அன்று இரவு செழியனிடம் பேசி வைத்த கையோடு வெற்றியின் அலைபேசி சிணுங்கி ஒலி எழுப்ப, நேரம் அப்போதே இரவு பதினொன்றை நெருங்கி இருந்தது.
இந்நேரத்தில் யார்? புது எண்ணாக இருக்கவும், “ஹலோ வெற்றி ஹியர்” என்ற கம்பீரமான குரலில் மறுமுனை மௌனம் சாதித்தது.
இரண்டு மூன்று முறை குரல் கொடுத்தும் பதில் இல்லாமல் போக அவன் முகத்தில் மென்னகை.
அதே மென்நகை மாறாமல் அலைபேசியையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், சில நொடிக்குப் பின், “அம்மு எனக்கு ஒன்னும் இல்லம்மா” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.
அதைக் கேட்டதும் அலைபேசி துண்டிக்கப்பட அவன் புன்னகை விரிந்தது.
‘இராட்சசி’ சந்தோஷமாய் முனுமுனுத்துக் கொண்டான்.
அவள் எண்ணிலிருந்துகூட எனக்கு அழைக்க மாட்டாளாமா? இந்நேரத்தில் எங்கு சுற்றுகிறாள்? யாருடைய எண் இது? திரும்ப அதே எண்ணிற்கு அழைத்தான்.
ஆண்குரல் கேட்டது. “பேட்ரோல் (Patrol)போலீஸ். எமர்ஜென்ஸின்னு வாங்கி பேசிட்டுப் போனாங்க சார்” என்றான் ஒரு இளைஞன்.
அவளுக்கு இன்று ரோந்துப் பணியும் கிடையாது. இரவுப் பணியும் கிடையாது என்று அறிவான். சாப்பிடப் பிடிக்காமல் தட்டில் கைக் கழுவியவள், கையோடு காக்கியை அணிந்துகொண்டு கிளம்பிவிட்டிருந்தாள்.அவனுக்காகத்தான் தூக்கமில்லாமல் சுற்றுகிறாள் என்று தெரிந்ததும் மனதில் பாரம் ஏறிய உணர்வு.
‘ஏன்டி படுத்தற?’ கண்மூடியவனை சுகமாய் அவளுடைய நினைவுகள் ஆக்ரமித்துக் கொண்டன.
செழியனின் அதே நூலிழை நம்பிக்கைதான் வெற்றியினுடையதும்.
பிடிக்கவில்லை எனில் சகித்துச் செல்லும் ரகமல்ல அவள். செழியன் நினைத்ததுபோல், கார்த்தியிடமோ இல்லை அவள் தந்தையிடமோ சொல்வாள் என்று அவன் யோசித்ததே இல்லை. அது அவளுக்கு அவசியமும் இல்லை.
கல்லூரிக் காலத்தில் துரத்தி துரத்தி காதலித்தவனை விரட்டி விரட்டி அவள் வெளுத்தக் கதையை அவன் அறிவான்.
அவளின் பயிற்சி காலங்களில்போல் மாதம் ஒரு முறை என்றில்லையென்றாலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது அவள் கல்லூரி வாயிலின் டீக்கடை பெஞ்சில் அவன் தரிசனத்தைக் காணலாம்.
விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் போக்கிடம் இல்லாத வெற்றி, அவள் முகத்தைக் கண்டே ஆறுதலைடைவான். சொந்தங்களற்ற அவன் உறவாக நினைப்பது அவள் ஒருத்தியைத்தான்.
அப்படியொரு நாளில்தான் அவள் கல்லூரியில் பின்னால் சுற்றி லவ் டார்ச்சர் செய்தவனை கல்லூரி மைதானத்தில் ஓட விட்டு அவள் வெளுத்திருந்தாள். அது பரபரப்பாக பேசப்பட்டு டீக்கடையிலும் அந்த வழியாக நடந்துச் சென்றவளைக் கைக்காட்டி தங்களுக்குள் பையன்கள் பேசிக்கொள்ள இவனுக்கும் செவி வழிச் செய்தியாய் தெரிய வந்திருந்தது.
