அத்தியாயம் : 29

வெற்றி என்றழைத்ததும் விழி திறவாமலே “ம்..ம்” என்றான். அதுவே அவன் கோவத்தின் அளவைச் சொல்லியது.

“அம்மா ஃபைல் எதுக்கு உங்ககிட்ட” 

அவன் எதிர்பார்த்தது வேறாக இருக்க, அந்தக் கேள்வி முற்றிலும் புதிது அவனுக்கு.

அதில் “புரியல” என்றவன் இன்னமும் விழி திறந்தானில்லை. ஒரு கையை நெற்றியின் மேல் வைத்தபடி படுத்திருந்தான்.

நேராக படுத்திருந்தவள், திரும்பி அவன் முகத்தை மட்டும் ஏறிட்டாள்‌. “திவ்யபாரதி சீரியல் மர்டர் கேஸூக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?” என்றதும் படக்கென விழி திறந்தான். 

புருவங்கள் சுருங்க, தன்னை ஏறிட்டவளின் முகம் கண்டான். பலவாறாய் குழம்பிக்கிடக்க அவள் விழிகளில் பிடிவாதம் இருந்தது. 

“ரொம்ப அலைஞ்சிட்டு வந்திருக்க, எதையும் யோசிக்காம படு” திரும்பிப் படுத்துக் கொண்டான்.

காலையிலிருந்து அவளது நடமாட்டங்களை அறிந்துதான் இருந்தான். 

எஸ் பி அலுவலகத்தில் யாரையேனும் சந்திக்கச் சென்றிருப்பாள் என்று நினைத்திருக்க, அவனது அறைக்குச் செல்வாள் என்பது முற்றிலும் அவன் எதிர்பார்க்காத ஒன்று.  

உதவிக்காவலர் அழைத்தபோது கார்த்தியை ஊருக்குச் செல்வதற்காக வழியனுப்பச் சென்றிருந்தவன் அலைபேசியை எடுக்கவில்லை.

திரும்ப இவன் அழைத்தபோது, “சாரி சார்! மேடம்கிட்ட ஏதோ ஃபைல் கேட்டீங்களாம், லேப் ரிப்போர்ட் வந்ததை நான் சொல்ல மறந்துட்டேன். உங்க டேபிள் மேலதான் இருக்கு. போட்டோ எடுத்து வாட்சப் பண்ணவா?” என்று கேட்டபோது அவனுக்கு சகலமும் புரிந்து போயிற்று.

அவனின் சின்ன அலட்சியத்தில், நூல் பிடித்தாற்போல் அஸ்திவாரம் வரை தோன்றிவிட்டாள்.

இதற்குமேல் அவளைத் தடுப்பது கடினம். அப்படியே தடுத்தாலும் விடுமுறை எடுத்தேனும் அதைச் செய்வாள். 

ஏன் தடுக்க தடுக்க கோவத்தில், இப்படிப் பட்ட வேலையே வேண்டாம் என உதறித் தள்ளவும் தயங்க மாட்டாள். அவசரமும், ஆத்திரமும் அவளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

இல்லையெனில் முட்டாள்தனமாகக் கல்லூரி நூலகத்தில் போய் நிற்பாளா? அவள் நல்லபடியாகத் திரும்பி வரும்வரை அவன் உயிர் அவன் கையில் இல்லை. அவளது கைச்செயினில் இருந்த ஜிபிஎஸ் கருவி அவளது நடமாற்றங்களை அவனுக்குத் தெரிவிக்கத் தவறவில்லை. அவள் சென்ற இடங்களை வைத்து அனைத்தையும் அறிந்திருப்பாளென யூகித்துக் கொண்டான். கூடவே அவளது மனநிலையும்..

அவள் இருந்த மனநிலைக்கு தனியாகக் காரைவேறு அவ்வளவு தூரத்திலிருந்து ஓட்டி வரவேண்டும். தவியாய் தவித்துப் போய் வாசலில் தவங்கிடந்தான்.

திரும்பி வரும்போது அவளது அலைபேசி உயிர்ப்புடன் இருந்தாலும் அழைக்கவில்லை அவன். நிச்சயம் அதிவேகத்தில் வருவாள். நினைக்கவே பயமாக இருக்க, வந்து சேர்ந்தால் போதுமென்றிருந்தது. தூரத்தில் அவள் வாகனத்தைக் கண்டபோதுதான் அவன் மூச்சுக்காற்றின் வேகம் சீரானது.

