“மேடம்! ரெஸ்ட்டாரண்ட்லருந்து சிக்னல் வந்துடுச்சி. அந்தப் பொண்ணு அடையாளம் காட்டிட்டா அவனுங்க அங்கதான் இருக்கானுங்க”.
“வெல்! லெட்ஸ் கோ!”
அந்த புகழ்பெற்ற உணவகத்தின் வெளியே தன் ஜீப்பில் காத்திருந்த அம்மு, தன் இடுப்பிலிருந்த பிஷ்டலை சரிபார்த்தபடி குதித்து இறங்க, கூடவே இரண்டு கான்ஸ்டபிளும் இறங்கினர்.
தன் பரிவாரங்களுடன் புயலென உள்ள நுழைந்தவள், குறிப்பிட்ட இடத்தை நோக்க, அங்கிருந்தப் பெண்ணின் கைக்காட்டலில் ஒருவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றி வெளியே இழுத்தாள்.
அடுத்திருந்த காலியான மேஜையில் அவனை மல்லாக்கத் தள்ளி, அவன் சுதாரிக்கும் முன் வாயில் பிஸ்டலை வைத்திருக்க, எதிர்பாராத இந்த அதிரடியில் மூச்சுக்குத் திணறினான் அவன்.
“ஏன்டா நாயே! படிக்கிற பசங்களுக்கு கஞ்சாவா விக்கிற?” அவன் வாய்க்குள் பிஸ்டலை வைத்து உப்புமா கிண்டியவளின் தோளின் இரண்டு பக்கமும் இரு கரங்கள் விழுந்தது.
“பாருடா! ஏரியா தெரியாம காலை வச்சிட்டாங்க மேடம். பார்க்க புத்தம் புது பீஸா வேற இரு…” சொல்லி முடிக்கும் முன், ஒரு பக்கத்துத் தோளில் கைவைத்திருந்தவனின் வாயிலிருந்து இரத்தம் குபுகுபுவென வழிய தானாக அவள் தோளிலிருந்த கை கீழிறங்கியது. வாயைப் பொத்திப் பிடித்தபடி கீழே விழுந்தான் அவன்.
அவன் கீழே விழுந்ததும் திரும்பியவளின் முறைப்பில், வலப்பக்கத் தோளில் கை வைத்திருந்தவனின் கை தானாகக் கீழிறங்க தன்னிச்சையாய் அவளிடமிருந்து ஓரடி விலகி நின்றான்.
தன் தோள்களை சிங்கம் பிடரியை உதறுவதுபோல் இருபக்கமும் உதறிக்கொண்டாள்.
“கான்ஸ்டபிள்ஸ், அவனுங்களையும் பிடிச்சி வண்டில ஏத்துங்க!” என்றவள் இவனின் சட்டையைப் பிடித்திழுத்துக் கொண்டு முன்னேற அங்கு அமர்ந்திருந்த ஒருவன் அவள் காலை இடறிவிட்டான். அவள் தடுமாறவும், கையில் கத்தியுடன், எங்கிருந்தோ இருவர் அவள்முன் குதித்தனர்.
ஒரு பெருமூச்சுடன் பிஸ்டலை பாக்கெட்டினுள் திணித்து, அவள் சண்டைக்குத் தயாராக, சற்று நேரத்தில் அந்த இடம் கலவர பூமியானது. சாப்பிட வந்த கூட்டம் பயத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
கான்ஸ்டபிள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் களத்தில் இறங்க, நடுவில் நின்று பந்தாடிய மங்கையவள் கவனிக்காத நேரத்தில் பின்னிருந்து கத்தியை உருவிக்கொண்டு பாய்ந்தான் சுருள்முடி ரவுடி மண்டையன் ஒருவன்.
பெண்ணவளின் முதுகில் கத்தி பாய்வதற்கு சிலநொடிகள் முன், அவன் சுருள்முடி கொத்தாக இழுக்கப்பட நீண்ட நெடியவனின் கக்கத்தில் அடங்கியது அவன் தலை.
