Advertisement
லாவண்யா அதிர்ச்சியுடன், “சார்!!!!” என்று அழைத்ததும்,
தியாகேஷ்வர் மென்னகையுடன்,”நீ என்ன சொல்ற தினேஷ்?” என்று கேட்டான்.
“இ..இதில் நான் என்ன சார் சொல்றது?”
“லாவண்யா உன் பெஸ்ட் பிரெண்ட்.. அதான் உன்னிடம் ஒபினியன் கேட்கிறேன்”
“உங்க விரு..(லாவண்யாவை பார்த்தவன் பார்வையை தாழ்த்தி)..ப்பம் போல் செய்ங்க சார்”
லாவண்யா அமைதியாக இருக்க, தியாகேஷ்வர் இருவரையும் ஒரு நொடி பார்த்துவிட்டு சாலையில் கவனத்தை செலுத்தியபடி சிறு புன்னகையுடன், “ஹ்ம்ம்.. யோசிச்சு சொல்றேன்” என்றான்.
தினேஷ் இனம் புரியாத சிறு வலியுடன் சாலையை வெறித்தான். தினேஷை வெறுப்பேத்துவதற்காக பேசத் தொடங்கியவள் தியாகேஷ்வரின் பேச்சினால் தனது நெஞ்சினோரம் இனம் புரியாத சிறு வலி பிறப்பதை உணர்ந்து மறுபக்க சாலையை வெறித்தாள்.
ரேஷ்மாவிடம் சற்று அசைவு தெரியவும் தியாகேஷ்வர் சாலையோரம் வண்டியை நிறுத்தி அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.
பதறியபடி அவள் கண் விழிக்கவும், லாவண்யா அவள் அருகில் வந்து அவளது தோள்களை ஆதரவாக பற்றிக்கொள்ள, தியாகேஷ்வர், “ரிலாக்ஸ்.. ரேஷ்மா.. யூ ஆர் சேஃப் நவ்” என்றான்.
மெல்ல பயம் தெளிந்தவள் கைபேசியில் தந்தையிடம்(மருத்துவரிடம்) தெளிவாக பேசத் தொடங்கியதும் தியாகேஷ்வர் வண்டியை கிளப்பினான். அடுத்த பத்தாவது நிமிடம் வண்டி ஒரு பிரபல மருத்துவமனையின் முன் நின்றது.
வண்டி நின்றதும் ரேஷ்மா ஓடி சென்று கண்ணீருடன் மருத்துவமனை வாயிலில் சிறு பதற்றமும், எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியுமாக நின்றிருந்த தந்தையை தழுவிக்கொள்ள, அவரும் கண்ணீருடன் மகளை தழுவிக் கொண்டார்.
தினேஷை மருத்துவமனையினுள் லாவண்யா அழைத்துச் செல்ல, தியாகேஷ்வர் மருத்துவர் அருகே நின்றான்.
மருத்துவர் மன நிறைவுடன் தியாகேஷ்வருக்கு நன்றி கூற,
அவன் மென்னகையுடன், “விடுங்க.. என் கடமை தானே” என்றவன், “சில பார்மாலிட்டீஸ் முடிக்க நாளைக்கு காலையில் நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஷன் வர வேண்டியது இருக்கும்” என்றான்.
“கண்டிப்பா சார்”
தியாகேஷ்வர் சுற்றுபுறத்தை நோட்டமிட்டுவிட்டு, “யார் இதை செஞ்சுருப்பாங்கனு நினைக்கிறீங்க?” என்று கேட்டான்.
“அக்கியுஸ்ட் சொல்லலையா சார்?”
“நான் உங்க சந்தேகத்தை கேட்டேன்”
“தெரியலை சார்.. நானும் யோசிச்சு பார்த்தேன் பட்….” என்று அவர் உதட்டை சுளித்தார்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க ரேஷ்மா?”
“தெரியலை சார் பட் சுபா இறக்குறதுக்கு முந்தின நாள் போன்ல பேசினப்ப ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸா இருந்தா”
“நீங்க காரணம் கேட்கலையா?”
“கேட்டேன் சார், அவ(ள்) ‘ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்.. அப்போ பேசிக்கலாம்‘னு சொன்னா”
அவன் மருத்துவரை பார்த்து, “மிஸ்டர் JPக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா?” என்று கேட்டான்.
