வெற்றி அம்மு இருவருமே அது பயிற்சி என்பதை மறந்து களம் கண்டிருந்தனர்.
அதுவும் முந்தையை நாளே அவனது நண்பர்களுடன் அவளை மோதவிட்டு அவளது சூட்சமங்களை, காலின் அசைவுகளை தெரிந்து வைத்திருந்தவன் அதற்கேற்றார்போல் கவனித்து விளையாடியதில் அவளைவிட முன்னிலையில் இருந்தான்.
சுற்றி இருந்த மாணவர் கூட்டம் “வெற்றி…வெற்றி…” என கோஷமிட அது அந்தச் சின்னவளை வெறுப்பேற்றியது. ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தினாள்.
தன்னுடன் சளைக்காமல் கம்பு வீசியவளை தன் கம்பால் அந்தரத்தில் வெற்றி தடுத்து நிறுத்த, இருவர் விழிகளும் மோதிக்கொண்டது.
“ஏய் நீ தான நேற்று அந்தப் பசங்ககிட்ட அடிவாங்கினது? நடிச்சியா?” என்றாள். அதில் என்னை ஏமாற்றிவிட்டான் என்ற கோபம் இருந்தது.
இருவருமே விளையாட்டில் சிறந்தவர்கள் என்பதால், கார்த்தி சற்றுத் தள்ளி மற்ற மாணவர்களை கவனித்தவன் அவ்வப்போது இவர்களிடமும் பார்வையை வைத்திருந்தான்.
வகுப்புவாரியாக கார்த்தி பயிற்சி அளிப்பதால் ஒருவரின் திறமையை மற்றவர் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அதுவும் அம்முவுக்கு அப்படி ஒருவன் இருப்பதே அன்றுதான் தெரியும். ஆனால் எப்போதும் கார்த்தியுடனே வளையவருபவளை வெற்றி அறிந்துதான் இருந்தான்.
அதுவும் அவனுக்குப் பிடித்த ஆசிரியை திவ்ய பாரதியின் மகள். அந்த ஊர் காவல் நாயகன் செழியனின் மகள் என்பது கூடுதல் சிறப்பு.
கார்த்தியை ஒரு ஆசானாக தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்த வெற்றியின் மனதில் ஆஸ்தான நாயகனாகப் பதிந்து போனவன்தான் அந்த ஊரால் வாயாறாப் பாராட்டப் பெற்ற செழியன்.
வளர்ந்தபின் தானும் செழியனைப்போல் கம்பீரமாக போலீஸ் உடையில் வலம்வர வேண்டுமென்பது அவனது கனவு! அந்த ஊர் முக்கால்வாசி சிறார்களின் கனவும் அதுதான். அந்த அளவுக்கு அவரவர் பெற்றோரால் பெருமையாகப் பேசப் பட்டவன் செழியன்.
ஊட்டும் ஒவ்வொரு கவளத்திலும் செழியனின் பெருமை இருக்கும். அந்த மலைக்கிராமத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் கார்த்தி மற்றும் செழியனின் பெயர் இருக்கும்.
அப்படிப்பட்டவனின் செல்ல மகளை ஊருக்கே பிடித்திருக்க அவனுக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா?
அவளின் நேரடியான கேள்விக்குப் பதில் சொல்லாமல், “எதிராளியை எடை போடுறதும் கார்த்தி ஆசான் கற்றுக் கொடுத்ததுதான். தெரியாது உனக்கு? நீ ஏன் என் நண்பனோட கையை உடைச்ச?” என்றான் அவனும் வீம்பாக.
“ஓ! அந்தத் திருடித் திங்கிறவன்தான் உன்னோட நண்பனா? நீயும் அதில் கூட்டோ?” என்றவள் தன் கம்பை உருவிக்கொண்டு மீண்டும் அவனை நோக்கிச் சுழற்றினாள்.
குனிந்து லாவகமாகத் திரும்பியவன், “இரண்டு இட்லிக்காக கையை உடைப்பியா? ரவுடியா டி நீ?” என்ற கேள்வியுடன் விலகி தப்பித்திருந்தான்.
தலைமை ஆசிரியர் அழைத்ததாகச் சொல்லவும், சீனியர் மாணவர்களை அவர்கள் இருவரையும் கண்காணிக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான் கார்த்தி.
இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்திருந்தாள் போலும், “வாடிப்போடி சொன்ன மண்டையப் பேத்திருவன்” என்று, ஓங்கி ஆக்ரோஷமாகச் சுழற்றியவளின் கம்புத்தடியின் முனை வெற்றியின் நெற்றியைப் பதம் பார்த்தது.
நெற்றியைப் பதம் பார்த்ததோடு நில்லாமல் அவன் இடதுமார்பிலும் குத்தி நிற்க, அலட்சியத்துடன் வெற்றிப் புன்னகைப் பூத்தாள் அம்மு எழிலரசி.
கூட்டம் வெற்றி என்ற ஆர்ப்பரிப்போடு அமைதியாக, “என்னடா குருவ மிஞ்சின சிஷ்யா! சின்னப்பொண்ணுகிட்ட அடிவாங்கிட்ட…” ஏற்கனவே வெற்றியால் கடுப்பாகிய சீனியர் ஒருவன் கைக்கொட்டிச் சிரித்தான்.
அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதா? ‘நான் தோற்றால் அது என் ஆசானுக்கு செய்யும் துரோகம்’ நொடியில் மார்பில் குத்திநின்ற கம்பை தன் தடிகொண்டு விலக்கி அந்தரத்தில் சுழன்றடிக்க, பயிற்சி வகுப்பு என்ற எல்லையைத் தாண்டி அந்த இடம் நிஜப் போர்க்களமானது.
பயிற்சியின் நெறிமுறையை முதலில் மீறியது அவள் என்றாலும் அவனும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
கார்த்தியை தோற்கவிடக்கூடாதென்று அவனும், அவனை ஜெயிக்கவிடக்கூடாது என்று அவளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டதில் அவர்களைப் போலவே வரைமுறையின்றி மோதிக்கொண்ட தடியின் முனைகள் உடைந்துச் சிதறியதை இருவருமே கவனிக்கவில்லை.
அவனது தோள் உயரம் கூட இல்லாதவள் நின்று சதிராடியதில் வியந்தவன், தன்னைப் பத்திரம் காட்டி மிரட்டிய அந்த குண்டு கன்னங்களை சண்டையினுடேத் தேடினான்.
அவள் வளர்ச்சியின் அடையாளமாய் அது தன் புஷ்டியை சற்றே இழந்து வட்டமுகம் மறைந்திருந்தது. அது அவனை வாட்டம் கொள்ளச் செய்ய, முகத்தைச் சுருக்கி அவன் தடுமாறிய நொடியில் அவன் புருவத்தில் கோடு கிழித்திருந்தாள் குட்டி எழிலரசி.
அவன் கைகளின் வேகச்சுழற்சியில் மிரண்ட அம்முவும், தன்னையும் மீறி அதிவேகத்தில் தாக்க அவன் விலகும் நொடி சமன்செய்யப்படாமல் நெற்றியில் காயம் பட்டது.
அதுவும் அவள் ஏற்கனவே வேண்டுமென்றே மண்டையை உடைத்த அதே இடது புருவத்தின் மத்தியில்..
உடைந்த முனைக் கிழித்ததில் கோடாய் தீட்டப்பட்ட இரத்தம், சின்னவளை நோக்கி வீசப்பட்ட அவனின் தடியில் பட்டு அவள் முகத்தில் சிதறியது.
வீழ்த்துவதற்கெனவே அவளின் கால் அசைவுகளை மட்டுமே அவதானித்து வந்தவன் சண்டை ஆரம்பித்த பதினொராவது நிமிடங்களில் அவளது சிலம்பத்தை விழச்செய்து வீழ்த்தியும் இருந்தான். அதுவரை அவனது நெற்றியில் வடிந்த இரத்தத்தை அவன் உணரவே இல்லை.
வெற்றிப் புன்னகையுடன் அவள் முகம் கண்டவன் அதில் தீட்டப்பட்ட இரத்தக் கறையில் பதறித்துடித்து தன் தடியை அதிவேகத்தில் தூக்கி எறிய தோற்றுவிட்ட இயலாமையில் வேகமாக அங்கிருந்து நகர்ந்தவளின் வலக்கையை பதம்பார்த்தது அந்த முறிந்த தடியின் முனை.
