அத்தியாயம் : 6 

அம்மு ஸ்டேஷன் கிளம்பிக் கொண்டிருக்க,  “போகும்போது அந்தப் பையனைப் பார்த்து இதைக் குடுத்துட்டுப் போடி. பாவம். உனக்காகப் பார்த்து அந்தப் பிள்ளை காயம்பட்டுக் கிடக்குது” காலையில் பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்த அம்முவிடம் வெற்றிக்காக ஆட்டின் நல்லி எழும்பில் சூப்பு வைத்து அதை அவனிடம் கொண்டு கொடுக்கச் சொல்லி அம்முவிடம் நீட்டினாள் திவ்யபாரதி.

“அம்மா…! என்று பல்லைக் கடித்தவள், “அதான் அப்பா போனாருல்ல அவருக்கிட்ட குடுத்து விட வேண்டியது தான? எனக்கு ட்யூட்டிக்கு நேரமாச்சு” என்று காலுறையை சிரத்தையோடு மாட்டினாள்.

அவனை நான் பார்க்க போகணுமா? முடியாது. 

கைதான உடைஞ்சிருக்கு. என்னமோ புருஷனும் பொண்டாட்டியும் நேற்றிலிருந்து அங்கலாய்க்கிறாங்க. கேட்டா, அந்த இடத்துல நான் இருந்திருக்க வேண்டியதாம். அவனை யாரு குறுக்காலப் பாயச் சொன்னது?  

இதுல நல்லி எழும்பு நசுக்கிப் போட்டு சூப்பு வேற. ஆப்பைத் தானா தேடிப்போய் உட்கார்ந்தவனுக்கு இது ஒன்னுதான் கேடு. மனதுக்குள் பொறிந்தாலும் தாயிடம் காட்டிக் கொள்ளாமல் வெறுமனே மறுத்தாள். 

“மனசாட்சி இருக்காடி உனக்கு?” என ஆரம்பித்த திவ்யபாரதி, கடைசியில் கல்நெஞ்சக்காரியில் முடித்து உலகத்தில் இல்லாத கருணை, காருண்ய வகுப்பெல்லாம் எடுக்க, “இப்போ என்ன இதைக் குடுக்கணும் அவ்வளவுதான? வேணும்னா ஊட்டி விட்டுட்டே வரேன் போதுமா…” திவ்யபாரதியின் கையிலிருந்த ஃப்ளாஸ்க்கை வெடுக்கென பறித்திருந்தாள். 

“என்னது ஊட்டி விடப் போறியா…” திவ்ய பாரதி விழிக்க,

“ஊத்திக் குடுத்துட்டு வரேன்னு சொன்னேன். காதும் அவுட்டா. துருவன் உங்க காதையும் கடிச்சிடலையே?” என்றதும் துருவன் திரும்பிப் பார்த்து முறைக்க, நாக்கை நீட்டி பழிப்புக் காட்டினாள். 

அவன் தலையைத் தடவி கெஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டு சமாதானப்படுத்த சாதுவாய் வாலாட்டி வழியனுப்பி வைத்தான் துருவன்.

அன்னையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதைவிட இதை அவன் மூஞ்சிலயே ஊத்திட்டு வந்திருவோம் என்ற முடிவுடன் மருத்துவமனை வந்திருந்தவள், குண்டு அவங்க வைக்கல என்ற வார்த்தையைக் கேட்டதும் அசையாமல் நின்று விட்டிருந்தாள்.

அடுத்து அவன் சொன்ன உங்க பொண்ணை அட்ராக்ட் பண்ண என்ற வார்த்தையில் அக்னி பிழம்பானவள், ‘என்னைய மயக்க குற்றவாளியைத் தப்பிக்க விடுவானாமா? இவனெல்லாம் பெரிய போலீஸ் புடு…கி’ வாயில் வந்த அசிங்கமான வார்த்தையை விழுங்கிக் கொண்டாள். 

