திருதிருவென அவள் முழித்த முழியும் படபடபடத்த அவள் பேச்சும் அப்பட்டமாய் காட்டிக் கொடுத்துவிட, “நீதான அன்னைக்கு மௌண்ட் ரோட்ல அதிவேகமா காரை ஓட்டிட்டுப் போனது?” என்றதும் அவளின் திகைத்தப் பார்வையில் அவனது புன்னகை விரிந்தது.
அதை முகத்தில் காட்டாது, “அது எவ்ளோ பெரிய குற்றம்னு தெரியுமா? சாட்சி வேணும்னா சிசிடிவி ஃபுட்ஏஜ் காட்டவா?” என்றான் சும்மாவேணும்.
அவள் டெய்லி வந்து போகும் சாலை என்பதில் சும்மா அடித்துவிட்டிருக்க அதற்கே வியர்த்துப் போனாள் அவள். பதற்றத்தில் அவன் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டாள். மருத்துவம் படிக்கிறாள் என்றுதான் பெயர். உண்மையில் மெல்லிய மனம் கொண்டவள். அதுதான் மிருத்யூ.
போலீஸ்காரனுக்கா போட்டு வாங்கத் தெரியாது? அதுவும் கிரிமினல்களுக்கே தண்ணிக் காட்டுபவனிடம் கோழிக்குஞ்சொன்று வித்தைக் காட்ட முயற்சித்தால் விட்டு விடுவானா?
“சார் ரொம்ப ஓவராப் போறீங்க! என்னைக்கோ நடந்ததுக்கு இன்னைக்கு விசாரிப்பீங்களா? லைசன்ஸ் எல்லாம் காட்டமுடியாது. வேணும்னா கேஸ் போடுங்க!” என்று தோளில் மாட்டிய கல்லூரி பையுடன் மிருத்யூவை நெருங்கியவன், அவளிடமிருந்த சாவியைப் பறித்தெடுத்தான்.
“சாவிதான வேணும்? இந்தாங்க வச்சிக்கோங்க!” என்று கான்ஸ்டபிளின் கையில் திணித்தவன், “நீ வா மிருது போகலாம்! அப்பாட்ட காரை அனுப்பி வைக்கச் சொல்றேன். பத்து நிமிஷத்துல வந்துடும்” என்று அவள் கைப்பிடித்து அழைத்தான். கல்லூரிக்குள் வெற்றி வேண்டுமென்றே வம்பிழுப்பதாய் நினைத்தான் அவன்.
சாவியும் பறிபோனதில், அப்பாவை வேற சமாளிக்கணுமே என்ற பயத்தில் அவன் இழுத்த இழுப்புக்கு நகராமல் செய்வதறியாது சிலையாக நின்றாள் மிருத்யூஸ்ரீ.
“சார் யாரு? ரொம்பத் துள்ளுறா போலத் தெரியுதே! ஸ்டேஷன்ல வச்சி இரண்டு தட்டுத் தட்டுவமா?” கான்ஸ்டபிளிடம் திரும்பியபடி வெற்றி கேட்கவும்,
உல்லாசமாக இதழ் குவித்து விசிலடித்தவன், “இன்னொரு முறை சொல்லு சில்வண்டு! கேட்கவே காது குளு குளுன்னு இருக்கு.” என்றான்.
புன்னகையுடன் அவன் கேட்கவும்தான் பதற்றத்தில் அவள் உறவுமுறை வைத்து அழைத்ததே புரிந்தது. மானசீகமாய்த் தலையிலடித்துக் கொண்டாள்.
அக்காவிடம் மாமா என்றழைத்து வெறுப்பேற்றியதும், அவனை இயல்பாக ஏற்றுக்கொண்ட மனதும் சேர்ந்ததில் அவளையும் அறியாமல் உளறி விட்டிருந்தாள்.
“ஆமா எப்போலர்ந்து இந்த ஞானோதயம்?” செழியன் வீட்டில் பேசி இருக்கவேண்டும் என்று யூகித்தாலும் சின்னவளை சீண்டினான்.
சிரித்தபடி அவன் கேட்க, அவளுக்கும் சிரிப்பு வந்தது. உதட்டை இழுத்துப் பிடித்து புன்னகையை காட்டாதிருக்க சிரமப்பட்டாள்.
“என்கிட்ட இப்போ லைசென்ஸ் இல்ல” என்றவள் கடகடவென திவ்யபாரதி லைசன்ஸை புடுங்கி வைத்தக் கதையைச் சொல்லி, அவன் கேள்விக்கு பதில்சொல்லாமல் தவிர்த்து சாமார்த்தியமாக மடைமாற்றினாள்.
“அப்போ, மேடம் ஊரைச் சுத்தறதைத்தான் பொழப்பா வச்சிருக்கீங்க. காலேஜூக்கு படிக்க வரல!”