காதல் மட்டும் சொல்லி இருந்தால் விட்டிருப்பாளா இருக்கும். தொடர்ந்து கெஞ்சியவன் கடைசியில் மிரட்டலில் இறங்கி உட்சபட்சமாக தற்கொலை செய்வதாக மிரட்ட, “ஏன்டா உனக்கு அப்பா அம்மா இல்லையா? இதுக்குத்தான் உன்னை பார்த்து பார்த்து பெத்துப் போட்டாங்களா? இந்த காலேஜ் ஃபீஸ் கட்ட உங்கப்பா என்ன பண்ணினார், எப்படி சமாளிச்சார்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா? இல்ல அவர்கிட்டதான் கேட்டிருக்கியா? என்று கேட்டுக் கேட்டே கையில் கிடைத்த கம்பால் மைதானத்தில் ஓடவிட்டு அவனை புரட்டி எடுக்க, அதற்காக மேடமிற்கு ஒருவாரம் கட்டாய விடுப்பு கல்லூரி நிர்வாகம் அளித்தது வரை அறிந்திருந்தான்.
அப்படிப்பட்டவள்தான் இவன் டீக்கடை வாசலில் காத்திருப்பது தெரிந்தும் கண்டும் காணததுபோல் கடந்துசெல்வாள்.
அந்த டீக்கடையை கடக்கும்போது மட்டும் அவள் பார்வை ஒருநொடி கடையின் வாயிலில் படிந்து திரும்பும்.
அதற்கே, ‘ஓரப்பார்வை வீசுவாள் உயிரின் கயிறில் அவிழுமே! செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே!’ என்று உருகிப்போவான் வெற்றி. இரண்டாவது வரியை நினைத்து பெருமூச்சொன்றை வெளியிட்டபடி அவன்பார்வை அவளையே பின்தொடரும்.
அவளது நொடிநேரப் பார்வையில் அடுத்த மூன்று மாதங்களை ஓட்டிவிடுவான்.
சிலசமயம் முறைத்தபடி செல்வாள். ஏன் என்று யோசித்துப் பார்த்தால் அவன் வந்து மூன்று மாதங்களுக்கும் மேலான நாட்களாக இருக்கும். என்னைத் தேடினாளா? நம்ப முடியா உவகையுடன் உள்ளத்தில் சில் என்ற உணர்வுத் தாக்கும். அவன் பயிற்சி முடிக்கும் தருவாயில்தான் அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் தன் பயிற்சித் தோழன் விஜயுடன் அவளைக் காணச் சென்றிருந்தான்.
இரண்டுநாள் லீவு கிடைக்கவே அம்முவை காண கிளம்பியவனுடன் தொத்திக்கொண்டான் அவன் ஆருயிர் நண்பன் விஜய். அவன் கொஞ்சம் ஜாலிப் பேர்வழி. கல்யாணம் ஆகும்வரை பெண்களை சைட் அடிப்பதை கண்ணும் கருத்துமாக செய்த கேரளத்து கட்டழகன்.
திருமணத்தின் பிறகு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மாறி மனைவியிடம் சரணாகதி அடையலாம் என்ற கொள்கை கொண்டவன்.
அன்று விஜய் வழக்கம்போல் கல்லூரிப் பெண்களுக்கு நூல் விட்டுக் கொண்டிருக்க, வெற்றி அம்முவின் வரவிற்காக காத்திருந்தான்.
“ஏய் அதுவா பாருடா உன் ஆளு!” கல்லூரி முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தியை வெற்றியிடம் கைக்காட்டியதோடு, “ஏ அம்முகுட்டி சேச்சி…” என்று வாயில் விரல்களை குவித்து சத்தமாக அழைத்தவனைத் திரும்பி என்னங்க ண்ணா? என்றது அந்தப்பெண்.
“டேய், அவ இல்லடா” என்று விஜயின் தலையிலயே போட்டவன், “ஒன்னும் இல்லம்மா. அவன் வேற யாரோன்னு சாரி…” என்ற வெற்றி கைக்காட்டி அந்தப் பொண்ணை போகச் சொல்ல, “சாரி பேபி” என்று தானும் டாட்டா காண்பித்தான் விஜய்.
அது வெற்றியின் ஆள் இல்லை என்றதும் சேச்சி பேபி ஆகி இருந்தாள்.