நறுக் நறுக்கென மண்டையில் கொட்டு வாங்க, உள்ளுக்குள் இரத்தம் சுள்ளெனப் பீறிட்டுப் பாய்வதை உணர்ந்து, அதிர்ந்த சுருள்முடி, தான் சிக்கியிருந்தவனின் உயரத்தைக் கண்டு இன்னும் மிரண்டான்.
தானாக வார்த்தையில் மரியாதை கூட, “ஏன் ணா இவ்ளோநேரம் அந்த அக்கா சண்டை போடும்போது சும்மா நின்னு வேடிக்கைதான பார்த்த அப்படியே நிக்க வேண்டியதுதான” என்று உளறினான்.
அவன் தோளோடு கைப்போட்டு இழுத்து வளைத்துக்கொண்ட நெடியவன், “அடேய் இப்பவும் உங்க நொக்கா உன்னை பார்த்திருந்தா நான் பேசாம வேடிக்கைதான்டா பார்த்திருப்பேன். அந்த பெண் புலி உன்னை கவனிக்கலயேடா. நான் என்ன பண்ணட்டும்?” என்றான் சிரித்தபடி.
“போ..ணா… அந்த போலீஸ் அக்கா அடிச்சா கூட இவ்ளோ வலிக்காது தெரியுமா” என்று இன்னமும் மண்டையில் இரத்தம் பாயும் உணர்வில் அவன் தடவ, “ஆஹான்” என்றான் மென் முறுவலுடன்.
தன் தாடையை தடவியபடி , “அப்ப நீ அந்த சொக்காக்கிட்ட இன்னும் சரியா அடிவாங்கலன்னு நினைக்கிறேன்” என்று, அந்த சுருள் முடி எதிர்பாராத வேளையில் படக்கென அந்த பெண்புலிமுன் தள்ளி விட, அவளோ விஜயகாந்த் ஸ்டைலில் திரும்பிப் பார்க்காமலே பின்னங்கால்களால் வயிற்றில் எட்டி உதைத்தாள்.
கலங்கிய அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு நெடியவனின் காலுக்கடியில் விழுந்து கிடந்தவனை முறுவல் அறும்பத் தூக்கி நிறுத்தினான்.
“எப்படி இருக்கு? உங்க அக்கா அடி” என்று புருவம் உயர்த்தியவனிடம், “ண்ணா பொம்பளையான்னா அவ..” என்று சொல்லி முடிக்கும் முன் மீண்டும் அவளின் முன் தள்ளிவிட்டான்.
எட்டி அவள் விட்ட அறையில் ஒரு சுத்து சுத்தித் தன்முன் விழப்போனவனை தாங்கிப்பிடித்து நிறுத்தி,
“இல்லண்ணா அது வந்து…பொம்பள…” என்றதும், கேட்காததுபோல் நெடியவன் காதை குடைய, “அக்கா…அக்கா அக்காண்ணா…” என்றவன் அலறிய அலறலில் “அது” என நிறுத்தினான் நெடியவன்.
“ண்ணா! நீயே பரவால்லண்ணா. அந்த அக்கா அடிச்ச அடியில என் பொண்டாட்டி பேசறதுகூட கேட்காது போல” என்று அழுதவனை, “ஐ…! அது நல்லதுதானே? இரு இந்தக் காதையும் செவிடாக்கிடுறேன்” என்று அவள்முன் மீண்டும் தள்ளப் போக நெடியவனின் காலிலேயே விழுந்துவிட்டான் சுருள்முடி.
“அண்ணா என்னைய விட்டுடுன்ணா இப்படியே ஓடிப்போய்டுறேன்” என்று கெஞ்சியவனின் காலரைப் பற்றித் தூக்கி, “இதுக்கே இப்படிச் சொன்னா எப்படி?” என்று மீண்டும் தோளில் கைப்போட்டுக்கொண்டு,
“அதோ, அங்கப் பார்! அந்த டேபிள்ல இவ்ளோ நடந்தும் எங்களுக்குச் சம்மந்தமே இல்லங்கற மாதிரி கூலா உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருக்காங்கள்ல இரண்டுபேர்” என்று தூர இருந்த ஒரு மேஜையைக் காட்ட, அங்கு அவன் சொன்னதைப் போல் கலவரத்தை சற்றும் சட்டைச் செய்யாது இருவர் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தனர்.