வந்ததும் ஒரு வெற்றுப்பார்வையுடன் அவள் கடந்துச் செல்லவுமே உடைந்து விட்டான். 

மனதை உடைத்துப்போடும் கேள்விகளை எதிர்பார்த்துக் காத்திருக்க மாறாக இந்தக் கேள்வியை முற்றிலும் அவன் எதிர்பார்க்க வில்லை.

எதற்கும் அவனிடம் பதில் இல்லை. தீங்கு என்று தெரிந்த எதையும் அவள் நிழலைக்கூட அண்ட விடாதவன், அவள் மனதை உடைத்துப்போடும் கேள்விகளுக்கு எங்கிருந்து பதில் அளிப்பான்.

முதலில் அவனுக்கே இன்னும் ஒன்றும் தெளிவாகவில்லையே!

திரும்பிப் படுத்திருந்தவனின் முதுகை வெறித்தாள். ஓரளவுக்கு அவள் எதிர்பார்த்த பதில்தான். விரக்திச் சிரிப்பொன்று இதழ்களில் முகிழ்த்தது.

“களரி விளையாடுவோமா?”

சட்டென்று திரும்பினான். அதிசயத்திலும் அதிசயமாக அவன் பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்தாள். கண்களில் தீவிரம்.

அவன் திரும்பியதும், “பந்தயக் களரி” என்றவளில் இரசனைக் கூட அவன் இதழ்களில் மென்நகை தோன்றி மறைந்தது.

சாம, பேத, தண்டத்தில் கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்து விட்டாள் என்று புரிய, எழுந்து கொண்டான். அவளும் கூடவே தயாராக எழுந்து கொண்டாள்.

விழிகளில் சுவாரஸ்யம் கூட, “என்ன பந்தயம்?” என்றான் விழியுயர்த்தி. என்ன கேட்பாள் என்று தெரிந்தே கேட்டான்.

“நான் கேட்கப் போற கேள்விகளுக்கு மறைக்காம பதிலைச் சொல்லணும். கூடவே, இந்த கேஸ்ல இருந்து முற்றிலுமா நீங்க விலகிடணும். உங்க தலையீடே இருக்கக் கூடாது!” 

“என்ன சம்மதமா?” உயர்த்திய புருவத்துடன் சுவற்றில் குறுக்கும் நெடுக்காக மாற்றி வைத்திருந்த வாளில் ஒன்றை உருவிக் கொண்டாள்.

புன்னகை விரிய, “நான் ஜெயிச்சிட்டா…?” என்றான், அவள் நின்றிருந்த கோலத்தை இரசித்தபடி.

முகம் களைத்திருந்தாலும் அதில் ஒளி கூட முந்தானையை இழுத்துச் சொருகி தயாராக நின்றிருந்தாள். திருமணத்தின் பின் இன்றுதான் புடவையில் பார்க்கிறான். இரவு உடையை அவள் மாற்றாத போதே அனைத்தையும் யோசித்து முன்னேற்பாடாக தயாராகத்தான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

சிறிது தடுமாறி, “அதேதான் எனக்கும். இந்த வழக்கைப் பற்றிய எந்த கேள்வியும் என்னிடமிருந்து வராது. முற்றிலும் விலகிக்கிறேன்” என்றவள் அவனைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தாள்.  

“அது மட்டும் போதாதே எனக்கு” என்றவன் நிறுத்தி குறும்புன்னகை புரிய, புருவங்கள் சுருங்க நிமிர்ந்தாள்.

நிமிர்ந்தவளின் வதனத்தில் படிந்து, அவள் மேனி முழுவதும் பார்வையால் வருடியவன், “மொத்தமும் எனக்கு. சம்மதமா?” என்று கேட்ட நொடி அவன் குரல்வளையில் மெல்லிய இரத்தக் கோட்டை தீட்டி முடித்திருந்தாள்.

களத்தில் அவள் மானத்தை விலைபேசுவானா?

சிறு கோடாய் கழுத்திலிருந்து இரத்தம் வடிந்தும், இமையைக் கூட சிமிட்டவில்லை அவன். 

