதித்தின் காதில் மாளவிகா தன்னுடைய பெயரை கூறியது விழவே இல்லை “ஓகே, ஓகே” என்றான். பெண்ணாக இருந்தால் போதும். பெயரெல்லாம் அவனுக்கு முக்கியமில்லை.

கூல் ட்ரிங்க்ஸ் என்று எதை கொடுத்தானோ மாளவிகா அமர்ந்த வாக்கில் அவள் மடியிலையே வாந்தி எடுத்தாள்.

“ஓஹ் மை காட்” என்ன செய்வது என்று முழித்தாள் மாளவிகா.

“ஹேய் ஹேய் ஒன்னும் பிரச்சினை இல்ல. மேல தான் என் ரூம் இருக்கு வா போய் ப்ரெஷ் அப் ஆகலாம்” மடியில் இருந்த வாந்தியை பொறுமையாக டிஸு கொண்டு தள்ளி விட்டு அவளை அறைக்கு அழைத்து சென்றான்.

“நீ குளிச்சிட்டு இரு உனக்கு நான் டிரஸ் வாங்கிட்டு வரேன். சாப்பாடும் வச்சிருக்கேன் சாப்பிடு” என்று ஆதித் கிளம்பி சென்றிருந்தான்.

குளித்து விட்டு வந்த மாளவிகா பசிக்கவே ஆதித் வைத்து விட்டு சென்ற உணவை பார்த்தாள். பொறுமையாக அமர்ந்து சாப்பிட தோன்றாமல் அவன் வைத்து சென்றிருந்த ஜூஸை மட்டும் அருந்தினாள்.

மாளவிகாவுக்காக துணி வாங்கிக் கொண்டு வந்த ஆதித் அவளை கட்டியணைத்து முத்தமிட ஆரம்பித்தான்.

மாளவிகா அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம் அவன் கொடுத்த ஜூஸில் கலந்திருந்த போதை பொருள்தான். அது அவளை தூண்டிருக்க, அவளும் இவனுக்கு இசைந்து கொடுத்தாள்.

தூங்கி எழுந்த பின் நடந்தது எல்லாம் மாளவிகாவுக்கு ஞாபகம் இருந்தது. போதை மருந்தால் தான் தானும் இவ்வாறு நடந்து கொண்டோம் என்று புரியாமல் குழம்பியவள், ஆதித் வாங்கி வந்த ஆடையை அணிந்து கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

கற்பு பறி போய் விட்டது. வீட்டுக்கு தெரிந்தால் மானம் போய் விடும் என்றெல்லாம் மாளவிகா அழுது கரையவில்லை. நடந்தது ஒரு விபத்தென்று கடந்து சென்று விட்டாள்.

அதற்கு பின்னும் ஆதித்தை ஓரிரண்டு முறை பார்த்திருக்கிறாள். ஆதிசேஷனின் பேரன் என்று அறிந்து கொண்டாள். வான்முகிலன் தனக்கு ஆதிசேஷனின் பேரனை திருமணம் பேசி இருப்பதாக கூறியதும் அது ஆதித் என்று எண்ணி சரியென்று விட்டாள்.

“ஐயோ… ஐயோ… ஐயோ… நடந்த எதையுமே வீட்டுல சொல்லாம இருந்துட்டாளே பாவி. இப்போ விபரீதமாச்சே”  சாருமதி நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள்.

“அப்போ உனக்கு பார்த்த மாப்புள ஆதித் என்று எண்ணி தான் நீ அமைதியா இருந்தியா?” மாளவிகா எந்தக் கேள்வியும் கேட்காமல் சம்மதித்ததற்கான காரணத்தை புரிந்து கொண்டான் வான்முகிலன்.   

“ஆதித் யாரு?” மாளவிகா புரியாமல் கேட்க,

“அடிப்பாவி கூட இருந்தவன் பேர் கூடவா தெரியாது?” சாருமதி மகளை முறைத்தாள்.