“அட ஆமாண்ணா! யார் ணா இந்த கூமுட்டைங்க?” என்றவனின் காதைப் பிடித்துத் திருகியவன், “அவங்கள்ல யாராவது ஒருத்தர் கிட்ட நீ சிக்கினாலும் சிதைச்சிடுவாங்க. அதிலயும் அந்த பீமசேனன் மாதிரி கருப்புச் சட்டைல இருக்காரே, அவரோட ஒரே செல்ல மருமகதான் இங்க பந்தாடிட்டு இருக்காளே உன் அக்கா” என்று நிறுத்தினான்.
அங்கு ஐம்பத்தைந்து வயதிலும் திடகாத்திரமாய் அமர்ந்திருந்த கார்த்தியை கண்டு அவனுக்கு சுருள்முடிக்குள் வேர்த்தது.
“இப்ப கேட்டியே இது பாயிண்ட்! உங்க அக்கா, ட்யூட்டில சேர்ந்ததுலருந்து இன்னைக்குதான் முதல் ரெய்டு வந்திருக்கா! சோ அவளுக்கு எதும் ஆகிடக்கூடாதுன்னு பாதுகாப்புக்கு வந்து உட்கார்ந்திருக்கார் அந்த கருப்புச் சட்டை. அந்த கருப்புச் சட்டையால வேற யார் உயிருக்கும் எதும் ஆகிடக்கூடாதுன்னு வந்து உட்கார்ந்திருக்கார் பக்கத்துல இருக்க சிவப்புச் சட்டை. உங்க அக்காவோட அப்பா டிஜிபி செழியன்!”
“டிஜிபி..யா!” என்று வாய் பிளந்து அதிர்ந்தவனோ “இவ்ளோ டீட்டெய்ல்ஸ் சொல்றியே நீ யாருண்ணா” என நிமிர்ந்து நெடியவனைக்காண, “நான் உங்க அக்காவ கட்டிக்கப்போற உன் மாமா டா! எஸ்பி வெற்றி தமிழ்ச்செல்வன்.
என்று கம்பீரமாகத் தன் மீசையை முறுக்கிவிட்டபடி சுருள்முடியின் சட்டையைப் பற்றி இழுத்துக்கொண்டு தன் ஜீப்பை நோக்கிச் சென்றான் வெற்றி.
“அய்யோ…அய்யோ… விடுங்க சார்.. விடுங்க தெரியாம பண்ணிட்டேன். அந்தக்காவ பாதுகாக்க ஒரு போலீஸ் படையே மஃப்டில சுத்தும்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன் சார்! அலறினான் அவன்.
“இதுக்கும்மேல ஒரு படை வச்சிருக்கா உங்க அக்கா. அந்த படையைக் கண்டா நானே நடுங்குவேன்” என்றவனின் பின்னனியில் கருப்பாய் புசு புசுவென்ற குட்டை முடியுடன் காதுகள் இரண்டும் குத்தீட்டியாய் குத்தி நிற்க துருவனின் ஞாபகம் வரவும், வெற்றியின் உடலே சிலிர்த்துப்போக தலையை உதறிக்கொண்டு, ‘பதறுதுடா முருகேசா’ என்று புன்னகைத்தான்.
போலீஸ் படையே நடுங்குதுன்னா அக்கா பெரிய ஆளா இருக்குமோ? வைக்கக் கூடாத இடத்தில் கை வைத்துவிட்டது புரிந்தது சுருள்முடிக்கு. “சார் நான் அப்ரூவரா மாறிடுறேன்” அந்தர் பல்டி அடிக்க, வெற்றிச் சிரிப்பு வெற்றியிடம். அவனைத் தள்ளிக்கொண்டு வெளியில் நடந்தான்.
கான்ஸ்டபிள்கள் இருவரும் ஆளுக்கொருவனை பிடித்துக்கொண்டு வர, பின்னால் ஜான்சி ராணியென மிடுக்காக நடந்து வந்தாள் அம்மு.