“அப்படி யாரும் எனக்கு தெரிஞ்சு இல்லை சார்”
“ஆல்ரைட்.. மேலும் ஏதும் விவரம் வேணும்னா கேட்கிறேன்.. இப்போ நீங்க கிளம்புங்க.. நாளைக்கு காலையில் ஸ்டேஷனில் பார்க்கலாம்” என்று கூறியபடி மருத்துவருடன் கைகுலுக்கியவன் ரேஷ்மாவை நோக்கி, “கொஞ்ச நாள் எங்கேயும் தனியா வெளிய போகாதீங்க.. பி கேர்புல்” என்றான்.
“சுயர்.. தன்க் யூ வெரி மச் சார்”
சிறு புன்னகையுடன் தியகேஷ்வர் விடை பெற, மகளை அழைத்துக்கொண்டு கிளம்பிய மருத்துவர் சட்டென்று நின்று திரும்பி, “சார்” என்று அழைத்தார்.
தியாகேஷ்வர் திரும்பி பார்க்கவும், அருகே வந்தவர், “மிஸ்டர் JP இறந்த டைம்-ல அவருக்கு கொஞ்சம் பிபி அதிகமா இருந்துது.. காரணம் கேட்டப்ப பார்ட்னர் கூட சின்ன பிரச்சனைனு சொன்னார்”
“JP சாருக்கு பார்ட்னரா?”
“ஹ்ம்ம்.. நிறைய பேருக்கு தெரியாது.. அவர் ஸ்லீபிங் பார்ட்னர்”
“ஓ! யாரு?”
“மிஸ்டர் கௌரிநாதன்.. அவர் கடைக்கு எப்பவாது தான் வருவார்.. சொந்தமா ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் பண்றார்.. அவர் வீடு டவுன் **** தெருல இருக்குது“
“ஹ்ம்ம்.. தன்க் யூ டாக்டர்..” என்று கூறி விடை பெற்ற தியாகேஷ்வர் மருத்துவமனையினுள்ளே செல்லவும் தினேஷும் லாவண்யாவும் வந்தனர்.
தியாகேஷ்வர்,“அதுக்குள்ள ட்ரீட்மென்ட் முடிஞ்சுதா?”
தினேஷ் புன்னகையுடன், “பேஷன்ட் யாரும் இல்லாம ஈ ஓட்டிட்டு இருந்துருப்பார் போல” என்றான்.
லாவண்யா அவனை முறைக்கவும், தியாகேஷ்வர் தினேஷை பார்த்து ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.
தினேஷ் அலட்டிக் கொள்ளாமல், “டாக்டர் ஏதோ இவளுக்கு தெரிஞ்சவராம்.. இவளை பத்தி தெரிஞ்சவராச்சே! அதான் இவளுக்கு பயந்தே, போனதும் உள்ள கூப்பிட்டு தையல் போட்டு அனுப்பிட்டார்” என்றான்.
லாவண்யா கோபத்துடன், “உனக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பார்! நீ திருந்தவே மாட்ட” என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்.
தியாகேஷ்வர் புன்னகையுடன் தலையை அசைக்க, தினேஷ் சிறிது அசடு வழிந்தான்.
—————————————————————————————————————————————
மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த கீர்தன்யா அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மணியை பார்த்தாள்.
அவள் எரிச்சலுடன், “எனக்கு சாப்பாடு வேண்டா(ம்)மா” என்று கூற,
“எனக்கு பசிக்குதுடா.. உன்னை விட்டுட்டு சாப்பிட மனசு வரலை.. கொஞ்சமாச்சும் சாப்பிட வாடா..” என்று சாந்தியின் குரல் கேட்கவும், வேறு வழியின்றி தனது எரிச்சலையும் கோபத்தையும் மறைத்துக்கொண்டு கதவை திறந்து வெளியே வந்தாள்.
சாந்தி சிறு புன்னகையுடன் அவளது தோள்களை மென்மையாக பற்றி அழைத்துச் செல்ல, அவள் அமைதியாக உணவறைக்கு சென்று அமர்ந்தாள்.
யார் முகத்தையும் பார்க்காமல் உண்டேன் என்ற பெயருக்கு உணவை சிரிது கொறித்துவிட்டு அவள் எழுந்துக்கொள்ள, சாந்தி, “இன்னொரு இட்லி சாப்………………”
அவர் முகத்தை பார்க்காமல், “எனக்கு போதும் அத்தை.. இப்போ நீங்க நிம்மதியா சாப்பிடுங்க” என்று கூறி கைகழுவிவிட்டு தன் அறையை நோக்கி செல்ல, அவள் முன் அவசரமாக சேகர் வந்து நின்றான்.
அவள் நிமிர்ந்து பார்க்கவும், அவன், “எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேசணும் கீர்த்தி” என்றான்.