அந்தப்பெண் இருவரையும் முறைத்துவிட்டுச் செல்ல “டேய் கொஞ்சம் சும்மா இருடா! அம்மு பார்த்தா என் முதுகுலயும் சேர்த்து டின்னு கட்டுவா. உன்னை கூட்டிட்டு வந்து பெரியத் தப்புப் பண்ணிட்டேன்” என்றவன் தலையிலடித்துக் கொள்ள, “அண்ணா இரண்டு டீ” என்ற குரலில் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
அவன் முதுகுக்கு பின்னாலிருந்து வந்த குரலில் அதிர்ந்து திரும்ப, தோளில் தொங்கிய பையோடு இவனை முறைத்தவள், “அண்ணா, டீ நல்ல கொதிக்க கொதிக்கக் குடுங்க” என்று உடன் வந்த தோழியின் புறம் திரும்பிக் கொண்டாள் அவனது எழிலரசி.
“இது ரெகுலரா வர தலைவலிதான். என்ன மூணு மாசத்துக்கு ஒரு தடவை வரும் இந்தத் தடவை பொறுப்பே இல்லாம ஆறுமாசங் கழிச்சி வந்திருக்கு! என்றவளின் பார்வை வெற்றியின் மீது கோபமாய் பதிந்து தோழியிடம் திரும்ப, “சூடா டீக்குடிச்சா சரியாப் போய்டும் விடு!” என்றாள்.
“அது ஒன்னுமில்லைங் சிஸ்டர் ட்ரைனிங்காக வெற்றியை டெல்லிக்கு
அனுப்பிட்டாங்க. அதான் தலைவலி ஆறுமாசமா வரல. அதானேடா! என்று அம்முவிடம் ஆரம்பித்து வெற்றியிடம் முடித்த விஜயின் வாயைப் பொத்தி வேறு பக்கமாக இழுத்துக் கொண்டுப் போனான் வெற்றி.
மனமோ பரந்த நீர்ப்பரப்பில் வெளிவரும் மூச்சுக் குமிழியாய் சந்தோசத்தில் திணறிக் கொண்டிருந்தது.
இதுநாள் வரை அவன் காதலுக்கு உயிர் இருக்கிறதா? இந்தக் காதல் அவளை அடையுமா? என்ற கேள்விகளுடன் தனிமையில் பலநாட்கள் உறக்கம் தொலைத்திருக்கிறான்..
நுனிவிரலைக்கூட அவனுக்கு இசைவாய் அசைத்ததில்லை அவள். கடந்து செல்கையில் மண்ணையும் கல்லையும் பார்ப்பது போல் நொடிநேரம் பார்வையை வீசிச் செல்வாள். அரிதிலும் அரிதாக ஓரிருமுறை முறைப்பாள்.
அந்த முறைப்பின் பொருள் கூட வெறுப்பா? இல்லை விருப்பா? என்று அறியமுடியாதபடிதான் இருக்கும். இவனாகத்தான் நாட்கள் கடந்து சென்றால் முறைக்கிறாள் என அர்த்தம் கண்டுபிடித்து மகிழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
அவளாக வாயைத் திறந்து சொன்னாலொழிய அது உண்மையா என அறிய முடியாது. அப்படி இருக்க இன்று அவள் தோழியிடம் பேசிய சாடை மொழி அப்பட்டமாகத் தன்னைப் பற்றியது என்பதில் உள்ளம் சந்தோச மிகுதியில் வெடித்துவிடும் போலானது.
நண்பன் எதையும் பேசி இந்த மகிழ்ச்சியைக் குலைத்து விடக்கூடாதென்றே டீக்கடையின் பின்பக்கம், மற்றவர்களை பாதிக்காத வகையில் சிகரெட் புகைப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு தள்ளிக் கொண்டு வந்தவனுக்கு மகிழ்ச்சியில் மூச்சிறைத்தது. தன் இதயத்தை மெதுவாக நீவி விட்டுக் கொண்டான்.