அவள் நடந்துவரும் அழகை, ஜீப்பில் சாய்ந்தபடி இரசித்திருந்தவனோ, ‘நீ நடந்தால் நடையழகு, நெருங்கிவரும் இடையழகு’ என்ற பாடலை மெல்லியதாய் விசிலடிக்க, எங்கிருந்தோ பதில் விசில் அதைவிடச் சத்தமாகவே பறந்து வந்தது.
சுற்றி முற்றித் தலையை திருப்பியவன், ‘யார்ரா அது என் பாட்டுக்கு எசைப்பாட்டு பாடுறது?’ என சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்க்க, நடைபாதையின் ஓரம் கிளி ஒன்று கம்பு மேல் நடந்தபடி மீண்டும் அவனைப்போலவே அதேப்பாடலை ஹம்மிங் செய்து விசிலடித்தது.
“சாரி சார்! நம்ம மைலாதான். விசில் சத்தம் கேட்டா ஆட்டோமெட்டிக்கா விசிலடிப்பா” கிளியை வைத்து வித்தைக் காட்டியதோடு கிளி ஜோசியமும் பார்த்துக் கொண்டிருந்தவன் பல் இளித்தபடி மைலாவின் பெருமையைப் பாட, அது ஒயிலாக நடந்துவந்து அவனிடம் நெல் மணியை பெற்றுக் கொண்டது.
‘கிளிக்கு பெயரைப் பார்த்தியா மைலாவாம். நாம நம்ம ஒயிலாவ பார்ப்போம்’ என அவன் பார்வையால் அம்முவை துளைக்க அந்த ரேசர் கதிர்வீச்சு தாக்கியதோ என்னவோ, பிடரியில் கைவைத்து ஒருவனை இழுத்துக் கொண்டு வந்தவளின் நடை தடுமாறியது.
இயல்பாய் பெண்களுக்கே ஒருவன் தன்னை உற்றுப் பார்த்தால் உறுத்தலில் உணர்ந்து கொள்ளும்போது எந்நேரமும் சுற்றுப்புறத்தை அலசி ஆராயும் போலீஸ் வேலை செய்பவளுக்கு உள்ளுணர்வு உறுத்தாதா என்ன?
ஜீப்பில் சாய்ந்தபடி நின்ற வெற்றியைக் கண்டவள் முகத்தை கடுப்பாக மாற்றிக்கொள்ள, “மூஞ்செலி ஆரம்பிச்சிட்டா” முனகிக் கொண்டான்.
அவர்கள் அருகில் நெருங்கவும், “கான்ஸ்டபிள்ஸ், அவங்க எல்லாரையும் இங்க ஏத்துங்க!” அம்முவின் மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி, கைது செய்யப் பட்டவர்களை தன் ஜீப்பில் ஏற்றச் சொன்னான்.
வெற்றியின் ஜீப்பில் ஏறப்போன கைதியின் சட்டைக்காலரை நொடியில் பிடித்திழுத்தவள், “அதெப்படி சார், கரெக்ட் டைமுக்கு கன் மாதிரி வர்றீங்க? நாங்க மூச்சு முட்ட சண்டைப் போட்டு பிடிப்போமாம். நீங்க கஞ்சி போட்ட சட்டைக் கசங்காம கடத்திட்டுப் போவீங்களா? அனுப்ப முடியாது சார்” என்றாள் திடமாக.
அவன் பதவியின் உயரம் தெரிந்தும் திமிராய் பேசுபவளை கான்ஸ்டபிள் இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர். குழப்பம் வேறு. தனக்கு மேல் அதிகாரியான அம்முவின் கட்டளையை நிறைவேற்றுவதா இல்லை அவளுடையதுபோல் இன்னும் எட்டு ஸ்டேஷன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெற்றியின் பேச்சைக் கேட்பதா? விடை தெரியாமல் வெற்றியிடமே அவர்களின் பார்வை நிலைத்தது.