அதும் என்னைப் பத்தி அப்பா கிட்டவே… ‘ப்ச்’ கொழுப்பெடுத்தவன். எல்லாம் இந்த செழியன் குடுக்கிற இடம். செல்லப்பிள்ளையாட்டம் இடுப்புல வச்சி கொஞ்சினா…

வந்த நாள் முதலாய் வெற்றியின் புராணம் படிக்கும் தந்தையையும் வறுத்தெடுத்தாள்.

இன்னும் அவளுக்குப் பதிலாக அவள் தந்தையிடம் காதலைச் சொன்னதைக் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பாளோ! 

அதற்குள் “நிச்சயமா நம்ப மாட்டேன்!” என்ற செழியனின் குரல் கேட்க அறையின் வெளியே காதைத் தீட்டிக்கொண்டாள். 

“அவ செழியனோட பொண்ணு” என்றான் செழியனும் மீசையை முறுக்கி. இதுபோல் குரளி வித்தைக்கெல்லாம் மயங்குகிறவள் அவள் இல்லை என்று சொல்லாமல் சொன்னது அவன் தோரணை.

‘அதானே!’ கர்வம் கொண்டது அவன் பெண்ணும்.

“என் பொண்ணை அட்ராக்ட் பண்ண இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்ணி இருக்க மாட்டன்னு நம்புறேன்…” அவன் கேள்விப்பட்டது வரை வெற்றியின் போலீஸ் ரெக்கார்ட் வேறு கதை சொல்ல, பார்வை வெற்றியை ஆராய்ந்தது.

“எங்க ஆயா சத்தியமா உங்க பொண்ணோட இரக்கத்தை சம்பாதிக்கத்தான் குட்டி ட்ராமா!” என்றான் தன் தலையில் கை வைத்து.

‘அட கொலைகாரப் பாவி! உன் காதலுக்காக பச்சைக்கிளிய பலி குடுக்கப் பார்த்தியேடா!’ என்ற மைலாவின் புலம்பலைக் கேட்கத்தான் அங்கே ஆளில்லை. ‘என்ன ஆனாலும் இவனுக்கு உன் பொண்ணைக் குடுக்காத மாமு’ முறைத்தது.

“உங்க பர்சனல் தேவைக்காக, சிலரை கொன்னு மீதி குற்றவாளிகளை தப்பிக்க விட்டேன்னு சொல்றீங்க…” என்றான் செழியனும் விடாமல். 

வெற்றியின் திட்டம் வேறு என்பது இந்தத் துறையில் பழந்தின்று கொட்டைப்போட்ட செழியனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவர் மகளுக்கு?

“இவனுங்க வெறும் புல்லுங்கதான். ஆலமரம் வேற எங்கயோ இருக்கு. செத்தவன் யாரும் புத்தனில்ல. காலேஜ் பொண்ணுங்களுக்கு கஞ்சா பழக்கினவனுங்கன்னு உங்களுக்கே தெரியும்.” என்றான் வெற்றியும்.

தாடையைத் தடவியபடி, “குற்றவாளி யாரும் கிடைச்சா உயிரோட கொண்டு ஒப்படைங்க. உயி…ரோட புரியுதா?” வெற்றியைப் பற்றி அறிந்தவனாக இருமுறை அழுத்திச் சொன்ன செழியன் வெளியேறினான். 

வெளியில், ஒரு கையில் ஃப்ளாஸ்க்கும் மறுகையில் பழத்துடனும் கோபத்தில் சிவந்த செங்காந்தள் மலராக நின்றிருந்த மகளைக் கண்டதும் உதட்டில் மெல்லிய நகையோடியது செழியனுக்கு. இது தன் மனைவியின் வேலை எனப் புரிந்தது. 