“நான் 90 பர்செண்ட்டாக்கும்” பழிப்புக் காட்டினாள். உண்மையைச் சொல்லிவிட்டதில் இயல்பான குறும்பு மீண்டிருந்தது.
அதற்குள் அவர்கள் அருகே ஊபர் கார் ஒன்று வந்து நிற்க, கான்ஸ்டபிளிடம் இருந்த சாவியை வாங்கி அவளிடம் நீட்டியவன்,
“இனிமேல் கார் வேகத்துல ஓட்டுறதப் பார்த்தேன் லைசன்ஸ கேன்சல் பண்ணச் சொல்லி நானே லட்டர் குடுப்பேன்! புரிஞ்சிதா?” என்றவன் “பாதிபேர் அந்த கார்ல போங்க” என்று வந்து நின்ற வாடகைக் காரை கைக்காட்டினான்.
வம்பளத்துக்கொண்டே எப்போது புக் செய்தான்? ஆள் கெட்டிதான்! அவனது அக்கறையான செயல் சின்னவளின் மனதில் பதிந்து போனது.
தோழிகள், “நன்றி சார்” என்று புறப்பட இளைஞர் பட்டாளம் கொஞ்சம் முறுக்கிக் கொண்டது.
காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவள் தலையை வெளியே நீட்டி, “நன்றி மாமோய்! இது நீங்க நினைக்கிற மாமா இல்ல. போலீஸ் மாமா” என்றவள் உதட்டைச் சுழித்து அவனுக்கு டாட்டா காட்ட…
“அந்த சிறுத்தை வேணும்னா சிக்கும் இந்த சில்வண்டு சிக்காது மாமோய்” என்றவள் வேண்டுமென்றே உயர் வேகத்தில்தான் காரை எடுத்தாள்.
“சேட்டை” வாய்விட்டே சொன்னவனுக்கும் புன்னகையே! கோபத்தில் பதிலடி கொடுக்கும் அவனவள் ஒருவகை என்றால் சிரித்தபடி சொல்லி அடிக்கும் கொழுந்தியாவிடம் வம்பிழுப்பதும் பிடித்தது.
அவள் சென்றதும் செழியன் வீட்டில் பேசி இருக்கிறான் என்ற நினைப்பே அவனுள் பதற்றத்தைத் தந்திருந்தது.
அம்முவிடம் கேட்டிருப்பாரா? என்ன சொல்லி இருப்பாள்?
செழியனிடம் தன் காதலை தெரிவித்த அன்று இரவு அவனாகவே மீண்டும் செழியனை அழைத்திருந்தான்.
“என்ன வெற்றி! உடம்புக்கு எதுவுமா? இரவில் அழைப்பதால் பதறிக்கொண்டு கேட்டான்.
“ஐயம் ஃபைன் சார்!” என்றவன், “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு தெரியும். ஆனா எந்த விதத்திலும் நீங்க அம்முவ வற்புறுத்தக் கூடாது!” என்றான்.
செழியனுக்கு சிரிப்பு வந்தது. சைல்ட்ஹூட் லவ்வாம்! ஆனா வற்புறுத்தக் கூடாதாம்.
“நான் வற்புறுத்துவேன்னு உனக்குத் தோணுதா?” எதிர் கேள்வி கேட்டான்.
அவனுக்குத் தெரியாது என்று சொன்னாலும் உண்மையில் திவ்யபாரதியைப் பற்றி அறிவான்தான். செழியனை மீறி ஒன்றும் செய்யமாட்டார்தான். ஆனால் தாயாய் வற்புறுத்தக் கூடும் என்று தோன்றியது. அதை அவன் விரும்பவில்லை. அதனால்தான் மெனக்கெட்டு அழைத்ததே!
“என்ன ஆர்டரா சார்?” என்றான் செழியனும்..
“இல்ல ரெக்வஸ்ட்” என்றவன், “அம்முக்கு என் மேல கோபம் இருக்கு” என்றவன் கொஞ்சம் தயங்கி, “அது எங்க பர்சனல். முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆனா… “ என்றவன் பாதியோடு நிறுத்தினான்.
உங்க பெண்ணுக்கு என்னைப் பிடிக்கும் என்று தான் உணர்ந்ததை ஒரு தந்தையிடம் எப்படிச் சொல்வது?
ஆனால் செழியனுக்கு அந்த ஆனாவில் ஒழிந்திருக்கும் அர்த்தம் புரிந்தது.
வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கிப் போனவளின் உள்ளன்பை புரிந்து விடாது கைப்பிடித்தவனல்லவா செழியன்.
“அம்முவ வம்பிழுத்து வெறுப்பேத்தி இருக்கனேத் தவிர என்னைக்கும் நான் வற்புறுத்தினதே இல்ல! அவளா ஒருநாள் புரிஞ்சிப்பா. அதுவரை காத்திருக்க எனக்கு பொறுமை இருக்கு.” என்றவன் வைத்துவிட்டிருந்தான்.