“நான் உங்க மேலதிகாரி மேடம் மூஞ்செலி. சாரி! உங்க பெயர் என்ன? மறந்துட்டேன்” என்று வேண்டுமென்றே பார்வையை அவளது நேம் பேட்ஜில் தேடுவது போல் பாவனை செய்யவும், தானாக சட்டையைப் பற்றி இருந்தவனிடமிருந்து அவளது கரம் தளர்ந்தது.
மெல்லிய முறுவல் அரும்ப, பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை அவன்.
அத்தனை சோமாறிகளுடன் சண்டை இட்டபோது வராத தடுமாற்றம் அவளிடம். எங்காவது அவன் பார்வையில் படாமல் நின்றுவிடலாம் எனத் தோன்ற, மாறாக முறைத்தபடி இன்னுமே விறைப்பாக நின்று, “அம்மு எழிலரசி” என்றாள் திருத்தி.
‘அதான! நீ தோற்றதா சரித்திரம் பூகோளம் இல்லையே’ தடுமாறி மீண்டவளை இரசனையுடன் நோக்கி “யா.. மிஸ் அம்மு எழிலரசி, இட்ஸ் மை ஆர்டர்! இப்போ இவங்க என்னோடதான் வருவாங்க ரைட்!” என்றவனின் குரலில் கட்டளையின் தொனி.
அவள் முறைத்து நிமிர, சற்றே குனிந்து, “உன்னால முடிஞ்சா என்னை மீறி கூட்டிட்டுப் போடி” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“எல்லாம் பதவி இருக்கிற திமிர்” பல்லிடுக்கில் கடித்தாள். “உன் பதவிக்கும் மேல பேச எனக்கும் ஆள் இருக்கு” என்றவள் தன் பாக்கெட்டில் அலைபேசியைத் தேட, சட்டென சிரித்தான்.
“பள்ளிப் பிள்ளை மாதிரி இந்த கம்ப்ளைண்ட் பண்ற பழக்கத்த நீ விடவே மாட்டல்ல. இந்தா பேசு!” தன் அலைபேசியை அவளிடம் நீட்ட, புரியாமல் அலைபேசியை வாங்கினாள் அவள்.
“நீ சொன்ன மேலிடம்தான். பேசு!” என்று கைக்கட்டி நின்று கொண்டான் அவன்.
அதில் ஒளிர்ந்த ‘அம்மு மாமு’ என்ற பெயரைக்கண்டு, யார்? என ஒரு நொடி குழம்பியவள் அடுத்த நொடி திகைத்து அதிர்ந்தாள்.
தன் தந்தையைத்தான் அப்படி அலைபேசியில் சேமித்து வைத்திருக்கிறான். புரிந்த நொடி திகைப்பு நீங்கி அவள் முறைக்க, முழுதாக முறைக்க கூட முடியாமல் அதற்குள் தந்தையின் குரல் அந்தப்பக்கம் கேட்டது.
வெற்றியை அந்த இடத்தில் கண்டதுமே, “அவன் பார்த்துப்பான். நீ வாடா!” என்று கார்த்தியை வம்படியாய் இழுத்துக்கொண்டு கிளம்பி இருந்தான் செழியன்.
வேறு வழியின்றி காதில் வைத்தவளிடம் என்ன சொல்லப்பட்டதோ, “எஸ் ஸார்” என விரைத்துச் சொன்னவள் அலைபேசியை காதிலிருந்து எடுக்க, உதட்டோரம் வளைந்த ஏளனச் சிரிப்புடன் புருவம் உயர்த்தினான் வெற்றி.
அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, தனக்குமுன், தந்தைக்கு அழைத்துச் சாமர்த்தியமாக செயல்பட்டவனின் வேகத்தில் உள்ளுக்குள் பொங்கியது அவளுக்கு.
கொழுப்பெடுத்தவன். டிஜிபிங்கிற பயம் இல்லாம எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பதிந்து வச்சிருப்பான்?
“ஏய்..ஏய்! என்னடி பண்ற உன் வருங்கால புருஷன் மாச சம்பளக்காரன் டி” என பதறிய வெற்றி, தரையில் விழுந்து அது தன் உயிரை இழக்கும்முன் இலாவகமாகப் பிடித்திருந்தான்.