காலையில் அவன்தானே கறிக்கடை சென்று எல்லாம் வாங்கி வந்தது. அவளும் தந்தையைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஒருவன் பெற்ற மகளை கவுக்க நாடகம் நடத்தினதாக சொல்லியும் அவன் காலையும் சேர்த்து உடைக்காமல் வந்த தந்தை மீது கோபம் வர, அவனின் உடை அவளை தடுத்துக் கொண்டிருந்தது.

அவள் கோபம் புரிந்தது போல் திரும்பி வெற்றியைப் பார்த்தவன், “இன்னொரு கைக்கும் கட்டுப்போட டாக்டர்ட்ட சொல்லிட்டுப் போறேன் வெற்றி. அதுவும் உங்க செலவுல” என்றவன் மெல்லியப் புன்னகையுடன் வெளியேறினான். 

அடுத்த கைக்கு கட்டுப்போடணுமா? எதுக்காம். இந்தக் கை நல்லாதானே இருக்கு. சந்தேகத்துடன் அடிபடாத வலக்கையை உயர்த்திப் பார்க்க அவன் கை மேலயே வந்து விழுந்தது ஆப்பிள் ஒன்று.

தொடர்ந்து கட்டிலில் பறந்து வந்து விழுந்தன ஆப்பிளும் ஆரஞ்சும். அதில் கண்ணைத் திறந்த மைலா ‘மறுபடியும் எவன்டா குண்டு போட்டது?’ என அடிபட்ட இறக்கையை விரிக்க முடியாமல் தெறித்து ஓடி வெற்றியின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டது. 

வெற்றி, ஆப்பிள் வந்த திசையைப் பார்க்க அங்கே கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக வாசலில் நின்றிருந்தாள் அம்மு. 

வாய்க்கு வசமாக வார்த்தைகள் சிக்கியும் தந்தையின்முன் அதைக் கொட்ட முடியாமல் தனக்குள்ளே விழுங்கியிருக்க அனல் தாங்காமல் முகம் தகதகத்து நின்றிருந்தாள்.

‘ஆத்தி இவளா! என்னைய பறக்க விடுறதே வேலையா வச்சிருக்காளே. இவளையாடா நீ காதலிச்ச!’ பயத்துடன் விழிகளை உருட்டியது மைலா.

மாறாக ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்ததுபோல் பளிச்சென புன்னகைத்தான் வெற்றி. அவனது ஒயிலா அவனைக் காண வருவாள் என நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.

“ஹேய் மூஞ்செலி! அத்தானுக்கு அடிபட்டிருக்குன்னு பார்க்க வந்தியா?” என்றவன் உற்சாகமாகத் துள்ள, அவள் கையிலிருந்த ஃப்ளாஸ்க் அவன் அடிபடாத கையின் முட்டியைப் பதம் பார்த்தது.  

“நிஜமாவே நீ எல்லாம் ஐ பி எஸ் எழுதித்தான் பாஸ் பண்ணியா? இல்ல அரசியல்வாதிங்களுக்கு கூஜா தூக்கி இந்த பதவிக்கு வந்தியா?” கையைக் கட்டிக்கொண்டு அவள் கேட்டவிதத்தில் சூப்பைவிட சூடாக கொதித்துக் கொண்டிருந்தாள்.

“ஷ்… ஆ” அடிபட்ட முட்டியை இன்னொரு கையால் தேய்த்து விடவும் முடியாமல் முனகினவன், “சர்டிஃபிகேட் வேணும்னா வாட்சப் பண்ணவா” என்றான். 

செழியன், அடுத்த கையில் கட்டுப்போடச் சொன்னதன் விவரம் இப்போது புரிந்தது. பொண்ணைப் பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கார். இதுல செலவு வேற நானே பண்ணிக்கணுமாம்… குடும்பமா இது!

“எவ்ளோ பித்தலாட்டம் பண்ற…ச்ச என் அப்பா எப்படித்தான் உன்னை நம்புறாரோ! என்னை மயக்க ட்ராமா பண்ணியா?” லூசாடா நீ? என்று பார்த்து வைத்தாள். அவளிடம், அவ்வப்போது மரியாதை காற்று வாங்கப் போய்விடும்.