செழியனின் இதயம் நிறைந்து போனது. அதுவரை மகளின் மனதுக்காக யோசித்திருந்தான். ஆனால் இருந்த கொஞ்சநெஞ்ச தயக்கமும் மழையைக் கண்ட மேகம்போல் வெற்றியின் பேச்சில் கரைந்துவிட தன் மறுபாதியிடம் இது விசயமாக பேச முடிவெடுத்தான்.
ஏதோ ஒரு நூலிழையில் மகள் மனதில் வெற்றி நுழைந்திருக்கிறான் என்று வெற்றிக்கு விபத்து ஏற்பட்டபோதே புரிந்து போனது.
வெற்றி காயம்பட்ட அன்று உணவுமேஜையில் ஒரு கவளம்கூட உள்ளே இறங்காமல் தயங்கி தயங்கி தந்தையின் முகத்தையே பார்த்திருந்தாள் அம்மு.
சற்று நேர தயக்கத்திற்குப் பின், “என்னவாம் பா ஏதோ பிரச்சனையாமே? நீங்க போனீங்களா? பார்த்தீங்களாப்பா? என்றாள்.
அவள் குரலில் இருந்த பரபரப்பில் நிமிர்ந்தவன், சுத்தமாய் வெற்றிக்கு அடிபட்டதே மறந்து விட்டிருந்தான். பார்க்கப் போகணும் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் வேலைப் பளு அவனை விடவில்லை.
மகள் கேட்டதும்தான் நினைவு வர, “இல்லம்மா. சுத்தமா மறந்துட்டேன்” என்றதும், “என்னப்பா நீங்க” என்றவளின் குரல் தடுமாற தலைகுனிந்து கொண்டாள்.
கண்கள் தளும்பி இருக்க வேண்டும். அதை மறைத்திருக்கிறாள் என்று வெற்றியின் முன்பு அமர்ந்திருந்த போது புரிந்து கொண்டான் செழியன்.
அலைபேசியில் அவன் உயிருக்குப் பெரிதாய் ஆபத்தில்லை என்று அறிந்துகொண்டதில்தான் அவனும் நிம்மதியாய் வேலையைப் பார்த்தது.
அம்முவும் அதை அறிந்திருந்தாலும் தந்தை வாயிலாக அவன் நலத்தை கேட்க விரும்பினாள் போலும். அது கிடைக்காததில் அதற்குமேல் ஒரு பருக்கைகூட இறங்கவில்லை. இயல்புக்கு மாறாக தட்டிலேயே கைக்கழுவிச் செல்லும் மகளை வித்யாசமாகப் பார்த்திருந்தான் செழியன்.
மறுநாள் காலை சூப்பை கொண்டு செல்ல திவ்யபாரதி செழியனை காத்திருக்கச் சொன்னபோதும், “அப்பாவுக்கு ஆயிரம் வேலை இருக்கும்மா. நீங்க போங்கப்பா!” என்று வீட்டிலிருந்து அவசரமாகத் துரத்தி விட்டதும் அவளேதான்.
அன்று திவ்யபாரதி அவளது கையில் சூப்பை கொடுத்தனுப்பவில்லை என்றாலும் ஏதேனும் காரணம் வைத்து வந்திருப்பாள் என்று மகளை மருத்துவமனையில் கண்டபோதே புரிந்து கொண்டான்.
அவள் வெற்றியை தொல்லையாக நினைத்திருந்தால் என்றோ வெற்றியின் பிரச்சனையை அவன் (செழியனின்)முன் வைத்திருக்கக் கூடும்.
ஆனால் இன்றுவரை செய்ததில்லை அவள். அவ்வளவு ஏன் அவள் உயிரையே வைத்திருக்கும் கார்த்தியிடம் சொல்லி இருந்தால்கூட இன்று வெற்றி என்ற ஒருவன் காணாமலே போயிருப்பான்.
தன் மாமனிடம் இன்றுவரை எதையும் மறைத்தறியாதவள் இந்த விசயத்தை முற்றிலுமாக மறைத்திருப்பதே அவள் ஆழ்மனதைச் சொல்லாமல் சொல்லப் போதுமாயிருந்தது.
ஒருவேளை கார்த்திக்கு தெரிந்திருக்குமோ? சிந்தனை ஓடிய அதே வேளையில் உறுதியாக இருக்காது என்று மறுத்து தலையாட்டினான். வெற்றி உயிருடன் நடமாடுவதே அதற்கு சான்று!
இன்றுவரை கார்த்தி முரடன்தான். அதுவும் அம்முவின் விசயத்தில் அவள் கட்டிவிட்டு வரச்சொன்னால் வெட்டிவிட்டு வருவான். அவளின் படைத்தளபதி, மாமனுக்கு மாமன், தாய்க்கு தாய் எல்லாம் அவன் ஒருவனே!