“எவ்ளோ தைரியம் இருந்தா அம்மு மாமு ன்னு எங்கப்பா பெயர சேவ் பண்ணி வச்சிருப்பீங்க?” பாய்ந்து கொண்டு அவன் சட்டையைப் பற்றப் போனவள் அதில் மிளிர்ந்த ஸ்டாரைக் கண்டுத் தளர, ‘இது வேற இம்சை’ சலித்தாள்.
கான்ஸ்டபிள் இருவரும் பேயறைந்ததுபோல் நின்றிருந்தனர். டிஜிபி இவருக்கு மாமாவா? அப்போ டிஜிபி பொண்ணு? ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணக்குப் புரிய, அதுதான் மேடம்க்கு, சார்கிட்ட இந்த தைரியமோ? மென் புன்னகையுடன் கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
“மாமனார் காலிங் மாமு! கமலே சொல்லி இருக்கார். நீ படம் பார்த்ததில்ல?” கூலாக அலைபேசியை சட்டைப்பையில் திணித்துக் கொண்டே சொன்னவனை முறைத்து, “வாய்ல நல்லா வந்திரும்” என்றாள் குரலை அடக்கி.
அவனைத் தாக்க முடியாத கோபத்தில், “உங்க நினைப்புல மண் அள்ளி போடுறனா இல்லையாப் பாருங்க எஸ் பி சார்!
“செய்ய மாட்டேன்னு நினைப்பா? இதுக்காகவே ஒரே மாசத்தில ஒருத்தனைக் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிறேனா இல்லையா பாருங்க! கோபத்தில் சவால் விட்டாள்.
“ஒன்னுத்துக்கும் உதவாதவனைத்தான் ஒரே மாசத்தில காதலிக்க முடியும்!” என்றான் மேலும் கீழும் பார்த்து.
“நக்கலு… உங்களுக்கு எதுக்கு சார் அந்தக் கவலை. நான் சோறு போட்டுட்டு போறேன்.
ஒன்னும் இல்லாதவனோ, உதவாக்கரையோ இல்ல திருடனாவே இருந்தாகூட பரவால்ல. ஆனா, நிச்சயம் அது இந்த வெற்றியா மட்டும் இருக்கப் போறதில்ல” என்றாள் முகத்தைத் திருப்பி.
“அப்ப, மேடம் அந்த நினைப்புலத்தான் ஏர்போர்ட்ல திருடனுக்கு உதவி செஞ்சீங்களாக்கும்! இன்றைய திருடன் நாளைய காதலன். சூப்பர்ல?” என்றவனின் குரலில் கேலி வழிந்தோடியது.
அவள் கஷ்டப்பட்டு மறந்திருந்தை அவன் ஞாபகப்படுத்தி இருந்தான்.
‘என் பெயருக்கு எந்த கலங்கத்தையும் ஏற்படுத்திடாத’ செழியனின் குரல் காதில் ஒலிக்க, சட்டென துளிர்த்த கண்ணீரை இமையைச் சிமிட்டி உள்ளேயே நிறுத்தினாள்.
அவள் பேசியது ஏகத்துக்கும் வெற்றியை வெறுப்பேற்றியதில், அவள் மறக்க நினைக்கும் ஒன்றை தன்னையுமறியாமல் புகைபோட்டு தூண்டி விட்டிருக்க,
“ஆமா! நாளைய காதலன்தான்! என்ன பண்ண முடியும் உங்களால?” வேணும்னா அவனையே கல்யாணமும் பண்ணிப்பேன். உங்களைப்போல நல்லவன் வேஷம் போட்ட கெட்டவனை விட அவன் தவுசண்ட் டைம்ஸ் பெட்டர் சாய்ஸ்தான்” அவளும் விடுவதாயில்லை.
“உள்ளங்கையில வேற பெயரைக்கண்டதுமே டீசண்ட்டா ஒதுங்கிட்டான். உங்களைப்போல என் பின்னாடியே வந்து திரும்ப திரும்ப டார்ச்சர் பண்ணல!” கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வெடித்தாள்.