தன்னவளின் கூர்வாள் எந்த ஆழத்துக்கு அவனைக் காயப்படுத்தும் என்றறியாதவனா அவன்.

அவனும் கேட்கவேண்டுமென்று கேட்கவில்லை. பந்தயத்தில் தோற்றுவிட்டால் பேச்சு மாறக் கூடாது. அதுதான் விதி! அவளையே மொத்தமாகக் கேட்டால் விலகிக்கொள்வாள் என்று நினைத்தான்.

மாறாக, அவன் அருகில் வந்து முந்தானையால் கழுத்தில் வடிந்த சொட்டு இரத்தத்தை துடைத்தவள், “சம்மதம்” என்றாள்.

அவன் புருவங்கள் வில்லாய் வளைந்தது. சற்றுமுன்னர்தானே கோவத்தில் கழுத்தில் கை வைத்திருந்தாள்.

ஆனால் அவளோ அவன் மீது வைக்காத நம்பிக்கையை, அவன் தன்மீது கொண்ட காதல்மேல் வைத்திருந்தாள்.

இத்தனை நாட்களில் அவளிடம் நெருக்கம் காட்டாத அவனது கண்ணியம்தான் அவளது எண்ணத்தை மாற்றி, இந்த முடிவை தைரியமாக எடுக்க வைத்திருந்தது. 

அன்றைய முதல் நாள் தவிர்த்து களரியில் அவன் வென்றதே இல்லை. அவளின் கடைக்கண் தீண்டலுக்காக ஓராயிரம் முறை விட்டுக் கொடுத்திருக்கிறான். 

இத்தனை நாட்களில் தன்னிடம் நெருங்காதவனா தன் உடல்மீது கொண்ட பற்றுக்காய் தன் காதலை விட்டுக்கொடுத்துப் போட்டியில் வெல்லப் போகிறான்?

அபரிமிதமானக் காதல் தந்த அதீத நம்பிக்கையில் இப்போதும் தன்னை தோற்க விடமாட்டான் என்று எண்ணியவள், வலிய வந்து தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

இதற்காகத்தானே அவனும் தவிர்க்க நினைத்தான். ஒவ்வொருமுறையும் விதி, அவள் நம்பிக்கையை உடைக்கும் சூழ்நிலையிலேயே அவனைத் தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்த்தது.

அந்த ஆணித்தரமான நம்பிக்கை அவள் முகத்தில் தெரிய, மனதில் வலி கொண்டான். எந்த அளவுக்கு குழம்பி இருந்தால் இந்த முடிவு எடுத்திருப்பாள்?

இந்த போட்டியின் வெற்றியோ, தோல்வியோ, இறுதியில் பாதிக்கப்படப் போவது அவள். அவள் தன்மேல் கொண்ட நம்பிக்கை.

‘ஏன்டி என் காதல் மேல வச்ச நம்பிக்கையை என் மேல வைக்க மாட்ற?’ கோவம் ஆற்றாமையாக மாற, அதேவேகத்தில் மற்றொரு வாளை உருவி, வேட்டையாடத் துடிக்கும் வேடுவனாய் நின்றிருந்தவன்,

“பேச்சு மாறக்கூடாது?” என்றான் குறுவாளால் அவள் இடை வளைத்து.

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த வாள் நொடியில் அவன் கைக்கு இடம் மாறி, அவள் இடைவளைத்த வேகத்தைக் கண்டவளின் நெஞ்சம் ஒரு நொடி அஞ்சத்தான் செய்தது.

களறியில் அவனை வெல்வது அவ்வளவு எளிதானதல்ல! ஒவ்வொருமுறையும் விட்டுத் தந்திருக்கிறான் என அறிந்தே அவனை வென்றிருக்கிறாள். அந்த நம்பிக்கை இப்போதும் இருக்க, முந்தானையை இடையில் சொருகிக் கொண்டவள், கால்களின் திசையை போட்டிக்குத் தயாராய் மாற்றி அமைத்தாள்.

‘டிங் டிங்’ என்ற வாளின் ஒலி அறையெங்கும் எதிரொலித்தது. அவள் வசதிக்கு கார்த்தி மதியமே ஊருக்குக் கிளம்பியிருந்தான்.