இதுவரை எந்த ஒரு எதிர்பார்ப்பையும் அவள் மீது வைத்திராது அன்பை மட்டுமே ஆலாபனை செய்தவவனின் மனம் இந்த எதிர்பாரா சந்தோசத்தைத் தாங்கமுடியாமல் உணர்ச்சிப் பெருக்கில் தள்ளாட,
புதிதாய் நீந்த கற்றுக் கொண்ட சிறுவனை கடலில் தூக்கிப் போட்டது போல் சில நிமிடங்கள் மூச்சுக் காற்றுக்குத் திணற வைத்திருந்தது.
எதிர்பார்ப்பில்லா அன்புதான்!
தகப்பன் மாரடைப்பில் சென்ற சில வருடங்களில் தாயும் சிவபதவி அடைந்துவிட சின்னஞ்சிறு வயதில் பசுமரத்தாணியாய் பதிந்து போனவளே, அவனுக்கு யாதுமாகி நின்றாள்.
தனிமைகள் கொடுமையான இரவுகளில், “சாப்பிடலைன்னா மட்டும் உன் அப்பா உயிரோட வந்துருவாரா என்ன? இப்போ சாப்பிடப் போறியா இல்லையா?!” அதிகாரமாக சின்னஞ்சிறு குரலொன்று அவனது காதருகில் ஒலிக்கும்.
தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அவள் பார்வை படும் இடத்தில் நின்று கொண்டு அவள் ஊதி ஊதிக் குடிப்பதை இரசித்துக் கொண்டிருந்தான்.
இராட்சசி அதன்பிறகு அவன் பக்கம் பார்வையைக் கிஞ்சித்தும் திருப்பவில்லை.
இவர்கள் பார்வை பரிமாற்றத்தை இரசித்தபடி தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை உருவிய விஜய், அதை பற்ற வைக்கும் லைட்டர் வெற்றி நின்ற இடத்திற்கு அருகில் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கவும்,
“டேய் இந்த சிகரெட்டை பத்த வச்சிக் குடுறா” என்று வெற்றியிடம் சிகரெட் ஒன்றை நீட்டினான்.
மகிழ்ச்சியின் பெருக்கில் இருந்த வெற்றியும் எதையும் யோசிக்காது அதை வாங்கிப் பற்றவைக்கப் போக, கேட்ட சலீரென்ற சத்தத்தில் திரும்பினான்.
“ஏய் அறிவில்ல உனக்கு எது கிடைச்சாலும் வாய்ல வைப்பியா?” அருகில் நெகிழிக் கழிவை தின்றுகொண்டிருந்த மாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள் அவனவள்.
“மச்சான் இது மாட்டுக்கா உனக்கா டா?” வாயில் சிகரெட்டுடன் அதைப் பற்ற வைக்க மறந்துப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டு குலுங்கி குலுங்கிச் சிரித்தான் விஜய்.
அன்றைய நாளில் இரண்டாம் முறையாக அவன் மீதான காதலை வெளிப்படுத்தி இருந்தாள்.
“எரும எரும… உன்னைக் கூட்டி வந்ததுக்கு என்ன பண்ணமுடியுமோ அதைப் பண்ணிட்ட. இந்தா நீயே பத்த வச்சிக்கோ!” வாயிலிருந்த சிகரெட்டை அவசரம் அவசரமாக அவன் கையில் திணிக்க, “தி கிரேட் வெற்றி பயப்படுறானா..? வாவ்! கண்கொள்ளா காட்சிடா!” நம்பமுடியாமல் சிரித்த விஜயின் முதுகில் ஒன்று போட்டான்.
“ஏம்மா அதுக்குன்னு என் டீ க்ளாஸ உடைப்பியா?” குப்பைத் தொட்டியில் சிதறிக்கிடந்த கண்ணாடி டம்ளரைக் கண்டு கடுப்பில் டீக்கடைக்காரர் கத்த, “இந்தாங்க அண்ணா இரண்டு டம்ளராவே வாங்கிக்கோங்க” என்று அருந்திய டீக்கும் சேர்த்தே காசை அவர் கையில் திணித்தாள்.
“இந்நொருதரம் அதை வாயில வச்சிப்பாரேன் சேதி தெரியும்” என்று மாட்டை கை நீட்டி மிரட்டியவளின் பார்வையோ முதல் முறையாக வெற்றியின் பார்வையை நேருக்கு நேராக முறைத்து நின்றது.