“நான் தூங்கனும்”
“ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்” என்று அவன் கெஞ்ச,
இதே வார்த்தைகளை கூறி அவளை கல்லூரிக்கு அவன் அழைத்துச் சென்றது ஞாபகத்திற்கு வரவும், அவனை கடுமையாக முறைத்தபடி பல்லை கடித்துக் கொண்டு, “இனி என்னிடம் இந்த வார்த்தைகளை எப்போதும் சொல்லாத” என்றாள்.
அவளது கோபத்திற்கான அர்த்தம் புரியாமலேயே அவன் சரி என்பது போல் தலையை ஆட்டினான்.
“வழியை விடு”
“ப்ளீஸ் கீர்த்தி எனக்கு கொஞ்சம் பேசணும்”
அவள் எரிச்சலும் கோபமுமாக அவனை பார்க்க,
அவன் அவசரமாக, “எனக்கு தெரியும் கீர்த்தி, நீ எதையோ மனசுக்குள் வச்சுகிட்டு ரொம்ப கஷ்டப்படுற” என்றான்.
அவள் புரியாமல் அவனை பார்க்கவும், அவன், “உனக்கும் அந்த போலீஸ்க்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
சட்டென்று நிமிர்ந்தவள், நொடி பொழுதில் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு அறியாதவள் போல், “எந்த போலீஸ்?” என்று கேட்டாள்.
“இன்னைக்கு காலைல உன் காலேஜ் கன்டீன்ல பார்த்தவரை சொல்றேன்”
“அவர் போலீஸ்ஸா?”
“கீர்த்தி ப்ளீஸ்.. ஏன் உனக்குள்ளேயே இப்படி கஷ்டப்படுற.. நான் உன் பிரெண்ட்…………..”
அவள் சட்டென்று அவனை முறைக்கவும், அவன் முகத்தை தாழ்த்தி சிறு குரலில், “அது.. நண்பன் கணவனாவதில் தப்பில்லையே… உனக்காக…………….”
“என்னைப் பொறுத்தவரை கணவன் நண்பனாக இருக்கலாம், ஆனா நண்பன் கணவனாக முடியாது” என்று கடுமையான குரலில் கூறியவள் அவனை சுற்றிக்கொண்டு அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.
அவளை மீண்டும் பழைய நினைவுகள் விடாது தாக்கியது.
————————————————————————————————————————————–
வண்டியில் செல்லும் போது தியாகேஷ்வர் மருத்துவர் கூறியதை கூற, தினேஷ், “சார்.. சந்தீப் மாமனார் பெயர் கூட கௌரிநாதன் தான்” என்றான்.
(சந்தீப் – சுபாஷினி வழக்கை முதலில் ஆய்வு செய்த காவல்துறை ஆய்வாளர்.)
“ஹ்ம்ம்.. எனக்கும் அதே சந்தேகம் தான்.. நாளைக்கு பார்க்கலாம்..“
லாவண்யா, “அப்போ குற்றவாளியை நெருங்கிட்டோமா சார்?”
“பார்க்கலாம்.. நாளைக்கு நீங்க மிஸ்டர் கௌரிநாதன் வீட்டுக்கு போங்க.. நான் மிஸ்டர் JP வீட்டுக்கு போறேன்”
லாவண்யா,“அங்க எதுக்கு சார்?”
“மிசஸ் JP கிட்ட சில கேள்விகள் கேட்கணும்”
தினேஷ், “சுபாஷினி மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பத்தியா சார்?”
“ஹ்ம்ம்” என்று கூறியவன் யோசனையில் இருக்கவும்,
லாவண்யா, “என்ன சார் யோசிக்கிறீங்க?”
தியாகேஷ்வர் புன்னகையுடன் சிறிது தலையை அசைக்கவும்,
தினேஷ், “வேற யாருலாம் உங்க லிஸ்ட்ல இருக்காங்க சார்?”
லாவண்யா, “லிஸ்ட்டா?”
தினேஷ் சிறு புன்னகையுடன், “சார் மைண்டுல தனி லிஸ்ட் இருக்கும்” என்று கூறிவிட்டு தியாகேஷ்வரை பார்க்க,
அவன், “சொத்துக்களின் கார்டியன் மிஸ்டர் ப்ரதாப் அண்ட் அவர் தம்பி மிஸ்டர் விஜயன்” என்றான்.
லாவண்யா யோசனையுடன் அவனை பார்க்க,
அவன், “நாளைக்கு நமக்கு நிறைய வேலைகள் இருக்குது லாவண்யா” என்றான்.
தினேஷ்,”சார் நாளைக்கு மிஸ்டர் கௌரிநாதனை பார்க்க நானும் போறேன்”
தியாகேஷ்வர் பதில் கூறும் முன் லாவண்யா அடக்கிய கோபத்துடன் “யாரும் எனக்கு துணையா தேவை இல்லை சார்.. ஒழுங்கா வீட்டுல உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க” என்றாள்.