களைத்திருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் போராடினாள். உன் இரகசியங்களைத் தெரிந்து கொண்டே தீருவேன் என்ற ஆவேசம் அவளது ஒவ்வோரு வாள் வீச்சிலும் இருக்க, களமாடும் மங்கையின் மைவிழியில் மையல் கொண்டான் அந்த மங்கையின் அரசன்.

அவன் காதலில் தடுமாறிய நொடியை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டவள் அவன் கையிலிருந்து வாளை தவறவிடச் செய்ய…

நொடியில் கேடயத்தை விடுத்து, மற்றொருக் கையால் அதைத் தவறாமல் பிடித்துக் கொண்டவன் அதே வேகத்தில் அவள் வாள் வீச்சையும் எதிர்கொள்ள, தன்னையும் மீறி மயங்கியது மான்விழி.

களமாடும் அவன் கால்களின் கதகளியில் கவிபாடும் அவள் விழிகள் இன்றும் மறவாமல் தன் காதலைச் சொல்ல, அந்த நொடி நேரம் போதாதா? காளையனுக்கு…

கவனமிழந்த அந்த ஒற்றைநொடியில், அவளின் குறுவாளை தரையில் விழச்செய்து,  முடிந்து வைத்த அவளின் கார்குழல் கலைத்தவன், மூடி வைத்த மாராப்பின் முனை பிரித்து முந்தானையைச் சரிய விட,

அதிர்ந்த முல்லைக் கொடியோ, பற்றியிருந்த பாதுகாப்புக் கேடயத்தைத் தரைக்குத் தாரை வார்த்திருந்தாள்.

அதிர்ச்சி! ஏமாற்றம்! என படபடத்து கலங்கிய அவள் கண்மணிகள் உருண்டு திரண்டது. என் வெற்றியா! என் வெற்றியா இது? காதலில் அல்லாது களத்தில் என் பெண்மையை வென்றானா? 

அவன் காதல் மீது கொண்ட நம்பிக்கையில் அல்லவா இறுமாந்திருந்தாள். இல்லையெனில், கணவனே ஆனாலும் அவள் பெண்மையையா போட்டியில் வைத்திருப்பாள்?

திரையிட்ட நீர் கன்னம் தீண்டும் முன் சுண்டி விட்டவன், அவள் பெண்மையை அவள் கரம்கொண்டு மூடும்முன் தானே இழுத்தணைத்து மறைத்துக் கொண்டான்.

அவள் விழிகளின் நர்த்தனைங்களில் மட்டுமே தன்னை தொலைத்திருந்தவன், கிஞ்சித்தும் அவள் கழுத்து வளைவை தாண்டினானில்லை. 

அவளின் திரண்ட நீர் முத்துக்கள் பூமியை அடையும் முன்… முந்தானை கரங்கொண்டு மூடும்முன், இழுத்தணைத்து, தன் நெஞ்சாங்கூட்டில் பொத்தி மறைத்துக் கொண்டான்.

எண்ணம் அவளானால் செயல் அவனன்றோ!  ஆடை களவாடியவனே, தனக்குள் காத்து ஒளித்தும் கொண்டான்.

‘இந்த கேஸ் எனக்கு ரொம்பவே முக்கியம் கன்னம்மா’  இதழ்கள் வலியுடன் முனு முனுக்க பாவையின் உச்சிமுகர்ந்து,  “சாரி டி” என்றவன் அவளது கன்னத்து விழி நீரைச் சுண்டி விட்டான்.

பெண்ணவளை பூவாய் கைகளில் அள்ளிக் கொண்டவன் படுக்கையை நெருங்க நெருங்க அவள் உள்ளம் ஓலமிட்டது.

கண்ணீர்க் கோடாய் வடிய, ‘வேண்டாம்… வேண்டாம்’ என மனம் ஆர்ப்பரித்தது. 

அவன் வகுப்பெடுத்த அந்நொடிகளுக்காய் அவளுக்கும் ஆயிரம் கனவுகளும் கற்பனைகளும் உண்டே! இப்படியா கனவு கண்டாள்? இதற்கா தன் உள்ளம் மறைத்து அவனை வெறுத்துக் கொண்டிருக்கிறாள்?