வான்முகிலன் கேள்வி கேட்கும் பொழுதே ஆதிசேஷன் பேரன்களோடு உள்ளே நுழைந்தார். 

“ஆதி….” என்று மாளவிகா ஆதித்தை பார்த்து நிற்க, “இவளா மணப்பெண்?” என்று மளவிகாவை அதிர்ச்சியாக பார்த்தான் ஆதித்.

உள்ளே வரும் பொழுதே மாளவிகா ஆதித் யாரு? என்றதும், ஆதித் மாளவிகாவை பார்த்து அதிர்ந்ததும் ஆதிரியனின் கண்களில் விழ, வரும் பொழுது தம்பியிடம் பேசியதை வைத்து நடந்தது என்ன என்று ஊகித்தான்.

ஆதிரியனை பார்த்து சுபலக்ஷ்மி திகைத்து விழித்தவள் உள்ளே ஓடிவிட்டாள்.

ஆதிசேஷனை பார்த்ததும் அனைவரும் அவரை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத முகபாவையிலையே வரவேற்றனர்.

ஆதிசேஷனும் மற்றவர்களை கண்டு கொள்ளாது “வான்முகிலன் நாம கொஞ்சம் தனியா பேசலாமா?” என்று கேட்க, அவரை காரியாலய அறைக்கு வான்முகிலன் அழைத்து செல்ல கூடவே ஆதிரியனும் சென்றான்.

வரும் வழியில்லையே ஆதிரியன் ஆதித்திடம் அவனும், மாளவிகாவும் இருக்கும் காணொளியை காட்டி விசாரித்தான்.

அதிர்ந்தவன் ஆதிசேஷனை பார்த்து அமைதியாக, “அந்த பொண்ணு வான்முகிலனோட அக்கா பொண்ணு, நீ ஏதாச்சும் திட்டம் போட்டு அந்த பொண்ண அப்யூஸ் பண்ணியிருந்தா இப்போவே சொல்லிடு. அவன் கண்டு பிடிச்சிட்டான்னா உன்ன சும்மா விடமாட்டான்” என்றான் ஆதிரியன்.

ஆதித் ஆதிசேஷனை தான் பார்த்தான். தன்னை தாத்தா காப்பாற்ற மாட்டாரா? என்று பார்த்தானா தெரியவில்லை.

“என்ன பாக்குற? உண்மைய சொன்னீனா காப்புத்துவேன். இல்லனா நானே உன்ன அவன் கிட்ட விட்டுடுவேன்” பேரனை மிரட்டினார் ஆதிசேஷன்.

“நான் திட்டமெல்லாம் போட்டு அவள மடக்கல. வாந்தி எடுத்தா ஹெல்ப் பண்ணத்தான் ரூமுக்கு கூட்டிட்டு போனேன். அங்க அவ ப்ரிஜ்ஜுல இருந்த ஜூஸ்” என்று தான் போதை மருந்து கலந்ததை கூற வந்து சட்டென்று நிறுத்தியவன் “நான் துணி வாங்கிட்டு வரும் பொழுது அவ குளிச்சிட்டு வெளிய வந்த அப்போ நமக்குள்ள…” தாத்தாவை பார்த்து விட்டு அமைதியானான்.

“நீ போதை மருந்து எடுக்குறது எங்களுக்குத் தெரியும். நீ வேணுமென்றே தான் ஜூஸ்ல போதை மருந்து கலந்து ப்ரிஜ்ல வச்சிருக்க, அது தெரியாம அந்த பொண்ணு ஜூசை குடிச்சாளோ, இல்ல நீயா கொடுத்தியோ தப்பு உன் மேல தான் இருக்கு. நீ தானே போதை மருந்து கலந்த ஜூசை ப்ரிஜ்ஜுல வச்ச” ஆதிரியனுக்கு கோபம் பொங்கினாளும் அமைதியாக மிரட்டினான்.

