தன் முன்னால் நீட்டப்பட்ட லத்தியால் நிமிர்ந்து பார்த்தாள் மிருத்யூ.
வெற்றிதான் ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்தான். இன்னும் முழுதாக குணமாகாததால் ஒரு கை கட்டுப்போட்டு தொங்க விடப்பட்டிருந்தது. பார்த்ததுமே அவன் யாரென புரிந்துபோக, அவள் இதழ்கள் தானாக ‘மாமா’ என்றசைந்தது.
கடந்த பத்து பதினைந்து நாட்களாக இவனது பேச்சுத்தானே வீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. பற்றாக் குறைக்கு அம்மு வேறு அன்று மருத்துவமனையில் நடந்ததை இவளிடம் குறையாகப் படித்திருந்ததில், தமக்கையின் நினைவில் கூடவே புன்னகையும் எழுந்தது.
“உனக்கு நேரங்கெட்ட நேரத்துல உழைக்கிற வேலையாம். அதே ஃபீல்டுல இருக்கிறவனாலத்தான் புரிஞ்சிக்க முடியுமாம். அதுவும் வெற்றி மாம்…” என்றவள் அக்காவின் முறைப்பில், “ரொம்ப நல்லவராம்… சர்ட்டிஃபிகேட் குடுக்காதது ஒன்னுதான் குறை தெரியுமோ?” என்றாள் சிரித்து.
“நானும் ஃபிக்ஸ் ஆகிட்டேன் அவர்தான் எனக்கு மாமான்…னு” ராகமிழுத்து அவள் சொல்லி முடிக்கும்முன் தலகாணி பறந்து வந்து விழ சிரிப்புடன் விலகிக்கொண்டாள் மிருத்யூ.
“இதுக்கேவா? உன் நம்பிக்கை நட்சத்திரம் கார்த்தி மாமாகூட யோசிச்சாரே தவிர வேற எதும் சொல்லல” என்றதும் அம்முக்கு லேசாகக் கண்கள் கலங்கிற்று.
“மாமா ஓகே சொன்னாரா? மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டாள்.
“வேண்டாம்னும் சொல்லல” என்றதும் நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டாலும் தாய்க்குத் தாயானவனில் கோபம்தான்.
தன்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லையே? அலைபேசியிலாவது அழைத்து ஒருவார்த்தை சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.
அவளுக்கெங்கே தெரியும் அவள் மாமனும் அவளின் முடிவை அறியும்முன் தான் தலையாட்டக் கூடாதென்றே அமைதிக் காத்தான் என்று.
செழியனின் பேச்சிலயே அவனுக்கு முழு விருப்பம் இருப்பதை அறிந்து கொண்டாலும் தன் அம்முக்குட்டி சம்மதமில்லாது மேற்கொண்டு ஒரு அடியெடுத்துக் கூட வைக்க விரும்பவில்லை அவன்.
அது தெரியாத அம்முவோ, “பார்க்கறேன்! எப்படி முடிவு எடுக்கிறாங்கன்னு? நான் சும்மா இருந்தாதான? நான் காதலிக்கப் போறேன்…” என்றாள் முனுமுனுத்து.
அது தெளிவாக மிருத்யூவின் காதில் கேட்டுவிட, “காதலிக்கப் போறீயா…?கடையிலயா விக்குது? நீ கேட்டதும் எடுத்துக் குடுக்க” அக்கா கோபத்தில் எடுத்த முடிவு சிரிப்பைத் தர விழுந்து விழுந்து சிரித்தாள்.
“அது… காதலைச் சொல்லப் போறேன்னு சொன்னேன். துருவன் உன் காதையும் விட்டு வைக்கலியா?” என்றதும் வாசலில் படுத்திருந்தவன் பாய்ந்து வந்தான்.
யார் என்ன சொன்னாலும் என் மேலா பழி? ஓடி வந்து அம்முவின் மீது பாய்ந்து காதைக் கவ்வ, “செல்லக்குட்டில்ல. அக்கா பாவம்ல…” அதன் காதோடு அவசர உடன்படிக்கை ஒன்று இரகசிமாய் அரங்கேற அமைதியாய் அவள் மடியில் தலைவைத்துக் கொண்டான் துருவன்.