இருவருமே ஒருவரை அறியாமல் ஒருவர் இரத்தக் காயப் படுத்தி இருந்தனர்.
அவன் புருவ மத்தியில் கிழித்த தடியின் முனை A என்ற வடிவத்தையும் அவள் வலது உள்ளங்கையில் படிந்த தடியின் முனை தலைகீழாக V என்ற வடிவத்தையும் பெற்று அழியாத் தழும்புகளாய் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாயின.
தலைமை ஆசிரியர் அறையிலிருந்து வந்த கார்த்தி இருவரின் கோலம் கண்டு பதறியவன் முதலுதவி முடித்து விசாரிக்க, இருவருமே ஒரு சேர தடி முறிந்து இருந்ததைக் கவனிக்கவில்லை என்றனர்.
சுற்றி இருந்தவர்களும் பயந்துபோய் அதையே பின்பாட்டுப் பாட, தன் மருமகளைப் பற்றி அறிந்தவனாக, “அம்மு…” என்றான். அவளோ மறுத்துத் தலையாட்டி ‘ப்ராமிஸ்’ என்பதாய் தொண்டையைப் பிடித்தாள்.
அவனுக்குத் தெரியாதா அவள் சத்தியத்தின் இலட்சணம். இருந்தும் மொத்தமும் கூட்டுக் களவாணிகளாய் இருக்க யாரையெனத் தண்டிப்பது.
“இரண்டு பேரும் ரூல்ஸ் மீறி இருக்கீங்க. நீங்க எல்லாரும் கைத்தட்டி வேடிக்கைப் பார்த்துருக்கீங்க… சோ உங்க யாருக்கும் அடுத்தவாரம் நடக்கப்போற காம்படீஷன் வரை நான் பயிற்சியே தரப்போறதில்ல. முடிஞ்சா பயிற்சியே இல்லாம ஜெயிச்சிட்டு வாங்க!” மொத்தமாக தண்டித்தான்.
“சார்…” என்று அந்நேரம் அனைவரும் பதறினாலும் வெற்றிப்பெற்றே திரும்பினார்கள்.
கார்த்தியின் பயிற்சி அப்படி. ஒரு வாரம் அல்ல ஒரு மாதம் பயிற்சியே இல்லை என்றாலும் கோப்பையை விட்டுவிடமாட்டார்கள் என அவனும் அறிவான்.
“ஏன்டா அப்போ புடிச்ச சண்டையாடா அந்த வாண்டு உன்னிட்ட இன்னமும் முறுக்கிட்டுத் திரியுது?” கதை முழுவதும் கேட்டு முடித்த விஜய் ஆச்சர்யமாய் வெற்றியிடம் கேள்வி எழுப்ப, ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் புன்னகையுடன் தலையாட்டினான் வெற்றி.
“எதாவது ஒரு பக்கம் ஆட்டித் தொலைடா! ஒன்னும் புரியல.” காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் புஜத்தில் இடித்தான். இருவரும் விஜயின் காரில்தான் அம்முவைப் பார்க்க வந்திருந்தனர். வரும்போது விஜய் ஓட்ட இப்போது வெற்றி காரை ஓட்டினான்.
அதன்பிறகான நாட்களில் இருவரும் பள்ளியில் அவ்வப்போது எதிரும் புதிருமாக சந்தித்துக் கொண்டாலும் அவள் முறைப்புடனும் இவன் சிரிப்புடனும் கடந்து சென்றனர்.
சமயத்தில் அவன் சிரிப்பது வெறுப்பேற்றும், கூடவே திருடித் தின்ற நண்பனுடன் அவனைக் கண்டாலோ தொலைந்தான்.
“திருட்டுக் கூட்டு” என உதட்டை வளைத்து அவள் முனுமுனுப்பது துல்லியமாக இவன் செவியை அடையும். இவனும் போடி மூஞ்செலி என்பான். அழகான அம்மு எழிலரசி என்ற பெயரைக் கொலை செய்வதில் அவனுக்கு அலாதி இன்பம்.