“நீதான் போதை மருந்து கலந்து கொடுத்த என்று தெரிஞ்சா வான்முகிலன் சும்மா இருக்க மாட்டான். உன்ன காப்பாத்தணும்னா நான் என்ன பேசினாலும் நீ அமைதியா தலையாட்டனும்” என்ற ஆதிசேஷன் ஆதிரியனை பார்த்தார்.

காணொளியில் மாளவிகா ஜூஸ் அருந்தி விட்டு திரும்பும் பொழுது ஆதித் உள்ளே வருவது தெளிவாக இருக்க ஆதித் உளறியதில் என்ன நடந்தது? என்று ஆதிரியன் மாத்திரமன்றி ஆதிசேஷனும் கண்டு பிடித்துவிட்டார்.

ஆதிசேஷன் என்ன யோசிக்கிறார் என்று ஆதிரியனுக்கும் புரிந்தது. அந்த எண்ணத்தில் தான் ஆதிரியனும் ஆதித்தை வண்டியில் ஏற்றி இருந்தான்.

“முகிலன் இது திட்டமிட்ட சதி போல உங்களுக்குத் தோணலயா?” அறைக்கு வந்த உடனே ஆதிசேஷன் கேட்டார்.

“சதிதான் உங்க பேரன் பண்ண சதி” வான்முகிலனுக்கு ஆதிரியனை பற்றியும் தெரியும் ஆதித்தை பற்றியும் நன்றாகத் தெரியும்.

மாளவிகா சொன்னதை வைத்தே என்ன நடந்தது என்று கண்டு பிடித்து விட்டான். ஆதித்தின் மேல் கொலைவெறியே வந்ததது. வீட்டாரின் முன் பொறுமையை இழந்து, கைநீட்டி  விட்டால் அதன் பின் எல்லா உண்மைகளும் அன்னைக்கு தெரிந்து விடும். அன்னை கேட்க்கும் கேள்விகளுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது என்று பொறுமை காத்தான்.

“என் பேரன் பண்ண தப்ப நான் மறைக்கவோ, அவன் தப்பே பண்ணலன்னு சொல்லவோ இங்க வரல. ஆனா இது நடந்து கிட்டத்தட்ட எட்டு மாசமாகுது. அப்போ வராத இந்த வீடியோ ஆதிரியனுக்கும், உங்க வீட்டு பொண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் பொழுது வருது என்றா அதுக்கு காரணம் நமக்குள்ள பிரச்சினை வரணும், இந்த நிச்சயதார்த்தம் நிற்கணும் என்று மட்டும் தான்” என்றார் ஆதிசேஷன்.

அது வான்முகிலனுக்கும் புரியாமலில்லையே. அதனால் தானே மளவிகாவிடம் நடந்தது என்ன என்று பொறுமையாக விசாரித்தான்.

ஆதிசேஷன் என்ன சொல்ல விளைகிறார் என்று வான்முகிலனுக்கு புரிந்தது “உங்க பேரன் ஆதித் எப்படிப்பட்டவன் என்று தெரிஞ்சும் என் அக்கா பொண்ண அவனுக்கு கட்டிக் கொடுக்க சொல்லுறீங்களா?” எவ்வளவுதான் கோபத்தை அடக்கினாலும் வான்முகிலனின் சிவந்த முகமும் குரலும் அவனை காட்டிக் கொடுத்தது.

“மிஸ்டர் முகிலன் ஆதித் தப்பு செய்யிறவன் தான் அவன் கெட்டவன் கிடையாது. அவன திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வர முடியும். இந்த சந்தர்ப்பத்தை அதுக்காக பயன்படுத்திக்கலாமே” என்றான் ஆதிரியன்.