“லவ்வ சொல்லப்போறியா? இது எப்போ?” அதிர்ச்சியில் மிருத்யூவின் வாய் பிளந்து கொண்டது.
“அதெல்லாம் எப்பவோ?” என்ற அம்மு எழிலரசி ஒரு கையால் மற்றொரு கையின் நகத்திலிருந்த நகப்பூச்சை சுரண்டினாள். வெட்கப்படுகிறாளாம்.
“அய்யே! பார்க்க சகிக்கலக்கா உனக்குதான் வரலயே விட்டுடேன்” என்றவளை முறைத்தவள்,
“என்னடி கிண்டலா? எனக்கு வேலை கிடைக்கத்தான் இவ்ளோநாள் வெயிட்டிங். இவ்ளோதூரம் பேச்சுவார்த்தை வந்த அப்புறம் இனிமேலும் மறைக்க முடியாதில்ல! அதான் அப்பாட்ட சொல்லப்போறேன்” என்றாள் மனதில் ஒரு முடிவுடன்.
“சும்மா வாய்க்கு வந்ததை உளறாதக்கா! என்ற மிருத்யூ, “அதுக்கெல்லாம் நீ செட் ஆக மாட்ட!” என்று இன்னமும் நம்பாமல் வாய்விட்டுச் சிரித்தாள்.
இந்த பொடிசே நம்பள நம்ப மாட்டேங்குதே. இதுல அப்பா வாய்ப்பே இல்ல! எதாச்சும் தகிடுதத்தம் பண்ணியே ஆகணுமே! அம்முவின் சிந்தனை தறிகெட்டு ஓடியது.
ஆமா! மிருத்து சொன்னாமாதிரி கடையிலயா விக்குது? திடிர்னு காதலனா அறிமுகப்படுத்தனும்னா யாரைத் தேட? யோசித்துப் பார்த்ததில் பள்ளி முதற்கொண்டு கல்லூரி வரை ஒருவனின் முகமும் நேரத்துக்கு ஞாபகம் வந்து தொலையவில்லை.
கண்ணை மூடி யோசித்து யோசித்துப் பார்த்தாள். எல்லா இடத்திலும் வெற்றியின் முகமே வலம் வர, ‘ச்சை எங்க போனாலும் இந்த சங்கிமங்கிகூட போட்ட சண்டைதான் ஞாபகம் வருது. ட்ரைனிங் ப்ரீயட்? ம்ம்..’ அங்கேயும் மாதம் ஒருமுறையாவது வந்து அவளைச் சீண்டி சென்றது என்னவோ அவன்தான்.
நண்பனை பார்க்க வருகிறேன் என்று வருபவன் இவளைச் சீண்டாமல் சென்றதில்லை. அது எப்படித்தான் இவன் வர அன்னைக்கெல்லாம் அந்த பொறுக்கிக்கு உடம்பு சரி இல்லாம போகுமோ? அவனுக்குப் பதில் ட்ரைனிங் கொடுக்கிறேன் பேர்வழி என்று வந்து நின்று விடுவான். இப்போது நினைத்தாலும் இடுப்பெழும்பு வலியெடுக்க தன்னை மீறி இடுப்பில் கை வைத்திருந்தாள்.
வேண்டுமென்றே இவளை மட்டும் மைதானத்தைச் சுற்றி அதிகப்படி ஓட வைப்பதும். அதிகப்படியான பளு தூக்கச் சொல்வதும், குரங்கைவிட மோசமாக கயிற்றில் வித்தை காட்ட வைப்பதுமாக படுத்தி எடுத்திருந்தான் வெற்றி.
தலைகீழ் கம்புமேல் நடக்காதது ஒன்றுதான் குறை மீதி அத்தனையையும் செய்ய வைத்திருக்க, நினைக்க நினைக்கவே அம்முவின் கோபம் புசு புசுவென பொங்கி வர மின்னலென கண்முன் வந்து போனான் ஜெர்கின் பார்ட்டி.