“அப்பாவி டிஜிபி வேணும்னா இதை நம்பலாம். இந்த அடப்பாவி வெற்றியைப் பத்தி எனக்குதானே நல்லா தெரியும். எவ்ளோ காசு வாங்கின அவனுங்களைத் தப்பிக்க வைக்க?” என்றாள் கைகளிரண்டையும் கட்டிக்கொண்டு.

“புத்திசாலிடி நீ” என்றவனும், “உன்னை சுகமா வாழ வைக்க வேண்டாமா அம்முக்குட்டி. அதுக்கு நமக்கு நல்ல வீடு வேணுமில்ல. கவர்மெண்ட் காசை நம்பினா நாம படுக்க ஒரு கட்டில்கூட வாங்க முடியாது செல்லக்குட்டி!” கண் சிமிட்டினான்.

“தப்புப் பக்கம் நிற்கிறதை விடவே மாட்டீங்கல்ல?” ஆதங்கமாக வெளிவந்த குரல் முடிக்கும்போது கமறியது. அதைக் கண்டுகொண்டவனின் உள்ளமும் வலித்தது.

உடனே தெளிந்து, “ச்சீ! உண்மையாவே உன்னைவிட, நான் திருடன்தான்னு கெத்தா சுத்துற அவன் எவ்வளவோ மேல். நீங்க காண்ற கனவு ஒருநாளும் பலிக்கப் போறதில்ல” அவன் எதைப்பற்றிப் பேசினால் காயப்படுவான் என்று தெரிந்தே பேசினாள்.

“திருடன்… யாரு யூ மீன் ஏர்போர்ட் தங்க பிஸ்கட்? ஹாஹா…” என்று சிரித்து, “நீ இன்னும் அவனை மறக்கலியா?” என்றான் கேலியாக. அவளிடம் சமாதானம் எடுபடாதே. 

“ம்ம்…அந்தளவுக்கு சார் உன் நெஞ்சில பதிஞ்சிருக்கார் போல” என்றவன் பெண்ணவளை மேலும் கீழுமாய் அளந்து, 

“போலீஸ் காரனுக்கும் பொறுக்கிக்கும் வித்யாசம் தெரியாத உன்கிட்ட எல்லாம் பேச முடியாது போடி!” என்றான்.

தன்னிடம் வந்தே யாரோ ஒருவனைத் தூக்கிப் பேசுபவளில் அவனுக்கும் மெல்லிய கோபம்.

“நீதான்… நீதான்… யூனிஃபார்ம் போட்ட பொறுக்…”  அவன் பதவிக்கு மதிப்பளித்து சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திக் கொண்டாள்.

இதே இடத்தில் வேறு யாராவது இப்படிச் சொல்லி இருக்க வேண்டும், ஒற்றை குண்டில் உயிர் மூச்சை நிறுத்தி இருப்பான். 

எதிரில் இருப்பது அவன் மூச்சாயிற்றே! திட்டவாவது தன்னிடம் பேசட்டும் என்று நினைத்தானோ? புன்னகையோடே அவளின் கோபத்தை இரசித்தான்.

‘ச்சீ மானங்கெட்டபய! நானா இருந்தா இந்நேரம் தொங்கி இருப்பேன்’ கேவலமான ஒரு பார்வைப் பார்த்து வெற்றியின் கழுத்தடியிலிருந்து நகர்ந்து கொண்டது மைலா. 

“அவ்ளோ இருக்கிறவ எதுக்குடி தூக்குச் சட்டிய தூக்கிட்டுப் பார்க்க வந்த? அத்தான் மேல ஆசைதான…” வெற்றி தன் வம்புப் பேச்சை வெற்றிகரமாக ஆரம்பிக்கவும், “அப்படி ஒரு ஆணியும் இல்ல” என்றாள் வெடுக்கென்று.