“எல்லாம் சரி. நிச்சயதார்த்த பத்திரிக்கைல உங்க பேர்தான் இருக்கு. பன்க்ஷனுக்கு வர்றவங்க எல்லாரும் நீங்க இருக்க உங்க தம்பிக்கு ஏன் நிச்சயதார்த்தம் நடக்குது என்று கேலி, கிண்டல் செய்வாங்க. அதுவே அந்த வீடியோவை பத்தி பேச சந்தர்ப்பம் அமைஞ்சிடும்”

தம்பிக்காக பார்க்கிறாயே உன் நிலைமையை யோசி என்பதற்காக மட்டும் வான்முகிலன் ஆதிரியனுக்கு அவ்வாறு கூறவில்லை. சம்பந்தப்பட்டது அவன் அக்கா பொண்ணும் அல்லவா. இதற்கான தீர்வு அவனிடமிருந்து. ஆனால் ஆதிசேஷன் என்ன நினைக்கிறார் என்றும் அவன் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது.   

மாளவிகா மற்றும் ஆதித் இருந்த காணொளியை ராம் வான்முகிலனிடம் காட்டிய உடனே அவன் நிலஞ்சனாவிடம் தான் ஓடியிருந்தான். ஊர், உலகத்தில் இது போல் நடக்கும் பொழுது நிவ்சாக பார்த்தவனுக்கு தன் குடும்பத்தில் நடக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.

இது போன்ற சிக்கலான தருணங்களில் நிலஞ்சனா புத்திசாலித்தனமான முடிவுகளை கூறி இருப்பதால் அவளிடம் ஆலோசனை கேட்டதில் ஆதிரியனுக்கு சுபலக்ஷ்மியை பேசினால் என்ன? என்று கேட்டிருந்தாள்.

ஆதிசேஷனின் குடும்பத்தில் எதோ தப்பித் பிறந்தவன் தான் ஆதிரியன். ஆதிசேஷனின் புத்திசாலித்தனமும், யாருடைய நற்குணம் என்றே தெரியவில்லை நல்லவனாக பிறந்துவிட்டான். மாளவிகாவை ஆதித்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியநிலையில் சுபியை ஆதிரியனுக்கு பேசினால் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகவும் இருப்பார்கள் ஒருவரை ஒருவர் பார்த்தும்கொள்வார்கள் என்றெண்ணினான். ஆனாலும் அவனாக எப்படி கேட்பது என்று ஆதிசேஷனின் முடிவுக்காக காத்திருந்தான்.

“நிச்சயதார்த்த பத்திரிக்கைல பேர் மாறிச்சு என்று சொல்லிக்கலாம்” என்றான் ஆதிரியன்.

“யார் பேர்?”அதையும் உன் வாயாலையே சொல்லிடேன். எனக்கு ஒண்ணுமே தெரியல என்பதை போல் தான் ஆதிரியனை பார்த்தான் வான்முகிலன்.

“பொண்ணு பேர் தான். நாம சம்பந்தம் பண்ணிக்க போறோம் என்றுதான் மீடியால வந்தது. மாப்புள நான் என்றாலும் உங்க வீட்டு பொண்ணு யார் என்று இதுவரை மீடியால வரல. அந்த வீடியோவால் மளவிகாதான் கல்யாண பொண்ணா என்று சந்தேகம்தான் படுறாங்க. அவங்களுக்கே உறுதியா தெரியல.

ஆதித்தும் மாளவிகாவும் லவ் பண்ணுறாங்க. எனக்கு உங்க இன்னொரு அக்கா பொண்ணைத்தான் பேசி இருந்ததாகவும். எங்க நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அவங்க நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததாகவும், ஒண்ணா பத்திரிக்கை அடிக்க கொடுத்ததால் பத்திரிக்கைல பேர் மாறிருச்சு என்றும் சொல்லிக்கலாம்” ஆதிரியன் நிறுத்தி நிதானமாகத்தான் பேசினான்.

இதையேதான் நிலஞ்சனாவும் கூறினாள்.

“வாறவங்க எல்லாரும் முட்டாளா?” திட்டமிட்டபடி எல்லாம் நடந்துவிட்டால் பிரச்சினை என்பது கிடையாதே. நடந்து விடுமா? சந்தேகம்தான். எத்தனை பேரை சமாளிப்பது.