இருவருமாய் வாங்கிய பரிசுக் கோப்பையை அவரவர் உயர்த்திப் பிடித்தபடி இணைந்து நிற்கும் புகைப்படம் ஒன்று பள்ளியில் மாட்டப்பட்டிருக்கும். அந்த புகைப்படத்தைக் காரை செலுத்தியபடியே தனது அலைபேசியில் எடுத்து நண்பனிடம் காட்டினான் வெற்றி.
வெற்றி காக்கி உடையை அணிந்ததும் சிறப்பு விருந்தினராய் அந்தப் பள்ளிக்கு அழைக்கப்பட்டிருக்க, அப்போது ஆசை ஆசையாய் அந்த புகைப்படத்தை தனது அலைபேசியில் சுருட்டிக் கொண்டிருந்தான்.
இவன் நெற்றியில் ஒட்டப்பட்ட மருத்துவமனை பேண்டேஜும் (bandage), உயர்த்திப் பிடித்த அவள் கையில் ஒட்டப்பட்ட பேண்டேஜும் தெளிவாய்த் தெரிய அந்த புகைப்படம் அவனின் பொக்கிஷமானது.
“இவ்ளோநாளும், நீ கப்பு வாங்கினதைத்தான் அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கிறன்னு தப்பா நினைச்சிட்டேன் மச்சான்” என்ற விஜய் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“இந்த சிறுத்தை அந்த சில்வண்டுகிட்ட சிக்கி பலவருஷம் ஆச்சோ? இது தெரியாம நான்…” என்றவன் விழுந்து விழுந்து சிரிக்க, “இப்போ நீ வாய மூடல மவனே நீதான் காரை ஓட்டனும்” என்று செல்லக் கோபத்துடன் நண்பனை மிரட்டினான் வெற்றி.
“நாலாவது படிக்கும்போதே குட்டிபாப்பாவ கிஸ் பண்ணப் போய் அடி வாங்கினவனாடா நீயி…?” விஜய்யின் கேலியில் வண்டியை ஓரமாய் நிறுத்தியேவிட்டான் வெற்றி.
மறுபக்கம் வந்து நண்பனை குமுறு குமுறென்று குமுறினான்.
“எரும.. எரும அந்த வயசுல என்னடா தெரியும்? பப்ளிமாஸ் மாதிரி கொழுகொழுன்னு இருந்தா. கொஞ்சப் போனேன் குத்திட்டா. எனக்கு அது ஞாபகம் கூட இல்ல. ஆனா அந்த விரல் நீட்டி பத்திரம் காமிச்ச பப்ளிமாஸ் கண்ணுக்குள்ளயே நிப்பா.” என்றவனின் முகம் வெட்கத்தைப் பிரதிபலித்தது.
சிவந்து விட்ட முகத்தை மறைத்து, “நீயே ஓட்டுப் போடா” என்று நண்பனை ஓட்டுநர் இருக்கைக்கு தள்ளிவிட்டவன், அந்த இருக்கையைத் தான் ஆக்ரமித்துக் கொண்டான். அந்த நினைவுகளின் இனிமையில் அதற்குமேல் ஓட்ட முடியும்போல் தோன்றவில்லை.
ஜன்னலோரமாய்த் திரும்பிக் கொண்டவனின் இதழ்கள் வெட்கச் சிரிப்பில் துடித்தது.
“ச்சீ…திரும்பு! உன் வெட்கத்தைப் பார்க்கவா இவ்ளோ தூரம் வந்தேன்? மேல சொல்லு!” என்றவனும் நண்பனின் சிவந்துவிட்ட முகத்தை வெகுவாய் இரசித்தான்.
தானும் சிரித்து, வாகனத்தைக் கிளப்பிய விஜய், “அப்புறம் பேசினாளா?” என்றான் கதை கேட்கும் ஆர்வமுடன்.
‘இல்ல’ என்று தலையாட்டி மறுத்தவனுக்குள் ஆழ்ந்த பெருமூச்சி.
“அவ ஒன்னு நினைச்சிட்டா அவ்ளோ லேசுல மாத்திக்க மாட்டாடா. என் ஃப்ர்ண்ட் கையை உடைச்சா சொன்னேன்ல அவன் டெய்லி அந்தப் பொண்ணோட சாப்பாட்ட திருடித் தின்னுருக்கான். அது தெரியாம அன்னைக்கு நான் அவனுக்கு ஆதரவாப் பேசவும் என்னையும் அவனோட கூட்டுன்னு நினைச்சிட்டா.