‘எஸ்! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
அவன் ஒருத்தனை வச்சித்தான் இந்த கல்யாண பேச்சு வார்த்தையை இத்தோட நிப்பாட்டனும். இனிமேல் கல்யாணம்ங்கற பேச்சே எடுக்கக்கூடாது.
மனதில் முடிவு எடுத்தவளாக “ஹூர்ரே…” என்று கத்தினாள்.
அவ்வளவுநேரமும் கோபத்தில் ஏறி இறங்கிய மார்புடன் ஏதோ சிந்தையில் இருந்தவள் திடிரென கத்தவும், “என்னடி மாமா கிடைச்சிட்டாரா?” சிரிப்புடன் கேட்ட மிருத்யூ சுத்தமாக நம்பத் தயாராக இல்லை.
“அடி பிச்சுருவன்! உனக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா! அன்னைக்கு ஃப்ளைட்ல வந்தாரே ஜெர்கின் பார்ட்டி அவர் என்னோட லவ்வர்தான். நீ சொன்னா போல நாங்க ஒன்னாதான் வந்தோம்.” என்றாள் உதடு கடித்து.
தந்தையிடம் ஏற்கனவே மிருத்து ஜோடி போட்டு வந்தாங்க என்று சொல்லியிருந்ததில் அதையே உண்மையாக்கினால் என்ன? என்று தோன்றியது. தந்தை நம்பமாட்டார்தான். வேண்டுமென்றே உதவி செய்தாயா? என்ற கேள்வியும் எழும்தான்.ஆனால் இப்போதைக்கு இந்த பேச்சு வார்த்தை உறுதியாய் நின்றுவிடும். அது போதும். எல்லாம் முடிந்ததும் பின்னால் விளக்கிக் கொள்ளலாம் என்றிருந்தாள்.
“எதே” அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள் மிருத்வி!
“பைத்தியமாடி நீ! சும்மா எதேதோ உளறிட்டு இருக்க. அக்கான்னு பார்க்க மாட்டேன். அடி வெளுத்துருவேன் பார்த்துக்க” விளையாட்டுக்கு கூட தமக்கை சொன்னதை நினைத்துப் பார்க்க இயலவில்லை. கோபத்தில் பேசியதில் மூச்சு வாங்கியது.
பொய் சொல்லுகிறாள் என்று தெரிந்தது. பொய்யே என்றாலும் ஒரு திருடனையா காதலன் என்று சொல்வது?
ஆனால் மாறாக தங்கையின் கோபத்தில் குதுகலித்தாள் அம்மு!
‘எஸ்… எஸ்! இதான் எனக்கு வேணும். இந்த வாலுக்கே இவ்ளோ கோபம் வந்தா அப்பாவுக்கு? கலவரம் வெடிக்கும். அந்தக் கலவரத்தில் அந்த கடுவன் பூனை காணாமல் போவான். அதுதானே அவளுக்கு வேண்டியதும். அத்தோடு வீட்டிலும் திருமணம் என்ற பேச்சு சில வருடங்களேனும் எடுக்கப்போவதில்லை.
தான் எடுத்த முடிவே சரி என்று தோன்ற அவனையே காதலனாக அறிமுகம் செய்வது என்று முடிவே செய்து விட்டாள். திருமணப் பேச்சை முடிவுக்கு கொண்டுவர எண்ணி அந்நேரம் முடிவெடுத்த எழிலரசி அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க மறந்தாள்.
“விளையாட்டெல்லாம் இல்ல மிருத்யூ உண்மைதான்” தங்கையின் முகத்தைப் பிடித்து செல்லம் கொஞ்சினாள் தமக்கை.
“கை எடு!” என்று தட்டி விட்டவள். “சும்மா விளையாடதக்கா அவன் ஒரு ஸ்மக்ளர்!” என்றாள் தாள மாட்டாமல்.
“ம்ம்… தெரியும் டி! அவர் குடும்ப சூழ்நிலையால இப்படி ஆகிட்டார். எல்லாத்தையும் எனக்காக விட்டுர்றேன்னு சத்தியம் பண்ணிருக்கார்டி. மத்தபடி தங்கமான மனுஷன் தெரியுமா? பழகிப்பார்த்தா உனக்கேப் பிடிக்கும். என்னைய தாங்கு தாங்குன்னு தாங்குவார் தெரியுமா?” என்றாள்.