“ஆதிசேஷன் குடும்ப விழா யாராச்சும் எதிர்த்து கேள்வி கேட்பாங்களா? பொண்ணும் மாப்பிள்ளையும் சந்தோசமா இருந்தா போதும் எந்த கேள்வியும் வராது. ரெண்டு ஜோடிக்கும் ஒரே நேரத்துல நிச்சயதார்த்தம் பண்ணிடுங்க. ரொம்ப யோசிக்காதீங்க. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்றிருந்தாள்.

நிலஞ்சனா கூறியதையே ஆதிரியனும் கூற, எல்லாம் நல்லபடியாக நடந்தேறும் என்றுதான் வான்முகிலனுக்குத் தோன்றியது. அவன் ஆதிசேஷனை பார்த்தான்.

ஆதிசேஷன் ஆதித்துக்கும், மாளவிகாவுக்கும் நிச்சயம் செய்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற எண்ணத்தில் தான் வந்தார். ஆதிரியனை பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. அவன் கூறிய பிறகுதான். அவர்களுக்கு நிச்சயம் நடந்தால் இவன் எந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை உணர்ந்தார்.

“ஆமாம் இல்ல. உங்க வீட்டு ரெண்டு பொண்ணுங்களை எங்க என் ரெண்டு பேரன்களுக்கும் கேட்டிருக்கணும். அது எனக்குத் தோணல. எது எப்படியோ நடக்க வேண்டியதுதான் நடந்திருச்சு” என்றார் ஆதிசேஷன்.

அனைவரும் நிச்சயதார்த்த வேலைகளை பார்க்க கிளம்பியிருக்க, நிலஞ்சனாவிடம் வந்த வான்முகிலன் “எப்படி உன்னால மட்டும் இப்படி யோசிக்கத் தோணுது? ஆதிரியனும் தீர்வோடு வரலைனா நான் எப்படி பேசணும் என்று நீ சொன்ன. ஆனா அதுக்கு அவசியமே இல்லாம போச்சு. எனிவே தேங்க்ஸ்” என்றான்.

“மீடியால மாப்புள ஆதிரியன் என்று சொன்னாலும் பொண்ணு மாளவிகா என்று சொல்லல. நிச்சயதார்த்த பத்திரிக்கை கொடுத்த பிறகுதான் இந்த வீடியோ வந்திருக்கு. அப்படினா அந்த எதிரி பத்திரிக்கையை பார்த்த பிறகுதான் வீடியோவை நெட்டுல விட்டிருக்கணும். அவனை பில்டர் பண்ண ஒரு வழி கிடைச்சது” என்றாள் நிலஞ்சனா.

“ஆமாம்” என்ற வான்முகிலன் அவள் அறிவுக்கூர்மையை கண்டு வியந்தான்.

“பவானி செத்திருந்தா இந்நேரம் அவ டெட் பாடி கிடைச்சிருக்கும். அவ செத்துட்டாளா? இல்ல கடத்தப்பட்டாளா? என்று தெரியல. எனக்கென்னமோ அந்த எதிரிக்கும் பவானி காணாம போனதுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று தோணுது”

“என்ன சொல்லுற? பவானி என் கிட்ட வேல பாக்குற சாதாரண ஸ்டாப்”

“பவானி என் பிரென்ட். அவள பத்தி எனக்கு நல்லா தெரியும். அவ உங்க பி.ஏ ராமதான் லவ் பண்ணுறா”

“ஹேய் என்ன சொல்லுற?” தனக்கு இது தெரியவில்லையே என்று வான்முகிலன் அதிர்ந்து விழிக்க,

“உங்கள சுத்தி இருக்குறத நீங்க இன்னும் கண்ண தொறந்து பார்க்கணும் மிஸ்டர் வான்முகிலன்” என்றாள் நிலஞ்சனா.

Advertisement