அதும் இல்லாம அன்னைக்கு நடந்த பயிற்சி போட்டில முன்னாடியே அவ அசைவுகளைத் தெரிஞ்சிக்க நான் சண்டை போடத் தெரியாத மாதிரி நடிச்சி ஏமாத்திட்டேன்னு கோபம் வேற.
அப்போல்லாம் என்னடா தெரியும்? அவ முறைச்சா. நான் சிரிச்சேன் அவ்வளவுதான். கார்த்தி ஆசானோட கையைப் புடிச்சிட்டு அவ நடக்கும்போது மட்டும் என்னையறியாம எனக்குப் பொறாமை வரும். அவ்ளோ பிடிக்கும் அவரை” என்றவனுக்குள் அந்த ஆறடி மனிதனின் கம்பீரத் தோற்றம் வந்து போனது.
“அப்புறம் எப்போதான் அவமேல இருக்கிறது லவ்வுன்னு புரிஞ்சிக்கிட்ட?”
ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “என் அப்பாவோட இறப்புல” என்றான்.
சில நிமிடங்கள் மௌனமானவனின் அமைதியைக் கெடுக்காமல் வண்டியை இலாவகமாகத் தன் ஊரை நோக்கித் திருப்பினான் விஜய். இரயிலில் பயணச்சீட்டு எடுத்திருந்தவனை விஜய்தான், காரில் அம்முவைப் பார்த்துவிட்டு கூடவே இருநாட்கள் தன் ஊரில் தங்கச் சொல்லி வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.
ஊருக்குள் நுழைந்ததும், சுற்றிலும் பச்சைப் புல் வெளிகள் அவன் மனதை இலக்கி இருக்க, “அப்பா இறந்த சமயம், பல வருஷம் கழிச்சி என் அம்மு என்கிட்ட தானா வந்து பேசினா” என்றவன் அந்த நாள் நினைவுகளுக்குள் சென்றான்.
“சாப்பிடாமக் கிடந்தா மட்டும் உன் அப்பா உயிரோட வந்திருவாரா?”
மதிய உணவு இடைவேளையில் கல்பெஞ்சில் தலைவவைத்துப் படுத்திருந்த வெற்றியின் கண்ணில் நீராய்க் கோடு வழிந்திருக்க தலையை நிமிர்த்தினான்.
“சொல்லு, சாப்பிடாமக் கிடந்தா மட்டும் உன்னோட அப்பா திரும்ப வந்திருவாரா” இப்போதும் இடுப்பில் கைவைத்து முறைத்தபடிதான் நின்றது அவனது மூஞ்செலி.
அப்போது செழியன் மாற்றலாகி வேறு ஊருக்குச் சென்றிருந்தான். கூடவே சின்னவளை மட்டும் அழைத்துக்கொண்டு அம்முவை மட்டும் கார்த்தியின் பொறுப்பிலேயே விட்டுச் சென்றிருந்தனர்.
திடிரென அவள் வந்து பேசுவாள் என எதிர்பார்த்திராதவன் நண்பனைக் கேள்வியாய் ஏறிட்டான்.
“அவனை என்ன பார்க்கிற? இந்த சோத்து மூட்டைதான ஒரு வாரமா உன் சோத்தைத் திங்குது!”
கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் கல்மேடையில் கண்ணீர்க் கோடுகளுடன் வெற்றி கவிழ்ந்தடித்துக் கிடக்கும் தோற்றம் அவளை என்னவோ செய்தது.
முதல் இரண்டு நாட்களை சாதாரணமாகக் கடந்தவள் அடுத்த மூன்று நாட்களை பல்லைக் கடித்து கடந்திருந்தாள். பத்தாததற்கு அந்த திருட்டு சோத்து மூட்டைவேறு மதிய வேளைகளில் வெற்றியின் சாப்பாட்டையும் சேர்த்தே உண்பதைக் கண்டவளுக்கு அதற்கும் மேல் பொறுமை இல்லை.