அவளது அக்கறை மனதிற்கு இனிதாக இருந்தாலும் வெளியே, “இங்க யாரும் யாருக்கும் துணையா போக ஆசை படலைனு சொல்லுங்க சார்.. அவர் தான் சந்தீப் மாமனாரானு உறுதி செய்யத் தான் நான் போறேன்னு சொன்னேன்” என்றான்.
அவனது முதல் வாக்கியத்தில் அவளது மனம் வலிக்க, காரணம் புரியாமல் அவனை கோபமாக பார்த்தாள்.
அவன் அலட்சியமாக தோளை குலுக்கிவிட்டு வலியில் ‘ஸ்ஸ்‘ என்று முகம் சுளித்தான்.
உடனே பதறியவள் நொடி பொழுதில் அதை மறைத்து, கோபமாக, “நான் விசாரிச்சுட்டு இருக்கும் போது நடுவுல இவன் ‘ஸ்.. ஸ்‘னு சத்தம் போட்டு என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு தான் வீட்டில் இருக்க சொன்னேன் சார்” என்றாள்.
இவர்களில் சண்டையை பார்த்து அவர்கள் மனதை தெளிவாக புரிந்துக் கொண்ட தியாகேஷ்வர் மென்னகையுடன், “நாளைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கோ தினேஷ்” என்றான்.
“இதுலாம் காயமே இல்லை சார்.. சின்ன காயத்துக்கு பயந்து லீவ் போடுறதுக்கு நான் ஒன்னும் பொண்ணு இல்லை சார்”
“காயமே இல்லைனா டாக்டர் தையல் போட்டப்ப ஏன் உன் முகம் அஷ்ட கோணலா மாறுச்சு?”
“ஹ்ம்ம்.. தற்செயலா திரும்பினப்ப உன் முகத்தைப் பார்த்தேன், அதான் அப்படி சுளிச்சுருபேன்”
மனதினுள் எழும் வலியை மறைத்துக் கொண்டு அவள் பல்லை கடித்துக்கொண்டு அவனை முறைத்தாள்.
தியாகேஷ்வர், “உங்க சண்டையை நாளைக்கு போட்டுக்கோங்க.. இப்ப நீ கீழ இறங்கு தினேஷ்” என்றான்.
“ஓ! வீடு வந்துருச்சா.. தன்க் யூ சார்” என்று கூறி கீழே இறங்கியவன், கதவை மூடும் தருணத்தில் ஒரு நொடி அவளை பார்த்தான்.
நொடி பொழுதில் அவள் கண்ணிலிருந்து சிறு தவிப்பு மறைந்தது போல் அவனுக்கு தோன்ற, அவனையும் அறியாமல் அவளிடம் சிறு தலையசைப்புடன் விடை பெற, அவளும் தன்னை அறியாமல் தலையசைத்து விடை கொடுத்தாள்.
—————————————————————————————————————————————
யாரை இனி தன் வாழ்வில் பார்க்கவே கூடாது என்று கீர்தன்யா எண்ணியிருந்தாளோ அவனை இன்று பார்த்தவிட்ட கோபமும் எரிச்சலும், அந்த சந்திப்பிற்கு காரணமான சேகர் மீது திரும்பியது.
இலஞ்சியை விட்டு கிளம்ப துடித்தவள் இரவு நேரத்தில் தன்னை கிளம்ப விடமாட்டார்கள் என்பதால் வேறு வழியின்றி இயலாமையுடன் அமைதியாக இருந்தாள். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக தோன்ற, வெகு சிரமத்துடன் இரவை கடக்கத் தொடங்கினாள்.
—————————————————————————————————————————————
லாவண்யாவை வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வந்த தியாகேஷ்வருக்கு வழக்கம் போல் நித்தமும் அவன் சிந்தனையில் இருப்பவளின் ஞாபகம் வந்தது.
“தயா.. ரெண்டு வருஷத்துல எப்படி இலச்சுட்ட! கண்ணில் முன்பு இருந்த குறும்பு, துடிப்பு சிறிதும் இல்லையே!
என் மேல் எவ்வளவு கோபம்! ஆனா உண்மை தெரியும் போது என்ன சொல்லுவ? அப்பவாது என்னை, என் காதலை ஏத்துப்பியா?” என்று அவனது மனம் ஏங்கியது.
உடையை மாற்ற கூட தோன்றாமல் படுக்கையில் விழுந்தவனின் மனம் அவள் நினைவுகளில் விழுந்தது.