தந்தையை விட பெயர் வாங்க வேண்டுமென எவ்வளவு ஆசை ஆசையாய் இந்த போலீஸ் வேலையில் சேர்ந்தாளோ அதற்கு முதல்நாளே கலங்கம் ஏற்பட்டதில் அவ்வளவு வெறுப்பு. யாரைத் தன் ரோல் மாடலாக கொண்டாளோ அந்த தந்தையே, ‘என் பெயரைக் கெடுத்து விடாதே’ என்றது நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது. அந்த முள்ளைக்கொண்டே அவன் உள்ளத்தைக் கீறிக் காயப்படுத்தினாள்.
தந்தையின்முன் தலைகுனிந்து நின்றதில் தன் மீதே குற்ற உணர்வில் தத்தளித்தவளைத்தான் வெற்றி தூண்டி விட்டிருக்க அதன் பலனை மௌனமாய் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
நியாயப்படி அம்முவின் கோபம் தன்னை அந்த நிலையில் நிறுத்தி வைத்த ஜெர்கின் மனிதனிடம் திரும்ப வேண்டும். ஆனால் வெற்றியின் மீதிருந்த வெறுப்பு அதை அவனிடமே காட்டச் சொல்லியது.
கடுகாய்ப் பொடிந்தவள், இருந்த கோபத்தில் ஓட்டுனரை தள்ளியிருக்கச் சொல்லிவிட்டு உயர்வேகத்தில் ஜீப்பை அழுத்த அது உச்சஸ்தாயில் சீறியது. வெற்றியைத் திரும்பியும் பார்க்கவில்லை அவள். கோபம்… கோபம்… கோபம் மட்டுமே…
அவள் எடுத்தவேகத்தில் ஜீப் நடைபாதையை உரசிச் செல்ல அங்கே கம்பத்தில் ஆடிக்கொண்டிருந்த கிளி, “மம்மீ…” என்ற அலறலுடன் பறந்து வந்து வெற்றியின் ஜீப்பில் விழுந்தது.
“அய்யோ… மேடம்! என் கிளி… என் கிளி… மைலா..மைலா!” என்று கத்திக்கொண்டே கிளியின் சொந்தக்காரன் அம்முவின் வாகனத்தின் பின்னால் ஓட, வெற்றி மௌனமாய் வெறித்திருந்தான்.
அவன் கத்திய மைலாவில் சற்றே தலையைத் திருப்பி எட்டிப்பார்த்த அந்த மைலா, அவன் ஓடுவதைக் கண்டு, ‘போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு’ மனதுக்குள் பாடியபடி ஒற்றைக் காலால் காதைக் குடைந்தது.
‘ஒரு நெல்லுமணிக்கு இந்த ஜில்லு மணியை எவ்ளோ ஆட வச்சிருப்ப? மைலாவமில்ல மைலா. நான் ஜில்லு டா’ இன்னமும் முழுவதுமாய் வளராத தன் சிறகை சரிபார்த்தபடி சமர்த்தாய் ஜீப்பில் அமர்ந்து கொண்டது.
மைலா அமர்ந்திருப்பதை அறியாத வெற்றி, தலையைக் கோதி தன்னை நிலைப்படுத்தியவன், கஞ்சா கள்வர்களை தன் வாகனத்தில் ஏற்றுவதில் மும்முரமாயிருக்க, சில நொடிகளில் அந்த ஜீப் வானத்தில் பறந்து வெடித்துச் சிதறியது.
அந்த இடமே கலவர பூமியாக மாறி இருக்க, நல்வாய்ப்பாக காவலர் ஒருவரும் ஜீப்பில் ஏறி இருக்கவில்லை. அருகில் நின்றிருந்த வெற்றி மட்டுமே பலத்த காயம் பட்டான்.
தன் குருதி வடிந்த கையில் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த கிளியை கண்ணெடுக்காமல் பார்த்திருந்த வெற்றியின் கண்கள் சொருக, மயக்கம் அவனை அரவணைத்துக் கொண்டது.