கண்களில் கனவு மின்ன சொன்ன தமக்கையைக் கண்டு தலையிலடித்துக் கொண்டாள் மிருத்யூ. இதுல நான் வேற பழகி பார்க்கணுமாக்கும்! மண்டை சூடேறியது.
‘இவளுக்குப் பைத்தியம் முத்திப் போச்சி திவ்யபாரதி கையால செருப்படி வாங்காம இவ அடங்கமாட்டா!’ மனதுக்குள் நினைத்தவளுக்கு கம்பீரமான வெற்றியின் முகம் கண்முன்னால் வந்து போனது.
வெற்றியைப் பற்றி முழுதாக இல்லையென்றாலும் அவ்வப்போது தங்கையிடம் பகிரும் பழக்கம் உண்டு அம்முவுக்கு. அதில் தமக்கையை ஓட்டுபவனில் அவளுக்கும் கோபம் வந்தாலும் அவனது சேஷ்டைகளை இரசித்ததுண்டு. அதுவரை அம்முவுக்காக அவன் பேச்சையே எடுக்காதவள், அக்காவின் பித்துக்குளித்தனத்தில் வெற்றிதான் தன் வருங்கால மாமா என்று முடிவே செய்து விட்டாள்.
இந்த பைத்தியத்தைத் தெளியவைக்க இதுமேல பைத்தியமா இருக்க மாமாவால மட்டுமே முடியும் என்று தோன்றியது.
மாறாக, “நாளைக்கு காலைல முதல் வேலையா கார்த்தி மாமாக்கிட்ட சொல்லப் போறேன்” என்ற அம்மு தலகாணியை இழுத்து வைத்து துருவனை கட்டிப்பிடித்தபடி உறக்கத்துக்கு தயாராக, ‘இவ லூசா? இல்ல நான்தான் லூசா?’ மிருத்யூக்கு பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை.
அதை நினைத்ததும் சிரிப்பு வர, அடக்கியபடி வெற்றியைப் பார்த்தவள், “நான் ஒன்னும் சில்வண்டு இல்ல! மூணாவது வருஷம் டாக்டருக்கு படிக்கிறேன்! என்றாள் முகத்தைப் போலியாய் சுழித்து.
“ஏன் காலேஜ் கட் அடிக்கக்கூடாதுன்னு உங்க சட்டம் சொல்லுதா? நான் படத்துக்குப் போனா உங்களுக்கு என்னவாம்?” நெஞ்சில் அணைத்துப் பிடித்தப் புத்தகத்தோடு அவனிடம் மல்லுக்கு நின்றவளிடம் அவனுக்கும் சுவாரஸ்யம் கூடியது.
தன்னைக் கடந்து சென்ற நண்பர்கள் கும்பலில், தெரிந்த முகச்சாயல் தெரியவும் கூர்ந்து கவனித்தவன் அது மிருத்யூஸ்ரீ, அம்முவின் தங்கை என்றதும் கல்லூரி முடிய இன்னும் நேரம் இருக்கவே கூப்பிட்டு நிறுத்தி இருந்தான்.
“இவ்ளோபேரும் எப்படி போவிங்க?” எண்ணிக்கை ஏழெட்டுக்கும் மேல் தெரிய தலைகளை எண்ணியபடி பார்வையை ஓட்டினான்.
“ஏன் சார்? நீங்க கொண்டு ட்ராப் பண்ண போறீங்களா?” தான் கொஞ்சமும் தமைக்கைக்கு குறைந்தவளில்லை என்பதுபோல் சரிக்கு சரி நின்றவளிடம் வாயாடுவது வெற்றிக்கும் பிடித்துப் போனது.
“கொழுந்தியா கேட்டு இல்லன்னு சொல்ல முடியுமா? ம்ம் சொல்லு! கவர்மெண்ட் வண்டில இழுத்துட்டு… ச்சீ ச்சீ அழைச்சிட்டுப் போறேன்” யாருக்கும் கேட்காவண்ணம் அவளருகே குனிந்த படி கண் சிமிட்டினான்.