“அம்மா குடுத்து விட்டாங்கன்னு இதைக் குடுக்க வந்தேன். ஆனா இங்க சூப்பு ஒன்னுதான் கேடு” என்றவள் ஃப்ளாஸ்கின் கப் போன்ற மூடியில் சூப்பை சரித்து தானே குடிக்க ஆரம்பிக்க, அவள் ஊதி ஊதி உறிஞ்சும் அழகை இரசித்தது வெற்றியின் மானங்கெட்ட இதயம்.

அவ சுடச்சுட குடிக்கிறா. இவனுக்கு சூடு சொணையே இல்ல. நல்ல ஜோடிப் பொருத்தம். ச்சீ…ச்சீ.. ச்சீ… தங்கமான ஓனர விட்டுட்டு இவன்கூட போனீயே…

கம்பி மேல நடக்கணுமே என்று இவன் கூட போனீயே…

ஓனர் அசந்தநேரம் பார்த்து இவன வண்டில ஏறுனியே… ச்சீ…சீ..ச்சீ மைலா ச்சீ… என்று தன்னை நினைத்தே பாடியது மைலா.

“உன்னால இந்தக் கையையும் என்னால தூக்க முடியல. ஒழுங்கு மரியாதையா எனக்கும் சூப்பை ஊத்தி வச்சிட்டுப் போ…” என்றான் வம்படியாக.

“வாயப்பே இல்ல” குடித்து முடித்து ஃப்ளாஸ்கின் மூடியை வைத்தவள், “செம்மயா இருக்கு” வேண்டுமென்றே சப்புக் கொட்டினாள். 

எப்போது அவனும் அவளும் ஒரே இடத்தில்தான் குப்பைக் கொட்ட வேண்டுமென்று தெரிய வந்ததோ அப்போதே பதிலுக்குப் பதில் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டாள். அதும் அவனைப் போலவே வம்பிழுத்து அவன் மூக்கை உடைப்பதில் அலாதி சுகம்.

முன்பெல்லாம் அவன் இப்படி இல்லை. அவள் தள்ளி தள்ளிப் போகிறாள் என்று தெரிந்தபின் தான். அதுவும் அவள் பணியில் சேர்ந்த பிறகு அதிகம் வம்பிழுக்கிறான் என்று தெரிந்து அவளும் துணிந்துவிட்டாள். 

“சரி போ! உங்கம்மாவுக்கு போன் போட்டு நீயே எல்லாத்தையும் குடிச்சிட்டன்னு சொல்லிடுறேன்” அசால்ட்டாய் மிரட்டினான்.

தாயின் அலைபேசி எண் அவனிடம் இருக்குமா என யோசனை ஓடினாலும், அது அவனுக்கு ஒரு விஷயமா? செஞ்சாலும் செய்வான். கிராதகன். யார் மீண்டும் கருணை காருண்ய வகுப்பைக் கேட்பது? 

சூப்பை ஊற்றி வேண்டா வெறுப்பாக அவனிடம் நீட்டினாள். இருந்த கோபத்தில் அது தான் அருந்திய அதே மூடி என்பதே மறந்து விட்டிருந்தது.

ஆனால் கள்வனுக்குப் புரிந்ததே! “கப்பை நீட்டினா… நீதான கையை உடைச்ச ஊட்டிவிடு!” கள்ளச் சிரிப்புடன் சீண்டினான்.

“ஒரு ஆப்பிள் பட்டு உங்க இரும்புக் கை முறிஞ்சிருச்சி! ஏதோ சூப்பை ஊத்த எந்திரிக்கனுமேன்னு பாவப் பட்டு ஊத்திக் குடுத்தேன். குடிச்சா குடிங்க இல்லை சிங்க்ல ஊத்திட்டு போய்க்கிட்டே இருப்பேன்” என்றாள்.