அள்ளக் அள்ளக் குறையாத அவன் காதல் வேண்டும்!

காதலோடு மட்டுமே கட்டில் வேண்டும்! 

அதில் காதலாய் ஒரு கூடல் வேண்டும்! 

அது கனியும் இடம் அவன் பெயர்ச் சொல்லி கண்மூட வேண்டும்!  

இளைப்பாறும் நொடியில் இதழொற்றி அவன் இறுக்கிக் கொள்ள வேண்டும்!

இத்தனையும் வேண்டுமாய் இருக்க, இப்படி வேண்டாம் என உள்ளம் ஆர்ப்பரித்துக் கிடந்தது.

கண்ணீர் தடம் பதிக்க, களமாடி வென்ற என் பெண்மையை கலங்கப்படுத்திவிடாதே! என அவள் விழிகள் கெஞ்சிற்று.

கன்றுக் குட்டியென அவன் கட்டிலில் கிடத்த, இறுகிக் கல்லாய் சமைந்து கொண்டாள். வெற்றியில் கைப்பற்றிய உடம்பு இனி ஊறுகாய் போட்டால் என்ன இல்லை ஊசிப்போனால்தான் என்ன? மரத்துக் கிடந்தாளா? 

இல்லை மரணித்துக் கிடந்தாள். 

அவனும் கட்டிலில் சரிய, காதலோடு அணுக வேண்டியவனின் அருகாமையில் உள்ளம் கூசிப்போக முகத்தை அவனுக்குக் காட்டாது திருப்பிக் கொண்டாள்.

மெல்ல அவள் பக்கமாய் சரிந்தவன், “ஏய் மூஞ்செலி! இங்க பாருடி” குறும்புப் புன்னகையுடன், நாடிப்பற்றி தன் விழிகளைக் காணச் செய்தான்.

அப்போதும் அவன் கண்களை நேருக்கு நேர் சந்திக்கத் திராணியின்றி அவள் தவிக்க, 

அவள் புருவம் நிரடி, மூடிய விழிகளில் தயங்கி, மூக்கின் நுனி தீண்டி, இதழ்களில் இரசனையுடன் வருடிய அவனது ஒற்றை விரல், அவளது சங்குக் கழுத்தில் சத்தமின்றி பயணிக்க, ஓலமிட்ட இதயத்தை அடக்கும் வழிதெரியாது கலங்கினாள். களரியின் விதிப்படி தோற்றப் பொருள் அவனுக்குச் சொந்தமல்லவா!

அதுவும் அவனது விருப்பப்படி அவளே அல்லவா சரணடைந்திருக்கிறாள்.

அவளது துடித்த இதழ்களில் பட்டும் படாமல் தன் இதழை ஒற்றி எடுத்தவன்,  “எனக்கு இது வேணாம் கன்னம்மா! இது வேணும்! கிடைக்குமா?” என்றவனின் முடிவடைந்த விரலின் பயணம் தொட்டுக் காட்டி நின்ற இடத்தில் அதிர்ந்து அவன் முகம் கண்டாள். 

ஏற்கனவே பேயறைந்த நிலையில் இருந்தவள், அவனது கேள்வியில் மருண்டு விழிக்க, பாவையின் நெற்றியோடு முட்டியவனின் புன்னகை விரிந்தது. 

“எனக்கு உள்ள இருக்க இதயம்தான் வேணும்டி. என் செல்லப் பொண்டாட்டி!” அவள் காதோடு குறுகுறுக்க, எங்கிருந்தோ வந்த தென்றல், அவள் நுரையீரலின் காற்றுப் பையை நிரப்பியது போன்று, அவள் உயிர் மூச்சு திரும்பி வந்தது.

அவளது எண்ணம் புரிந்தார்போன்று, அவன் வாய்விட்டுச் சிரிக்க, அவன் மார்பில் முட்டியது இளங்கன்று! 

தன்னவனின் காதல் பொய்க்கவில்லை என்றதும், வந்த ஆசுவாசத்தில் அவன் மீதிருந்த கோபம் சற்றே பின்னுக்குச் செல்ல, அவன் மீதான அடங்கா நேசம் திமிறிக்கொண்டு வெளிவந்தது.