அவர்கள் பேசியது அரைகுறையாக விழுந்ததில், “சார் நிஜமாவே எங்களை ட்ராப் பண்றீங்களா? மிருது கார் மட்டும்தான் இருக்கு.” என்றாள் அவளது தோழி ஒருத்தி.
வெற்றியின் உயரத்தில் மயங்கி அவள் வம்பிழுக்க, “வாய மூடுறீ” இரகசியமாய் கிள்ளி வைத்தாள் மிருத்யூ.
“ஒரு கார்ல இத்தனைப் பேரா?” கேள்வியாய்ப் பார்த்தான். அவனுக்கு செழியனின் காரைத் தெரியும் ஆறு பேரே சமாளித்துத்தான் அமரவேண்டும்.
ஆணும் பெண்ணுமாய் கலந்து இருந்தனர். நட்பில் அது பிரச்சனை இல்லை. ஆனால் நெருக்கியடித்து அமர்ந்தாலும் மூச்சுவிடக்கூட சிரமம்தான்.
“எங்க உன் லைசென்ஸ எடு பார்க்கலாம்” என்றான். இத்தனை பேரை வைத்து இவள் ஒழுங்காக ஓட்டுவாளா? என்ற சந்தேகம் வந்திருந்தது.
“அது வந்து… அது” என்று சற்று பதறி விழித்தவள், “நீங்க என்ன ட்ராஃபிக் போலீசா அதெல்லாம் காட்ட முடியாது” என்றாள் உடனேயே.
ஒரு வாரம் முன்புதான் ஊரைச்சுற்றுகிறாள் என்று திட்டி, லைசென்ஸை புடுங்கி வைத்ததோடு, அலைபேசியில் சேமித்து வைத்திருந்த புகைப்பட காப்பியையும் அழித்து விட்டிருந்தாள் அவளது அன்னை திவ்யபாரதி.
இன்று நண்பர்கள் சினிமாவுக்கு அழைக்கவும், சர்வீஸ் விட்ட இடத்திலிருந்து காரை எடுத்து வந்திருந்தாள்.
செழியனுக்கும் திவ்யபாரதியின் செயல் தெரியாததால் தயாராக இருந்த காரை மகள் மாலை வரும்போது எடுத்து வருகிறேன் என்றதும் சரி என மண்டையாட்டி இருந்தான்.
அவளின் நொடி நேர பதற்றத்திலேயே கண்டு கொண்ட வெற்றி, அருகிலிருந்த கான்ஸ்டபிளை அழைத்து “இந்தப் பொண்ணோட கார் சாவிய வாங்குங்க” என்றான் சிறு புன்னகையுடன்.
அதுநேரம் வரை மிருத்யூடன் சேர்த்து அவள் நண்பர்கள் குலாமும் படத்துக்கு போகும் நேரத்தில் குறுக்கே நந்தியாக நின்றிருந்தவனை முறைத்தபடி நின்றிருக்க, சாவியைக் கேட்டதில், “சார்” என்று மொத்தமாக கோரஸ் பாடினர்.
“உங்க ஃப்ரண்ட்ட லைசென்ஸ்ஸ காட்டச் சொல்லுங்க விட்டுர்றேன்” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி கறாராக அவன் நின்றுவிட “காட்டித்தான் தொலையேன்டி டைம் ஆகுது” அருகில் ஒருவள் மிருத்யூவின் காதில் கிசுகிசுத்தாள்.
“சும்மா இருடி” என்று சிடுசிடுத்தவளிடம், கான்ஸ்டபிள் சாவியைக் கேட்டு கை நீட்ட, “அதெல்லாம் முடியாது. ட்ராஃபிக்ல கேட்டா காட்டிப்பேன். உங்கிட்ட எல்லாம் காட்ட முடியாது. நான் என்ன குற்றவாளியா?” என்றவள் சாவியை உள்ளங்கைக்குள் ஒளித்துக் கொண்டாள்.