“ஆஹான்…” என்றவன் அலைபேசியை உயிர்ப்பித்து செழியனுக்கு அழைத்தான். “சார் என்னைப் பார்த்துக்க ஒரு லேடி போலீஸை நியமிக்க முடியுமா? அன்ஃபார்ச்சுனேட்லி அம்மு இப்போ என்‌ முன்னாடிதான் இருக்காங்க. எதுக்கு இன்னொருத்தங்களை வர வச்சிக்கிட்டு இவங்களையே…” என்றதும், “தொலைச்சிருவேன்!” என்றான் அந்தப்பக்கம் சிரித்து. 

“நான் அவளுக்கு அப்பா மிஸ்டர் வெற்றி” அவன் முடிக்கும் முன் செழியன் முடித்து வைத்திருந்தான்.

‘அவ்வா… வாயில் அடித்துக்கொண்டது மைலா! அப்பாட்டயே பொண்ணை ஆட்டையைப் போடப் பார்க்கிறானே!’

செழியன் புன்னகைப்பதை அவனின் குரலே உணர்த்தி இருக்க தன்னை மருமகனாக முழுமையாக ஏற்றுக்கொண்டது புரிந்தது. இல்லையென்றால் செழியனிடம் ஒருவனால் துணிந்து இப்படி பேசிவிட முடியுமா? 

சத்தமில்லாமல் இதே மருத்துவமனையில் சமாதி கட்டி இருப்பான்.

அது தந்த தைரியத்தில் “யாரு இல்லேன்னா?. கார்த்திப்பாவ கவுக்க ஹிண்ட் குடுத்தீங்கல்ல… பொண்ணையும் கவுக்க ஹெல்ப் பண்ணலாமே!” குசும்பனிடம் தைரியம் தலைவிரித்தாடியது.

“உண்மையான டிஜிபி செழியனைப் பார்க்கணுமா வெற்றி? என்றான் அவனும். 

“இன்னும் பத்து நிமிஷத்துல அவ அங்க இருந்து கிளம்பி இருக்கணும். இல்ல உன் காலுக்கும் கட்டுப் போட வேண்டி இருக்கும்” என்றவன் முறுவலுடன் அலைபேசியை வைத்து விட, வெற்றியும் புன்னகையுடன் அலைபேசியையே பார்த்திருந்தான். 

அவன் முன் சொடக்கிட்டவள், “அவர் என்னோட அப்பா! மைண்ட் இட்” செழியனின் பதில் கேட்கவில்லை என்றாலும் வெற்றி பேசுவதை வைத்துப் புரிந்து கொண்டிருந்தாள். 

என்ன திமிர்? இவரைப் பார்த்துக்க ஐபிஎஸ் கேட்குதோ! 

“வீண் கனவுக் காணாம இதை வாங்கிக் குடிச்சிட்டு உடம்பைத் தேத்திக்கோங்க” என்றவள் அவன் பதிலை எதிர்பாராது அருகில் வைத்துவிட்டு கிளம்பி இருக்க அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனை ஆயாம்மா ஒருவர் உள்ளே வந்தார்.

“தம்பி உங்களுக்கு சூப்பு ஊட்டணுமாமே! அந்த போலீஸ்கார பாப்பா உங்களைப் பார்த்துக்க சொல்லி ஆயிரம் ரூபா தந்துட்டு போச்சி தம்பி!” என்றவர் சூப்பை ஸ்பூனில் எடுத்து அவனருகே நீட்ட தன்னவளின் சேட்டையில் உள்ளம் குளிர வாயைத் திறந்து வாங்கிக் கொண்டான்.

‘நீ ஏன் அவ அப்பங்கிட்ட லவ் யூ சொன்னன்னு இப்ப புரியுது. நீ கொஞ்சம் பாவம்தான்’ என்று உச்சுக்கொட்டியது மைலா.