அவனுக்கு அந்தப் பழக்கம் கிடையாதுதான். இருந்தும், ‘மதர் ப்ராமிஸ்’ என்று தொண்டையில் இருவிரல் பிடித்து, மறுத்துச் சொன்னவனின் விழிகளும் ‘இனி தொடமாட்டேன்’ என முதல்முறையாக அவளிடம் கெஞ்சிற்று.
அவன் செய்கையில் புன்னகைவர சட்டென்று திரும்பிக்கொண்டாள். பள்ளிப் பருவத்தில் அம்மு தொண்டையைப் பிடித்து அப்படித்தான் ப்ராமிஸ் செய்து தன் மாமனை ஏமாற்றுவாள். அதையே அவன் நினைவூட்ட அவள் முகம் சிவந்துபோனது.
அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் திங்க, பாதிக்குடித்த நிலையில் தோழியின் டீ டம்ளரையும் புடுங்கி மேஜையில் வைத்தவள் அவளை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு நடந்தாள்.
‘இவள..’ பல்லைக்கடித்த அவளது தோழி, டீ போன கடுப்பில், “ஏன்டி நானா கேட்டேன்? இல்ல, டீ நானா கேட்டேன்? உனக்கு ஃப்ரண்டானதுக்கு அந்த மாட்டுக்கு ஃப்ரண்டாகி இருக்கலாம்! இலை தழையாவது நிம்மதியா சாப்பிட்டிருப்பேன்” என்று தலையிலடித்துக் கொள்ள,
“அதுக்கு அந்த மாடு ஒத்துக்கனுமே! நாளைக்கு வேணும்னா அதுகிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன். இப்போ வா! என்றவள் நில்லாது செல்ல புன்னகையுடன் தொடர்ந்தது வெற்றியின் பார்வை.
புள்ளியாய் மறைந்தவளிடமிருந்து பார்வையைத் திருப்பியவன், நண்பனை நெஞ்சோடு இறுகக் கட்டிக் கொண்டான்.
அவ்வளவுநேரமும் இழுத்துப் பிடித்திருந்த சந்தோஷம் அவன் இறுக்கிப் பிடித்ததில் தெரிய, “ம்..ம் டேய் விடுறா! செத்துரப் போறேன்” எனத் திமிறியப்பிறகே விட்டான்.
“ஏன்டா இவ்ளோ அன்பை வச்சிருக்கா, அப்புறமும் ஏன்டா உன்கிட்ட பேசாம முறுக்கிட்டுத் திரியுறா?” நண்பனின் கேள்வியில் மெலிதாய்ப் புன்னகைத்தான். அதற்கும் அவன்தானே காரணம்.
அம்முவிடம் ஒரு கெட்டப் பழக்கம் எதையும் அவ்வளவு எளிதாக மறப்பவள் அல்ல! பிடித்தப் பிடியில் பிடிவாதமாக நிற்பாள். அப்படித்தான் சிறுவயதில் அவர்கள் அடித்துக் கொண்டது இன்றுவரை தொடர்கிறது.
அப்போது அம்முவிற்கு ஆறு வயது. இரண்டாம் வகுப்பில் இருந்தாள். ஆறாம் வகுப்பு மாணவன்தான் வெற்றி.
இருவரும் பள்ளி முடிந்து, கார்த்தியின் சிலம்ப வகுப்பில் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
வேறோரு பள்ளியில் அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கான மாணவர்களின் தேர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அம்மு கையை விட்டுத் தானாக நடக்கப் படித்தபோதே அவள் கையில் சிலம்பக் குச்சியைக் கொடுத்திருந்தான் கார்த்தி.
தன்னுடைய மாமன் மகள் அம்முவுக்கு நேர்ந்தது உலகில் எந்த குழந்தைக்கும் நடந்திடக் கூடாது என்றே சுற்றி இருக்கும் பள்ளிகளில் தற்காப்புக் கலைப் பயிற்சியை இலவசமாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவன் தன் உயிர்ப்பூவை விட்டுவிடுவானா?
அவள் நடக்கப் படித்ததே கார்த்தியின் சிலம்பக் குச்சியைப் பிடித்துத்தான். அதில் வயது வித்தியாசம் பாராமல் தைரியமாகவே வெற்றியுடன் மோத விட்டான்.