அவனிடமிருந்த வெற்றியின் டிபன் பாக்ஸை புடுங்கிக்கொண்டு அவனையும் கூடவே அழைத்து வந்திருந்தாள்.
“கேட்கிறேன்ல, உனக்கென்ன காது செவிடா?” தன்னைவிட நான்கு வயதுப் பெரியவனிடம் பேசுகிறோம் என்ற நினைப்பே அவளிடம் இல்லை.
“என்ன சோத்து மூட்டை இதல்லாம் சொல்ல மாட்டியா? சோறு கிடைச்சா போதும்! கூடவே சுத்திட்டு எக்கேடோ போன்னு டீல்ல விட்டுடுவியா” வெற்றியின் நண்பனையும் சேர்த்து வைத்துத் திட்ட, “நான் சொன்னேன் எழிலா! அவன்தான் சாப்பிட மாட்டைக்கான் நான் என்ன பண்ண” என்றான் அவன்.
“இப்போ சாப்பிடப் போறியா இல்லையா?” என்றவள் டிபன் பாக்ஸை அவன் முன் வைத்துவிட்டுச் சட்டமாய் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“சாப்பிடாமக் கிடந்து ஒரு செத்தப் பாம்பை அடிச்சேன்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம். ஒழுங்கா சாப்பிட்டுட்டுத் தெம்பா வந்து என் முன்னாடி நிக்கிற! இரண்டுபேரும் சண்டை போடுறோம். புரிஞ்சிதா?” என்றவள்,
“நீ வரல கார்த்தி மாமா இங்க வருவாரு. இப்போ புரியும்னு நினைக்கிறேன்” என்றவள் சாப்பாட்டைத் திறந்து அவன் முன் வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.
அவள் நினைத்தது போலவே கார்த்தியின் பெயர் அவனிடம் வேலை செய்தது. அவன் மெதுவாக உண்பதை மறைந்திருந்து பார்த்தவள் அதன்பிறகே அங்கிருந்து அகன்றாள்.
அன்று ஒருநாள்தான் அதன்பிறகு அவனருகில் அவள் வரவே இல்லை. அன்று அவனிருந்த தோற்றம் அவளைப் பாதித்திருந்தது. மிரட்டி உண்ணச் செய்திருந்தாள். அவனுமே அதன் பிறகு தேறிக் கொண்டான்.
அப்போதுகூட அது காதலா என்று அவன் உணர்ந்தானில்லை. அவன் உயர் வகுப்பு முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைத்தபோது அவனின் தாயும் அவனை விட்டுச் சென்றபோதுதான் மீண்டும் தனிமையை உணர்ந்தான்.
அப்போதெல்லாம், ‘சாப்பிடாமக் கிடந்தா உன் அப்பா உயிரோட வந்திருவாங்களா சொல்லு?’ அவளின் குரல் காதுக்குள் ஒலிக்க அந்த மிரட்டித் தூங்க வைக்கும் அன்னை அவனுக்குத் தேவைப்பட்டாள்.
பத்திரம் காட்டி மிரட்டிய பப்ளிமாஸ் அவனுக்கு தேவைப்பட்டாள். போகப் போக அவளே அனைத்துமாகி நிற்பதை உணர்ந்தவன் உறவாய் அவள் வேண்டுமென்று முடிவெடுத்திருந்தான்.
அதற்கான விதையை அவனறியாமலே அடிமனதில் தூவிவிட்டது கார்த்தி எனும் மாபெரும் மனிதன்.
அதன் பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளைப் பார்த்து வருவதை வாடிக்கையாக்கினான்.
“அப்போ நான் வந்ததாலதான் அவ காதல் உனக்குத் தெரிஞ்சிதுன்னு சொல்லு.” என்ற விஜயை வெற்றி முறைக்க, “நான் சிகரெட்டை குடுக்கலன்னா உன் மேல இருக்க அக்கறை உனக்குத் தெரிஞ்சிருக்குமா? ஐயாவோட ராசி அப்படி!” என்று சட்டைக் காலரை உயர்த்தியவன் அறியவில்லை அந்தக் காதல் முளைவிடும் முன் கருகப் போவதும் அவனால்தான் என்று!