மொட்டை மாடியில் மூன்றாவது முறையாக சந்தித்தன்று நண்பனிடம் அவளை பற்றிய விவரங்களை கேட்ட பிறகே வீட்டிற்கு கிளம்பினான்.
வார இறுதிக்காக அவன் காத்திருக்க, ஒரு நாள் மாலை 7.45 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் எதிர்பாராத விதமாக அவளைப் பார்த்தான். காக்கி உடையின்றி சாதாரண ஆடையில் அவன் மகிழுந்தில் தன் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது, ஒரு பேருந்து நிறுத்தத்தில் அவள் சிறு பதற்றத்துடன் அந்த சிறுவனை இறுக்கமாக பற்றிக்கொண்டு நிற்க, அவள் அருகில் மூன்று இளைஞர்கள் சிரித்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
தியாகேஷ்வர் மனதினுள் நிலைமை ஏதோ செரியில்லை என்று தோன்றவும் வண்டியை நிறுத்தி கீழே இறங்கிச் சென்றான்.
அந்த சிறுவன், “எங்களுக்கு தெரியும்.. நீங்க உங்க வேலையை பார்த்துட்டு போங்க” என்று கோபமாக கூற,
அவள், “ஷ்.. நீ எதுவும் பேசாத” என்று கூற, இளைஞர்கள் நக்கலாக சிரித்தனர்.
“பாருடா பொடியனுக்கு ரோஷத்தை” என்றபடி ஒருவன் சிறுவனின் கன்னத்தை வருட, சிறுவன் அவன் கையை எரிச்சலுடன் தட்டிவிட்டான்.
தியாகேஷ்வரை கண்டதும் அவள் கண்களில் சிறு அலுப்பு தோன்றி மறைந்தாலும் முன்பு இருந்த பதற்றம் மறைவதை உணர்ந்தவன் அவள் அருகில் இயல்பாக சென்று, “சாரி மா.. கொஞ்சம் லேட் ஆகிருச்சு” என்றான்.
தியாகேஷ்வர் இயல்பாக பேசியதும், விலக தொடங்கியவர்கள் அவள் முகத்தில் எதை கண்டனரோ, விலகாமல் நின்றனர்.
ஒருவன், “மச்சி.. பட்சி முகத்தை பார்த்தா அவனை யாருன்னு தெரியாதுன்னு நினைக்கிறேன்” என்றான்.
மற்றொருவன் குரலை சற்று உயர்த்தி, “ஒரு பொண்ணு அழகா இருந்தா போதுமே தெரிஞ்ச மாதிரி வந்து பேசுவீங்களே.. இந்த சீன்-லாம் எங்க ஏரியால செல்லுபடி ஆகாது தம்பி.. கிளம்பு கிளம்பு..” என்றபடி தியாகேஷ்வரின் தோளை தட்டினான்.
தியாகேஷ்வர் அவனை பொருட்படுத்தாமல் அவளை தீர்கமாக பார்த்தான். அவள் குழப்பத்துடன் அவனை பார்த்துக்கொண்டிருக்க, முதலில் பேசியவன் தெனாவெட்டாக,
“அதான் கிளம்பு-னு சொல்றோம்ல.. இன்னும் என்ன லுக்கு.. கிளம்புடா” என்றான்.
தியாகேஷ்வர் அவளை பார்த்துக்கொண்டே,“சந்துரு அக்காவை கூட்டிட்டு போய் கார்-ல உட்காரு” என்று கூற, அவளும்(வேற யாரும் இல்லை நம்ம கீர்தன்யா தான்) சிறுவனும்(சந்துரு) அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இளைஞர்களில் ஒருவன் அவர்களுக்குள், “மச்சி உண்மையிலேயே தெரிந்தவனோ!” என்று சந்தேகத்துடன் கேட்க,
இன்னொருவன், “சும்மா இருடா.. பச்சி யோசிக்குறதை பார்த்தா அவங்களுக்குள் ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன்” என்றவன், “இவன் கிடக்கிறான்.. நீ வா செல்லம்.. நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றபடி அவள் கையை பிடிக்க முயற்சிக்க, அவள் அவசரமாக தியாகேஷ்வர் அருகே நகர்ந்தாள்.
தியாகேஷ்வர் அவளை பார்த்தபடி குரலை சற்று உயர்த்தி, “சந்துரு அக்காவை கூட்டிட்டு போ-னு சொன்னேன்” என்று கூற, அவள் தம்பியை அழைத்துக்கொண்டு, இரண்டடி தள்ளி நின்ற அவனது மகிழுந்தில் ஏறினாள்.