தன் மார்பில் புதைந்திருந்த அவளது தலையைப் பற்றி நிமிர்த்தியவன், நேரடியாகத் தன் விழிகளைப் பார்க்கச் செய்தான். “உன் வெற்றி மேல இவ்வளவுதான் உன் நம்பிக்கையா? சொல்லுடி!”

இருவிழிகள் கலந்து நிற்க, அவன் கேள்விக்கு பதிலின்றி தடுமாறினாள். என்று அவனை நம்பி இருக்கிறாள்?.

“உன் உடம்பை ஜெயிக்கவா என்னோட இத்தனை வருஷ போராட்டம்? அதுக்கு எனக்கு அஞ்சி நிமிஷம் போதாதா? இதோ! இங்க ஒளிச்சி வச்சிருக்கியே உன் இதயம்! அதுல கொள்ளை கொள்ளையா குவிச்சு வச்சிருக்கியே என் மீதான பாசம்! அதை ஜெயிக்கத் தெரியாம தான்டி கலங்கி நிற்கிறேன். அது உனக்கு புரியலையா? அவள் இதயத்தை தொட்டுக் காட்டி அவன் பேசப் பேச அவளுக்கு உருகிப்போனது.

எழ முயன்றவளை, “மூச்! மூஞ்செலி! நீ என்னை படுத்தின பாட்டுக்கு கொஞ்சநேரம் பளீஸ்..” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவளது நெஞ்சினில் தலை சாய்த்துக் கொள்ள, அவளுக்கு மூச்சே நின்று போனது. பேச்சின் மொழி மறந்தாள். 

இருவரின் ஏறி இறங்கும் மூச்சுக்காற்றைத் தவிர, கட்டிலறை நிசப்தம் கொள்ள,

“ஏய் சில்லை! வழ வழன்னு பேசிட்டே இருப்பியே, எதாவது பேசுடி!” என்றான். 

அவளுக்கே அவளுக்கான அவனது குரலில், முகம் சிவக்க, கண்மூடிக் கிடந்தவனின் குரல்வளையை கடிக்கலாம் போல இருந்தாள் அவள்! 

மனதுக்குப் பிடித்தவனின் முதல் நெருக்கம்! ஆனால் விடை தெரியா பல கேள்விகளுடன். அவளால் இயல்பாக ஒன்ற முடியவில்லை. இவன் மட்டும் எப்படி இவ்ளோ சாதாரணமா இருக்கான். இவனுக்கு என் மேல கோபமே இல்லையா? 

உன் மீது கோபம் கொள்வானா அவன்! அவளே விடையும் பகர்ந்தாள்.

புதிதாய் பட்டாம் பூச்சியொன்று அடிவயிற்றில் சுத்தி வர அது தந்த மயக்கத்தில், கொஞ்ச நேரத்துக்கு அனைத்தையும் மறந்தாள்.

கண்முன் அவனின் கருங்கேசம் அலைபாய, அதுவேறு அவள் கழுத்தடியில் சீண்டிக் கொண்டிருந்தது.

பத்து விரல், கோதிக் கொடுக்கத் துடிக்க தலையணையைப் பற்றி கட்டுப் படுத்திக் கொண்டாள். இன்னும் அவர்களுக்குள்ளான பிணக்குகள் தீரவில்லையே!

“செய்யத் தோணின விசயத்தை பட்டுனு செஞ்சிடணும் மூஞ்செலி! இப்படி தலையணையைப் பிசையக் கூடாது!” என்றவன் அடக்கமாட்டாமல் சிரிக்க, “குரல் வளையக் கடிக்கத் தோணுது. கடிக்கவா?” கோபம்போல் அவனைத் தள்ளி விட்டு எழுந்து கொண்டாள்.

அவளுக்கே மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்க, ஓடி மறைய முயன்றவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

“உன் விரல்களுக்கு என்னைக்கு நீ கட்டுப்பாடு போடாம இருக்கியோ அன்னைக்குதான் இந்த கட்டில் ஒலி கேட்கும். புரிஞ்சிதா?” கண் சிமிட்டினான்.

“கேட்கும், கேட்கும் கன்னத்தில் இரண்டு போட்டா கேட்கும்” பல நாட்களுக்குப் பின்னான அவளது குறும்புப் பேச்சில் வசீகரித்தாள்.