அவள் நான்கு வருடங்களாக கற்றதை ஒன்னரை வருடத்தில் முடித்து கார்த்தியிடம் குருவை மிஞ்சிய சிஷ்யன் எனப் பெயர் பெற்றவன் வெற்றி.
குருவின் பெறாமகளைப் போன்றவள் தன்னைவிடவும் போட்டியில் சிறந்தவளாக இருப்பாளோ? சிறுவயது முதலே கம்பைப் பிடிப்பவள் வேறு. இரண்டுநாள் முன்புதான் அவளது தோழியின் சாப்பாட்டை எடுத்ததற்காக வெற்றியின் நண்பனின் கையைவேறு உடைத்து வைத்திருந்தாள்.
சந்தேகம் வழுக்க முந்தைய தினமே நண்பர்களைக் கொண்டு தன்னை அடிப்பது போல் அவள் முன் நாடகமாடச் சொன்னான் வெற்றி. அவன் நினைத்ததுப் போலவே அவனைக் காப்பாற்ற அருகிலிருந்த கம்பெடுத்துச் சுழற்ற ஆரம்பித்தது அந்தப் பொடிசு.
அவர்களுடன் மோதியவளின் கால் அசைவுகளை நிதானமாக அவதானித்தவன் உண்மையில் வியந்துதான் போனான்.
தன்னைவிட வயதில் பெரியப் பிள்ளைகள் என்றோ! உயரத்திலும் உடல் வாகிலும் சிறந்தவர்கள் என்றோ சற்றும் தயங்கவில்லை அவள். நின்று சதிராடி இருந்தாள்.
அவனுக்கு எட்டு வயதில்தான் கார்த்தி அந்தப் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வர களறி, சிலம்பம் முதல் தற்காப்புக் கலைகள் அனைத்தும் கற்க ஆரம்பித்திருந்தான் வெற்றி.
கார்த்தியின் மீது பெரும் வியப்பும் மரியாதையும் அளவில்லா அன்பும் உண்டாக, அந்த வயதில் அவன் கைப்பிடித்து துள்ளிக் குதித்தபடி வகுப்பினுள் நுழையும் அம்முவின் மீது பெரும் ஏக்கம் உண்டாகும் அவனுக்கு. ஏனெனில் கலை வகுப்பில் கார்த்தியின் செல்லப்பிள்ளை அவன்தான்.
துருதுருவென அங்கும் இங்கும் குதித்தபடி திரிந்துகொண்டிருந்த அந்த குண்டு பப்ளியின் மீதே நான்காம் வகுப்பு வெற்றியின் பார்வை இருந்தது. குட்டிப் பாவாடைச் சட்டையில் கார்த்தியின் தோள் மீதும் தலைமீதும் ஏறி அவள் செய்த அட்டகாசங்கள் கவர்ந்திழுக்க பொறாமையைத் தாண்டி அந்தச் சிறு பெண்ணை கண்சிமிட்டி இரசிக்க ஆரம்பித்திருந்தான்.
நான்கு வயது சிறுவனவன் அவனுக்கு அந்த கொழு கொழு பப்ளிமாஸை தூக்கிக் கொஞ்ச வேண்டும்போல் இருந்தது.
பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த கார்த்தியைத் தேடி ஓடியவளை நெருங்கியவன் அலேக்காகத் தூக்கி கொழு கொழு கன்னத்தில் முத்தமிட நொடியில் திரும்பிக் கொண்டு அவன் கண்களை விரலால் குத்திவிட்டு இறங்கி ஓடியது அந்த வாண்டு.
கண்களை கசக்கிக் கொண்டு அவன் திரும்பிப்பார்க்க, நின்று திரும்பிப் பார்த்த வாண்டு ஆட்காட்டி விரல் நீட்டி ‘பிச்சி பிச்சி’ என்றதுடன் ‘ப்ப் ப…’ என்று கழுத்தை ஒடித்துச் சொல்ல அவனுக்கிருந்த கோபம் ஓடியேப் போயிற்று.
அவனது எட்டு வயதில் பத்திரம் காட்டி மிரட்டிய சின்னவளின் தோற்றம் என்றும் அழியாமல் மனதில் பதிந்துபோகுமென அவன் நினைத்திருக்கவில்லை.