“ஆஹா! அதுக்காகத்தானே உன் மாம்ஸ் வெயிட்டிங் பேபி! மீசைத் துடிக்கிறது டூ இட் பேபி! திரும்பி அவனது கன்னத்தைக் காட்ட, “வெற்றி ப்ளீஸ்” என்றவள் தலைகாணியைத் தூக்கி கட்டிலின் கீழ் விரிக்க, முறைத்தான் அவன்.

“மறுபடியும் உன் வேலையைக் காட்டாத டி! பந்தயத்தில தோத்திருக்க வேற…” மறைமுகமாய் எச்சரித்தான்.

“இது உங்களுக்காக இல்ல எனக்காக” என்றவள் தன்னை போர்வையில் மறைத்துக் கொள்ள, வாய்விட்டுச் சிரித்தான்.

மீண்டும் அலேக்காக அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன், “இந்த மனநிலை இப்படியே நமக்குள்ள நீடிக்குமா தெரியாது டி. ப்ளீஸ் இதை இப்படியே அனுபவிக்க விடு!” என்றவன் கட்டிலில் கிடத்தி தானும் சரிந்து கொண்டான்.

அவள் இப்போது சந்தோஷ மனநிலையில் இருக்கிறாள். நிச்சயம் எடுத்துக்கொண்டாலும் விஞ்சுவாளேத் தவிர தடைசொல்ல மாட்டாள்தான். ஆனால் அவன் அள்ளிக்கொள்ளத் துணியவில்லை.

எல்லாம் முடிந்ததும் துடித்துப் போவாள். அதில் எப்போதும் போல் விலகியே படுத்தவன், “மூஞ்செலி” என்றான்.

அவளுக்கும் அதே எண்ணங்கள்தான். அதில் அவன் முகம் காண அஞ்சி விழிமூடிக் கிடந்தவள், அவனைப் போலவே, “ம்..ம்” என்றாள்.

“இந்த கேஸ்ல இனி நீ வரவேக் கூடாது. எந்தக் கேள்வியும் யாரையும் கேட்கக் கூடாது. அது யாரா இருந்தாலும்…” அந்த யாரா இருந்தாலும் என்பதை அழுத்திச் சொன்னான்.

அந்த யார், மிருத்யூ என்பது அவளுக்குப் புரிந்தது. அதற்காகத்தானே அவளும் தன்னையே பணயம் வைத்து அவனுடன் போராடினாள். என்னதான் தங்கை மீது நம்பிக்கை இருந்தாலும் அவளது சமீபத்திய நடவடிக்கைகள் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது.

அவளிடமிருந்த குறும்புத்தனங்கள் அவளைவிட்டு விடைப்பெற்றிருக்க, அக்கா அக்கா என சுத்தி வந்தவள் சமீப காலத்தில் அவள் முகத்தைப் பார்த்துப் பேசுவதையே தவிர்த்து வருகிறாள்.

தான் திருவண்ணாமலை சென்றிருப்பது தெரிந்ததும், இன்று செமினார் முடிந்து வரவேண்டியவளை வெற்றி வரவிடாமல் தடுத்து அனுப்பி வைத்ததே கணவன் மீதான சந்தேகத்தை உறுதிப் படுத்தியிருக்க, இன்று ஆதியோடு அந்தமாக அனைத்தையும் கேட்டுவிடுவது என்றுதான் ஆரம்பித்திருந்தாள்.

தன் மீது உயிரையே வைத்திருப்பவன் தனக்கு உயிரானவளின் விசயத்தில் விளையாடமாட்டான் என்ற நம்பிக்கை அவளையும் அறியாமல் மனதில் விதைபோட, தன்னவனுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் சிந்தனையுடனே உறங்கிவிட்டிருந்தாள்.

அவள் உறங்கியது அறிந்ததும், அவள் முன் நெற்றியில் ஆடிய உச்சிமுடி ஊதியவன், “எல்லாத்துக்கும் சாரி டி” என்று காற்றிலேயே உதடுகுவித்து முத்தமிட்டான்.

 

(டியர்ஸ்… நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு. யூடி வருமான்னு எனக்கே தெரியாது. எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ள வேண்டாம் சரியா.. அப்படியே இந்த வெற்றியை எவ்ளோ புடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போங்க…)